Sunday 17 April 2011

அறிவே செயலே அதுவே

2005-07-26

அறிவே செயலே அதுவே

அவன்:


அப்பனே, முருகா, ஷண்முகா, எம்பெருமானே! என்னை மட்டும் காப்பாத்துடா!
இவன்:


சுயநலக் கிருமி, மத்தவங்க எல்லாம் வாழ வேண்டாமா?
அவன்:


டேய், அடுத்தவங்களக் கெடுத்து என்னை வாழ வைக்கவா கேட்டேன்
இவன்:


'என்னை மட்டும்'ன்னும் கேட்டியே, அதுக்கு என்ன அர்த்தமாக்கும்?
அவன்:


அடேய்! எழுந்து பல்லு விளக்கு முன்னே இவ்வளவு ஆராய்ச்சி தேவையா? வெளியே வாடா!
இவன்:


அழிவறையில் உள்ளதடா உலகம் - அதன்
கழிவறைகள் காட்டுமடா கலகம், வயிற்றுக் கலகம்
அவன்:


போதுமடா புலவா! 'எச்சத்தாற் காணப்படும்'ன்னார்1 வள்ளுவர். மனிதரின் முடிவும் எச்சமும்2 மண்ணுக்கு நல்லது.

[1 தக்கார் தகவிலார் என்பத வரவர்
எச்சத்தாற் காணப் படும் (திருக்குறள்: 114 அதிகாரம்: 12 நடுவுநிலைமை)
இவன்:


கழிப்பறையில் பொறக்குமடா ஞானம் - அதை நீ
விழிப்புடனே குறித்திடவும் வேணும்
அவன்:


சரி சரி, புத்தகத்தோடு போனாலே வெளியே வர நேரமாகுது. இன்னும் பேப்பர், பேனா எடுத்திட்டு போனா கிழிஞ்சுடும். அப்பாடா, ஒரு வழியா வெளியே வந்தியா. என்ன சித்தர் பாடலா? காலையிலேயே ஞானம் வழியுது.
இவன்:


ஏன், நாங்க பாடக் கூடாதா? ஆத்திரத்தில் வந்த சாத்திரமா? போ, போ.
அவன்:


உள்ளே போக வேண்டியது உள்ள போகனும்; வெளியே வர வேண்டியது வெளிய வரனும். இல்லேன்னா தகராறு தான். ஏன்னு கேளு, நேத்து ஒரு சித்தர் பாடல் படிச்சேன். அதான் நீ பாடுனது அதே மாதிரி உளறலா தெரிஞ்சுது.
இவன்:


எங்கே எடுத்து விடு, அந்த சித்தர் செப்பியதை.
அவன்:


மாட்டிக் கிட்டே, யாம் பெற்ற குழப்பம் நீயும் பெறுக. கேளு இதை...




அறிவே செயலே அதுவே
(காப்பிய சித்தர் காப்பு)
1


அறிவே செயலே அதுவே
அறமே மறமே அருளே
2


உருவே உணர்வே ஒளியே
கருவே பொருளே கலையே
3


விரிவே வெளியே வினையே
கரியே நெருப்பே சினையே
4


அணுவே அலையே அன்பே
திணிவே திரிவே தெளிவே
5


விண்ணே மீனே விசையே
எண்ணே எழுத்தே இயலே
6


மலையே மடுவே மாண்பே
இலையே கிளையே இசையே
7


கண்ணே செவியே கதையே
பண்ணே பாட்டே பகிர்வே
8


மரமே விதையே மகிழ்வே
உரமே உளரே அரணே
9


நீரே நிலமே நினைப்பே
ஏரே ஊரே இணைப்பே
10


சீரே செறிவே சிறப்பே
பாரே பரிவே பரப்பே
11


தேரே தெரிவே திறப்பே
கூரே குறியே குவிப்பே
12


கல்லே மண்ணே கனிவே
புல்லே புழுவே புகழே
13


அகமே புறமே அலைவே
பகலே இருளே பண்பே
14


வயலே வளியே வாழ்வே
புயலே பொழிவே வளமே
15


உயிரே உழைப்பே உயர்வே
வெயிலே தணிவே விளைவே
16


விருப்பே வெறுப்பே விடையே
பிறப்பே இறப்பே விழிப்பே
17


சொல்லே மொழியே சுவையே
இல்லே இருப்பே இனிதே
18


அமிழ்தே ஆறே அழகே
தமிழே குறளே வழியே
19


காடே நாடே கரையே
வீடே உறவே விதியே
20


கதிரே மழையே களிப்பே
அதிர்வே திரளே அளிப்பே
21


அருகே தொலைவே துணையே
திருவே திறமே திணையே
22


செடியே கொடியே இனமே
முடிவே முதலே ம‌னமே
இவன்:


பொறு பொறு, கொஞ்சம் மூச்சு விடு. ஒரேடியா அடங்கிடப் போவுது.
அவன்:


இன்னும் கேளு
23


தருவே தணலே நிழலே
எருவே பயிரே பழமே
24


வடிவே உள்ளே வளர்ப்பே
விடிவே விந்தே வியப்பே
25


கடலே முகிலே ஈர்ப்பே
அடலே ஒலியே ஆர்ப்பே
26


வெடிப்பே துடிப்பே விசும்பே
இடிப்பே மடிப்பே உலகே
27


புவியே பொன்னே பொறையே
கவியே அணியே உரையே
28


வாளே கோலே ஏறே
தோளே நட்பே வீறே
29


முள்ளே மலரே புள்ளே
கள்ளே கரும்பே தெள்ளே
30


எள்ளே எறும்பே தேனே
வள்ளே வரையே வானே
31


அங்கே இங்கே எங்கே
அன்றே இன்றே என்றே
32


அய்யே அம்மே அண்ணே
மெய்யே பொய்யே உய்யே
33


கையே காலே சிறகே
பையே காற்றே விறகே
34


ஆணே பெண்ணே அளவே
ஊணே ஓடே உளமே
35


அருவே அடவே அதியே
மருவே மடமே மதியே
36


ஒன்றே பலவே சுழியே
நன்றே நலமே பழியே
37


தாயே தனியே நதியே
காயே கனியே கதியே
38


எலியே புலியே பிழைப்பே
வலிதே மெலிதே இழப்பே
39


சடையே இடையே கடையே
படையே தலையே பகையே
40


ஈடே இடரே போரே
பாடே தீர்வே நேரே
41


புலனே பொறியே நடப்பே
கலனே பாயே கடப்பே
42


புனையே துடுப்பே போக்கே
மனையே துறப்பே வழக்கே
43


முறையே முடியே அடியே
பிறையே பீடே பிடியே
44


குறையே குணமே கூற்றே
மறையே நிறையே இறையே!
இவன்:


முடிஞ்சுதா, இது என்ன குலுக்கல் கவிதையா?
அவன்:


அப்படின்னா?
இவன்:


காகிதத் துண்டுகளில் சொற்களை எழுதி உருளையில் போட்டுக் குலுக்கி மூன்று மூன்று சொற்களாக எடுத்துக் கோர்த்துக் கவிதை வரிகளை உருவாக்குவது.
அவன்:


ஒரு வகையில் அப்படித் தான். உருளையில் குலுக்குவதற்குப் பதிலாக உள்ளத்தில் குலுக்கி எடுத்தது.
இவன்:


அது எப்படியோ போகட்டும். பாடலுக்குப் பொருள் என்ன?
அவன்:


இந்தா அடிக் குறிப்பை நீயே படி.
இவன்:


அருளியவர்: காப்பியச் சித்தர் ('கடிச் சித்தர்' என்றும் அழைப்பர்)
தொடக்கம்: பிண்டம்
அடக்கம்: அண்டம்
காலம்: இடைக்காலம் (இறந்த காலத்திற்கும் எதிர் காலத்திற்கும்)
பொருள்: அவரவர் மனம் போல.பொருளை விளக்கினால் 'காப்பின்' ஆற்றல் போய் விடும். பொருள் விளங்கா விட்டால் 'வாழ்வின்' ஆற்றல் போய் விடும். மேலும் உரையாசிரியர்கள் இல்லாத சொல்லாத பொருளை ஏற்றிக் கூற‌ வழி வேண்டாமா?
பயன்: இதைத் தவறாமல் நாள் தோறும் 108 முறை சொல்லி நேரத்தை வீணடித்து வருபவர்களுக்குப் படிப்படியாக எல்லாத் துன்பங்களும் வந்து சேர்ந்து முடிவில் வீடு பேற்றிலிருந்து தப்புவர்!

அடிக் குறிப்பு, தலைக் குழப்பம்! உரையாசிரியர்கள் வேறு இன்னும் குழப்புவார்கள்.
அவன்:


எனக்கு வேறு எதுவும் புரியல. அந்தத் தலைப்பு மட்டும் ஒரு மாதிரி புரியுது. அறிவே செயலே அதுவே.
இவன்:


அறிவு, செயல் சரி. அது என்ன 'அதுவே'?
அவன்:


எதையும் அறிந்து இருப்பது முதல் நிலை. அறிந்ததைச் செயல் படுத்துவது இரண்டாம் நிலை. பிறகு செயல் வேறு செய்பவர் வேறு என்று இல்லாமல் அதுவாகவே மாறி விடுவது மூன்றாம் இறுதி நிலை.
இவன்:


எடுத்துக் காட்டாக உளறல் எது தெரிந்து இருப்பது, உளறுவது, உளறலாகவே மாறி விடுவது - ஏன்'டா விடியும் போதே இப்படி! யாருடா இந்த சித்தன் - பித்தன்?
அவன்:


பா'த்தியா, சித்தர் என்றாலே சித்தனாகத் தான் இருக்கணுமா? இவர் சித்தள்! சரியான பால்பேதியா இருக்கியே!
இவன்:


பால்பேதியா? அடப்பாவி, செக்ஸிஸ்ட்(sexist) என்று புரியும் படிச் சொல்லக் கூடாதா?
அவன்:


தமிழின் ஆற்றலைப் பாரு. எப்படிப் புதுப் புதுப் சொற்களை உருவாக்கிக் கொள்ளும் படி வேர்ச் சொற்களின் வளம்!
இவன்:


தமிழ் கிடக்கட்டும், இப்ப கொஞ்சம் அமிழ்துக்கு வழியப் பாரு. காலையிலேயே குலுக்கலும் கலக்கலுமா இருக்கு. நீ வேற 'பால்பேதி'ன்னு கிட்டு. சித்தள் உளறலே உள்ளத்துக்குப் பேதி மாறி இருக்கு.
அவன்:


ஆமா, உடலுக்குப் பேதி குடலைச் சுத்தம் செய்யும். உள்ளதுக்குப் பேதி மனதைச் சுத்தம் செய்யும்.
இவன்:


உண்மை தான், ஆனா இப்ப செவிக்கு உணவு அதிகமாகியும் காதை அடைக்குது. வயித்துல பசி அதிகமாகியும் காதை அடைக்குது. அதை கவனி முதல்ல.





No comments:

Post a Comment