Tuesday 26 July 2011

நம்மை அறிந்தால்

2005


நம்மை அறிந்தால்

அதியன்:
இன்று கவியங்கர நிகழ்ச்சி - தங்கை
அருவியின் கவிதை, மகிழ்ச்சி!
அளவறி:
கவிதை, ஆகா!
காலப் பயணம் செய்யும் கருத்து விதை!
அதியன்:
உண்மைதான்!
விதையாக இருந்து பயன் ஏது? - செயல்
விளைந்திட வேண்டும் மண் மீது!



அருவியின் கவிதை


நம்மை அறிந்தால் நன்மை தழைக்கும்
நம்மை அறிந்தால் நல்வாழ்வு செழிக்கும்

உயிரின வரிசையில் சமுதாய விலங்கு
உயர்ந்திட இயல்பில் உண்டோ வரம்பு

இயற்கையின் அங்கம் என்றள வறிந்து
இயங்கிட இன்பம் என்றுமே தங்கும்

பிழைத்திட முயல்வது உயிரின் தன்மை
தழைத்திட வேண்டுமே பல்லுயிர்ப் பன்மை

இயற்கை தேர்ச்சி எட்டிடப் போட்டி
அயல்கை ஆட்சி அண்டிடும் வாய்ப்பு

வாழ்ந்திடும் வன்மை வளர்த்திடும் நன்மை
ஆழ்ந்திடப் புரியும் அன்பெனும் தன்மை

எல்லோர் திறன்களும் என்றும் சமமிலை
எல்லோர் சமத்துவம் எதிர்க்க வாழ்விலை

இலக்கும் நீதியும் இல்லை பிறிதிடம்
இலங்கிய மனிதர் ஏகுவர் உயர்விடம்

ஒன்றிய வளர்ச்சி ஓங்கிய அறிவால்
கொன்று குவித்ததும் கொடிய அறிவால்

தந்திடும் ஆக்கம் தன்னின் முனைப்பு
அந்ததன் முனைப்பு அழிவும் கொடுக்கும்

ஓய்வு கொள்ள வேறு வேலை
சாய்வு கொள்ள செயலறு மூலை

அடையா ளமடங் காஆள் ஆகும்
கிடையா கிடமறு கேள்வி போகும்

சினிமா போதை சிகரெட் போதை
இனிப்பும் போதை எதிலும் போதை

சிலைமேல் பக்தி சிலர்மேல் பக்தி
கலைமேல் பக்தி கரையுதே சக்தி

கலை கேளிக்கை கலந்து மகிழ
விலை ஆதிக்கம் விழுந்து சிக்க

விளையாடத் தணியும் வேட்டை வேகம்
விளையாட்டுப் போரோ வெற்றி மோகம்

நண்பர் பகைவர் நடுவர் மனிதரே
எண்ணி நடந்தால் எவரும் அன்பரே

உண்டதில் பாதி மீதியைச் செரிக்கும்
மண்டிடும் வாய்குழி தோண்டியே மரிக்கும்
(Half of what we eat is used up in digesting the other half.
I dig my grave with my mouth)

மகிழ்ச்சி என்றே சொகுசுகள் தேடும்
மகிழ்ச்சி வாழ்வைப் பகிர்ந்திடக் கூடும்

நிரம்பிய வயிறு நிறையா மனது
அரங்கினில் ஆடும் அழிவே கூடும்

உடலும் குறை உள்ளமும் குறை
தடமதன் முறை தமக்கே இறை

கூட்டு முயற்சி கொடுத்த தெல்லாம்
நீட்டு கைகளை நேயவர்க் கெல்லாம்

புகழ்ச்சி மயக்கம் புகழ்பவர் மீதும்
உகந்தவர் மகிழ ஓருரை போதும்

நிறையும் தேவை நிறையா விருப்பம்
குறையும் ஆசை குறையா மகிழ்ச்சி

உள்ளம் துலங்க உடலும் விளங்கும்
பள்ளம் விலக்க படிப்பும் நட்பும்

வல்ல உள்ளம் வலிய உடலம்
நல்ல ஊட்டம் நாளும் தேவை

தோன்றிய உயிரில் தொலைந்தவை அதிகம்
ஊன்றி நிலைப்பது ஒன்றுமே இல்லை

என்செய் தோம்நாம் என்றே ஏக்கம்
தன்செயல் பலவெனத் தகுதித் தாக்கம்

தரமிடும் தம்செயல் தமக்குக் கீழ்மேல்
உரமிடும் குணமே ஓயாத ஊட்டம்

எல்லாம் இலவயம் இழப்போம் ஊக்கம்
எல்லாம் வணிகம் இழப்போம் மனிதம்

வறுமை நோய், தீய வளமே தாய்
சிறுமைப் பேய், பெருஞ் செல்வமே சேய்

மூடிய உலகில் முடியா வளர்ச்சி
தேடியே இருந்தால் தேயுமே சுழற்சி

மக்கள் ஆட்சி மக்களே ஆள்வது
மக்கள் சாட்சி மக்களை மேய்ப்பது

மனிதக் குழந்தை மண்ணின் துயரம்
இனிதாய் தந்தை எல்லா உயிர்க்கும்

அற்புதம் நாமே அவலமும் நாமே
உற்றிட உயர்வு உறுதுணை ஆய்வு

பேரின வாதம் சிற்றின பேதம்
ஓரின எண்ணம் உருப்படும் திண்ணம்

எழுதி விடுவதால் என்ன தள்ளும்
விழுது விடுவதால் வெஞ்செயல் கொள்ளும்

நசுக்கும் இனம் அதற்கும் சிறை
பொசுக்கும் சினம் போக்கிடும் கறை

கொடுமை சீற்றம் கொல்லன் சம்மட்டி
நடுமை சுற்றம் நகர்த்தும் தீக்கட்டி
(Evil generates the energy in which goodness is forged)

நல்லவை நம்பி நடிப்பால் மயங்கும்
அல்லவை அடியில் அதுவாய் முளைக்கும்
(Goodness creates the vulnerability in which evil raises)

மனிதன் குறை மக்கள் நிறை
இனியேன் திரை எதற்கும் சபை

ஒருவர் இனியர் ஊரார் கொடியர்
இருமை இயல்பு ஏற்றம் இலக்கு

ஆற்றமும் காலமும் அளந்திடும் எவரையும்
ஆற்றலைக் குவித்திட அணுகளும் பிளவுறும்

எட்டாத் திறமை எவர்க்கும் உண்டு
முட்டாள் தனத்திற்கு முடிவே இல்லை

சிரிக்கும் வேளை சிந்திக்கும் மூளை
செரிக்கும் நோயை செதுக்கும் ஆளை

தன்மை புரிய உன்னைத் தோண்டு
உண்மை தெரிய உள்ளம் தாண்டு

நம்மை அறிவது நாற்கால் தொன்மை
நம்மை அறிவது நம்மனப் பான்மை

ஆய்வும் திருத்தமும் ஆக்கும் நம்மை
போய்விடம் இல்லை புடவியே எல்லை.

சரியார் பற்றிச் சிரி குறிப்பு (அவரே எழுதிய கிறுக்கல்)

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், சரியார் என்று யாருக்கும் தெரியார். அதாவது யார் சரி (சரி யார்?) என்று யாருக்குமே தெரியாது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதென்றால், இவர் தான் முதன் முதலில் சக்கரத்தைக் கண்டு பிடித்தவர். அதாவது வாழ்க்கைச் சுழற்சிக்கும் மன உழற்சிக்கும் இவர் தான் காரணம். அது மட்டுமல்லாது இவர் இல்லாத இடம் இல்லை. பேசாத பேச்சில்லை. எழுதாத எழுத்தில்லை. செய்யாத செயல் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் இவரே இல்லை.

கமால் அத்தா துர்க்

2011-04-29



கமால் அத்தா துர்க்

1996-இல் ஒரு நாள் இலண்டனில் எங்கள் வீட்டிற்கு கேபிள் டிவி இணைப்பு கொடுக்க வந்தவரின் நிறம், மீசையைப் பார்த்ததும் பிரித்தானியர் அல்லர் என்று தெரிந்தது. அவரோ என் பெயர் 'யன்' என்று முடிவதையும் என் மீசையையும் கண்டு 'நீங்கள் அர்மீனியரா?' என்று வினவினார். 'இல்லை, இந்தியன்' என்றேன். அவர் உடனே, நாங்கள் (அர்மீனியர்) உலகத்தின் மிகப் பெரும் பழமையான இனத்தினர், இன்று நிலை தாழ்ந்து போயிருக்கிறோம் என்று ஆரம்பித்துச் சொல்லிக் கொண்டு போனார். நானும், நாங்களும் இந்தியாவின் பழம் பெரும் குடியினர், தமிழர்கள், இன்று பழம் பெருமையான நிலையில் இல்லை என்று பதிலுக்குப் பெருமை-புலம்பல் ஒத்து ஊதினேன்.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் தான் துருக்கிப் பகுதிக்கு (மத்திய ஆசியாவிலிருந்து) வந்த துருக்கியர்கள் தங்களை ஆதிக் குடியினர் என்றும் அவர்களிலிருந்து தான் பிரித்தானியர் போன்றோர் பிரிந்து சென்றனர் என்றும் அடித்துச் சொல்கின்றனர் என்று இந்நூலில் (கமால் அத்தா துர்க்) சொல்லியிருப்பதைப் படித்ததும் எனக்கு மேற்கண்ட நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

மற்றொரு நாள் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டு இருந்த போது பக்கத்தில் இருந்தவர் அறிமுகம் செய்து கொண்டு பேச்சுக் கொடுத்தார். அவர் ஒரு துருக்கியர். ஜெர்மனியில் பல ஆண்டு காலம் வாழ்ந்து வருவதாகவும் துருக்கியர் இல்லாது ஜெர்மனியில் பல அவசியமான‌ வேலைகள் நடைபெறாது என்றும் என்றாலும் தாங்கள் ஜெர்மனியர்களால் மோசமாக நடத்தப் படுவதாகவும் 12 ஆண்டுகள் ஜெர்மனியில் வாழ்ந்தாலும் குடியுரிமை கிடைப்பது அரிது என்றும் சொன்னார்.

இன்னும் ஒரு நாள் (அப்போது பசுமைக் கட்சியில் - Green Party - உறுப்பினராக இருந்தேன்) தெருவில் நின்று கொண்டு ஈராக்கிலிருந்து பிரிட்டிஷ் படைகளைத் திரும்பப் பெற‌ வேண்டும் என்று துண்டறிக்கைகளைக் கொடுத்துக் கொண்டு இருந்த போது ஒரு குர்தியர் (Kurdish) வந்து எங்களைப் பார்த்து கடுமையாகச் சாட ஆரம்பித்து விட்டார். உங்களுக்குத் தெரியுமா நாங்கள் (குர்தியர்) சதாம் ஆலும் துருக்கியர்களாலும் எப்படிப் பட்ட கொடுமைகளுக்கு உள்ளாகிறோம் என்று, இங்கு பாதுகாப்பாக நின்று கொண்டு நீங்கள் பிரிட்டிஷ் படைகளைத் திரும்ப வேண்டும் என்று கூறுகிறீர்கள், அப்ப‌டி இப்படி என்று. அவரைச் சமாதானப் படுத்தி எல்லா அடக்குமுறைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்லி ஒரு வழியாகத் தப்பினோம்.

சதாமுக்கு எதிராகக் குர்தியருக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கிக் கொண்டே அதே குர்தியர் போராட்டங்களை (தீவிரவாதிகள் என்று துருக்கி சொல்கிறது) அடக்கத் துருக்கிக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கியதைப் பிரபலமான அமெரிக்க மொழியியல் அறிஞர், தத்துவ அறிஞர், சமூகச் செயலாளி நோம் கோம்ஸ்கி எடுத்துக் காட்டியுள்ளார். குர்தியர் நாடு ஈராக் துருக்கி எல்லைகளில் பரந்து உள்ளது.

காலனி ஆதிக்க நாடுகள் தங்கள் பலம், வசதிக்கேற்ப ஆசிய, ஆப்பிரிக்க அரசு, மக்கள் சமுதாயத்தைப் பங்கு போட்டுக் கொண்டதில் பல பழம் பெரும் இனங்கள் சிதறுண்டன. பல இனங்கள் வலிந்து (இலங்கையில் தமிழர், சிங்களர் போன்று; பாகிஸ்தானில் சிந்தியர், பாஞ்சாபியர் போன்று; ஆப்பிரிக்காவில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன) சேர்ந்து வாழத் தள்ளப் பட்டனர்.

துருக்கியர் அர்மீனியர்களை இலடசக்கணக்கில் இனப்படுகொலை செய்தது குறித்து இன்றும் துருக்கிக்கும் (இனப்படுகொலை இல்லை என்று மறுக்கிறது) அர்மீனியாவுக்கும் இடையில் சிக்கல்கள் நிலவுகின்றன. இது 1915-16-இல் நடந்தது. அர்மீனியர்கள் 15 இலட்சம் பேர் இறந்தனர் என்றும் துருக்கி 3 இலடசம் பேர் தான் என்றும் சொல்கின்றன.

துருக்கியில் வாழும் (20 விழுக்காடு என்று சொல்லப்படுகிறது) குர்தியருக்கு மொழி, பண்பாடு உரிமைகள் உள்பட பல கிடையாது. அதைச் சரி செய்யாமல் துருக்கிக்கு ஐரோப்பிய யூனியனில் இடம் கிடைக்காது. அதன் பொருட்டு, கண் துடைப்புக்காகச் சில சலுகைகள் வழங்கப் படுகின்றன.

இவற்றை இங்கே குறிப்பிடக் காரணம் ஓர் இனம் தான் அடிமைப்பட்டு இருந்து போராடி விடுதலை அடைந்த பின் அதே விதமான அடக்கு முறைகளைக் கொஞ்சமும் மனசாட்சி இன்றி அடுத்த இனத்தவர்கள் மீது செலுத்துவது வரலாற்றில் பக்கம் பக்கமாக இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டவே ஆகும். அதற்காக இன்று நாம் எதிர் கொள்ள வேண்டிய சிக்கல்கள் இல்லாமல் போய் விடவில்லை. ஆனால் இந்த வரலாற்றுப் பாடங்களைப் புறக்கணித்து விட்டுச். சென்றால் நடிகர்கள் மாறியிருப்பார்களே தவிர நாடகம் அதுவாகவே இருக்கும்.

இன்னொரு பார்வையில் 'காலனி ஆதிக்க' நாடகம் போய் 'உலகமயமாக்கல், தாராளப்படுத்துதல்' என்ற வேறு நாடகப் பெயர்களில் அதே காட்சிகள் (இயற்கை வளங்கள், வணிக வாய்ப்புகள், மூளை, உடல் உழைப்புச் சுரண்டல்கள்) நடந்து வருகின்றன. தடை செய்யப்பட்ட தொழில் வேறு பெயரில் நடத்தப் படுவது போலவே இதுவும்.

இதெல்லாம் நமக்கு இன்று தெரியும் உண்மைகள், பாடங்கள். ஆனால் இந்த நூலின் உள்ளடக்கத்திற்கு வர நாம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பின் செல்ல வேண்டும். இன்றைக்கு (2011) நூறு ஆண்டுகளுக்கு முன் ஏறத்தாழ‌ 600 ஆண்டுகளாக உயர்ந்து விளங்கிய ஆட்டோமான் (Ottoman) பேரரசு [இன்றைய துருக்கி, ஈராக், எகிப்து, அர்மீனியா, பல்கேரியா, கிரீஸ், ஹங்கேரி, கிரிமியா, பாரசீகம் (ஈரான்), அல்பேனியா பகுதிகளை உள்ளடக்கியது] உடைந்து சிதறி அதன் இறங்கு முகத்தில் இருந்தது.

அப்படி வலிவிழந்த துருக்கியிலிருந்து விடுதலை அடைய பல நாடுகள் முயன்றன. அவற்றைத் தூண்டி விட்டு, காலனி ஆதிக்க நாடுகள் (பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தலி) தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டன. எகிப்து பிரிட்டன் வசம் சிக்கியது. லிபியா இத்தலியின் ஆதிக்கத்துக்குள் விழுந்தது. அது அன்று துருக்கியின் தலைநகரமான கான்ஸ்டாண்டிநோபிளில் பிரிட்டிஷ் படைகள் நின்று சுல்தானைக் கொண்டு பொம்மை ஆட்சி செய்யும் அளவுக்கும் சென்றது.

துருக்கி சுல்தான் பல நாடுகளிலும் வாழும் இஸ்லாமிய மதத்தினருக்கும் சேர்த்துக் 'கலீபா'வாக (Caliph / Khalifa) விளங்கினார். அரசியலும் மதமும் ஒன்றாய் பிரிக்க முடியாத படி இருந்தன.

இந்த சூழ்நிலையில் துருக்கியில் பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் துருக்கியரைத் தட்டி எழுப்ப எழுதினர், பாடினர். ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று படித்து வந்த இளைஞர்கள் நாட்டை அந்நியர் பிடியிலிருந்து மீட்டுத் துருக்கியரின் பெருமை மீண்டும் நிலை நாட்ட இயக்கம் கண்டனர். அதில் வழக்கம் போல் பல கட்சியினர், குழப்பங்கள். இவற்றிற்கிடையே இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு இவற்றால் வீழ்ந்து விடாமல் துருக்கியரின் விடுதலையைச் சாதித்தவன் கமால் அத்தா துர்க்.

அதோடு நின்று விடாமல், அரசையும் மதத்தையும் பிரித்தது முதல் குடியரசை நிறுவியது, துருக்கி மொழியை லத்தீன் எழுத்துக்களைப் கொண்டு எழுதும் முறையைக் கொண்டு வந்தது, மக்களை ஐரோப்பிய உடை, நடை, பாவனை, பண்புகளுக்கு மாற்றியது துருக்கியருக்குள் இருந்த சாதி போன்ற பிரிவினைகளை ஒழித்தது, ராணுவத்தையும் அரசாங்கத்தையும் பிரித்தது, இஸ்லாம் அரசு மதமாக இருந்ததை நீக்கியது, ராணுவத்திற்கு அரசின் மதச்சார்பின்மையைக் காக்கும் பொறுப்பைக் கொடுத்தது எனப் பல புரட்சிகர சீர்திருத்தங்களைச் சட்டமியற்றி நடைமுறைப் படுத்தித் துருக்கியரைத் தலைகீழாகப் புரட்டி எடுத்தான் கமால்.

இவை யாவும் 15 ஆண்டுகளில் நடந்தது என்பது பெரிய சாதனை. கமாலின் ஆளுமைக்கு எடுத்துக் காட்டு. அதே சமயம் பல வகைகளில் (முதல் உலகப் போருக்குப் பின் காலனி ஆதிக்க நாடுகளின் சோர்வு) சூழ்நிலை கனிந்து இருந்ததை மறுக்க முடியாது.

கமால் ஒரு ராணுவக் கேப்டன். இலங்கையில் தமிழீழத் தனி அரசைத் தமிழ்ப் போராளிகள் நடத்தி வந்தது போல் அங்கோராவைத் தலைநகராகக் கொண்டு கான்ஸ்டாண்டிநோபிளுக்கு எதிராகப் போட்டித் துருக்கி அரசாங்கத்தை நடத்தி வந்தான் கமால். அதுவே கடைசியில் மக்களின் அதிகார பூர்வமான அரசாகியது. அது முதல் அங்கோரா துருக்கியின் புதிய தலைநகர் ஆகி விட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் 'ஐரோப்பாவின் நோயாளி' என அழைக்கப்பட்ட துருக்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புத்துயிர் பெற்று ஐரோப்பாவின் மற்ற நாடுகளின் பாதையில் நாகரிக‌க் குடியரசாக மலர்ந்து விட்டது..

1938 இல் கமால் அத்தா துர்க் இறந்த பின்பு துருக்கி பல முறை ராணுவ ஆட்சியில் விழுந்து எழுந்தது. இன்றுள்ள அரசு இஸ்லாமியச் சார்புடையவர்களால் நடந்து வருகிறது. ராணுவம் தலையிடுமோ என்ற நிலை உள்ளது.

நாம் வரலாற்று நூல்களை அதன் பாத்திரங்களை எடை போடும் போது நூல் எழுதப் பட்ட காலம், அவ்வரலாறு நிகழ்ந்த காலம் இவற்றை மனதில் கொண்டே செய்ய முடியும். இன்று மேற்குலக நாடுகளின் பண்பாடு, பொருளாதார முறைகள், அரசியல் அமைப்புகள் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு வரவேற்கத் தக்கவை அல்ல என்ற புரிதல் வளர்ந்து வருகின்றது. அதே சமயம் தேசியம் என்ற பெயரில் அரசியல் விடுதலை என்பது உலகமயமாக்கல் பொருளாதார அடிமைத் தனத்தில் சிக்காமல் வாங்க இயலாத நிலை உள்ளது. அப்படிப் பெறும் விடுதலை வெறும் தாளில் உள்ளதே.

இன்று மதத்தின் அடிப்படையிலான அரசு அமைப்புகளோ, மக்களாட்சி என்ற அமைப்புகளோ, சோசலிசம் என்ற அமைப்புகளோ எவையும் அந்தந்த நாட்டின் எல்லா மக்களுக்கும் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவு செய்ய இயலவில்லை. மற்ற நாடுகளைக் கொள்ளையடிக்காமல் போனால் இன்று மேற்குலக நாடுகளில் நிலவும் வாழ்க்கைத் தரம் இருக்க, தொடர‌ முடியாது.

1920 ஆண்டு துருக்கியின் அன்றைய தலைநகரான கான்ஸ்ண்டாடிநோபிளில் பிரிட்டிஷ் படைகள் சுல்தானின் 'அனுமதி'யுடன் ஆக்கிரமித்துக் கொண்டு சுல்தானின் பெயரில் பிரிட்டிஷ் ஹை கமிஷனர் உத்தரவுகளைப் பிற‌ப்பித்து ஆட்சி செய்தார். அதற்கும் இன்று ஈராக்கில் நடப்பதற்கும் ஆப்கானிஸ்தானில் நடப்பதற்கும் என்ன வேறுபாடு? ஒன்றுமில்லை. அதே நாடகம். அதே காட்சிகள்.

வல்லரசுகள், மூன்றாம் உலக நாடுகளில் உள்நாட்டுக் கலகத்தைத் தூண்டி விட்டு அதன் கட்டுப்பாடு ஒழுங்கைக் குலைப்பது அல்லது அப்படியான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது பின்னர் சிக்கல்கள் முற்றி வருவதற்கு ஆயுதங்களை இருபக்கமும் சட்டப்படியும், சட்டத்திற்கு அப்பாற்பட்டும் வழங்குவது, பிறகு காப்பாற்றுவதாகப் படைகளை நுழைத்து பொம்மை ஆட்சியை நிறுவி தனக்குச் சாதகமான வணிக, நிதி ஒப்பந்தங்களைச் செய்து கொள்வது... இவை நேரடிக் காலனி ஆதிக்க ஆட்சிக் காலத்திற்குப் பிறகு கடைபிடித்து வருவதாகும்.

இந்த வலையில் வீழாமல் இருக்க இதுவரை எந்த நாட்டாலும் முடியவில்லை. அதற்கு அந்தந்த நாட்டின் சமுதாயம் ஆள்வோராகவும் ஆளப்படுபவராகவும் ஆழமாகப் பிளவு பட்டு நிற்பது, ஒரு இனக்குழு மற்றொரு இனக்குழுவை அடிமைப்படுத்துவது போன்றவை காரணங்களாக உள்ளன. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பொது அறிவு எச்சரிக்கையை நடைமுறைப் படுத்த முடியவில்லை.

மேற்கத்திய வல்லரசுகள் கையாண்டு வரும் உத்தியை இன்று சீனா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் ஆதிக்க சக்திகளும் பின்பற்ற வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகிச் செயலில் காட்டி வருகின்றன.

எந்த ஒரு நாட்டின் மக்கள் கூட்டமும் ஒரே சீரான தேவை, பாதிப்புகளை உடையதாக இல்லை. இலங்கைச் சிக்கலில் கூட தமிழன் எங்கு வாழ்கிறான் (வன்னி, யாழ்ப்பாணம், திரிகோணமலை, கொழும்பு...) என்பதைப் பொறுத்து பலன்களும் பாதிப்புகளும் உள்ளன. அதே போல் எந்தச் சமுதாயப் படிக்கட்டில் உள்ளார்கள் என்பதும் பங்கு வகிக்கின்றது. இவை சமுதாயத்தை ஒன்று படுத்தும் முயற்சியின் முன் உள்ள சவால்கள். இவை வல்லரசு நாடுகளின், ஆதிக்க சக்தியாக வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் கூட்டத்திலும் நிலவுகின்றது.

முதலாளித்துவம், சோசலிசம் என்பதெல்லாம் மூடிய உலகில் மூடா வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே இருக்கின்றன. ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி எல்லாம் வெறும் ஆட்சி மாற்றம், அதிகார மாற்றமாகவே இருந்தன, அதனால் வீழ்ந்தன. புதிய சமுதாயத்தை பழைய, காலவதியான, நீடித்து இருக்க முடியாத வாழ்க்கை மதிப்பீடுகளைக் கொண்டு கட்டி எழுப்ப முடியாது.

இதை எதிர் கொள்ள ஒரு மக்கள் கூட்டம் இன்று நிலவும் வாழ்க்கை பற்றிய மதிப்பீடுகளை ஆய்வு செய்யாமல் இயலாது. அந்நியர் கருத்துத் தலையீட்டை எதிர்க்காமல் அவர்களின் பொருளாதார, வணிக, அரசியல், ராணுவத் தலையீட்டை எதிர்க்க முடியாது. அந்த வகையில் கமால் அத்தா துர்க் துருக்கியின் வாழ்க்கை முறையை ஐரோப்பிய முறைக்கு மாற்றியதன் மூலம் நெடுங்கால அடிமைத் தனத்திற்கு வழிகோலி விட்டார் என்றும் சொல்ல இடம் உள்ளது.

மதத்தையும் அரசையும் பிரிக்க வேண்டுவது முதல் படி. அதற்குப் பிறகு பல படிகள் உள்ளன. அவற்றைச் சரியாகச் செய்யாவிடில் வழுக்கி மீண்டும் முதல் படிக்கும் கீழே போய் விடும் ஆபத்து உள்ளது.

அதனால் நாம் இந்த நூலைப் படித்து அறிந்து கொள்வது ஒரு குறிப்பிட்ட தீர்வை அன்று. ஒரு தன்னலமற்ற தலைவன் எப்படி இருப்பான் என்பதைத் தெரிந்து கொள்ளவே ஆகும். அதிலும் கமால் தொடக்கத்திலிருந்தே புகழுக்கு அடிமையாகாமல் விழிப்பாக இருந்து வந்துள்ளது வியப்பான ஒன்றாகும். அதற்கு அவன் தந்தை பெரும் காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

துருக்கியைப் பின்பற்றி லிபியாவில், ஈராக்கில், ஈரானில், எகிப்தில் நடந்த அந்நியர் ஆதிக்கத்தை எதிர்த்த விடுதலைப் புரட்சிகளும் ஆட்சி மாற்றங்களும் கமாலின் பாதையில் செல்லவில்லை என்பதைப் பார்க்கும் போது 'துருக்கியின் தந்தை' என்று முஸ்தபா கமால் அழைக்கப்படுவதன் சிறப்பு விளங்குகிறது.

நூலின் இரண்டாம் பதிப்புரையில் சொல்லியுள்ளது போல் முஸ்லிம் அன்பர்கள் வரவேற்பைப் பெற்ற இந்நூல் இன்றைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய ஒன்றாகும். அதற்கு வழி வகுத்துள்ள ஐரிஸ் பதிப்பகத்தாருக்கு நன்றி.


ஆணவமும் ஆசையும் - குட்டுப்பட்டக் குரங்கன்


2011-07-26

ஆணவமும் ஆசையும் - குட்டுப்பட்டக் குரங்கன்
                               (உருவகக் கதை)

குரங்கன் ஒரு துடிப்பான, கூர்மையான குரங்கு. அவன் மரத்தில் கிளைக்குக் கிளை தாவுவதிலும் மரத்திற்கு மரம் தாவுவதிலும் வல்லவன். அதில் அவனுக்கு அலாதி இன்பம்; சாதனைப் பெருமிதம். அவ‌ன் தன்னம்பிக்கையும் தன்முனைப்பும் 'தன்னால் தாவ முடியாது எதுவும் இல்லை' என்ற ஆணவமாக மாறியது.

புதுப் புது மரங்களைத் தேடித் தாவி வெற்றி கொள்வது அவன் சாதகம். அப்படிப் போகும் போது ஒரு மரத்தடியில் ஒரு குத்தர் (குரங்குச் சித்தர்) சில பத்தர்களிடம் (பக்குவப்பட்டக் குரங்குகள்) சொல்லிக் கொண்டு இருந்ததைக் கவனித்தான்.

"எல்லாம் தானாய் நடக்க‌த்
தன்னால் நடப்பதாய்க் குதிக்காதே
சொல்லால் காட்ட‌ இயலாச்
சுவையைச் சும்மாவாய் மதிக்காதே

'நம்மால் எல்லாம் முடியும்' என்ற ஆணவம் ஆகாது. நம் தெய்வக்குலவர் திருக்குள்ளுவர் 'வலியறிதல்' என்ற அதிகாரத்தில் 10 திருக்குரள்களை எழுதி வழிகாட்டியுள்ளார். அதில் முக்கியமான குரள்,

தன்காலும் கையளவும் தாவும் தொலைவ‌ளவும்
உன்வாலும் தூக்கிக் குதி (திருக்குரள்: -471) 

ஆகும்."

[திருக்குள்ளுவரின் திருக்குரளைக் கற்போரிடமிருந்து ஆணவம், ஆசை என ஒவ்வொன்றாகக் கழிந்து கொண்டே போகுமாதலால் அவரின் குரள்களுக்குக் கழித்தல் குறியுடன் -1, -2, -3,...வரிசை எண் இடுவது என்று தமிழ்க் குரங்குச் சங்கப் பலகையில் கற்றடங்கிய குலவர்களால் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.]

இதைக் கேட்டக் குரங்கனோ, 'ஏமாளிப் பத்தர்களுக்கு ஏற்றச் சோம்பேறிக் குத்தர்' என்று நினைத்த வண்ணம் அம்மரத்தில் ஏறி உச்சிக்குச் சென்று தாவினான்; குச்சி உடைந்து பொத்தென்று விழுந்தான். ஆணவம் அடி வாங்கியது. ஆர்ப்பாட்டம் அடங்கியது. அன்று முதல் குரங்கன் ஆணவத்தை விட வேண்டியது பற்றி அனைவரிடமும் அளந்தான்; மின்னஞ்சலில் கூட மிகவும் வலியுறுத்தி எழுதினான். 

என்றாலும் உச்சிக் கிளை ஆடியது; அழைத்தது. ஆணவம் இல்லை என்றாலும் ஆசை இருந்தது. முயற்சியும் பயிற்சியும் முடிக்கலாம் எதையும் என்று ஆசைக்குத் தூபம் போட்டது. குரங்கன் அரைப் பட்டினி கிடந்து உடல் இளைத்தான், உச்சிக் கிளையில் உடலைத் தாங்கும் பொருட்டு. பறக்கவும் பயிற்சி எடுத்துக் கொண்டான். குத்தர் கவனித்தார். குறிப்பாய்ச் சொன்னார்.

"தவம்செய்வார் தாவுவார் தாவிக் குதித்தே
அவம்செய்வார் ஆசையுள் பட்டு" (திருக்குரள்: -266) 

பயனில்லை. குரங்கனை ஆசை உச்சிக்கு இழுத்தது. உருட்டி விட்டது. இம்முறை குச்சியுடன் குரங்கனின் உச்சியும் உடைந்தது. உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் ஆசைக்கு ஆபத்து.

உணர்த்தும் படிக் குத்தர் குத்தினார்.

"ஆணவம் போனால் அரைக் கிணறு
ஆசையும் போனால் முழுக் கிணறு
பாதியில் நின்றவன் பாடு தினறு
ஆதியில் நின்றதை அறிந் துணரு"

குரங்கன் குத்தரிடம், 'ஆசை இல்லாமல் வாழ்வது எப்படி?' என்று வினவினான். குத்தர், 'வாழ்வதற்காக ஆசைப் பட்டால் அது உன்னை வருத்தாது. ஆசைக்காக வாழ முற்பட்டால் அது உன்னை வதைக்கும்' என்றார். 

குட்டுப்பட்டக் குரங்கன் விழித்தது; குடும்பம் சிறந்தது. குமுகாயம் சீர்ப்பட்டது.

- குரங்கார்

குரங்கார் பற்றிச் சிறு குதிப்பு:
சரியார் குரங்கார் ஆனார். சரியார் தத்து எடுத்த குரங்கு அவரின் உளறலால் உரம் பெற்று வளர்ந்தது. சரியார் எட்டடி ஆழத்திற்கு உளறினால் குரங்கார் பதினாறு அடி உயரத்திற்கு உளறுவார். சரியார் வளவளவென்று பேசி உளறினால் குரங்கார் பேசாமலேயே உளறுவார். சரியார் குரங்காரின் வளர்ச்சியால் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தார். சரியார் குரங்காரை உற்று நோக்கினார். குரங்காரின் சலனமற்ற‌ கண்கள் 'குரங்கு ஆர் (யார்)?' என்று வினவின. அன்று முதல் சரியார் குரங்கார் ஆனார்.

Sunday 17 July 2011

அருவி எங்கள் அருவியாம்

2006.09.08

அருவி எங்கள் அருவியாம்

என் தம்பியின் மகள் அருவிக் குட்டியுடன் மகிழ்ந்த நாள்களின் நினைவாகவும் கோவைக் குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்த நினைவாகவும் எழுந்த பாடல். வரிகள் பல இரண்டு அருவிகளையும் தழுவி வருகின்றன.

அருவி எங்கள் அருவியாம்
ஆர்த்து விழும் அருவியாம்
உருவில் கருணை வெள்ளமாம்
உலகைக் காக்கும் மூலமாம் (உள்ளமாம்)

ஆறு கொடுக்கும் அருவியாம்
அடர்ந்த காட்டின் அருவியாம்
சீறும் மலையின் முழக்கமாம்
செறிந்த அன்பு பிறக்குமாம்

சின்னக் கைகள் அருவியாம்
செல்ல நடை அருவியாம்
குன்று (குண்டு) குளம் கண்களாம்
கோளம் முழுதும் தெரியுமாம்
[அருவி (நீர் வீழ்ச்சி) விழும் இடத்தில் உள்ள குளத்தில் சுற்றுப் புற மலைகளும் வானமும் தெரியும். அது அருவியின் கண்கள்.]

அடவி தங்கை அருவியாம்
ஆடும் மங்கை அருவியாம்
படரும் பாறை முல்லையாம்
பரவும் திவலைச் சேலையாம்
[பாறையின் மீது வெண் நுரையாகப் பாய்ந்து வரும் அருவி பாறை-முல்லை என்று வருணிக்கப்படுகிறது.]

வருத்தம் தீர்த்த அருவியாம்
வாழ்வு தந்த அருவியாம்
கருத்த மேகம் கூந்தலாம்
கட்டிப் பிடிக்கும் சிந்தலாம்
[நீர்த் திவலைகள் நம் உடலைத் தழுவுகின்றன. அருவி நம் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சுகிறாள்.]

வெள்ளை நுரை அருவியாம்
வெடிச் சிரிப்பு அருவியாம்
கொள்ளை அழகு தீட்டுமாம்
குதித்து தலை ஆட்டுமாம்

மருந்து நீர் அருவியாம்
மலையின் தார் அருவியாம்
விருந்து என்றால் பிடிக்குமாம்
வீடு எல்லாம் நிறையுமாம்
[தார் என்றால் கழுத்தில் அணியும் மாலை. நீர் வீழ்ச்சியில் மகிழ நிறைய பேர் வருவர். அருவிக்கு நிறைய விருந்தினர்களைப் பிடிக்கும்; விருந்தும் பிடிக்கும்.]

திறந்த வாய் அருவியாம்
தெளிந்த பேச்சு அருவியாம்
மறைந்த பெண்(தாய்) வந்ததாம்
மகிழ்ச்சிப் பண் தந்ததாம்
[நீர் வீழ்ச்சியின் வாய் ஓயாது. மறைந்த அம்மா அருவியாக வந்துள்ளார். குன்றுகளிடையே மறைந்து வந்து அருவி கொட்டுகிறது.]

அம்மா அப்பா அருவியாம்
அருமை பெருமை அருவியாம்
அம்மா மீண்ட அருவியாம்
அமைதி கண்ட அருவியாம்
[அம்மா அருவியாக மீண்டுள்ளார். மெய்யுணர்வுக் கருத்துகள் குடும்பத்தில் விரவி மன அமைதி (ஒடுக்கம்/அடக்கம்) காணும் காலத்தில் அருவி உதித்துள்ளாள்.]