Tuesday 26 February 2013

'விஸ்வரூபம் – விளங்கும் உண்மைகள்' - கருத்துகள்

2013-02-26

http://siragu.com/?p=6401
விஸ்வரூபம் – விளங்கும் உண்மைகள்

கீழ்க்கண்ட கருத்தை மேலே உள்ள கட்டுரையின் மீது பதிவு செய்துள்ளேன்.

நடிப்பவர்கள் பிறரைப் போன்று ஒரு தொழில் செய்பவர்கள். அதிலும் அவர்கள் அட்டைக் கத்தி வீரர்கள். போலித் தனத்தைக் காசாக்குபவர்கள். நம் முட்டாள்தனத்தில், மயக்கத்தில் வணிகம் நடத்துபவர்கள். டாஸ்மார்க் போதைக்கும் சினிமா போதைக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறதா? ஆல்கஹால் மருந்தாகப் பயன்படுவது போல் சினிமாவைப் (கலை) பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. அதிலும் இன்றுள்ள அதி தொழில்நுட்பத்தில் நடிப்பவரின் திறமைக்கு எவ்வளவு பங்கு? எடுத்துக் காட்டாக, ஒருவர் பாட்டு எழுதி, இன்னொருவர் இசை அமைத்து, மற்றொருவர் பாடி இருக்க நடித்து உதடு அசைத்தவர் பெயரில் அப்பாடல் அழைக்கப்படும் பொய்மை நமக்குத் தெரியாமலா இருக்கிறது? என்றாலும் மயங்குகின்றோம்.


60, 70 ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பவர்கள் என்றால் கேவலமாகக் கருதப் பட்டதிலிருந்து இன்று நடிப்பவர்கள் அரசியலையும் ஆட்டுவிக்கும் வண்ணம் ஆகி உள்ளது சரியான வளர்ச்சியா? இந்தப் புற்றுநோய் வளர்ச்சியிலும் அதன் தீர்விலும் நம் ஒவ்வொருவரின் பங்கும் இருக்கின்றது.

ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த நாட்டில் 'தமிழ்ப்' பள்ளிகள் நடத்தி தாய்மொழியைப் பேணி வரும் சிறந்த ஆக்க வேலைக்கு எதிராக தமிழ்ச் சினிமாவையும் அதன் போலிகளையும் தூக்கிப் போற்றிப் பரப்பி வரும் இன அழிவு வேலையையும் முன்னின்று செய்து வருகிறார்கள்.

இந்தியத் துணைக்கண்டத்தில் சினிமா மோகம் குறைந்த இனங்களின் (குஜராத்தியர்) மனப்பான்மை வேறுவிதமாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். சினிமா போதை குறையாமல் தமிழர்களின் (ஈழத்தமிழர்கள் உள்பட) போக்கில் ஆரோக்கிய மாற்றம் வரும் என்று நினைப்பது பகற்கனவு.

கலை உணர்வற்ற கல்மனம் கொண்டவனின் புலம்பல் அன்று இது. நல்ல தமிழ்த் திரைப்படப் பாடல்களைப் போற்றுபவனே. திருக்குறளிலிருந்து கற்றுக் கொள்ளும் சில கருத்துகளைத் திரைப் படப் பாடலிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம் என்று சொல்லி வருபவனே. கலையைப் போற்றுவது போதையாகி விடக் கூடாது. போலித்தனத்தைப் போற்றும் வரை அடிமையாகத் தான் இருக்க முடியும். போலித்தனத்தில் பொருள் (அர்த்தம்) தேடி விமர்சிப்பது (அதன் முகத்திரையைக் கிழிப்பதற்கு அப்பால்) வீண் வேலை.

இன்றைய நிலையில் நாம் தமிழ் சினிமாவைப் பார்த்து ஆதரிக்காமல் இருந்தாலே போதும்; அதுவே தமிழ் இன, மொழி மறுமலர்ச்சிக்குச் செய்யும் நம்மளவிலான தொண்டாகும். 

***

“ஈழப்போர் என்பது இந்தியா அதிகாரவர்க்கத்திற்கு சவால் விடும் ஒரு வரலாற்று நிகழ்வு” என்பது எப்படி என்று கட்டுரையாளர் இன்னொரு கட்டுரையில் விளக்குவாரா? ஈழப்போர் பற்றிய படமெடுத்து எல்லாப் பக்க உண்மைகளையும் சொன்னால் படம் யாருக்குமே பிடிக்காது. அவரவர் அவரவருக்குப் பிடித்த ‘உண்மைகளை’ மட்டுமே கேட்கவும் பார்க்கவும் விரும்புகின்றோம். அதை நாம் தன்னுணர்வாகத் தாண்டி அடுத்தப் பக்கச் செய்திகளையும் தெரிந்து கொள்ளா விட்டால் மேற்கண்டது போன்ற ‘மாயை’யில் தான் உலவ நேரிடும். ‘இகலுக்கு எதிர் சாய்தல் ஆக்கம்’ (திருக்குறள்: 858) பற்றற்ற பொறுப்புணர்ச்சி தான் நம்மை சரியாக வழி நடத்திச் செல்லும்.


Saturday 26 January 2013

Collective delusion / Group delusion - கூட்டு மயக்கம் / குழு மயக்கம்

2013-01-26

கூட்டு மயக்கம் / குழு மயக்கம்

ஒரு விஷயத்தை பலர் அலசும் போது ஒவ்வொருவரும் பிறரின் கருத்தை அறிந்து கொள்ளும் முன் தனித் தனியாக அலசி அவரவராக முடிவுக்கு வர வேண்டும்இல்லாவிடில் அடுத்தவரின் கருத்து கேட்பவரின் நடுநிலையைப் பாதித்து விடும்அப்படிப் பாதிக்கும் போது எல்லோருமாகச் சேர்ந்து கூட்டு மயக்கம் / குழு மயக்கம் அடைந்து ஒரே முடிவுக்கு வரும் படி அவர்களை அறியாமல் தள்ளப்படுவர்.

இது விரிவாக ஆராய்ச்சி செய்யப் பட்டுள்ளதுஇதைத் தவிர்க்கப் பல யோசனைகளும் திட்டங்களும் முன் வைக்கப் பட்டுள்ளனஎடுத்துக் காட்டாகஒரு விஷயத்தைப் பற்றிக் கலந்து பேசக் கூடும் போதுஅவ்விஷயத்தைப் பற்றிய சார்பற்ற வெளிப்படையான கருத்துகளை மட்டும் கூறி விட்டு ஒவ்வொருவரையும் அவர்களின் வாதப் பிரதிவாதக் கருத்துகளைத் தாளில் எழுதி மேசையின் மீது வைத்து விட்டு, பிறகு ஒவ்வொருவராக அவர்கள் கருத்துகளைப் படித்து விளக்க வேண்டும்இப்படிச் செய்யும் போது யாரும் அவர் தாளை எடுத்துத் திருத்தம் செய்யக் கூடாதுஅவரவர் முறை வரும் போது தாளில் எழுதியுள்ளதையே (கருத்து இப்போது மாறுபட்டு இருந்தாலும்படித்து விளக்க வேண்டும்கடைசியாக எல்லா உடன்பாட்டுஎதிர்மறைக் கருத்துகளையும் பட்டியல் இட்டு மதிப்பெண்கள் கொடுத்து முடிவுக்கு வரலாம்ஒவ்வொரு கருத்துக்கும் மதிப்பெண் கொடுப்பதை அனைவரும் வாக்களித்து முடிவு செய்யலாம்.

இப்படிச் செய்வதால் முடிவு செப்பமாக அமைய வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை விட நன்கு பேசத் தெரிந்த ஒருவரோ அல்லது முதலில் சொல்லப் படும் கருத்தோ முடிவைத் திரித்து விடுவதைத் தவிர்க்கலாம்அதே சமயம் எந்த ஒரு முறையும் அதில் பங்கேற்பவர்களின் பொறுப்புணர்ச்சிதன்னறிவுசிந்திக்கும் திறன் போன்றவற்றைப் பொறுத்தே பலன் தரும்.

Thursday 17 January 2013

சுயநலம் சரணம் கச்சாமி

2013-01-17


'சிறகு' இணைய தள இதழின் பொங்கல் சிறப்பிதழில் 'சுயநலம் சரணம் கச்சாமி' என்ற உரையாடல் வெளிவந்துள்ளது.

Thursday 3 January 2013

கடல் கடந்த மடல் 8

2013-01-03


கடல் கடந்த மடல் 8

தமிழ்நாட்டு நலம் நாடிகளே!

காலக் கவலை

மனிதனால் எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணிக்கவும் முடியவில்லை; எதிர்காலத்தை முற்றாக நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை. மற்ற விலங்குகளும் எதிர்கால அறிவைக் காட்டுகின்றன. அணில்கள் கொட்டைகளை நாளைக்குப் பயன்படும் என்று புதைத்து வைக்கின்றன. எலிகள் வளையில் எதிர்காலத்திற்கென்று நெல்கதிர்களைப் பதுக்குகின்றன. ஆனால் விலங்குகள் எதிர்காலத்தை நம்மைப் போல் உணர்கின்றனவா?

விலங்குகள் உணவைச் சேமிக்கின்றன. ஆனால் உணவு கிடைக்குமா என்று ஓயாமல் எண்ணிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. விலங்குகள் உயிர் ஆபத்திலிருந்து தப்பி ஓடுகின்றன. ஆனால் உயிர் ஆபத்தை அனுதினமும் நினைத்து, நினைத்துச் ‘சாவ’தாகத் தெரியவில்லை.

எதிர்கால நோக்கோடு செயல்படாதது உயிர் இல்லை. தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதல் என்பது உயிரியின் அடிப்படையான வரையறை. அதற்கு, ‘தனக்கு என்ன நடக்கும்’ என்ற எட்டப் பார்வை, புரிதல் தேவை. அது அறிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் செயல் வடிவில் எல்லா உயிர்களுக்கும் இருக்கின்றது.

மனிதனைத் தவிர்த்த மற்ற உயிரினங்கள் உணவைச் சேமிக்கலாம். ஆனால் சூழ்ச்சியாகச் சொத்தாக மாற்றிக் கொள்வதில்லை. அவை உயிர் ஆபத்திலிருந்து தப்பி ஓடலாம். ஆனால் உயிர் ஆபத்தை ஒரே அடியாக ஒழித்து விட முனைவதில்லை. இவை இரண்டும் மனிதனுக்கே உரிய கோணல்கள். இவை ஏன் கோணல்கள்? ஏனெனில் மனிதனின் கால அறிவும் மற்ற உயிரினங்களின் கால அறிவும் வேறுபடுகின்றன.

விலங்குகள் அடுத்த (குளிர்) பருவத்திற்கு உணவைச் சேமிக்கின்றன. மனிதன் அடுத்த தலைமுறைகளுக்கே சேர்த்தாலும் நிலைக்கப் போவதில்லை என்பதை (வரலாற்றின் வாயிலாக) அறிந்துள்ளான். விலங்குகள் உடனடி உயிர் ஆபத்திலிருந்து தப்ப முயல்கின்றன. மனிதனுக்குத் தான் எப்படியும் சாவிலிருந்து தப்ப முடியாது என்பது தெரிகின்றது. அதனால் தான் காலம் விழுங்கி விட்டது என்ற பொருளில் ‘காலமானார்’ என்று சொல்கின்றோம்.

அறிவா(ல்) மயக்கமா

அறிவு நிலையாமையைக் காட்டுகின்றது. ஆனால் உயிர் நிலைக்க விரும்புகின்றது. இந்த இழுபறியில் ‘ஆத்மா’, ‘மறு பிறப்பு’, ‘இறந்த பின் பரலோக வாழ்க்கை’ போன்ற மயக்கங்கள், மாயைகள் பிறக்கின்றன. இவை இல்லாவிடில் பயனுள்ள மனித  வாழ்க்கை (purposeful life) சாத்தியமில்லை. மேற்கண்ட மயக்கங்களின் சாயல்களே ‘புகழ்’, ‘சாதனை’ ‘தியாகம்’ போன்றவையும்.

‘எப்படியும் சாகப் போகின்றோம்’ என்று சிலர் உடல் நலத்தைப் புறக்கணிக்கின்றார்கள். ‘எப்படியும் சாகப் போகின்றோம்’ என்று சிலர் உடல் நலத்தை (உயிர் பிழைப்பதை) அளவுக்கு மேல் போற்றுகின்றார்கள். உயிரோடு இருப்பதும் உடல் நலத்தோடு இருப்பதும் ஒன்று போல் மயக்கம் நிலவுகின்றது. தான் இறந்த பின் விட்டுச் செல்லும் ‘எச்சங்கள்’ (சாதனை, தியாகம்) வழியாக வாழ நினைக்கின்றார்கள்.

இவை சரி / தவறு என்று இங்கு வாதிடப்படவில்லை. அறிவா, மயக்கமா, அறிவால் மயக்கமா, அறிவே மயக்கமா? அறிவால் எப்படி மயக்கம் விளைகின்றது; அறிவே மயக்கமா எப்படி இருக்கின்றது என்பதே சுட்டிக் காட்டப்படுகின்றது. ‘தன்நோய்க்கு தானே மருந்தாக’ (திருக்குறள்: 1102) அறிவே மருந்தாகவும் எப்படி இருக்க முடியும் என்பதையும் பார்க்கலாம்.

வாழ்நாளா நோய்நாளா

‘உலக அளவில் நோய்களின் சுமை’ (The Global Burden of Disease) என்ற ஓர் ஆய்வு, வாஷிங்டன் பல்கலைகழகத்தின் நல அளவீடு, மதிப்பீட்டுத் துறையால் (Institute for Health Metrics and Evaluation – IHME – Washington University - http://www.healthmetricsandevaluation.org/)  மேற்கொள்ளப்பட்டது. 50 நாடுகளில் 302 நிறுவனங்களுடன் 480 ஆய்வாளர்களை இணைத்து, பில் & மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை (Microsoft Bill Gates) நிதி உதவியுடன் இந்த ஐந்து ஆண்டு ஆய்வு நடந்து முடிந்து அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. ஆய்வில் வெளிவந்த சில முக்கியத் தகவல்கள்(1):

தொத்து நோய்களை ஒழிப்பதில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளதன் ஒரு விளைவாக நாம் இப்போது பல விதமான வலி, ஊனம், மன அழுத்த நோய்களுடன் நீண்ட நாள் வாழ்கின்றோம். வாழ்நாள் மட்டும் நீடிக்கவில்ல; அது நோய்நாளாகவும் நீடித்துள்ளது.

உணவுப் பற்றாக்குறையை விட, அதிகம் உண்ணுதல், குருதிச் சர்க்கரை மிகுதி என்பன நோய் ஆபத்துக் காரணங்களாக அதிகரித்துள்ளன. இது வளர்ந்து வரும் நாடுகளுக்கும்  பொருந்தும். மேலும் புகை, மது, கொழுப்பும் இனிப்பும் மிகுந்த உணவு, உடற்பயிற்சியின்மை (நடத்தல், வீட்டு வேலை செய்தல்…) போன்றவற்றால் வரும் நோய்களால்  இறப்போர் தொகை மிக அதிகரித்துள்ளது.

உன் பிள்ளைகளுக்குக் கொஞ்சம் குளிரையும் பசியையும் விட்டுச் செல்” என்று கன்பூசியஸ் சொல்லியதாகப் படித்த நினைவு. ஆனால் நாம் ‘எதிர்காலத்தைப் பற்றிய அதீத கவலையால்’ சேர்த்து வைப்பது சொத்து மட்டுமன்று; நோய்களும் தான்.

தன்நோய்க்கு தானே மருந்து


கத்தி, குத்திக் கொலை செய்யவும் அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காக்கவும் பயன்படுகின்றது. அறிவு எதிர்காலத்தை எண்ணிச் செயல்படவும் வைக்கின்றது. அது தறிகெட்டுப் போய், பொருள் பேராசையாகவும் உயிர்ப் பேராசையாகவும் அலைக்கழிக்கின்றது. இதைப் புரிந்து கொண்டு ‘அளவறிந்து’ செயல்பட உதவுவதும் அதே அறிவுதான்.

நம் வாழ்நாளுக்குள் நிகழ்ந்து வரும் மாற்றங்களைப் (அரசியல், சமுதாய, மதம், அறிவியல், கல்வி, பொழுது போக்கு, உணவு, உடை, வீடு, போக்குவரத்து, குடும்ப உறவுகள், தீவிரவாதம், போர்கள், பெரும் விபத்துகள்… கடற்கோள், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, வெள்ளம்…) பார்த்தால் அடுத்த வரும் (5, 10, 20…) ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்று யாரால் கணிக்க முடியும்? ஆரோக்கியமான சமுதாயமே நம் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான சொத்து. அதை விட ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வாழ்வு பற்றி சிந்தனை, மதிப்பீடு இவற்றை அவர்களிடம் உருவாக்குவதே அவர்கள் நிறைவான வாழ்க்கை வாழ உறுதியான வழி.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று நம் அறிவுக்குத் தெரியும். ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவே (குமர குருபரர்)’ என்றும் அதற்குப் புரியும். ஆனால் கடைபிடிக்க முடியவில்லை. ஏன்? திருக்குறளைப் போற்றிக் கொண்டே, 'அவா அறுத்தல்', 'நிலையாமை', 'தவம்', 'மெய்யுணர்தல்'... போன்ற அதிகாரங்கள் திருக்குறளில் இல்லாதது போல் நடந்து கொள்கின்றோம்.  'பொருளில்லாருக்கு இவ்வுலகு இல்லை' என்பதைப் பிடித்துக் கொண்டு 'அருளில்லார்க்கு அவ்வுலகு இல்லை' (திருக்குறள்: 247) என்பதைப் புறக்கணிக்கிறோம்.

மேம்போக்காக, வெற்று அறிவாக, கட்டுரை எழுதவும் அடுத்தவருக்கு அறிவுரை சொல்லவும் சொற்பொழிவு செய்யவும் தெரிந்து வைத்துப் பயன்படுத்துகின்றோம். நம்மால் மாற்றக் கூடியதையும் மாற்ற முடியாததையும் பிரித்து அறிந்து தெளிவு படுத்திக் கொள்ளவில்லை; அதில் உறுதி அடையவில்லை.

ஊளைச் சதை உடலம், நல் உப்பிட்டு வைப்பினும் தப்பிடுங்காண்’ என்றார் பெருஞ்சித்திரனார். நாம் உயிர் தப்பிக் கொண்டே இருக்க முடியாது. அது மாற்ற முடியாதது. ஆனால் உயிர் வாழும் வரை ஆரோக்கியமாக வாழ நல்ல உணவு, உறக்கம், உடல், மன பயிற்சிகள், பழக்க வழக்கங்களைப் பின்பற்ற முடியும். அது மாற்றக் கூடியது. மரணம் நிச்சயம். அது மாற்ற முடியாதது. ஆனால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது என்ற மனப்பான்மையை நம்மால் மாற்ற முடியும். நிறைவான வாழ்க்கை பற்றிய தெளிவு இருப்பின் ‘உறங்குவது போலும் சாக்காடு’ (திருக்குறள்: 339) என்ற அமைதியை அடைய முடியும். மேற்குலகில் ‘அருளுடன் அடங்குதல்(Dying Gracefully) என்ற கருத்து பரவி வருகின்றது.

பொருளைத் தேடாமல் வாழ்க்கை இல்லை. அது மாற்ற முடியாதது. ஆனால் ‘உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்’ (திருக்குறள்: 592), ‘அச்சமுடையார்க்கு அரணில்லை’ (திருக்குறள்: 534) என்பன பொருளைப் புறக்கணிக்காது அளவோடு போற்ற வைக்க முடியும். இந்த மாற்றம் நம்மால் முடியக் கூடியது.

தேவைக்கு மேல் வைத்திருப்பதே திருட்டு’ என்றார் காந்தியடிகள். நாம் அந்த அளவுக்குப் போகத் தேவையில்லை. அடுத்த தலைமுறைக்குப் பெரும் சொத்து சேர்க்காமல் இருந்தாலே போதுமானது. வெறும் பொருளை வைத்துப் பிறரை மதிக்காமல் போற்றாமல் இருந்தாலே அதுவே ஒரு கிளர்ச்சி தான். அதிலும் சமுதாயத்திற்குத் தீங்கு விளைக்கும் வழிகளில் பொருள் சேர்த்தவரை அண்டாமல் இருந்தாலே அதுவே ஒரு புரட்சி தான். அதற்கு நமக்கு முதலில் ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’ (திருக்குறள்: 341) என்பதிலும் ‘தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் தம்தம் வினையான் வரும்’ (திருக்குறள்: 63) என்பதிலும் தெளிவு, உறுதி வேண்டும்.

இவற்றைச் சொல்வது எளிது; பின்பற்றுவது கடினம். நல்லவனாகவும் வல்லவனாகவும் இருப்பது வெறும் நல்லவனாகவோ வல்லவனாகவோ இருப்பதை விடப் பல மடங்கு கடினமானது; அரிதானது. இவற்றை ‘உலகத்தோடு ஒட்டி ஒழுகியும்’ (திருக்குறள்: 140)  ‘ஊழி பெயரினும் தாம் பெயராமலும்’ (திருக்குறள்: 989) கடைபிடிப்பது தான் நம் அறிவுக்கும் பண்புக்கும் ஆளுமைக்கும் உள்ள சவால்.

இவற்றை நம்மால் ‘காந்தி’ போல் தனியனாக முழு வீச்சில் செய்ய முடியாது. நமக்கு மேற்கண்ட ‘மனநலம்’ மட்டும் இருந்தால் போதாது. அதற்குத் துணையாக ‘இனநலமும்’ வேண்டும். ‘மனநலம் நன்குடையார் எனினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து’ (திருக்குறள்: 458) என்பதைக் காண்க. நம் பெரியோர்கள் நல்வழி காட்டவில்லை என்று குறை சொல்ல முடியாது; அவற்றைக் கொண்டு நம்மை நாம் நல்வழி நடத்திக் கொள்ளவில்லை என்பதே குறை.

Oh God, give me the courage to change the things that can be changed, the strength to accept the things that cannot be changed and the wisdom to differentiate the two.
இறைவனே, மாற்றக் கூடியதை மாற்றும் துணிவையும் மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் பலத்தையும் இரண்டையும் பிரித்தறியும் ஞானத்தையும் அருள்வாயாக!

தமிழ்நாடி,
மார்கழி 19 , திருவள்ளுவர் ஆண்டு 2043 (சனவரி 3, 2013)

(1)
http://www.healthmetricsandevaluation.org/gbd/news-events/news-release/massive-shifts-reshape-health-landscape-worldwid
===============================================
2013-01-04


Good read.

Technology generates many options, some with short term gain and long term pain. It is the wisdom (Info->data->knowledge ->science->technology->Wisdom) which helps one to make right choice amongst sheer abundance as opposites are embedded in same thing. If there is no death , I am sure all people will long for it.In the long term we all will become extinct ; difficult to believe?; I think we are no better than dinosaurs. Hence living today better by making right choices is crucial and that is the only thing needed rather than worrying and saving for future far beyond your need; no animal stores its food need beyond tiding over the next season.

-Thoughts of a wanderer.-



Pillai.RAP

===============================================
2013-01-04


எது கிடைக்கவில்லையோ அதற்கு ஏங்குவது மனதின் இயல்பு. 

அறிவியல் அறிஞரும் அறிவியல் நாவலாசிரியருமான ஐசக் அஸிமோவ் 'இரு நூற்றாண்டு மனிதன்'  (The Bicentennial Man) என்ற கதையில் வரும் அறிவுக்கூர்மையுள்ள ரோபாட் ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் போது, மனிதர்கள் இறப்பதையும் தான் இறக்காமல் நீடிப்பதையும் தொடர்ந்து பார்த்த பின், அதற்கு 'இறக்கும்' ஆசை வந்து விடுவதாக எழுதியிருப்பார். கடைசியில் ரோபாட்டின் விருப்பப் படி அது இறந்து போவதாகவும் (அஸிமோ எழுதிய ரோபாட்டின் முதல் விதிக்கு - தன்னைத் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் - எதிராக) கதையை முடித்திருப்பார். இக்கதை 1999-இல் The Bicentennial Man என்ற திரைப்படமாக வெளிவந்தது; பார்க்கத் தகுந்தது.

காதலர்கள் மனம் நிறைந்து ஒன்றி இருக்கும் போது 'தாங்கள் இப்படியே இக்கணமே இறந்து விட' விரும்புவதாக நாவல் / திரைப்படங்களில் பார்த்திருக்கின்றோம். அதே காதலர்கள் உறவினர், ஊர் எதிர்ப்பால் தங்கள் காதல் பூர்த்தியாகாத போது, எப்படியாவது தப்பிச் சென்று 'வாழத்' துடிப்பதாகவும் காட்டப்படுவது, மனம் 'ஆசை' ஏக்கத்தில் இருக்கும் வரை உயிர் வாழ விரும்புவதைச் சுட்டுகின்றது.

We LIVE in our desires not in our achievements!
நாம் நம் ஆசைகளில் வாழ்கின்றோம், சாதனைகளில் அன்று!

இதற்கு மாறாக, மகிழ்ச்சியாக இருக்கும் கணம் இப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்புவதும் ஆசை பூர்த்தியாகாத போது தற்கொலை செய்து கொள்வதும் நடக்கின்றது. விதிவிலக்குகள் இல்லாத விதி இல்லை! ஒரு கணம் அப்படியே (அதில் சம்பத்தப்பட்டவர்களுக்கு) நீடிக்க அவர்களை அப்படியே அக்கணத்தில் அதி விரைவில் ஆழ உறைய வைத்து (sudden rapid deep freezing) விட்டால் தான் (அதாவது செத்தால் தான்) முடியும்!

வாழ்வு விளையாட்டின் (life game) உண்மை உணர்ந்த ஞானிகள் சமாதி ஆவதும் 'அவா அறுபடும் போது' மேற்கொண்டு ஆட ஆர்வமில்லாமல் அடங்குவதாகக் கொள்ளலாம்.

சமாதியில் 'சகஜ சமாதி' என்ற நிலை உண்டு. அதாவது சாதாரண, அன்றாட வாழ்வே சமாதி போன்று இருப்பதாகும். 'ஆசை அற்று' இருப்பது என்பது 'நான்' என்ற கொக்கி, மையம் கழன்று விடுவதாகக் கொள்ளலாம். அல்லது ஆசைகளைக் கட்டி இணைத்திருக்கும் 'நான்' என்ற முடிச்சு அவிழ்ந்து விடுவதாகவும் கொள்ளலாம். அப்போது ஆசைகள் வந்து போகும். ஆனால் அவை 'பற்றித் தொங்க' ஒரு கொக்கி, மையம் (நான்) இருக்காது. காற்று போல், கடல்அலை போல் மேகங்கள் போல் ஆசைகள் ஆகும். அதனால் ரமண மகரிஷி 'ஆசையற்று' இருப்பது என்பது 'நான்' அற்று இருப்பதே என்றும் 'பொருள்களைத்' துறப்பது துறவு அன்று, 'நான்' என்ற பற்றைத் துறப்பதே துறவு என்றும் சொல்லியுள்ளார்.

'யான் (நான்) எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கும்
உயர்ந்த உலகம் புகும்' (திருக்குறள்: 346)

'நான் யார்?' என்ற ஆய்வு ஏதோ (உயிர்) போகிற நேரத்தில் புண்ணியத்திற்கு வழி தேடும் 'ஆன்மீக ஆசை' அன்று. அன்றாட வாழ்விற்கு அவசியமான அறிவியல் ஆய்வாகும்.

நடத்தை உளவியலில் (behaviour psychology) இது இன்று முக்கிய பங்கு வகிக்கின்றது. மனநல மருத்துவத்தில் (psycho therapy) இது பயன்படுகின்றது. தன் வளர்ச்சி (personal development) பயிற்சிகளில் இது வலியுறுத்தப்படுகின்றது. தொடக்கப் பள்ளிகள் முதல் தற்சோதனையாகக் (self-evaluation, self-examination, self-criticism) கற்பிக்கவும் பழக்கப்படுத்தவும் படுகின்றது. 'தன்னை' ஆய்வு செய்வதும் அப்படி செய்வதில் உள்ள வரையெல்லைகளை (limitations) அறிந்து கொள்ளவதும் மனித சமுதாயம் பக்குவப்படுவதில் முக்கியமாகும். இதை நடைமுறைப் படுத்தாத மனிதக் குழுக்கள் பின் தங்கி அடிமைப்படும்; அழிந்து போகும்.

தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு (திருக்குறள்: 436)

'நான்' என்பதைத் துறப்பதை எந்த நான் செய்வது? ரமண மகரிஷி சொல்வது போல் 'திருடனே போலீஸ் வேடம் போட்டுக் கொண்டு, திருடனைப் பிடிக்கக் கிளம்புவது போல்' அது நடக்குமா? அதை ஆய்ந்தால் 'நான்' என்ற பற்று படிப்படியாக வலிவிழப்பது, நீர்த்துப் போவது என்று விளங்கும். அதாவது 'நான்' என்ற உணர்வும் அலை போல், காற்று போல், இதயத்துடிப்பு போல் தானாக வந்து போவதைக் காண்பதாகும். அப்படிக் காண்பது யார் / எது என்ற கேள்வி அடுத்து பிறக்கும். அது அதுதான்! அது,

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றது!

வளி = காற்று
கோன் = அரசன்

If scientists say ultimately everything is fluctuation in quantum field, we believe. Below is the same in a different language / frame / point of view.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
     - திருவாசகம்:19 5.திருச்சதகம் 2.அறிவுறுத்தல்

அங்கு இங்கு எனாத படி எங்கும் பிரகாசமாய்

      ஆனந்த பூர்த்தி ஆகி
   அருளொடு நிறைந்தது எது? தன்னருள் வெளிக்குளே
      அகிலாண்ட கோடி எல்லாம்
தங்கும் படிக்கு இச்சை வைத்து உயிர்க்கு உயிராய்த்
      தழைத்தது எது? மனம் வாக்கினால்
   தட்டாமல் நின்றது எது? சமயம் கோடிகள் எல்லாம்
      தம் தெய்வம் தம் தெய்வம் என்று
எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது எது?
      எங்கணும் பெரு வழக்காய்
   யாதினும் வல்ல ஒரு சித்தி ஆகி இன்பமாய்
      என்றைக்கும் உள்ளது எது? அது
கங்குல் பகல் அற நின்ற எல்லை உளது எது? அது
      கருத்திற்கு இசைந்ததுவே
   கண்டன வெலாம் மோன உரு ஒளியது ஆகவும்
      கருதி அஞ்சலி செய்குவாம்!

ஊர் அனந்தம் பெற்ற பேர் அனந்தம் சுற்றும்

      உறவு அனந்தம் வினையினால்
   உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ
      அனந்தம் பெற்ற பேர்
சீர் அனந்தம் சொர்க்கம் நரகமும் அனந்தம் நல்
      தெய்வமும் அனந்தம் பேதம்
   திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான
      சிற்சித்தியால் உணர்ந்து
கார் அனந்தம் கோடி வருஷித்த என அன்பர்
      கண்ணும் விண்ணும் தேக்கவே
   கருதரிய ஆனந்த மழை பொழியும் முகிலை நம்
      கடவுளைத் துரிய வடிவைப்
பேர் அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும்
      பெரிய மௌனத்தின் வைப்பைப்
   பேசரும் அனந்த பத ஞான ஆனந்தமாம்
      பெரிய பொருளைப் பணிகுவாம்!
             - தாயுமானவர் - திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்