Saturday 23 June 2012

கடல் கடந்த மடல் 2

ஆனி 9  திருவள்ளுவர் ஆண்டு 2043 (23 சூன் 2012)

கடல் கடந்த மடல் 2

தமிழ்நாட்டு நலம் நாடிகளே!

நாம் தமிழ்நாட்டின் நலம் நாடுவோர். தமிழ்நாட்டின் மோசமான நிலையை ஒப்புக் கொள்வதில் நமக்குள் ஒற்றுமை உள்ளது. ஆனால் அதற்கு என்ன காரணம் அதை எப்படிச் சீர் செய்வது என்பதில் பலவகையாகப் பிளவு பட்டு நிற்கிறோம்.  அது குறித்து சிந்திப்பதற்கு, விவாதிப்பதற்குச் சில கடல் கடந்த செய்திகளைப் பகிர்ந்து கொள்வது பயனளிக்கலாம்.

இஸ்லாம் பெண்மணி தலைமையில் இங்கிலாந்து கன்சர்வேடிவ் கட்சி
http://en.wikipedia.org/wiki/Sayeeda_Warsi,_Baroness_Warsi

http://www.dailymail.co.uk/debate/article-2134926/The-Tories-win-unless-win-ethnic-minority-votes-says-Baroness-Warsi.html

இங்கிலாந்தில் (பிரிட்டன்) கன்சர்வேடிவ் கட்சியும் லிபரல் டெமாக்ரெட் கட்சியும் சேர்ந்து கூட்டணி அரசை நடத்தி வருகின்றன. அண்மையில் (மே 2012) நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இரண்டும் படுதோல்வியை அடைந்தன. அப்போது கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் சொன்னார்: "வெள்ளைக்காரர்களின் வாக்குகளை மட்டும் பெற்று ஆட்சி அமைக்கத் தேவையான‌ தனிப் பெரும்பான்மையை கன்சர்வேடிவ் கட்சி இனி அடைய முடியாது. சிறுபான்மை இனத்தவரை ஈர்க்க வேண்டும்". இப்படிச் சொன்ன அத்தலைவர் யார்?

பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்த இஸ்லாம் குடும்பத்தில் (இங்கிலாந்தில்) பிறந்து வளர்ந்த 41 வயதான பெண்மணி சயீதா வார்சி மே 2010 முதல் கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக இருந்து வருகிறார். இவர் தான் அப்படிச் சொன்னார். கன்சர்வேடிவ் கட்சியின் பாரளுமன்றத் தலைவராக இருந்து, பிரதமராகப் பதவி வகிப்பவர் டேவிட் கேமறூன் ஆவர்.

வார்சியின் பெற்றோர் பாகிஸ்தானிலேயே இருந்திருந்தாலும் அவர் அந்நாட்டில் ஒரு கட்சித் தலைவராக வந்திருக்க முடியுமா? பெனாசிர் புட்டோ, புட்டோவின் மகளாக இல்லாவிடில் ஒரு கட்சித் தலைவராகி இருக்க முடியுமா? குடிபெயர்ந்த ஒரு தலைமுறையில், உலகில் கால் பகுதியை ஒரு காலத்தில் ஆண்ட பிரிட்டனில்,  ஒரு முஸ்லீம் பெண்மணி, ஒரு பழம் பெரும் கட்சியின் தலைவராக வர முடிகிறதே.

பிரிட்டிஷ் முஸ்லீம் மதத்தவரிடம் அவருக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று தெரியவில்லை. அவர் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் தேர்தலில் நின்று (2005) தோற்றுள்ளார். இவரைக் கட்சித் தலைவராக நியமித்துள்ளது, ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களில் பிரிட்டன் பங்கேற்றதால் ஏற்பட்டுள்ள‌ முஸ்லீம் மக்களின் வெறுப்பை ஈடுகட்டும் முயற்சியாகவும் இருக்கலாம்.

முஸ்லீம் மதத்தினர் தங்கள் மதத்தைப் பின்பற்றவும் மசூதிகள் கட்டிக் கொள்ளவும் இங்கு உரிமையுள்ளது. அதே போல் அரசியலில் அவர்கள் பிரதிநிதித்துவம் பெறவும் முடிகிறது. ஆனால் அதை அவர்கள் எப்படிப் பயனபடுத்திக் கொள்ளப் போகிறார்கள்? தமிழர்களுக்கும் இந்திய அரசில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம்?

வாய்ப்புக் கொடுக்கவில்லை என்றாலும் குறை கூறுகிறோம். வாய்ப்புக் கொடுத்தால் அதை நடைமுறை சாத்தியமாக எப்படி நம் மொழி, இன நலனுக்குப் பயன்படுத்திக் கொள்வது என்று பேரம் பேசலாமே. வாய்ப்பைப் பெற்றத் தனி நபர்களும் அவரின் இனத்தைச் சார்ந்த படித்த, விவரமறிந்த பொது மக்களும் இவ்வண்ணம் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வதே முன்னேற்றப் பாதை. அதை விட்டு விட்டுக் 'கூரை ஏறிக் கோழி பிடிக்கா முடியாத போது (உள்ள வாய்ப்பு, அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்வது) வானம் ஏறி வைகுண்டம் போவதைப் (தனி நாடு/சுயாட்சி பெற்றுப் புரட்சிகரமாக முன்னேறுவது) பற்றிக் கனவில் மயங்கினால் பிற இனத்தினர் நம்மை ஓரங்கட்டி விட்டு உயர்ந்து கொண்டே இருப்பார்கள்.

பால் விலை தெரியாத பணக்காரப் பயல்கள்
http://www.bbc.co.uk/news/uk-politics-17815769

பிரிட்டனின் (கன்சர்வேடிவ் கட்சி) பிரதமர், நிதியமைச்சர் இருவரையும் 'பால் விலை தெரியாத பணக்காரப் பயல்கள்' என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நதின் டோரிஸ் என்ற பெண்மணி குற்றம் சாட்டியுள்ளார். 'உட்கட்சி ஜனநாயகம்' என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் இந்தியத் திரு நாட்டில் இது போன்று பேச்சுச் சுதந்திரத்தை யாரும் தவறிக் கூடப் பயன்படுத்தி விட முடியாது.

இங்குள்ள மூன்று பெரும் கட்சிகளிலும் (கன்சர்வேடிவ், லேபர், லிபரல் டெமாக்ரெட்) பின்னிருக்கை (back bench) பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.  அவர்கள் கலகக்காரர்கள் போல் இருந்து கட்சித் தலைமையோ அரசாங்கமோ எதேச்சதிகாரமாகப் போய் விடாது 'கலவரம்' செய்து கொண்டே உள்ளார்கள். அவர்களை, கட்சித் தலைவர்களுக்குப் பயந்து கொண்டோ கட்சிகளிடம் 'கவர்' வாங்கிக் கொண்டோ, ஊடகங்கள் புறக்கணிக்காது உள்ளன. அரசு விளம்பரங்கள் கிடைக்காது என்று பயப்படும் நிலையிலும் இங்குள்ள ஊடகங்கள் இல்லை. அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டுப் புடைக்கச் சொன்னால் (கட்சித் தலைமையோ, அமைச்சர்களோ) அதை 'மாற்றலு'க்குப் பயந்து கொண்டு பணிந்து செய்யும் காவல் துறையும் இங்கு இல்லை. இவ்வாறு இங்கு இல்லாததெல்லாம் நம் நாட்டில் எவ்வளவோ உள்ளன! இங்கிலாந்து பாராளுமன்ற மக்களாட்சி நம்மிடம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்!

அப்படி அந்தக் 'கலகக்காரப்' பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கக் காரணம் அவரவர் தொகுதி மக்களிடம் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளும் அவற்றைக் காப்பாற்ற அவர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்காவிடில் தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்திக்க முடியாது என்பதும் ஆகும். ஆக, மக்களாட்சியில் மக்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் தான் எல்லாம் உள்ளன.

பிரிட்டனில் பொருளாதார அமைப்பை 180 டிகிரி திருப்பிப் பல சாதனைகளையும் வேதனைகளையும் சாதித்தவர் பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் மார்கரெட் தாட்சர். ஆனால் அவர் மூன்றாம் முறையாகத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதமர் ஆனாலும் (அவரின் எதேச்சதிகாரத்தைக் கண்டித்து) அவர் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பால் தான் பதவி விலக வேண்டியதாயிற்று. நாட்டில் ஜனநாயகம் நிலவ கட்சிக்குள் ஜனநாயகம் வேண்டும்; வீட்டில் ஜனநாயகம் வேண்டும்.

http://en.wikipedia.org/wiki/Margaret_Thatcher

தமிழ்நாடி
ஆனி 8  திருவள்ளுவர் ஆண்டு 2043 (22 சூன் 2012)

கடல் கடந்த மடல் 1

ஆனி 9, திருவள்ளுவர் ஆண்டு 2043 (23 சூன் 2012)

தமிழ் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக வெளியாகி வரும் 'முகம்' என்ற சிற்றிதழுக்காக எழுதுவது இங்கு பகிர்ந்து கொள்ளப் படுகிறது.

***

கடல் கடந்த மடல் 1

தமிழ்நாட்டு நலம் நாடிகளே!

நாம் தமிழ்நாட்டின் நலம் நாடுவோர். அதனால் நாம் தமிழ்நாட்டு நலத்தின் 'நாடி'கள். நம் நாடித் துடிப்பில் தமிழ்நாட்டின் நலம் நாடுதல் உள்ளவரை வீடும் நாடும் நானிலமும் நனி சிறக்கும்!

போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகம் சுருங்கியிருக்கலாம். ஆனாலும் உள்ளம் விரிந்ததா? பல வகை ஊடகங்கள் வழித் தகவல்கள், இன்று நம் வீட்டிற்குள், அணுகுவதற்கு இலகுவாகக் குவிந்திருக்கலாம். ஆனால், இன்றைய வேலைச் சுமையும் வாழ்க்கை ஓட்ட வேகமும் கேளிக்கை வாய்ப்புகளும் அவற்றைப் படித்து, கலந்து, தேர்ந்து பயன்படுத்திக் கொள்ளும் ஓய்வு நேரத்தையும் உள ஆற்றலையும் குறைத்து விட்டனல்லவா? துரித உணவுப் (fast food culture) பண்பாடு, துரிதத் தகவல் (fast / ready / immediate information) தேவையையும் உருவாக்குகிறது.

இம்மடல் ஒரு துரிதத் தகவல் பலகணி. உலகச் செய்திகளை, எழுதுபவர் அறிந்து உணரும் வண்ணம், இதன் வழியாக வாசகர்கள் அறியலாம். ஒருவரின் பார்வை என்பதால், அவரின் மனநிலையைப் (அறிவு, அனுபவம், பக்குவம்...) பொறுத்து ஓரப் பார்வையாக, ஒரு பக்கப் பார்வையாகத் தான் இருக்கும். சிந்தித்துப் பார்த்து மெய்ப்பொருள் காண்க!

பிரான்ஸ் - பிரிட்டன்

பிரான்ஸ் நாட்டில், புதிய குடியரசுத் தலைவர் பிரான்சுவா ஒலண்ட் பதவி ஏற்கும் முன்பே, அவர் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டு விட்டன. பாரீஸ் நகரிலும் வேறு ஒரு சுற்றுலா நகரிலும் அவருக்குள்ள வீடுகள், அவற்றின் மதிப்புகள், அவரின் வங்கிக் கணக்குகளின் விவரங்கள், எல்லாம் பொதுமக்கள் பார்வைக்கு அரசிதழில் வெளியிட்டுள்ளார்கள். நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை முன்னிட்டு, தன் சம்பளத்தை 30% குறைத்துக் கொள்வதாகப் புதிய குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற சில இடைத் தேர்தல்கள், பல உள்ளூராட்சி தேர்தல்கள் இவற்றில் ஆளும் கன்சர்வேடிவ், லிபரல் டெமாகெரட் கட்சிகள் பல தோல்விகளைத் தழுவிக் கொண்டுள்ளன. இவ்விரண்டுக் கட்சிகளும் கூட்டணி அரசை நடத்தி வந்தாலும் தேர்தலில் தனித் தனியாகவே (கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டது போல்) போட்டியிட்டன.

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் கேமறூன் (பிரிட்டிஷ் பிரதமர்), லிபரல் டெமாகெரட்க் கட்சித் தலைவர் நிக் கெளுக் (பிரிட்டிஷ் உதவிப் பிரதமர்) இருவரும் சேர்ந்து, நிலவும் பொருளாதார வீக்கத்தால் மக்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்று நாங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை; அதைச் சரி செய்து கற்றுக் கொண்டு செயலாற்றுவோம் என்று அறிவித்துள்ளார்கள்.

உலகில் இப்படியும் நாடுகள் இருக்கின்றன. இப்படியான தலைவர்களும் இருக்கின்றார்கள் என்பது, இந்தியாவும் இப்படி ஒரு நாள் ஆகும், இந்தியாவிலும் இப்படியான தலைவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. பிரான்சிலும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உள்ள தொழில் நுட்ப வளர்ச்சிகள் எல்லாம் இந்தியாவிற்கு வரும் போது, அவர்களின் மனப்போக்கில் உள்ள வளர்ச்சிகளும் இந்தியாவுக்கு வரக் கூடாதா; வர முடியாதா? தொழில் நுட்ப வளர்ச்சிகளைக் கொண்டும் வரும், கற்றுக் கொள்ளும் முயற்சிகள் போல் இவற்றைக் கொண்டு வரவும் நடைமுறைப் படுத்தவும் முயன்றால் முடியாமலா போய் விடும்?

ருசிய நாட்டு டால்ஸ்டாயால் இந்திய காந்தி ஊக்கம் பெற்றார். இந்திய காந்தியால் அமெரிக்க மார்டின் லூர்தர் கிங் ஊக்கம் பெற்றார். அது போல், இன்றைய மேற்குலக மக்களாட்சி நடைமுறைகளிலிருந்து நாம் கொள்வன கொண்டு தள்வன தள்ளுவோமாக.

தமிழ்நாடி.

வைகாசி 24  திருவள்ளுவர் ஆண்டு 2043 (6 சூன் 2012)

யார் தமிழர்?

ஆனி 9 திருவள்ளுவர் ஆண்டு 2043 (23 சூன் 2012)
 
'சிறகு' இணைய தள இதழில் 'யார் தமிழர்?' என்ற கட்டுரை வெளிவந்துள்ளது. 
http://siragu.com/?p=3527