Thursday 7 April 2011

எல்லாம் பிரம்மம் 2/5

2009-01-30

நான் எழுந்து ஆடும் போது (சிந்தனை, பேச்சு, எழுத்து, செயல், சித்தி...) ஆடுவதெல்லாம் தனக்காகவே.

இல்லாத மேடை ஒன்றில்
எழுதாத நாடகத்தை நாம்
எல்லோரும் நடிக்கின்றோம்
எல்லோரும் பார்க்கின்றோம் (திரைப்படப் பாடல்)

இந்த உடல்‍ மனமே நான் என்று நம்பியிருந்தாலும் அதைச் சுட்டிப் பேசும் போது என் உடல், என் மனம் என்று தன்மை படர்க்கை வந்து விடுகிறது. இந்த self-reference சிந்தனையைக் கிளப்பித் தேடினால் தன்னிடமே வந்து முடியும். All words are pointers. But the word 'word' is a pointer to all words. Now, what is the first occurrence of word 'word' in the previous sentence pointing to?

ஒவ்வொரு அணுவிலும் 99.999999% வெட்ட வெளி என்று கணக்கிட்டுப் புரிந்து கொள்ளும் விஞ்ஞானி அறைக்குள் கதவு வழியாகத் தான் நுழைய முடியுமே தவிர சுவரில் புகுந்து உள்ளே போக முடியாது.

அத்வைத்தை நடைமுறையில் கடைபிடிக்க இயலாது (கடைபிடிக்க எதுவும் இல்லை) என்றும் ரமணர் கூறியுள்ளார்.

பிரம்மத்தின் (தன்) விளையாட்டில் பெரும்பாலும் ஒன்றை மறுக்க மற்றது நுழையும் / நிரப்பும். தீபாவளியை மறுக்கப் பொங்கல் கொண்டாட வேண்டும். மதத்தை எதிர்க்க அறிவியல் நுழையும். 60 பற்சக்கர ஆண்டு முறை போகத் திருவள்ளுவர் ஆண்டு தேவை. கடவுள் சிலைக்கு மாலையிடுவது தலைவர் சிலைக்கு மாலையிடுவதாக மாறும். முதலாளித்துவத்திற்கு சோசலிசம் மாற்று. அல்லவை தேய அறம் பெருகும்!

அவ்விளையாட்டுகளில் ஒரு விளையாட்டு இந்த விளையாட்டுகளை உணர்ந்ததாக அத்வைதம் பேசும் (மாயை என்பதே ஒரு மாயை). எல்லாம் ஒன்றை ஒன்று நிரப்புகின்றன (complementary / figure - background) என்று உளறும். தன்னில் தானே நிறைவதாய்க் கதை விடும். அவ்வளவுதான்.

அத்வைதத்தைப் பேசப் போனால் துவைதம் (pun intended) ஆகிவிடும். நீதி: அடிக்கக் கூடியவர்கள் பக்கத்தில் இருக்கும் போது அத்வைதம் பேசாதே. என்றாலும் புத்தர், ஏசுவிலிருந்து இன்றைய ஞானிகள் வரை ஏன் பேசினார்கள், பேசுகிறார்கள்? இது (துவைதக்) கேள்வி. இதைக் கேட்கும் ஒன்றே அத்வைதம்.

தமிழில் கேட்டல் (வேர்ச் சொல்: கேள்) என்ற ஒரே சொல் வாயால் கேட்பது (asking) என்றும் காதால் கேட்பது (listening) என்றும் பொருள் தரும். ஒருவனே வாயால் கேள்வியைக் கேட்கிறான், பிறகு காதால் பதிலைக் கேட்கிறான் என்பது தமிழில் பொதிந்துள்ளது. அப்படியானால் பதில் சொல்பவன் யார்? சொல்பவன் என்பதும் சொல் என்ற வேர்ச் சொல்லில் இருந்து வந்துள்ளது, சொல்பவனும் சொல்லும் (Thinker is the thought - J Krishnamoorthy) ஒன்று என்பதைக் குறிக்கிறது. நடைமுறையில் சொல்பவன் (கேள்வியோ, பதிலோ) சொல்லும் போது தான் சொல்பவனும் கேட்கிறான், கேட்பவனும் கேட்கிறான்.

"கேட்டவனே கேட்டான்
கேள்வியைக் கேட்டவனே
கேட்டான் பதிலை"

என்று ஹைக்கூ (அத்வைதக்கூ) எழுதலாம். பழந்தமிழ், முத்தமிழ், செந்தமிழ், இன்தமிழ், வன்தமிழ், தொல்(!)தமிழ்... வரிசையில் அத்வைதத் தமிழ் (அத்துவிதத் தமிழ்)! இந்த உளறல் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

No comments:

Post a Comment