Tuesday 30 August 2011

Ghosts of Father and Son

2008-03-06




Son:
appA, Are ghosts real?
Father:
Yes, they are real.
S:
Where are they?
F:
Right here, we are all ghosts really. But we pretend as if we are not.
S:
How do I find out that I am a ghost?
F:
What do you mean by ghost?
S:
Something that doesn’t exist really but exists only in imagination.
F:
So, if you are a ghost, you don’t exist. That means you can’t find out that you don’t exist.
S:
That doesn’t sound right. Sure I exist.
F:
Yes, yes.. you exist as a ghost.
S:
Still I have a question, if ghosts are not real, exist only in imagination and I am a ghost, so I don’t exist then who is imagining that I am a ghost or pretending that I am not a ghost?
F:
YOU are (the imagination/pretension) imagining/pretending that you are/are not a ghost.
S:
You are kidding, aren’t you?
F:
Sure I am, that’s what ghosts do.

ஒற்றுமையாக இருப்பது என்பது ஒரு தனித்துவமான திறன்

2011-08-30


எல்லோரும் வாயால் தமிழர்கள் ஒற்றுமைப் பட வேண்டும் என்று பேசிக் கொண்டு அவரவர் தனித் தனி மேடை, கட்சி, தலைவர் பதவி என்று பிரிந்து நின்று கொண்டு இருந்தால் மக்கள் எப்படி ஒன்று படுவார்கள்? ஒவ்வொரு பொது விஷயத்திற்காகவாவது (மரண தண்டனை, ஈழத்தமிழர் உரிமை, காவிரி நீர்ச் சிக்கல்...) ஒரு பொது வேலைத்திட்டத்தில் ஒன்றுபடா விட்டால் எப்படி? எல்லாவற்றிற்கும் 'கருணாநிதி கெடுத்து விட்டார்', 'கருணாநிதி கெடுத்து விட்டார்' என்று பல்லவி, அனுபல்லவி, சரணம் வரை அதையே பாடிக் கொண்டு இருந்தால் எப்படி? இன்னும் எத்தனை காலத்திற்கு? கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழப் போவதில்லையே. இன்னும் சில ஆண்டுகளில் வரப் போகும் நிலைமை மாற்றங்களை எண்ணி நம்மைப் போன்றோர் மாற்று அரசியலுக்குக் குரல் எழுப்பி வலிமை சேர்க்க வேண்டாவா?

நாம் சொல்கின்ற ஒற்றுமை தீவிரக் கோடிகளில் இருப்போரிடம் எதிர்பார்க்கவில்லை. எடுத்துக்காட்டாக‌, இந்தியா இந்து நாடாக இருக்க வேண்டும் என்போருக்கும் தமிழ்நாடு தனிநாடாக இருக்க வேண்டும் என்போருக்கும் இடையில் நாம் ஒற்றுமையை, ஒத்துப் போவதை எதிர்பார்க்கவில்லை.

அதே போல் அவரவர் தங்கள் தங்கள் பற்றுகளை விடவோ, தளர்த்தவோ செய்யாமல் எப்படி ஒற்றுமை வரும்? ஒற்றுமை இலவயமாக வராது. ஒற்றுமை என்பது பெயர்ச் சொல் அன்று. அது ஒரு வினைச் சொல். ஒற்றுமையாக இருக்கத் தொடர்ந்து உழைக்காமல் ஒற்றுமை வராது; நிலைக்காது.

என்னுடைய தலைவர் இவர் தான். என்னுடைய கொள்கை, வழி இது தான் என்று ஒவ்வொருவரும் பிடித்துக் கொண்டு ஆனால் ஒவ்வொருவரின் நோக்கமும் இந்திய நாட்டிற்குள் தமிழ் மொழி, தமிழ் இன, நாட்டு முன்னேற்றம், உரிமை பெறுவது என்று சொல்வதில் என்ன பொருள்?

மக்கள் நலன் தான் முதல். அதற்காகவே கொள்கை. கொள்கைக்காகவே இயக்கம். இந்த வரிசையில் பற்றைப் பற்றவும் துறக்கவும் வேண்டும்.

பற்ற:        மக்கள் நலன்-->கொள்கை-->இயக்கம்.
துறக்க‌:    மக்கள் நலன்<--கொள்கை<--இயக்கம்.

இன்றைய நிலையில் தலைவர்கள் இதைச் செய்ய முன்வர மாட்டார்கள். அதற்குப் பல காரணங்கள் (நேர்மையின்மை, அவர்களுக்கு நிதி உதவி செய்வோருக்குப் பொம்மையாக இருத்தல்...) இருக்கலாம். எனவே ஒவ்வொரு இயக்கத்திலும் உள்ளோர் இவ்விதம் கேள்வி கேட்பதன் மூலம் தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். நம்மைப் போன்று இயக்கத்தை நம் வாழ்வுக்குச் சார்ந்து இல்லாதவர்கள் இப்படியான சிந்தனைகளைப் பரப்ப வேண்டும்.அதற்குப் பதிலாகப் புகழ்ந்து, இகழ்ந்து முன்பு செய்த தவறையே செய்யலாமா? அது சரியான வழிகாட்டுதலா?

இன்று ஒவ்வொரு கட்சியின் முன்னணி செல்வாக்குடையோர், நம்மைப் போன்றோர் (professionals) எங்கு அதிக சம்பளம், பதவி உயர்வு கிடைக்கிறதோ அங்கு தாவுவதைப் போன்று 'கட்சியைப்' பணம், பதவி கறக்கும் எந்திரமாக்கிவிட்டனர். அதற்கு கொள்கை என்பதும் நோக்கம் என்பதும் விளம்பர உத்திகளாகி விட்டன. அதனால் அத்தகைய கட்சியால் பலன் பெறுவோர் (சிலர் தவிர) என்றும் இன்றைய நிலைமை மாற (பேசுவதைத் தவிர) உதவமாட்டார்கள். 

சில தீயணைக்கும் வேலைகளின் தீவிரம், அவசரம் கருதி நாம் இவர்கள் பின்னால் நின்றால் நாம் பெரிய தவறு செய்கிறோம். இவர்கள் ஒரு தீயை அணைத்த பின் அடுத்த தீ வரும் படி வேலை செய்து கொண்டு இருப்பார்கள். தீ பிடிக்காத பொருள்களைக் கொண்டு வீடு கட்டுவதிலும் அதற்கான ஒழுங்கு முறை, கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதிலும் ஆர்வம் உள்ளவர்களாகக் காட்டிக் கொள்வார்களே தவிர அதில் தீவிரமாக இறங்க மாட்டார்கள்.

மக்கள், 'இந்தத் தீயணைக்கும் அரசியல் வேண்டாம்' என்று நிராகரிக்க நாம் உழைக்க வேண்டும். அது தான் நம்மைப் போன்றோர் இளைஞர்களுக்குக் காட்ட வேண்டிய வழி. அப்படி உழைத்திருந்தால் 'ஜெயலலிதா' இப்படிப் பெரும்பான்மை பெற்றிருக்க வாய்ப்பில்லை. நாம் உடனே கூட்டணி அரசால் ஏற்படக் கூடிய குழப்பம், பின்னேற்றம் இவற்றைக் கண்டு தயங்குகிறோம். போரில் உயிரை விட அல்லது விடுவதைப் போற்றுகிறோம். ஆனால் போர் அல்லாத சிவில் வாழ்க்கையில் முள்பாதையில் மலையேறுவதைத் தவிர்க்க நினைக்கிறோம்.

'கேளுங்கள் கொடுக்கப்படும்' என்றார் ஏசப்பா. எதைக் கேட்ட (demand) வேண்டும் என்ற சிந்தனையை, தெளிவை உருவாக்க வேண்டும்.

இன்றுள்ள 'ஒற்றுமையின்மை' என்ற நிலையிலிருந்து 'ஆரோக்கியமான ஒற்றுமை' என்ற நிலையை அடையப் பலவிதமான சிக்கலான கடினமான துயரமான இடைநிலைகளின் (கூட்டணி அரசு, குழப்பம், மக்கள் நிராகரிப்பு, சில முறை ஆட்சிக் கவிழ்ப்பு....) வழி நடந்தே ஆக வேண்டும். அப்படி அல்லாது எதிர்பார்ப்பது உழைக்காமல் விளையும் அற்புதத்திற்குக் காத்திருப்பதாகவே ஆகும். ஒற்றுமையாக இருப்பது என்பது ஒரு தனித்துவமான திறன் (skill). அது பயிற்சி இல்லாது நமக்கு வந்து விடாது.

பெரியார் தன்னுடைய பணியைக் குறித்து, "இதைச் செய்ய எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ ஆனால் இதைச் செய்தாக வேண்டும், இதைச் செய்ய யாரும் முன்வரவில்லை; எனவே நான் என் மேற்போட்டுக் கொண்டு செய்கிறேன்" என்றார்.

ஆனால் நாம் மாற்று அரசியலுக்குக் குரல் எழுப்பி வலிமை சேர்க்கும் பணியைச் செய்யத் தேவையான வாய்ப்பு, தகுதியுடன் (அரசியலால் வாழ்வு, இலாபம் இன்மை, இவற்றைப் பரப்ப‌ சுதந்திரம்) உள்ளோம். நம்மால் (நம்மைப் போன்றவர்களால்) மட்டுமே செய்யக் கூடிய பணியை அறிந்து (அடையாளம் கண்டு) அதைச் செய்வதுதான் சரியானதாகவும் (right) திறன்மிக்கதாகவும் (effective and productive) இருக்கும். அதற்குத் தேவையான திறன்களை (skills) வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். நம்முடைய ஆற்றலைப் பிறர் செய்யக் கூடிய தீயணைக்கும் வேலைகளில் ஓரளவுக்கு மேல் ஈடுபட்டு விரயமாக்கி விடக் கூடாது.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க‌
செய்யாமை யானும் கெடும் (திருக்குறள்: 466)

Monday 29 August 2011

புதிய ஆரோக்கியமான அரசியல் --> புதிய பெயர்

2011-08-29


வைகோ தேர்தல் சீட்டுகளுக்காக வேடம் தரிக்காமல் தனி நபர் தாக்குதலை மையப்படுத்தாமல் தான் கடந்த காலத்தில் செய்த தவறுகளையும், தவறான செயல் திட்டங்களையும் பொது மன்றத்தில் ஒப்புக் கொண்டு ஒரு தீர்க்கமான நடைமுறைச் சாத்தியமான மாற்று அரசியல் அணியை, அரசியல் பண்பாட்டை வளர்த்தெடுக்க நாம் ஆதரவு அளிப்போம்; துணை நிற்போம்.

முதலில் வைகோ, மதிமுக என்ற பெயரை மாற்றிக் கொள்ளலாம். 'தமிழ்நாட்டு வளம்' / 'தமிழ்நாட்டோர் அணி' / ''தரமிக்கத் தமிழ்நாடு'' / 'தன்னிகர் தமிழ்நாடு' / 'மறுமலர்ச்சித் தமிழ்நாடு' போன்ற பெயரை வைத்துக் கொள்ளலாம். அதில் தமிழ் மொழி, தமிழர் (தமிழ் நாட்டில் வாழ்வோர் அனைவரும்), தமிழ் நாடு மூன்றும் அடங்கும்.

பெரிய வணிக நிறுவனங்களும் பன்னாட்டுக் குழுமங்களும் தங்கள் அடையாளப் பெயரை மாற்றுவதற்கு முக்கியத்துவம் தருவதையும் செலவழிக்கும் தொகையையும் கருத்தில் கொண்டால் வைகோ பழைய பாழாய்ப் போன அரசியலிருந்து வேறுபடுத்திக் காட்ட, செயல்பட‌ (உண்மையிலேயே விரும்பினால்) பெயர் மாற்றம் முக்கியமாகும். இது 'திராவிட' அடையாளத்தை நீக்க விரும்புவோருக்கும் உகந்ததாக இருக்கும்.  இதையும் அவரின் முடிவாகச் செய்யாமல் கட்சியில் கலந்து, விவாதித்து அதே சமயம் இவர் அதை வலியுறுத்திப் பேசி, மக்களாட்சி முறையில் முடிவு செய்யலாம்.

அரசியல் அணியும் சமுதாய சீர்திருத்த அணியும் இந்த புதிய அமைப்பின் இரண்டு சம அளவிலான முக்கியப் பிரிவுகளாக இருக்க வேண்டும். யாரும் அரசியல் அணியில் நேரடியாக நுழைய இடம் (விதி முறை) இருக்கக் கூடாது. சமுதாய சீர்திருத்த அணியில் வேலை செய்து பக்குவப்பட்ட பிறகே ஒருவர் அரசியல் அணிக்கு (விரும்பினால்) தேர்தெடுக்கப் பட வேண்டும்.

இத்தகைய அமைப்பைக் கட்டி எழுப்பப் பத்தாண்டுகள், அதற்கு மேலும் கூட ஆகலாம். ஆனால் வைகோ போடும் பாதையில் மற்ற கட்சியினரும் வர வேண்டிய கட்டாயத்திற்குள்ளாவார்கள். அது தான் நம் நோக்கமும் கூட. மக்களும் இயக்கங்களும் ஒன்றோடு ஒன்று உறவாடித் துணை புரிந்து மாறி வளர வேண்டும். இன்றுள்ள தகவல் தொழில் நுட்ப வசதிகளைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் இதை விரைவு படுத்தவும் இயலும்.

பெயர் மாற்றம் பெருமளவு இளைஞர்களைப் பங்கு கொள்ள வைக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம். ஆனால் அது அவர்களுக்கு எப்படிப் பங்களிக்கவும் பொறுப்பேற்கவும் வாய்ப்பு தரப்படும் என்பதைப் பொறுத்து உள்ளது.

காலாவதி ஆகி விட்ட, கறை படிந்து விட்ட‌ 'திராவிடம்', 'முன்னேற்றம்', 'கழகம்' போன்ற அடையாளங்கள் இன்றைய சூழ்நிலையில் (வெறுக்காமல்) புறக்கணிக்கப்பட வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.

தமிழ் மொழி, தமிழ் நாட்டில் வாழ்வோர், தமிழ் நாடு (பூகோள எல்லைகள், வளங்கள்...) என்ற ஒருங்கிணைக்கும் அடிப்படையிலான அரசியல் அடையாளம் எடுத்துக் கொள்ளப்படக் காத்திருக்கின்றது.

'பெயரில் என்ன இருக்கிறது' என்பதும் தவறு. 'பெயரில் எல்லாம் இருக்கிறது' என்பதும் தவறு. பெயரைச் சரியாகப் பயன்படுத்தினால் பெரிய சாதனைகளைச் செய்ய, பெரிய திருப்பங்களைக் கொண்டு வர‌ப் பெரிய‌ உதவியாகும்.

இது இன்றைய நிலையில் எல்லாக் கட்சி, தலைவர்களையும் இணைத்து நடைபெற வாய்ப்பில்லை. வைகோ தன்னளவில் தன் கட்சி அளவில் நடைமுறைப் படுத்த முயன்றாலே அதில் சிறு வெற்றி பெற்றாலே பெரிய சாதனை, நல்ல தொடக்கம்.

வைகோ, மதிமுக (எடுத்துக் காட்டுகளே) என்பதற்குப் பதிலாக வேறு பெயர்களைப் போட்டுக் கொள்ளலாம்.

சனாதனக் குரங்குகளும் சமத்துவக் குரங்குகளும்

2011-07-16

திண்டாடும் குரங்குகள் - சனாதனக் குரங்குகளும் சமத்துவக் குரங்குகளும் - குத்தர் சொன்ன கதை

அன்றொரு நாள் சரியார் மனிதர்களின் அவலமான அற்புத நிலையைப் பற்றி ஆழ்ந்து யோசித்துக் கொண்டு இருந்த போது ஒரு குத்தர் (குரங்குச் சித்தர்) தன் அருகில் வந்து அமர்ந்து அதே போல் யோசித்துக் கொண்டு இருந்ததைக் கவனிக்கவில்லை.

குத்தர் விட்ட பெருமூச்சால் யோசனை கலைந்து திரும்பிப் பார்த்தார் சரியார்.

"ஆனந்தமாக மரத்தின் கிளைகளில் தாவிக் கொண்டு இராமல் இங்கு என்ன குந்திக் கொண்டு..." கேட்டார் சரியார்.

"எங்கள் குரங்கு உலகத்தின் அற்புதமான அவல நிலையைத் தான் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன்" என்றார் குத்தர்.

"அப்படியா, அந்தக் கதையைக் கொஞ்சம் சொல்லுங்களேன்" தன் கவலையை மறக்கக் கதை கேட்கும் ஆர்வமுடன் சரியார்.

"கேளுங்கள், உங்களுக்கு நல்ல தீர்வு தோன்றினால் சொல்லி உதவுங்கள்" என்ற வேண்டுகோளுடன் குத்தர் சொன்ன கதை:

"எங்கள் குரங்கு உலகத்தை என்னவென்று சொல்வது? சொல்லிப் பெருமைப் படச் சில‌ ஆயிரம் சாதனைகள் உண்டென்றால் சொல்லாமல் மறைக்கப் பல ஆயிரம் வேதனைகளும் உள்ளன. சூரிய குடும்பத்தைப் பாருங்கள். அந்தந்தக் கிரகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காவிட்டால் நம் பூமி இப்படி இருக்க முடியுமா, சூரியக் குடும்பம் தான் உருப்படுமா? எல்லாக் கிரகங்களும் பூமி போல் ஆக முடியுமா, சூரியனாக ஆசைப் பட்டால் நடக்குமா? நாங்களும் அப்படித்தான் அவரவர் வேலை, இடத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தோம். ஆண் குரங்கும் பெண் குரங்கும் அரசக் குரங்கும் அமைச்சர் குரங்கும் வேலைக்காரக் குரங்கும் வேட்டையாடும் குரங்கும் சண்டை போடும் குரங்கும் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பெரியவர், சிறுவர் குரங்குகளும் அவரவர் வேறுபாடான இடம், நிலை, தகுதி, வெகுமதி, பொறுப்புகளை ஒத்துக் கொண்டு போனதால் எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டு இருந்தன. ஒழுங்கு என்றால் எல்லாம் சனாதனமாக‌ அதனதன் இடத்தில் இருப்பது தானே?



ஆனால்,  விதி யாரை விட்டது" என்று குத்தர் சொன்னதைக் கேட்ட சரியார் புருவத்தை உயர்த்த, "சரி, ஆசை யாரை விட்டது" என்று குத்தர் தொடர்ந்தார்.

"நாங்கள் குரங்குகள் குசியா, குஸ்திரேலியா, குரோப்பா, குமெரிக்கா எனப் பல கண்டங்களிலும் இவ்வாறு தான் சனாதனமாக‌ வாழ்ந்து வந்தோம். எங்களில் சிலர் புது உலகம் காணப் புறப்பட்டுக் கண்ட வட குமெரிக்கா நாட்டில் இருந்து தான் இந்த சமத்துவ நோய் பரவியது என்று சொல்கிறார்கள்.

ஒரு சிலர் அது சோசலிச நோயின் உடன்பிறப்பு என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ எங்களை இப்போது சமத்துவ நோய் பிடித்துக் கொண்டது. யார் வேண்டுமென்றாலும் முயற்சி செய்தால் எதுவாகவும் ஆகலாமாம். அது அவர்கள் பிறப்பு உரிமையாம். ஒருவர் பிறப்பதே அவர் உரிமையாக இல்லாத போது, 'பிறப்பு உரிமை' எங்கிருந்து வரும்?

ஆக, உழைப்புப் பிரிவையும் அதனால் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வையும் கடவுள், மதத்தின் பெயரால் சனாதனம் என்ற முன்வாசல் பொய்யைச் சொல்லி வந்தது போய் இப்போது அவற்றை, 'எல்லோரும் சமத்துவம்' என்ற பின்வாசல் பொய்யால் நியாயப்படுத்தி வருகிறோம்.

தேனீக்கள், எறும்புகள் போன்ற சமூக உயிரினங்களிடையே உள்ள உழைப்புப் பிரிவுகளுக்கும் எங்கள் சமுதாயத்தில் உள்ள உழைப்புப் பிரிவுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவை நடைமுறைப் படுத்தப் படும் விதத்தில் தான் வேறுபாடு. தேனீக்கள், எறும்புகள் வேதியியல் சமிக்கைகள் அடிப்படையில் இயங்கினால் குரங்குகளாகிய நாங்கள் சனாதனம், சமத்துவம் போன்ற பொய்களின் அடிப்படையில் இயங்குகிறோம்.

இப்படியான எங்கள் குரங்குச் சமுதாயம் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே உழன்று வரும் அற்புதமான அவல நிலையை ஆழ்ந்து யோசித்துக் கொண்டு இருப்பது மரத்தில் தாவித் திரிவதை விட ஆனந்தமாக இருக்கிறது" என்று முடித்தார் குத்தர்.

அதைக் கேட்ட சரியாருக்குத் தன் கவலை புரிந்து கரைந்து விட்டது. எழுதியவருக்கும் படித்தவருக்கும் புரிந்ததா? கரைந்ததா?

மரண தண்டனை

2011-08-24
ஒரு புறம் மனிதரை மனிதர் போர் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கில் கொலை செய்து கொண்டு, மறு புறம் கொடிய குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பது பற்றித் தேவையா, மனிதாபிமானமா, நாகரிகமா என்றெல்லாம் விவாதிக்கிறோம்.

பல ஆயிரம் அடி உயரத்திலிருந்து குண்டுகளைப் பொழிந்து மக்களைக் கொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் ஒரு தற்கொலைக் குண்டுதாரி சில பேர்களைத் தன்னையும் அழித்துக் கொண்டு கொல்வது தீவிரவாதம் என்று வெறுக்கக் கூடியதாகவும் உள்ளது.

ஒரு புறம் தினமும் மில்லியன் கணக்கான விலங்குகளைக் கொன்று புசித்துக் கொண்டு மறு புறம் விலங்குகள் வதை தடுப்பு பற்றி சட்டம் செய்கிறோம்.

மனித குல வரலாற்றில் எது அனுமதிக்கக் கூடிய வன்முறை என்பதும் எது நியாயம் நீதி என்பதும் மாறிக் கொண்டே வந்துள்ளன. இனியும் மாறிக் கொண்டே இருக்கும்.

அதனால் மரண தண்டனை சரியா தவறா என்பதை விட மரண தண்டனை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தேவையா என்பதே சரியான கேள்வி, அணுகுமுறை. ஏனெனில் மரண தண்டனை இனி கிடையவே கிடையாது என்றால் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வோர் அதிகரித்து சமுதாயத்திற்குச் சுமையாக (ஆயுள் தண்டனைக் கைதிகளாக, மீண்டும் அதே போல் குற்றம் செய்வோர்களாக‌) மாறக் கூடும். அதனால் தான் மரண தண்டனை எல்லா நாடுகளிலும் சமுதாயத்திலும் ஒரே மாதிரியாகப் பார்க்கப் படவில்லை; நடைமுறைப் படுத்தப் படவும் இல்லை; ஒழிக்கப் படவும் இல்லை.

அதனால் மரண தண்டனை ஒரு சமுதாயத்தில் (தற்காலிகமாக) ஒழிக்கப் படச் அச்சமுதாயம் அதற்குத் தகுதியாக வேண்டும்.

அப்படித் தகுதி ஆகுமுன் அதை வலியுறுத்துவது சரியாகாது.

பிரிட்டனில் வாழ்வுக் காப்புரிமையில் (Life Insurance) தற்கொலை செய்து கொண்டாலும் காப்பீட்டுத் தொகை தருவார்கள். ஆனால் இந்தியாவில் தர மாட்டார்கள். ஏன்?

வாழ்வும் (பிறப்பும்) இறப்பும் பிரிக்க முடியாதவை. யார் எப்போது பிள்ளை பெறலாம் என்று சட்டம் போட்டுக் கட்டுப்படுத்த நினைக்காத நாம் ஒருவரின் தீவிர திட்டமிட்ட‌க் குற்றத்திற்காக மரண தண்டனை கொடுப்பதை ஏன் வேறுபாடாகப் பார்க்க வேண்டும்? இறப்பை ஒருவருக்கு வழங்குவதைத் தவிர்க்க வேண்டுமென்றால் பிறப்பையும் அவ்வாறே கட்டுப்படுத்த வேண்டாவா?

எல்லாப் பார்வைகளும் சார்பானவையே. அதை விடுத்துச் சார்பற்ற முறையில் (absolute sense) இவை போன்ற அறத் தடுமாற்றங்களை (moral dilemma) அணுகினால் சிந்தனைக் குழப்பமே விளையும் அல்லது நடைமுறைச் சாத்தியமற்ற கனவாகவே முடியும்.

மரண தண்டனை பற்றி மனிதாபிமானமா என்று பேசி, முழக்கிப் பரப்புரை செய்து மக்களை உணர்வெழுச்சிக்குள்ளாக்கலாம். ஆனால் அவர்களைச் சிந்திக்க வைப்பது தான் முக்கியம்; கடினமானதும் கூட.

"பலர் சிந்திப்பதை விடச் சீக்கிரம் செத்துப் போக‌த் தயாராக உள்ளார்கள்; உண்மையில் அப்படிச் செத்துப் போகவும் செய்கிறார்கள்"
    - பெட்ராண்ட் ரஸ்ஸல்
"Many people would sooner die than think. In fact they do"
    - Bertrand Russell

பகைவனும் பகைமையும்

2011-08-29

ஒரு சட்டம் தவறாக இருந்தால் அதைச் சரி செய்வது தவறில்லை. ஆனால் அதற்கான மக்களாட்சி முறை பின்பற்றப் பட வேண்டும்.

கருணாநிதி, ஜெயலலிதா என்ற நபர்களை விட நாம் மக்களாட்சி முறைக்கும் அதன் நடைமுறைப் படுத்துவதில் உள்ள பொறுப்புணர்ச்சிக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனிநபர்கள் வந்து போவார்கள். ஆனால் நாட்டின் சட்டம் ஒழுங்கு முறைகள் காப்பாற்றப் படவும் செம்மைப் படுத்தப் படவும் வேண்டும். ஆனால் நம் நாட்டில் 'தை' விரும்பிகள் எப்படியாவது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டமாக்கி விட வேண்டும் என்றும் அதை எதிர்ப்பவர்கள் எப்படியாவது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை நீக்கி விட வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்; அப்படி நடப்பதை ஆதரிக்கிறார்கள். அதனால் மக்களாட்சி முறை கொல்லப்படுவதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. நாம் குழு ஆட்சி மனப்பான்மையில் (எங்கள் ஆட்சி, உங்கள் ஆட்சி...) தான் இன்னும் இருக்கிறோம். மக்களாட்சி மனப்பான்மைக்கு நாம் இன்னும் வரவே இல்லை.

எடுத்துக்காட்டாகத் 'தை'த் திங்கள் ஆண்டுத் தொடக்கம் பற்றி சார்பற்ற முறையில் ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்து அதன் முடிவின் அடிப்படையில் செயல்பட்டால் அது மக்களாட்சி முறை. அதையும் பொறுப்புணர்ச்சியுடன் செய்யாமல் ஒரு சார்பானவர்களைக் குழுவில் போட்டுத் தன் விருப்பத்திற்கேற்ப முடிவைப் பெற்றுக் கொள்ளும் போது மக்களாட்சி முறை தந்திரமாகக் கொல்லப் படுகிறது. Democracy is not perfect but it is the best we have.

சமச்சீர் கல்வி முறை என்பது கருணாநிதியின் கண்டு பிடிப்பு அன்று. அது கல்வியாளர்களின் முடிவு. அதை நீக்க மீண்டும் அதே கல்வியாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இப்படி அந்தந்தத் துறை நிபுணர்களிடம் பொறுப்பை விட்டு அவர்கள் பரந்த சமுதாய நலனுக்காக முடிவு எடுக்கிறார்களா என்று பொதுமக்கள் பிரதிநிதியாக இருந்து மேற்பார்வை செய்வது, வழி நடத்துவது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசின் (அரசியல் வாதிகளின்) கடமை ஆகும். இது 100 விழுக்காடு சரியாக இயங்கும் மக்களாட்சி உலகில் எங்கும் இல்லை என்றாலும் இது தான் நோக்கம், இலக்கு. இதை நோக்கி மக்களாட்சி முறையைத் தொடர்ந்து செம்மைப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும்.

மேல்சாதியினரும் ஆதிக்கக் குழுவினரும் இது போல் ஒரு சார்பான நிபுணர்களாக இருந்து பெரும்பாலோர் நன்மையைப் புறக்கணித்ததாலேயே திராவிட ஆரிய, வர்க்கப் பிரிவினைகளும் இயக்கங்களும் எழுந்தன என்பதை மறந்து விட வேண்டாம். ஆனால் அப்படிப் போராடி ஆட்சிக்கு வந்த பின் அதே தவறைச் செய்ததால் வீழ்ச்சி விளைந்தது.

'பறவைக் காய்ச்சல்' குறித்து எப்படி கருணாநிதியோ ஜெயலலிதாவோ முடிவு எடுக்கும் தகுதியற்றவர்களோ அதே போல் தான் மற்ற பல விஷயங்கள் குறித்தும். அவர்கள் ஏதாவது ஒன்றிரண்டில் நிபுணர்களாக இருந்தாலும் அவற்றில் கூட அவர்கள் பங்கு கொள்ளலாமே தவிர தீர்மானிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஒரே துறையில் பல நிபுணர்களின் கருத்துகள் பலவாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.

கருணாநிதி மக்களாட்சி முறையைப் பின்பற்றவில்லை என்பதற்கு மாற்று ஜெயலலிதா மக்களாட்சி முறையைப் புறக்கணிப்பது ஆகாது. சரியான மாற்று மக்களாட்சி முறையைப் பொறுப்புணர்ச்சியுடன் நேர்மை நியாய உணர்வுடன் நடைமுறைப் படுத்துவதாகும். எடுத்துக்காட்டாக, நம்மைச் 'சூத்திரன்' என்று இழிவுபடுத்திய தன்மைக்கு மாற்று நாம் அத்தன்மையை நோக்கி இழிவாக நடந்து கொள்வதன்று. அத்தன்மை போகும் படி, மறையும் படி நாம் பொதுத் தன்மையுடன் நடந்து கொள்வதே ஆகும்.

"தீயவனை வெறுக்காதே; தீமையை வெறுக்கக் கற்றுக் கொள்" - காந்தி

எனவே பகைவனை வெல்வது (தடுத்து நிறுத்துவது) என்பது உடனடித் தேவையாக இருக்கலாம். ஆனால் அது பகைமையை வெல்வது என்ற பெரிய தொலை நோக்குத் திட்டத்தின் (பண்பின்) ஒரு சிறு கூறாகவே இருக்க வேண்டும்.

Saturday 27 August 2011

கீழிலிருந்து மேல் வரை பிச்சைக்கார மனிதர்கள்

2001-08-27


நான் வாழ்க்கைக்குத் தேவையான பொருளை ஈட்ட என்னை வைத்து (ஊதிய அடிமையாக என் உழைப்பு அல்லது என் தொழில் மூலம்) அடுத்தவன் பொருள் ஈட்ட நான் அனுமதித்தாலே முடியும்.

சமுதாயத்தில் நான் பெறும் உரிமைகளும் இதற்கு விதி விலக்கல்ல. என்னை வைத்து எனக்கு மேலுள்ளவர்கள் படிப் படியாக அதிக உரிமை பெறுவதை நான் அனுமதிக்கும் போதே எனக்கு எலும்புத் துண்டாகச் சில உரிமைகள் கிடைக்கின்றன.

இரண்டிலும் அதைத் தவிர வேறு வழியில்லை. எனவே 'அனுமதி' என்ற சொல் ஒரு தங்கக் கூண்டே.

மேற்கண்ட இரண்டையும் நான் விரும்பவில்லை; இப்படி இருப்பது நியாயம் நீதி அன்று என்று நினைக்கிறேன். ஆனால் உலக‌ நடப்பு இப்படித் தான் உள்ளது என்பதை மறுத்துப் பயனில்லை.

பலர் உயிர் பிழைக்க‌ச் சிலர் செழிக்க‌ வேண்டும். 
For many to just survive, a few have to flourish.
சிலர் செழிக்க‌ப் பலர் உயிர் பிழைக்க‌  வேண்டும். 
For a few to flourish, many have to just survive.

பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து அமெரிக்க விடுதலை, ருசிய, சீனப் புரட்சி, இந்திய விடுதலை என எல்லாத் தீவிர மாற்றங்களும் எல்லோருக்கும் பொதுவான சமமான உரிமைகளையும் கடமைகளையும் கொடுத்து விடவில்லை. இன்று நடக்கும் இனி நடக்கப் போகும் போராட்டங்களும் மாற்றங்களும் அவ்வாறே இருக்கும்; விதிவிலக்காக இருக்கத் தேவையான அகப் புறக் கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

அடுத்தவர் போராடி எனக்கு சம உரிமை கிடைக்காது. ஏன் சரியான உரிமை கூடக் கிடைக்காது. நடுத்தர மக்கள் போராட்டத்தால் ஏழை மக்களுக்குப் பயனில்லாது போகாது. ஆனால் சமமான பயன் கிட்டாது. வரலாற்றைப் பார்த்தால் சமமான உரிமைக்குப் போராட்டம் என்ற போர்வையில் தனக்குக் கீழ்ப் படியில் இருப்பவர்களை ஒப்பீட்டளவில் அதிகம் பலி கொடுத்துத் தன் சமுதாயத் தளத்தில் உள்ளவர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகப் பயன் பெற்றுக் கொள்வதே நடந்து வந்துள்ளது. Beggars cannot be choosers and everybody is a beggar to somebody above!

பிச்சை எடுத்துக் கொண்டு சமத்துவக் கனவில் வாழ்வதே மனிதனின் அற்புதம் / அவலம்!

தமிழ்ப் புத்தாண்டு - தகுதியும் மிகுதியும்

2011-08-27


எனக்குத் தெரிந்த அளவில் தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையை (அறுபது ஆண்டுத் தொடர் பற்சக்கர முறையாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது எந்தப் பல்/ஆண்டு என்ற குழப்பம் வருவதால்) தமிழ் அறிஞர்கள், புலவர்கள் (முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ உள்பட) 1920 களில் கூடித் திருவள்ளுவரின் பிறப்பைக் கொண்டுத் தமிழுக்குத் தொடர் ஆண்டாகத் திருவள்ளுவர் ஆண்டைப் (ஆங்கில் ஆண்டுடன் 31 ஐக் கூட்டி) பின்பற்ற முடிவு செய்த போது 'சித்திரை' ஆண்டுப் பிறப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டச் சில தெளிவற்ற, நிச்சயமற்ற இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் 'தை'த் திங்களைத் திருவள்ளுவர் ஆண்டிற்குத் தொடக்கமாகக் கொண்டார்கள்.

அவர்கள் அறுபது ஆண்டு பற்சக்கர முறையை எதிர்த்தார்களா அல்லது சித்திரைத் தொடக்கத்தை வெறுத்தார்களா என்று உறுதியாகத் தெரியவில்லை; அப்படி இல்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் அனைவரும் பகுத்தறிவாளர்களோ, கடவுள் மறுப்பாளர்களோ இல்லை.

தமிழுக்கு என்ற தொடர் ஆண்டை (திருவள்ளுவர் ஆண்டை) தனித்தமிழ், பிராமண, ஆரிய எதிர்ப்புப் பகுத்தறிவுடன் போட்டுக் குழப்பியதில் என் தந்தையாருக்கும் பங்கு உண்டு என்பதை (ஏனெனில் இந்த அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டைக் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பரப்பி வருபவர்) ஒப்புக் கொண்டாக வேண்டும்.

இதை நான் தொடக்கத்தில் உணராவிட்டாலும் உணர்ந்த உடன் (நாம் பிறந்து வளர்ந்து வந்த சூழலால் வந்தனவற்றிலிருந்து கொள்வன கொள்ளுதல் தள்வன தள்ளுதல்) என் தந்தையாருக்கு எடுத்துச் சொன்னேன். அவர் மறுத்துப் பேசவில்லை. உடனே ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்காததால் ஏமாற்றமும் இல்லை. இதனால் நான் சரி என்றோ என் தந்தையார் தவறு என்றோ அல்லது எதிராகவோ முடிவு செய்ய இயலாது.

தமிழர் என்ற அடிப்படையில் சாதி, மத, கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழர்களுக்கு என்று ஒரு தொடர் ஆண்டைக் கொள்வதன் மூலம் அதற்கு வழி செய்வது என்ற நோக்கில் பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டும், 'தை' முதல் தொடக்கத்தையும் 'இந்து' மத அடிப்படையிலான அறுபது ஆண்டுப் பற்சக்கர முறைக்கும் 'சித்திரை' பிறப்பிற்கும் எதிராகக் காட்டியிருக்கக் கூடாது என்பது என் கருத்து.


இன்று நாம் 'சித்திரை / தை' புத்தாண்டையும் ஆங்கிலப் புத்தாண்டையும் எல்லாத் தமிழர்களும் கொண்டாடுவது போல் இந்துத் தமிழர்கள் சித்திரைப் புத்தாண்டையும் கிறித்துவத் தமிழர்கள் கிறித்துவப் புத்தாண்டையும் முகமதியத் தமிழர்கள் முகமதியப் புத்தாண்டையும் பகுத்தறிவுத் தமிழர்கள் பெரியார் ஆண்டையும்.... கொண்டாடிக் கொண்டே அனைத்துத் தமிழர்களும் சேர்ந்து 'தை' தொடக்கமாகக் கொண்ட திருவள்ளுவர் ஆண்டைத் தமிழ் இன‌ மொழிப் புத்தாண்டாகக் கொண்டாடலாமே?


சமுதாயத்தைக் கறுப்பு/வெள்ளையாகப் பார்க்கும் நோயைப் போக்க இதை ஒரு நல்ல தொடக்கமாகக் கொள்ளலாமே. We have to work with each other, not against each other.

தமிழ்ச் சமுதாயம் இப்படித் தான் இருக்க வேண்டும், இப்படி இருக்கவே கூடாது போன்ற கறுப்பு/வெள்ளைப் பார்வை, பற்றுகளே நம் காலில் நமக்கு நாமே கட்டிக் கொண்டு இருக்கும் பாறாங்கற்கள்; நம்மை நீந்தி மேலே செல்லவிடாமல் இழுத்து அமிழ்த்தி அழுக வைத்துக் கொண்டு இருக்கும் கருத்து (கழுத்து) நுகத்தடிகள்.

மற்றபடி 'சித்திரை' தொடக்கத்திற்கும் 'தை' தொடக்கத்திற்கும் எந்தவிதமான (பழக்கம் என்பதைத் தவிர) கேள்வி, ஐயத்திற்கு இடமில்லாத ஆதாரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.

இத்தகைய மாற்றங்கள் எப்போதும் மக்களிடம் கருத்துப் பதிவு செய்து நடைமுறைப்படுத்தப் படவில்லை (உலகில் எந்த நாட்டிலும்) என்பதையும் அரசு, ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்கள் மீது வலிந்து புகுத்தியதே (கிறித்துவ ஆண்டு உள்பட) என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" (புறநானூறு)

உயர்ந்தோர்கள் (சான்றோர்கள், அறிஞர்கள்) உயர்ந்தோர்களாக இருக்க வேண்டும். அவர்களை மதிக்கும் அவர்கள் சொல்வதை மதிக்கும் பண்பு சமுதாயத்தில் வேண்டும். எல்லாவற்றிலும் எல்லோரும் அறிவுடையவர்களாகவும் உடனடி, தொலை நோக்கில் ஆய்வு செய்து புரிந்து கொள்பவர்களாவும் இருக்க இயலாது.


நம் நாட்டில் மத அடிப்படையில் வேடந் தரித்தவர்கள் சொல்வதை மதிக்கும் பழக்கம் இருக்கும் அளவுக்கு மதச்சார்பற்ற சமுதாயத் தத்துவ அறிஞர்களைப் போற்றும் பண்பு இல்லை. 

எல்லாவற்றையும் நாமே தனி ஆளாக ஆய்வு செய்து, சோதனை செய்து ஏற்றுக் கொள்ள இயலாது. சமுதாய ஒழுங்கிற்கு ஆராயாது ஏற்றுக் கொண்டு இட்ட கட‌மைகளைச் செய்யும் மனப்பான்மையும் (அடிமைத்தனமும்) அவசியமாகும். அப்படி இல்லாமல் மனித சமுதாயமோ தேனீக்களின் கூடோ எறும்புகளின் புற்றோ.... இயங்க இயலாது. குடும்பத்தில் ஒற்றுமை கருதி நமக்குப் பிடிக்காதவற்றைப் பொறுத்து ஏற்றுக் கொண்டு ஒத்து வாழ்வது போல் சமுதாய அளவிலும் செய்ய வேண்டிய தேவையை உணராவிடில் ஒற்றுமை வராது; வாயளவில் தான் இருக்கும்.

வள்ளலாரை வெறும் அற்புதங்கள் செய்த துறவியாகப் பார்த்துப் பயனில்லை. அவரின் சமூகச் சீர்திருத்தப் பணிகளை அறிந்தோர் மிகக் குறைவே. அதே போல் பெரியாரை வெறும் பிராமண எதிர்ப்பாளராகப் பார்ப்பவர்கள் அவரின் பரவலான (அவரின் பெண்ணடிமைத் தன எதிர்ப்பு கருத்துகள் பிராமணப் பெண்களையும் உள்ளடக்கியதே) சிந்தனைத் தாக்கத்தைத் தவற விடுவார்கள்.

அதே போல் திராவிட இயக்கங்களின் இன்றைய சீரழிந்த நிலையை மட்டும் கணக்கில் கொண்டு அது எந்த விதமான மறுமலர்ச்சிக்குத் தொடக்கமாக இருந்தது என்பதைப் புறக்கணித்தால் கணக்கு தப்பாகவே முடியும். அதனால் தான் திராவிட, தமிழ், ஆரிய மயக்கங்கள் எழுகின்றன.

அது போல் வள்ளலார், பெரியார்... என்று தனிமைப் படுத்தி அவர்கள் பிறக்கவில்லை என்றால்...என்று பேசுவது சரியாகாது. அவர்களைப் போல் பலர் அவர்களுக்கு முன்பு இருந்ததன் வெளிப்பாடே அவர்கள். அதனால் அவர்களால் விளைந்த நன்மை, தீமைகளும் அவ்வாறே. அவற்றைத் தனித்துப் பார்த்து புகழ்வதும் இகழ்வதும் செய்யாமல் ஏற்பட்ட நல்ல, தீய விளைவுகளை ஆராய்ந்து செம்மைப்படுத்திக் கொண்டு செல்வதே நல்லது.

பிரித்து அறிவது சேர்த்துப் புரிந்து கொள்வதற்கே. ஆன்மீகத்தில் ஞானம் பெறுவதற்கும் லௌகீகத்தில் ஒத்திசைவு அடைவதற்கும் (ஒற்றுமையாக வாழ்வதற்கும்) வழி ஒன்றே. உள்ளதை உள்ளபடி பிரித்து அறிந்து கொண்டு அதற்குத் தக நடந்து கொண்டு எல்லாவற்றையும் ஒத்து, சேர்த்து இயங்க வைப்பதே ஆகும்.


இதற்கு இரண்டு திருக்குறள்கள் பொருத்தமாக வழி காட்டுகின்றன.

நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றக் கடை (திருக்குறள்: 469)

குடும்பத்தில் சமுதாயத்தில் அவரவரின் தகுதி, திறமை அறிந்து அதற்கேற்ப அவர்களை நடத்திச் செல்ல வேண்டும். எல்லோரையும் வறட்டுத் தனமான சமத்துவப் பார்வையில் நடத்தினால் குடும்பமும் உருப்படாது; குமுகாயமும் உருப்படாது.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல் (திருக்குறள்: 158)

குடும்பத்திலும் குமுகாயத்திலும் தகுதியவற்றவர் தீமை, இடைஞ்சல் செய்யும் வாய்ப்பைக் கட்டுப் படுத்தி அதே சமயம் அவர்களை நாம் பெருந்தன்மையாக நடத்தி வென்று ஒன்றிணைக்க வேண்டும்.

சாதி, மத, வர்க்க... அடிப்படையிலான தீய கூறுகளைக் கட்டுப் படுத்த அவரவரின் பண்பறிந்து அதற்குத் தக அவர்களை நடத்த வேண்டும் என்பது வெறுப்பின் அடிப்படையில் இல்லாமல் அவர்களை விடப் பரந்த, பெருந்தன்மையான மனப்பான்மையால் அவர்களைப் பண்பால் வென்று ஒன்றிணைக்கும் தகுதியால் இயங்க வேண்டும்.

வகுப்பு வாதத்தை (சாதி ஏற்றத் தாழ்வுகள்) நீக்க உழைத்த பெரியார் தன்னை ஒரு வகுப்புவாதி என்று ஒப்புக் கொண்டார். வகுப்புவாதம் இருக்கும் வரை தான் ஒரு வகுப்புவாதியாகவே செயல்பட முடியும் என்று புரிந்து வைத்திருந்தார். ஆனால் அது பிரித்தறியும் (பண்பறிந்து) ஆய்வாக, நடைமுறைத் தேவையாகவே இருந்திருக்க வேண்டும். அவரும் அவருக்குப் பின்பு அது வளர்ந்திருக்க வேண்டிய வழி, பண்பு, அணுகுமுறை சரியாக இல்லை. வெறுப்பை வெல்ல வெறுப்பு உதவாது. வெறுப்பை அடையாளம் கண்டு கொண்டு அதற்கு மருந்து, சிகிச்சை (அறுவை உள்பட) செய்வது வேறு. ஆனால் நாம் அந்த வெறுப்பாக மாறி விடக் கூடாது.

சாதியின் படிக்கட்டுப் பிரிவினை முறையைச் சரியாகப் புரிந்து வைத்திருந்தால் பிராமணர்களை மட்டும் எதிர்ப்பதோ பழி சொல்வதோ கண்டிப்பதோ எப்படி முடியும்? அதற்காகப் பிராமணர்களைப் பொறுப்பிலிருந்து 'விடுவித்து' விட முடியாது. சமுதாயத்தின் மேல் தட்டில் இருப்பவர்கள் என்பதால் அவர்களுக்குப் பொறுப்பும் அதிகம். இந்தியாவின் இன்றைய சீரழிவில் அவர்களுக்கும் (மத்திய அரசு அதிகாரத்துறைகளில் நீதித் துறைகளில் ஊடகங்களில் அவர்களே நிறைந்துள்ளபோது) கணிசமான பங்கு உண்டு. அதனால் அவர்களையும் இணைத்து தான் நாம் தீர்வு கண்டாக வேண்டும்.

அவர்களும் இம்மண்ணின் மைந்தர்களே. அதே போல் தான் எல்லாச் சாதியினரையும் துறையினரையும் தொழில் செய்வோரையும் (அரசியல் வாதிகள் உள்பட) நாம் பார்த்தாக வேண்டும். அவர்கள் பண்பை அறிந்து நடக்க வேண்டும். ஆனால் அவர்களைத் தகுதியால் (நாம் உயர்வு-தாழ்வு மனப்பான்மைச் சிக்கலுக்குள்ளாது - superiority-inferiority complex) வெல்ல வேண்டும்.


இந்த அணுகுமுறையைப் பிராமணர்கள், பிரித்தானியர்கள்... போன்ற சமூகத்தின் மேல் தட்டில் உள்ள குழுவினர் பின்பற்றி வருவதாலேயே அவர்கள் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. அவர்கள் இந்த அணுகுமுறையை தங்கள் குழு நல நோக்கில் மட்டும் பயன்படுத்துவதை நாம் பரந்த சமுதாய அளவில் பயன்படுத்த வேண்டும். அதில் அவர்களையும் நாம் அப்படி ஈடுபடுத்தி இணைக்க வேண்டும்.

இதையே பெரியார் பிராமணரல்லாதரைப் பார்த்து, 'உங்களுக்குத் தெரியவில்லை என்றால் பிராமணர்களைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறினார்.

முவ இதனையே சுருக்கமாக வேறு வடிவில் 'தமிழர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்' என்று சொன்னார்.

வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது.
நல்ல தன்மை இல்லாத வல்லமை நிலைக்காது.
Right without might will not live. 
Might without right will not last.

பெரியோரை வியத்தல் சிறியோரை இகழ்தல்


2011-08-27

ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவைப்படும் சகிப்புத் தன்மையே குமுகாய வாழ்க்கைக்கும் அவசியம் ஆகும். ஒவ்வொரு குழுவினரும் தங்கள் தங்கள் 'யானையைப் பார்த்த குருடர்களைப்' போன்ற‌ புரிதலில் பற்று வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் அனைவரும் ஒன்று பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே பிரிந்து நிற்கிறோம். இன்னும் எத்தனைக் காலத்திற்கு இப்படி உழலப் போகிறோம்?

தமிழ் நாட்டுத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இதே போல் இன்றும் இவ்வளவு இழப்பிற்குப் பின்னும் செய்து கொண்டு இருக்கிறார்கள். தங்கள் தங்கள் பற்றுகளை அனைத்து தமிழ் நாட்டு, ஈழத் தமிழர்களும் அப்படியே ஏற்றுக் கொள்வது போல் பேசி மயங்குகிறார்கள்; மேடையில் முழங்குகிறார்கள். அப்படி இல்லாதவர்களை உணர்வற்றவர்கள் முதல் துரோகிகள் வரை பெயரிட்டுப் பழிக்கிறார்கள்.

"வாழ்க்கையில் பிணக்கு ஏற்படுவது இயற்கை. அப்போது அறிவு மட்டும் இருந்தால் பயனில்லை; அன்பு இருந்தால் பயனுண்டு" என்ற முவ-வின் அறவுரை குடும்ப வாழ்க்கைக்கும் குமுகாய வாழ்க்கைக்கும் பொருந்தும்.

கணவன் மனைவி கருத்து ஒருமிக்கத் 'தான்' (தன் விருப்பம், தன் கருத்து, தன் ஆசை...) என்ற பிடிப்பு தளர வேண்டும்; காதல் (அன்பு, உறவு) மலர மோதல் உதவலாம். ஆனால் காதல் நிலை கொள்ள‌ (stabilize) நீடிக்க (prolong) மோதல் உதவாது. ஒத்திசைவே உதவும். அவ்வப்போது அளவான (உப்பு போல்) ஊடல் துணை செய்யும். குடும்பம் என்பது சிறிய குமுகாயம். குமுகாயம் என்பது பெரிய குடும்பம்.

ஓர் அரசு சட்டமியற்றி நடைமுறைப்படுத்திய‌ 'தைப் புத்தாண்டு' போன்ற செயல்களைப் பழிப்பதன் மூலம் அவற்றை ஆதரிக்கும் அனைத்துத் தமிழர்களையும் பழிக்கிறோம், ஒதுக்குகிறோம் என்பதை மறக்க வேண்டாம். அப்படிச் செய்து விட்டு ஒன்றுபடுவோம் என்று அழைத்தால் எப்படி நடக்கும்? நம் பற்றை உணராமல் அடுத்தவர் பற்றை நாம் எப்படித் தெளிய வைக்க முடியும்?

'தை' விரும்பிகள் 'சித்திரை' விரும்பிகளையும் 'சித்திரை' விரும்பிகள் 'தை' விரும்பிகளையும் முதலில் மதிக்கக் கற்றுக் கொள்வோம். அதை ஏற்றுக் கொள்கிறோமா, அது சரியா இது சரியா என்பதற்கு முன்பு சகக் கருத்துகளை மதிக்கும் பண்பு இல்லாததாலே ஓர் அரசு வலிந்து செய்வதை அடுத்த அரசு வலிந்து மாற்றுவதும் அதன் பின் அந்தந்த விரும்பிகள் வாழ்க, ஒழிக கோஷம் போடுவதும் தொடர்கின்றன. அரசியல்வாதிகள் இப்படிப் பிரிந்து நிற்கும் மக்கள் குழுக்களை மேய்ப்பது சுலபமாகிவிடுகிறது.
 
ஆங்கிலேயர்கள் சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொண்டதன் மூலமே வளர்ந்தார்கள்; சென்ற நூற்றாண்டில் உலகம் முழுவதும் ஆண்டு இன்று தங்களின் சிறு தீவுக்குள் ஒடுங்கிப் போனாலும் வலிமை குன்றாது தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். அதே சமயம் அவர்கள் கையாண்ட(அவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும்) பிரித்தாளும் சூழ்ச்சியை நாமே நமக்குச் செய்து கொண்டு அல்லல் படுகிறோம்; சாண் ஏறி முழம் சறுக்குகிறோம்.

இன்று தமிழுக்கும் தமிழனுக்கும் மிக உகந்தது முதலில் நம் கருத்தை வலியுறுத்தும் அதே வேளையில் அடுத்தவர்களைப் பழிக்காமல் மதிக்கக் கற்றுக் கொள்வதே. தமிழ்ச் சமுதாயம்/இனம் பக்குவப் படுவது, முதிர்ச்சி அடைவது என்பது கணிசமான தனித்தனித் தமிழர்கள் பக்குப்படுவது, முதிர்ச்சி அடைவதே.

இப்படிச் சொல்வதை உடனே தனிப் பட்ட நபரைக் குறித்துச் சொல்லப்படும் போதனை என்று எடுத்துக் கொண்டு ஆதங்கப் படவும் என் மீது பாயவும் தேவையில்லை. இந்தக் குறைக்கு நான் அப்பாற்பட்டவனல்லன். I am in the same boat as everybody else. நமக்கு இந்தக் குறை இருப்பது நம் தனிப்பட்ட குற்றம் அன்று. நம் மன இயல்புகள் நாம் பிறந்து வளர்ந்து வாழும் சமுதாயத்தின் தாக்கமே; வெளிப்பாடுகளே. அப்படி அவற்றை நம்மிடமிருந்து பிரித்து எட்ட நிறுத்திப் பார்ப்பது அவசியம். எப்படி என் உடல் நிறை குறைகளுக்கு நான் காரணம் இல்லையோ அதே போல் தான் என் மன இயல்பிற்கும் ஆகும்.

அதனால் நம் நிறைகளுக்காகப் பெருமைப் பட்டுக் கொள்வதும் குறைகளுக்காகச் சிறுமைப் பட்டுக் கொள்வதும் அவசியமற்றவை; எதிர் விளைவையே கொடுக்கும். இதில் மற்ற எல்லோரின் குறை நிறைகளும் அடங்கும்.

இதை, 'ஏதோ எல்லாம் தெரிந்தது போல் இவன் சொல்கிறான்' என்று நினைக்க வேண்டாம். பெரியவர்கள் சொன்னதை நினைவு படுத்திக் கொள்கிறேன். அவ்வளவே.


யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; 
வாழ்தல்இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; 
முனிவின்இன்னாது என்றலும் இலமே; 
'மின்னொடுவானம் தண்துளி தலைஇ, 
ஆனாதுகல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று 
நீர்வழிப் படூஉம் புணை போல, 
ஆருயிர்முறைவழிப் படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.             
        - கணியன் பூங்குன்றனார் (புறநானூறு: 192)

நாம் ஒவ்வொருவரும் மன வளர்ச்சியின், முதிர்ச்சியின் ஒரு கட்டத்தில் நம் பெற்றோர், உறவு, சுற்றம், குடும்ப, சமுதாயச் சூழலால் வந்த நல்ல, மோசமான இயல்புகளை, கருத்துகளை, பழக்க வழக்கங்களை, பற்றுகளைக் கண்டறிந்து கொள்வன கொண்டு தள்வன தள்ள வேண்டும். அப்படிக் கண்டறிந்து தன்னுடனே போராடிக் கொண்டு இருக்கும் ஒரு சக மனிதன்/தமிழன் என்ற அடிப்படையில் மேற்கண்ட கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அதில் சொல்ல வந்ததை மனதில் பதியும் படிச் சுவையாகச் சொல்லச் சில சொற்களைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தால் மன்னித்துப் பொறுத்தருள்க.

உளறல் - குளறல் - கிளறல்

2011-08-27

உளறல் அளவும் குளறல் அளவும்
கிளறல் அளவால் கொடு (சரியாரின் புதுக்குறள்)

உளறல் - ள்ளதை உள்படி அறைல்
குளறல் - உண்மை'கள்' குடித்து விட்டு உளறல்

உளறல் அளவும் குளறல் அளவும் கேட்பவரின் சிந்தனையை எவ்வளவு கிளற வேண்டும் என்ற அளவால் கொடுக்கப்பட வேண்டும்.

Saturday 6 August 2011

கடவுள் திறந்த மனம்

2011-08-06

'கடவுள் இருக்கிறது இல்லை என்ற வரையறைக்கு அப்பாற்பட்டது/வர்' என்று தெளிந்தால் 'கடவுள் இருக்கிறது' என்ற நம்பிக்கைக்கும் இடமில்லை, 'கடவுள் இல்லை' என்ற நம்பிக்கைக்கும் இடம் இல்லை.

"வானாகி மண்ணாகி... உண்மையுமாய் இன்மையுமாய்..." (திருவாசகம்)

அதே சமயம் 'கடவுள்' என்பதற்கு இன்றைய முருகன், சிவன்... போன்ற மதம் சார்ந்த விருப்பு வெறுப்பு உடைய உருவங்கள் என்ற பார்வையில் 'அத்தகையக் கடவுள்(கள்) இல்லை' என்பதில் ஐயமில்லை.

அதே சமயம் 'எல்லாம் இறைவன் / எல்லாம் இறைவன் செயல்' என்ற பார்வையில் முருகன், சிவன்... போன்ற உருவங்கள் நம் (அதை நம்புவோர்) மனதில் உள்ள உண்மைகள் (subjective reality / truth) ஆகும். அதனால் அதை மறுப்பது மற்ற உளம் சார்ந்த உண்மைகளான சுதந்திரம், நியாயம், சமத்துவம், நீதி, நேர்மை, அறிவியல் கோட்பாடுகள், விதிகள்.... போன்ற உண்மைகளையும் மறுப்பதாகும்.

உளம் சார்ந்த உண்மை என்றாலும் அந்தக் கடவுள் பெயரால் நடக்கும் சுரண்டல்களை, மோசடிகளை வெளிப்படுத்த அப்படியான கடவுள் எங்கே என்று வாதம், பரப்புரை செய்வதும் சிலைகளைப் போட்டு உடைத்துச் சிந்திக்கத் தூண்டுவதும் தேவைப்படுகின்றன.

மேற்கண்டது 'கடவுள் இருக்கிறாரா' என்பது பற்றித் திறந்த மனதுடன் சிந்திப்பதற்கு எடுத்துக் காட்டு ஆகும். இதைச் செய்ய, செய்பவர் எந்த கருத்திலும் சார்ந்து, பற்று கொண்டு இல்லாமல் இருந்தால் தான் இயலும். அதற்குக் கடவுள் அருள் இல்லாமல் இயலாது!

Monday 1 August 2011

மேலே போக மேற்கே வழி - West Is The Only Way Forward

2011-07-20

இது வளர்ந்த மேற்கு நாடுகளில் வாழும் கீழ்த்திசை நன் மன்பான்மையினோருக்காக எழுதப்பட்டது ஆகும்; வளரும் நாடுகளில் வாழ்வோர் ஆற்ற வேண்டிய கடமைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகாது.

இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு கூற்றிற்கும் எடுத்துக்காட்டு, விளக்கம் கொடுத்தால் கட்டுரை பல பக்கங்களுக்கு நீண்டு விடும். அதனால் இந்தப் பிழிவான கருத்துகள் அவரவரைச் சிந்தித்துப் பார்க்க தூண்டுமானால் அதுவே பயன்.


மேலே போக மேற்கே வழி
West Is The Only Way Forward


இங்கு மேற்கு என்பது பரந்த மனப்பான்மை, திறந்த உள்ளம், அறிவியல் நோக்கு, சட்டத்தின் முன் அனைவரும் சமம், மனித உரிமைகள், அனைவருக்கும் சம வாய்ப்புகள், வேறுபாடான கருத்துகள், பழக்க வழக்கங்கள், பண்புகளுக்கு மதிப்பு, மரியாதை, சுதந்திரம், மக்களாட்சி, எந்த ஓர் இசத்திற்கும் அடிமைத்தனம் இல்லாமை, போலித்தனங்கள் குறைவு, அகம் புறம் முரண்பாடுகள் குறைவு, மனிதர் உடல், உள இயல்புகளைப் பற்றிய எதார்த்தமான நடைமுறை, தனிமனித வழிபாடின்மை, பொதுநலப் பொறுப்புணர்வு... போன்ற பண்புகளைக் குறிக்கும்.

இப்பண்புகள் வளர்ந்த மேற்கு நாடுகளில் ஒப்பீட்டளவில் அதிகம் உள்ளன, நடைமுறையில் உள்ளன, வளர்ந்து உள்ளன என்பது கண்கூடு. ஆனால் அவை மேற்கு நாடுகளிலும் உறுதியாக நிரந்தரமாக‌ நிலை கொண்டு விடவில்லை; செத்துப் பிழைத்துக் கொண்டே உள்ளன.  அதற்கு மேற்கின் மோசமான கூறுகளே (திறந்த முனைப் பொருளாதாரம், ஆதிக்கக் குழுக்களின் வணிக, ராணுவ ரவுடித்தனம், நுகர்வு அடிமைத் தனம்...) காரணங்கள் ஆகும். அவற்றால் வளரும் நாடுகள் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளின் நடு, கீழ்த்தட்டு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

அதே போல் இம்மேற்குப் பண்புகள் வளரும் (கீழ்த்திசை) நாடுகளில் இல்லவே இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் அவை மேற்கு நாடுகளின் மோசமான கூறுகளைத் தழுவிப் பின்பற்றி வருவதால் (வர கட்டாயப் படுத்தப் படுவதால்) அந்நாடுகளில் இவ்வுயரிய பண்புகள் தளிர்க்கவே தடுமாறுகின்றன. ஏற்கனவே அந்நாடுகளின் பழம் பண்பாட்டில் இருந்த பல உயரிய பண்புகள் நசிந்து விட்டன. மேற்கின் மோசமான கூறுகள் போல் கிழக்கின் மோசமான கூறுகளும் (ஒப்பீட்டளவில் தொலை நோக்கு இன்மை, பொது நோக்கு இன்மை...) இதற்குக் காரணங்கள் ஆகும். இக்கூறுகளின் பாதிப்பாகவும் அடிப்படையாகவும் வரலாற்று உணர்வுக் குறைவு இருந்துள்ளது; இன்றும் அந்நிலை நீடிக்கிறது.

கீழ்த்திசை நாடுகளில் வாழ்வின் அடிப்படையான உண்மைகள் பல ஞானிகள் (புத்தர், மகாவீரர், ஆதி சங்கரர், திருமூலர், வள்ளலார்...) மூலம் வெளிப்பட்டு இருந்தும் அவை பெருமளவில் பயன்படாது போயிற்று; இன்றும் அந்நிலையே நீடிக்கிறது. அதனால் கீழ்த்திசை நாடுகளின் தன்மையை, தொன்மையைத் தோண்டி எடுப்பது மேல்திசை மனப்பான்மையினாலேயே (காலனி ஆதிக்கம்...) ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.

மேற்கு, கிழக்கிலிருந்து நல்ல பண்புகளை (யோகா, தியானம்...) அகவயப்படுத்திக் கொண்டு வருகிறது. ஆனால் கிழக்கு மேற்கின் தீய கூறுகளுக்கு அடிமையாகிக் கொண்டு வருகிறது. அதே நேரம் கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்தோரால் மேற்கு நன்மையும் தீமையும் அடைந்து வருகிறது. மேற்கில் ஏற்கனவே இருக்கும் மோசமான கூறுகளுடன் கிழக்கின் மோசமான கூறுகளும் இணைந்து மேற்கின் (முதல் பத்தியில் சொன்ன) நல்ல பண்புகளுக்கு ஆபத்தை அதிகரித்து வருகிறது. இதை உணரும் நம்மைப் போன்றோர் மேற்குச் சமுதாயத்தின் அனைத்து முகங்களிலும் (அரசியல், சமுதாய, பண்பாட்டு, விளையாட்டு, தொழில், வணிகம், அதிகாரத்துறை, ஆய்வு, காவல், நீதி, இராணுவம், கல்வி, மருத்துவம்...) ஆர்வம் காட்டிப் பங்கெடுத்து அதன் நல்ல பண்புகளை வலுப்படுத்த வேண்டும். இந்தப் புலங்களில் நாம் வெறும் பயன் பெறுவோராக மட்டும் இருந்து விடாமல், இதைச் செய்ய  மேற்குலகில் நமக்கு உரிமையும் கடமையும் உள்ளன.கடந்த காலங்களில் இவ்வாறு கீழை நாடுகளில் பொறுப்புணர்ந்து செயல்படாததால் இன்றைய சீரழிவு நேர்ந்துள்ளது.

இன்றைய நிலையில் மேற்குலகை மாற்ற ஒப்பீட்டளவில் நம்பிக்கை அதிகம் கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் கீழ்த்திசையில் வீசும் பொருளாதார வளர்ச்சிப் புயலில், அரசியல் சமுதாயச் சீரழிவில் வாய்ப்பு குறைவு. ஆனால் மேற்குலகின் நல்ல பண்புகளை காத்து வளர்ப்பதன் மூலமும் தொடர்ந்து கீழ்த்திசையில் அவற்றைப் பரப்புவதன் மூலமும் கிழக்கும் மேற்கும் சேர்ந்து கரையேற வழியுண்டு; அதுவே சாத்தியம். மேற்குலகின் மோசமான கூறுகளைக் கட்டுப் படுத்த கீழ்த்திசை (கணிசமான மக்கள்) அவற்றைப் புறக்கணித்தாலே போதும்.

வளர்ந்த மேற்குலக நாடுகள் தங்கள் ராணுவ ரவுடித்தனங்களுக்கு 'மேற்குலக வாழ்க்கை முறையைப் பாதுகாக்க வேண்டி' என்று நியாயம் கற்பிப்பத்தில் ஓரளவு உண்மை உள்ளது. அதனால் வளரும் நாடுகளிலும் சேர்ந்து மாற்றம் வராமல் மேற்குலகம் ஒரு கட்டத்திற்கு மேல் சரியான திசையில் வளர இயலாது. மேற்கு மாறக் கீழைக் காற்று வேண்டும். கிழக்கு வெளுக்க மேலைச் சூரியன் வேண்டும். ஒருங்கிணைந்த உலக மனித சமுதாயத்திற்கு ஒருமித்த தீர்வுதான் தேவை; அதுதான் ஆரோக்கியமானதாகவும் நீடிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

ஒல்வது அறிந்து அறிந்ததன் கண் தங்கிச்
செல்வார்க்குச் செல்லாது இல் (திருக்குறள்:472)
எது நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்று எண்ணித் தேர்ந்து அதில் நின்று தொடர்ந்து பணியாற்றுவோருக்கு இயலாதது என்று எதுவும் இல்லை.

கற்பனைகள் பலவிதம் உள்வினைகள் ஒருவிதம்

2011-07-31

கணிதத்தில் உள்ள முடிவிலியை (infinity), எதிர் எண்களை (negative numbers), கற்பனை எண்ணை (imaginary number i, which is when multiplied by itself gives -1), மூன்று பரிமாணங்களுக்கு மேல் உள்ள பொருளை (object having more than three dimensions) உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? இவை இல்லாமல் அறிவியல்/தொழில் நுட்ப வளர்ச்சிகள் இல்லை என்பதை உலகில் எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளார்கள் அல்லது உணர்ந்துள்ளார்கள்? அதே போல் முருகன், சிவன்... போன்ற கற்பனைக் கடவுள்கள் இல்லாத உலகம் எங்கு இருக்கிறது?

மேற்கண்ட கணிதக் கற்பனைகளின் பயனை, நன்மையை நாம் ஏற்றுக் கொள்வது போல் உலகில் பல கோடி மக்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையில் மதம் சார்ந்த கற்பனைகள் பயனை, நன்மையை தருகின்றன என்பதை நாம் ஏற்றுக் கொள்ளாவிடில் நாம் அதை உணராதக் கற்பனை உலகில் இருக்கிறோம் என்றே பொருள்.

எனக்குப் புகை பிடிப்பதிலும் ஆல்கஹால் பானங்களிலும் என்ன துய்ப்பு / இன்பம் / மகிழ்ச்சி இருக்கிறது என்று புரியவே இல்லை என்பதால் அப்படியான துய்ப்பு / இன்பம் / மகிழ்ச்சி கிடையவே கிடையாது என்று சொன்னால் எப்படி இருக்கும்? போட்டவனுக்குத் தானே போதை தெரியும்.

ஒரு குடி போதைக்காரர், சில பித்துக்குளிகள் சொற்களை மடக்கிப் போட்டு
க் 'கவிதை' என்று சொல்லி மகிழ்வதில் என்ன இருக்கிறது என்று சொன்னால் நாம் அவரைப் பற்றி என்ன நினைப்போம்?

மதத்தின் பெயரால் நடந்த போர்களை விட‌ 'இச'த்தின் பெயரால் நடந்த/நடந்து கொண்டு இருக்கும் போர்கள்/அழிவுகள் அதிகம். மேலும் அறிவியல்/தொழில் நுட்ப வளர்ச்சிகள் மதத்தின் பெயரால் நடந்த/நடந்து கொண்டு இருக்கும் சுரண்டல்களை விட மிக மிக அதிகமானச்/மோசமானச் சுரண்டல்களுக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் வழி வகுத்துள்ளன.

மதம், 'அனைவரும் கடவுளின் படைப்புகள்', 'கடவுளின் முன் அனைவரும் சமம்' என்று சொல்லி ஏற்றத் தாழ்வுகளையும், உழைப்புப் பிரிவினைகளையும் நியாயப்படுத்தினால், அறிவியல்/தொழில் நுட்ப வளர்ச்சிகளும் அதையே இன்னும் சூழ்ச்சியாகச் செய்ய வழி காட்டியுள்ளன.

"Science without religion is lame. Religion without science is blind." (Albert Einstein)

இந்த இடத்தில் மதம் என்பது பொது நல நோக்கம் என்று கொள்ள வேண்டும். ஐன்ஸ்டைன் சாணிக்குப் பொட்டிட்டு, கல்லுக்குத் தேர்த்திருவிழா நடத்தும் சடங்குகளைக் குறிப்பிடவில்லை என்பது தெளிவு. பெரியாரும் 'மதம் மக்களுக்கு அவசியம் வேண்டும். அதாவது எல்லாருக்குமான பொது ஒழுக்க நெறிகள் என்ற பொருளில்' என்று ஓர் இடத்தில் குறிப்பிடுகின்றார்.

மதம் மனிதனை உயர்த்தவில்லை என்றால் அறிவியல்/தொழில் நுடப வளர்ச்சிகள் (selfish gene, survival of the fittest justifications!) அவனை இன்னும் மிக மோசமான அயோக்கியனாக மாற்றியுள்ளன.

"Technological progress is like an axe in the hands of a pathological criminal." (Albert Einstein)

அறிவியல் ஆராய்ச்சி உலகத்தில் உள்ள 'மதப்' பிடிவாதங்கள் (dogmatism), மோசமான நடைமுறைகள் பற்றி The Trouble With Physics (http://www.thetroublewithphysics.com/) என்ற நூலில் வந்துள்ளது.

இன்று உலகில் மத நிறுவனங்கள் அல்லது அது சார்ந்த நிறுவனங்கள் நடத்தி வரும் அற, உதவித் தொண்டுகளைப் போல் அறிவியல்/தொழில் நுட்ப வளர்ச்சியால் சுரண்டலின் உச்சியில் இருக்கும் நிறுவனங்கள் என்ன செய்கின்றன, எவ்வளவு செய்கின்றன‌? குறைந்த அளவு அறிவியல்/தொழில் நுட்ப வளர்ச்சியைத் (மதத்திற்கு எதிராகத்) தூக்கிப் பிடிக்கும் தனி நபர்கள்/நாடுகள் எவ்வளவு தூரம் உலக வளங்களை, அறிவியல்/தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள முன் வருகின்றனர்?

மதம் எளிமையான கதை மூலம் உலகைப் புரிந்து கொண்டு (அதில் இருப்பதைத் தலைவிதி என்று ஏற்றுக் கொள்வதும் அடங்கும்) வாழ வழி காட்டுகிறது. அறிவியல் சிக்கலான கதை மூலம் உலகைப் புரிந்து கொள்ளச் சொல்கிறது. எளிமையான கதை பெரும்பாலோருக்கு எடுபடுவது தான் இயல்பு. இதற்கு மாறாக உலகில் பெரும்பாலோர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவியல் சிந்தனை அன்று.

திருக்கழுக்குன்றத்தில் ஆண்டு தோறும் நடக்கும் கோவில் திருவிழாவின் போது கோவிலைச் சுற்றியுள்ள கடைகளில் அந்தச் சில நாள்களில் நடக்கும் வணிகம் ஓர் ஆண்டு முழுவதும் நடக்கும் வணிகத்திற்குச் சமம் என்று நான் பள்ளிப் பருவத்தில் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த எங்கள் குடும்ப நண்பர் மூலம் அறிந்தேன். ஆக, மதம் மனதிற்கு மட்டும் மருந்தன்று வாழ்விற்கு அடிப்படையான‌ பணத்திற்கும் வழியாக உள்ளது.

மத நம்பிக்கைகள் குறைந்து வரும் இங்கிலாந்தில் அந்த இடத்தைக் கால்பந்து சங்கங்கள் பிடித்துள்ளன. இங்கிலாந்து அணி விளையாடும் போட்டி அன்று இங்கு விற்கும் பீர் (beer) வணிகம் ஒரு பில்லியன் பவுன்கள் என்று செய்திகள் கூறுகின்றன. ஒரு மதம் போய் வேறு ஒரு மதம் வந்துள்ளது. கோவிலைச் சுற்றி வீபுதி, தாயத்து... வணிகம் போல் கால்பந்து அணிகளின், விளையாட்டு வீரர்களின் டி சட்டைகள், தலைக் குட்டைகள், தொப்பிகள், கைப் பட்டைகள்... என்று வணிகம் அமோகமாக நடக்கிறது.

இதையும் விட மோசமாகப் போலி அறிவியல் அடிப்படையில் நடக்கும் நீர், விட்டமின் மாத்திரைகள், முடி வளர்க்கும் மருத்துவம்.... என 'எளிமையான' அற்புதங்களின் வணிகம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றது.

இது தான் நடப்பு (எதார்த்தம்). ஒரு குட்டையிலிருந்து மறு குட்டைக்குத் தாவும் முன்னேற்றம்! பெரும்பாலோர் அப்படித் தான் இருப்பார்கள் / இருக்க முடியும் என்றால் அதை ஏற்றுக் கொண்டு, கணக்கில் கொண்டு சிந்திப்பதும் செயல்படுவதும் தான் வெற்றி பெறும். அது தான் இன்று உலகில் நடக்கிறது.

இக்காரணம் தொட்டே ஒரு தமிழன் என்ற அடையாளத்தின் அடிப்படையில் 'தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு' அமைவதில் நப்பாசை இருந்தாலும் பற்றற்ற பார்வையில் அதுவும் ஒரு வழமையான அரசாகவே இன்றைய நிலையில் இருக்க இயலும் என்பதால் அமைந்தே தீர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. [அதிலும் 'தமிழன்' என்ற அடையாளம் என் சுய விருப்பத் தேர்வு இல்லாத போது (யாருக்கும் இல்லை) அதில் நடைமுறை வாழ்வுக்கு மேல் அதிகப் பற்று கொள்வது அடிமைத் தனமும் பழங்குடி மனப்பான்மையும் (tribalism) ஆகும். நான் இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். பெரும்பாலோர் (வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாமல்) நடைமுறையில் அப்படித்தான் வாழ்கிறார்கள்.] ஏனெனில் அரசு என்பது ஒரு வன்முறை இயந்திரமே; அடக்கு முறைச் சாதனமே.

அந்த வகையில் அமெரிக்க குடியரசுக் கட்சியினர் (Republicans) கூறும் 'குறைந்த அளவு அரசு' (minimum Govt) என்பது சரியென்றாலும் அவர்கள் அந்த அடிப்படையில் வலியோர் மெலியோரை ஏமாற்றி வாழ்வதற்கு இராணுவப் பாதுகாப்பு/அடக்கு முறைக்கு அரசைப் பயன்படுத்தும் அயோக்கியர்களாக உள்ளார்கள்.

அரசு ஒரு வன்முறை இயந்திரம் என்பதைச் சொன்ன மார்க்சியத்தின் அடிப்படையில் அமைந்த சோசலிச அரசுகள் கடுமையான வலிமையான மையப்படுத்தப் பட்ட அரசுகளைத் தான் நிறுவின. அதனால் அவை மக்கள் விடுதலைக்கு எதிரானவையாகவே போயின.

அரசின் மூலம் மக்களுக்கு உண்மையான விடுதலை என்றும் வர முடியாது. நாம் ஒவ்வொருவரும் அவரவர் விடுதலையைத் தனித்தனியாக‌ச் சாதித்தாக வேண்டும். அது தான் ஆன்மீகம். அதே சமயம் அது ஏதோ அன்றாட வாழ்வுக்கும் அறிவியலும் அப்பாற்பட்டதன்று.

பள்ளியிலும் கல்லூரியிலும் கணிதம், இயல்பியல், வேதியியல், உயிரியல்... என்று தனித் தனியாகப் பிரித்துப் படிப்பது ஒரு பொய்யான ஆனால் வசதியான பிரிவினையே. இயற்கைப் பொருள்களும் வினைகளும் (objects and processes) அப்படிப் பிரிந்து இல்லை.

அதே போல் தான் ஆன்மீகம், அறிவியல், அரசியல், பொருளியல், தனி வாழ்வு, பொது வாழ்வு... என்ற பிரிவினைகளும். வாழ்க்கை அப்படிப் பிரிந்து இல்லை.

"The whole of science is nothing more than a refinement of everyday thinking." (Albert Einstein)

பின்வரும் மேற்கோளை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் ஓர் ஆன்மீகச் சிந்தனையாளரே. ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் ஓர் அறிவியல் மனப்பான்மையாளரும் அன்று.

"A human being is a part of a whole, called by us _universe_, a part limited in time and space. He experiences himself, his thoughts and feelings as something separated from the rest... a kind of optical delusion of his consciousness. This delusion is a kind of prison for us, restricting us to our personal desires and to affection for a few persons nearest to us. Our task must be to free ourselves from this prison by widening our circle of compassion to embrace all living creatures and the whole of nature in its beauty." (Albert Einstein)

ஆன்மீகம், அறிவியல், மதம்.... என்ற அடையாளக் குறிகளுக்குள் நம்மைக் குறுக்கிக் கொள்ளாமல் சிந்தித்தால் எல்லோரிடமும் எல்லா வகையான சிந்தனைகளும் இருப்பதைப் பார்க்க முடியும். நம்மிடம் மதம் போன்ற 'நம்பிக்கை'க்கு இடம் இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. அறிவியலின் (கணிதம் உள்பட) அடிமட்டத்தில் சான்றுகள் இல்லாத, நிரூபிக்க முடியாத அனுமானங்களே (axioms) உள்ளன என்பதை அறிய வேண்டும்.

எல்லாவற்றையும் நாமே தனி ஆளாக ஆய்வு செய்து, சோதனை செய்து ஏற்றுக் கொள்ள இயலாது. சமுதாய ஒழுங்கிற்கு ஆராயாது ஏற்றுக் கொண்டு இட்ட கட‌மைகளைச் செய்யும் மனப்பான்மையும் (அடிமைத்தனமும்) அவசியமாகும். அப்படி இல்லாமல் மனித சமுதாயமோ தேனீக்களின் கூடோ எறும்புகளின் புற்றோ.... இயங்க இயலாது.

"The problem of mankind is to combine three things: economic efficiency, social justice, and individual liberty"
            - Maynard Keynes in 1926 lecture.(The Guardian Tuesday, February 15 2005)
('combine' here means 'balancing'; now we are sacrificing the remaining two for the first - economic efficiency that too for the vested interests only not for everyone)

David Eagleman of Baylor school of Medicine has been pioneer in brain research. His recent book is "Incognito".
டேவிட்டின் நூலைப் பற்றிய வாசகர்கள் கருத்துகளைப் படித்தேன். அவர் நூலைப் படிக்கவில்லை. ஆனால் அது போன்ற கருத்தில் எழுதப்பட்டுள்ள நூல்களைப் படித்துள்ளேன். நம் மேல்மனத்திற்கு எட்டுவது மிகக்குறைவே; ஆழ்மனதில் நடப்பவை பெரும்பாலும் நம் மேல்மனக் கவனத்திற்கு வருவதே இல்லை. "The User Illusion: Cutting Consciousness Down to Size"  என்ற நூலைப் படித்துப் பார்க்கவும்.

பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால்
     பணிகின்றேன் பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்
     குழைகின்றேன் குறித்த ஊனை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால்
     உறங்குகின்றேன் உறங்கா தென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச்
     சிறியேனால் ஆவ தென்னே
             - திருவருட்பா 6 ஆம் திருமுறை: 10 தற் சுதந்தரம் இன்மை: 3369

டேவிட் நூலைப் படித்தும் புரிந்து கொள்ளலாம். திருவருட்பாவைப் படித்து விட்டு நம் மனதை உற்று நோக்கியும் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் ப்ருசு ('Bruce Lipton - Biology of Perception -
http://www.bbc5.tv/eyeplayer/video/biology-perception-psychology-change) சொல்லும் செய்தி வேறு; ஒரு வகையில் எதிரானதாகும். அதாவது நம் நம்பிக்கைகள், புரிதல்கள் (beliefs and perceptions) தான் பெருமளவில் நம் உயிரியக்கத்தை (உடலியல்) தீர்மானிக்கின்றன என்பதாகும். நம் நம்பிக்கைகளை மாற்றினால், புரிதல்களை மாற்றினால் நம் உயிரியலை (biology) மாற்ற முடியும் என்பது அவர் வாதம். இதை எவ்வளவு தூரம் பிற அறிவியலறிஞர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர் ஹோமியோபதி போன்ற மருத்துவங்களை (அறிவியல் அடிப்படையில்) ஆதரிக்கிறார். அவர் அமெரிக்காவில் அதிகம் பேர் இறக்கக் காரணம் அலோபதி மருந்துகளே என்று கூறுகிறார். அதனால் அவரைப் புறக்கணித்து ஒதுக்கி வைத்திருக்கலாம். Please watch many of his videos in YouTube.

புதிய மனிதர்கள் இன்றி புதிய சமுதாயம் இல்லை. புதிய மனிதர்கள் என்றால் நான்கு கண்கள், எட்டு கைகள்... என்ற மாற்றம் அன்று. புதிய சிந்தனையே புதிய மனிதர்கள்.

[இவை எவையும் உயர்வு தாழ்வு மனப்பான்மையில் கூறப் படவில்லை. 'நான்' ஞானியும் இல்லை; சாணியும் இல்லை; அல்லது இரண்டும் தான்; எனில் எல்லோரும் அவ்வாறே. எல்லோரும் சாரத்தில் (essence) சமம்; சடத்தில் (gross) சமமில்லை. இதை விளக்கப் புகுந்தால் நீண்டு விடும். பிறகு ஒரு வாய்ப்பில் விரிவாகப் பார்ப்போம்.]

"We can't solve problems by using the same kind of thinking we used when we created them." (Albert Einstein)

ஆனால் அதற்கு முன் சிக்கலைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் இல்லாத ஊருக்குப் போகாத வழியைத் தேடிக் கொண்டு இருப்போம்.

உலகமயமாகி விட்டச் சமூகப் பொருளாதார அரசியல் சூழலில் பழங்குடி, தேசிய (tribalism, nationalism) மனப்பான்மையுடன் சிக்கல்களை அணுகினால் (சிக்கல்களுக்கு அப்படியான அணுகுமுறைகள் ஒரு காரணம்) கிளையில் உட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவது போலாகும்.

செய்வது எளிது செய்வது எதுஎவ்வென
உய்யும் தெளிவே அரிது
Easy it is to act as told
Rare to tell clear and bold
        (சரியாரின் மறுக்குறள்)

"The highest possible stage in moral culture is when we recognize that we ought to control our thoughts". - Charles Darwin
"நம் சிந்தனைகளை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று புரிந்து கொள்ளும் நிலை தான் நம் பண்பாட்டின் உச்சக் கட்ட வளர்ச்சிப் படியாகும்."

உள்ளத்தின் மாற்றமே உண்மை; உருமாற்றம்
கள்ளத்தின் மாற்றமே காண். (சரியாரின் புதுக்குறள்)
So, the real evolution is not eradicating diseases, achieving long-life etc but psychological (thinking / attitude) change. I am sure Bruce Lipton will agree with this statement.

புதிய சிந்தனைகள் எங்கிருந்து வரும், வர முடியும்? அதற்கும் ஏற்கனவே வழிகாட்டுதல்க‌ள் உள்ளன. அது ஆன்மீகத்தில் தெளிவாக உள்ளது. அறிவியலைச் சரியாகப் பார்த்தால் அதிலும் உள்ளது. 'எல்லாம் பிரம்மம்' என்ற வலைப் பதிவைப் படிக்கலாம்.

புதிய சிந்தனை நம்மை நாம் புரிந்து கொள்வதன் மூலம் தான் (தன்னை அறிந்தான் தரணியை அறிந்தான்) வர முடியும். மதத்தையோ (அதன் மூல நூல்களையோ) அறிவியலையோ எந்த ஒன்றை மட்டுமோ ஒரே மூலமாகத் (only source) தூக்கிப் பிடித்தால் 'நம்பிக்கையும்' 'அடிமைத்தனமும்' தான் வரும். சிந்தனை விடுதலைக்கு அவை அறிகுறி அல்ல. 'நம்மை அறிந்தால்' வலைப்பதிவு படிக்கலாம். ஆன்மீகம், அறிவியல் இரண்டின் மைய இலக்கு 'தன்னை'ப் புரிந்து கொள்வதே.

மாறாக ஆன்மீக (மத) அற்புதங்களும் (கற்பனை / உண்மை) அறிவியல் தொழில் நுட்ப அற்புதங்களும் (கற்பனை / உண்மை) நம்மை மைய இலக்கை விட்டுக் கவனத்தைத் திருப்பி மயக்குகின்றன. தன்னை அறிவதில் இது ஒரு முக்கியமான கட்டமே. யோகா, தியான அற்புதங்களில் மயங்கி ஆன்மீகத்தின் மையத்தைத் தவறு விடுவது போல், மருத்துவம், புற வாழ்க்கைச் சாதனங்கள் போன்ற தொழில் நுட்பத்தின் அற்புதங்களில் மயங்கி அறிவியலின் மையத்தைத் தவற விடுகின்றோம்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
     - திருவாசகம்:19 5.திருச்சதகம் 2.அறிவுறுத்தல்

"வானாகி மண்ணாகி... உண்மையுமாய் இன்மையுமாய்..." (திருவாசகம்) என்பது போன்ற‌ன, 'தமிழ் இலக்கிய வரிகள்' என்பதை விட நிலையான உண்மையைச் சொல்கின்றன என்பதே போற்றப்பட வேண்டிய முதற் சிறப்பு.

திருக்குறளில் பல அதிகாரங்களை (நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவா அறுத்தல்....) நாம் ஏதோ போகிற காலத்தில் படித்துப் புலம்ப வேண்டியவை என்று ஒதுக்கி வைத்துள்ளோம். அவை புதிய மனிதரை உருவாக்கும் புதிய சிந்தனைக்கான நல்ல மூலங்களாகும். 'குட்டுப்பட்டக் குரங்கன்' கூட உதவலாம்.

All Einstein's quotes are from:
http://rescomp.stanford.edu/~cheshire/EinsteinQuotes.html