Thursday 29 December 2011

மூன்று முக உண்மை

2011-12-27

மூன்று முக உண்மை


கீழ்க்கண்ட‌ மூன்று புரிதல்களும் ஒரே நேரத்தில் ஒரே அளவில் வேண்டும்.

1. இந்த உலக வாழ்க்கை நாடகத்தில் கொடுக்கப்பட்டுள்ள‌ வேடத்திற்குத் தக நடிப்பு (உயர்வு / தாழ்வு, உண்மை / பொய், நீதி / அநீதி, இன்பம் / துன்பம், முன்னேற்றம் / பின்னேற்றம்...).

2. எல்லாம் இயற்கை / இறைவன் செயல். அடையும் இலக்கு எதுவும் இல்லை. இக்கணத்தில் நடப்பதுதான் இருப்பதுதான் உண்மை. தனித்தனிப் பொருள்கள் / செயல்கள் என்பது அடிப்படையான மாயை / முரண்பாடு.  எல்லா வேடங்களுக்கும் (கதைப் பாத்திரங்களுக்கும்) பின்னால் உள்ளது ஒரே ஆற்றலே (இறைவனே / இயற்கையே).

3. எதுவும் நடக்கவில்லை. இருக்கவில்லை. தோற்றம் மட்டுமே உள்ளது. 'நான்' என்ற அறிவுணர்வு எழாவிடில் எதுவும் இருக்கிறது இல்லை என்பதே (என்ற கருத்தே) எழாது. கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்பன இந்த‌ ஆதி அந்தமில்லா ஒரு கணக் காட்சியின் உள்ளடக்கமே. ஓடுவது காலம் அன்று, மனமே / அறிவுணர்வே.

சுருக்கமாக,

1. எல்லாம் நாடக வேடங்களே (many roles)
2. எல்லாம் வேடங்களுக்கும் மூலம் ஒன்றே (one source)
3. எல்லாம் தோற்றங்களே (one appears as many)

இதை இன்னும் சுருக்கமாக 'எல்லாம் ஒன்றே' (all one) என்று சொல்லி விடலாம். என்றாலும் இப்படி அதை மூன்று முகங்களாகப் புரிந்து கொள்வதில் அந்த மூன்று பரிமாணங்களை ஒத்திசைந்து இயங்க / வாழ உதவும்.

இந்த மூன்று முக உண்மையே நிலையான உண்மை. இதைப் புரிந்து கொள்ளப் படிப்போ, பயிற்சியோ அவசியமில்லை. எந்த மன மூட்டமும் இல்லாமல் பார்த்தால், சிந்தித்தாலே போதும். ஆனால் நடைமுறையில் அப்படி ஒரு நிலை (ஒரு சிலருக்குத் தவிர்த்து) இயற்கையாக அமையாததாலும் எல்லா மனங்களும் பல வகையான கற்பிக்கப்பட்டக் கருத்துகளால் மூட்டம், மாசு படிந்து இருப்பதாலும் அவற்றை நீர்த்துப் போய்த் தெளிய வைக்கப் படிப்பும் பயிற்சியும் தேவைப்படுகின்றன.

இந்த மூன்று பரிமாணங்களும் தனித் தனியாகவோ ஒன்றன் பின் ஒன்றோ அல்லது முக்கியத்துவத்தில் பயன்பாட்டில் முதல், இரண்டு என்று வரிசையிலோ இல்லை. இவை ஒரே நிலையில் உள்ளன. பூமி தன்னைச் சுற்றும் போதே சூரியனையும் சுற்றிக் கொண்டு அதே சமயம் சூரியக் குடும்பமாகப் பால் வெளி மண்டலத்தைச் சுற்றிக் கொண்டும் மேலும் பால் வெளி மண்டலமாகச் சுழன்று கொண்டும் நகர்ந்து கொண்டும் இருப்பதைப் போல் மூன்று முக உண்மைகள் ஒரே நேரத்தில் ஒரே அளவில் ஒரே நிலையில் ஒரே 'உண்மை'யாக உள்ளது.

Monday 19 September 2011

பிச்சையோ பிச்சை

2011-09-19

பிச்சையோ பிச்சை

'பிச்சை' எடுப்பது கேவலமாகவும் போற்றுதல், வணங்குதலுக்குரிய துறவுப் பெருமையாகவும் நம் இந்து மதப் பண்பாட்டில் உள்ளது. இன்றைய இந்து மதம் என்பது பழந்தமிழர் மதங்களான சைவம் (சிவனியம்), வைணவம் (மாலியம்), புத்தம், சமணம், வேத மதம், சீக்கியம்... போன்றவற்றை நடைமுறையில் உள்ளடக்கி உள்ளது. இதற்கும் மேலும் மதம் கடந்து மக்கள் திருத்தலங்களுக்குப் புனித யாத்திரை (வேளாங்கண்ணி, நாகூர்...) சென்று வருகின்றனர். நாத்திகமும் இந்து மதத்தின் ஒரு பிரிவு என்பதில் ஐயமில்லை.

தன் உழைப்பால் பிழைக்க முடியாத சோம்பேறிகளாகப் பிச்சை எடுப்பது கேவலம் என்றும் தன் முயற்சி, தன் உழைப்பு, தன் சாதனை... என்ற ஆணவம் அற்றுப் போன நிலையில் 'யார் யாரிடம் பிச்சை எடுப்பது' என்று புரிந்த, உணர்ந்த நிலையில் 'பிச்சை' எடுப்பது போற்றுதலுக்குரிய துறவு உள்ளமாகவும் பார்க்கிறோம்.

தன் உழைப்பால் (அதற்குச் சன்மானமாகப்) பொருள் ஈட்டி உயிர் பிழைப்பதை 'தன்மானம்' என்று கருதுகிறோம். 'எல்லாம் இறைவன்/இயற்கையின் செயல்' என்று உணர்ந்து 'தன்மானம்' அழிந்த நிலையில் உடல், உயிர் முதற்கொண்டு எதையும் விரும்பவோ, வெறுக்கவோ இயலாத போக்கில் 'பிச்சை' எடுத்து உயிர் பிழைப்பதை 'உயர்மானம்' (துறவு) என்று கருதுகிறோம்.

அசல் இருந்தால் போலிகளும் வந்து விடுகின்றன. அதற்காக அசல் இல்லாமல் போய் விடாது. ஆகப் போலித் தன்மானங்களும் போலி உயர்மானங்களும் அசல்களுடன் உலகில் உலவுகின்றன.

என் தம்பி திருவள்ளுவன் செங்கற்பட்டு இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்தான். அப்பள்ளிக்கு ஒரு தலைமை ஆசிரியருடன் மிஷன் நியமித்த ஒரு சாமியாரும் பள்ளி நிர்வாகியாக இருப்பார். இப்போது அப்படி உள்ளதா என்று தெரியவில்லை. அதே அமைப்பு, ஏற்பாடு நீடித்தாலும் நீடிக்கலாம். ஆனால் 1970 களில் அப்படி இருந்தது. அச்சாமியாருக்கு நல்ல சீடனாக (மாணவனாக) நெற்றியில் விபூதி இட்டு என் தம்பி நடந்து கொண்டதால் அச்சாமியாருக்கு இவனை மிகவும் பிடித்து இருந்தது. அச்சாமியார் மூலம் தெரிந்து கொண்டது:

இராமகிருஷ்ணா மிஷனில் சாமியாராக வேண்டுமென்றால் அதற்குரிய கல்வி, பயிற்சித் தகுதிக்குப் பிறகு கடைசியாக ஓர் ஆண்டு நாடோடியாகப் பிச்சை எடுத்து வாழ வேண்டுமாம். இப்போதும் அத்தகைய விதிமுறை, நடைமுறை இருக்கிறதா என்று தெரியவில்லை. அச்சாமியார் ஆந்திராவில் ஓர் ஆண்டு ஊர் ஊராகத் திரிந்து பிச்சை எடுத்து வாழ்ந்தாராம். இரவில் வாய்ப்பு கிடைத்தால் காவல் நிலையத்தில் படுத்துக் கொள்வாராம்.

தான் படித்து விட்டோம், தான் சாம்பாதித்து விட்டோம், தான் சாதனை புரிந்து விட்டோம் என்பன மட்டுமல்ல ஆணவம். தான் துறந்து விட்டோம் என்பதும் ஆணவம் தான். அதுவும் அழிய வேண்டுமென்றால் கொஞ்ச காலம் பிச்சை எடுத்துப் பிழைக்க வேண்டும் என்று விதி வைத்துள்ளார்கள் போலும்.

தாயுமானவர் தான் அரசனுக்கு அமைச்சராக இருந்த அதிகாரம் செலுத்திய அதே திருச்சி மாநகரில் துறவு பூண்டு அதே வீதிகளில் பிச்சை எடுத்தார்.

அழிக்கும் கடவுள் சிவபெருமான் பிச்சை எடுத்த பெரிய புராணங்களும் நம் சமயமல்லவா?

பிச்சை சிறுமையா பெருமையா என்பது பிச்சையின் நோக்கம், தன்மை குறித்ததாகும். மற்றபடி எல்லோரும் பிச்சைக்காரர்களே. யாரிடமிருந்து எதற்காகப் பிச்சை எடுக்கிறோம் என்பது தான் வேறுபாடு. காண்க 'கீழிலிருந்து மேல்வரை பிச்சைக்கார மனிதர்கள்' வலைப்பதிவு.

http://tholthamiz.blogspot.com/2011/08/blog-post_5618.html

அவரவர்க்கு வாய்த்த இடம்
அவன் போட்ட பிச்சை
அறியாத மானிடருக்கு
அக்கரையில் இச்சை 

           - 'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' திரைப்படப் பாடல்

Sunday 18 September 2011

திருமண வாழ்த்துரை

2011-08-20
திருமண வாழ்த்துரை
மணமகன்: ப.தொல்காப்பியன் மணமகள்: செ.முத்துலெட்சுமி
மணநாள்: ஆவணி 25, திருவள்ளுவர் ஆண்டு 2042 (ஞாயிறு 11.09.2011)
அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயம், தென்னங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்

இல்லற வாழ்வில் இணைந்து செல்ல இணைந்திருக்கும் மணமக்களுக்கும் அம்மணமக்களை இவ்வாழ்த்து நிகழ்வில் வாழ்த்த மேடையிலும் பந்தலிலும் இணைந்திருக்கும் அனைவருக்கும்

வணக்கம்!

நண்பர் தென்னை கணேசனும் நானும் 25 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்கள். அவர் தம்பி இராமசாமியையும் அதே போல் நெடுங்காலமாக அறிவேன். இருவர் குடும்பங்களின் படிப்படியான முன்னேற்றத்தையும் கணேசன் வாயிலாகக் குடும்பச் செய்தியாகத் தெரிந்து வருகின்றேன். நண்பர் கணேசனும் எங்கள் குடும்பத்தில் ஒருவராகப் பழகி வருபவர். என் பெற்றோர் உடன்பிறப்புகள், அவர்களின் துணைவியார்கள், சில உறவினர்கள் என்று என் உறவு சுற்றத்தை அறிந்தவர்; சிலரிடம் பழகியவர்.

அந்த அடிப்படையில் தென்னை.கணேசன் குடும்பத்தில் பலருக்கு நேரடியாகத் தெரியாதவன் என்றாலும் அவரின் உறவு சுற்றத்தைப் பற்றி அறிந்தவன் என்ற வகையில் அவருடைய அண்ணன் மகன் திருமணத்தில் மணமக்களை வாழ்த்திச் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பைக் கணேசன் எனக்கு இன்று இங்கு வழங்கியுள்ளார். அதற்கு அவருக்கு நன்றியைத் தெரிவிக்கும் வேளையில் இது மணமக்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையட்டும் என்று விழைகிறேன்.

மனிதனுடைய பிறப்பும் இறப்பும் அவன் கையில் இல்லை என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் எவற்றை எப்போது சேர்ப்பது, எவற்றை எப்போது விடுவது என்பது நம் கையில் உள்ளது. இதைச் செய்வதில் ஒரு சிக்கல் என்னவென்றால், இவற்றை அலசி ஆராய்ந்து முடிவு செய்து கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாது. இவற்றை அலசி ஆராய்வதும் வாழ்வதும் இணையாக நடக்கும்; இணையாகவே நடக்க முடியும். ஆக, வாழ்க்கை என்பதே ஆய்வு, புரிதலின் வளர்ச்சி. ஆய்வு, புரிதல் என்பதே வாழ்க்கையின் மலர்ச்சி.  இது தான் வாழ்வின் நோக்கம். இதைத் தவிர்த்து நாம் செய்யும் சாதனைகள, அனுபவிக்கும் வேதனைகள் எல்லாம் இதை நோக்கிய பயணமே; அப்பயணத்தில் கடக்க வேண்டிய காட்சிகளே.

இவை எல்லாம் மணமக்களுக்கு இப்போதே புரிந்து விடாது. ஆனால் நிலை வைப்புக் கணக்கில், தொடர் வைப்புக் கணக்கில் (fixed deposit, recurring deposit) போட்டு வைக்கும் சிறு பணம் பெருகி எப்படி 10, 20, 30 ஆண்டுகளுக்குப் பிறகு பயன் தருமோ அது போல் இக்கருத்துகளை உள்ளத்தில் போட்டு அவ்வப்போது அசை போட்டு வந்தால் பெரும் பயன் தரும்; வாழ்வு சிறப்புறும்.

இவை எவையும் என்னுடைய கண்டு பிடிப்புகள் அல்ல. இவை மூத்தவர்களும் முன்னோர்களும் அறிஞர்களும் வலியுறுத்திச் சொல்லியவையே. ஆனால் இவற்றை என் வாழ்க்கையில் உரசிப் பார்த்துப் பின்பற்றிப் பயனடைந்ததால் மணமக்களுக்குச் சொல்ல விழைகிறேன்.

இந்தத் திருமண விழா அழைப்பிதழில் மூன்று திருக்குறள் வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை
அன்பின் வழியது உயிர்நிலை
பெரியாரைப் பேணித் தமராக் கொளல்

எது அறன் என்பதற்கு அந்த முழுக்குறளையும் பார்த்தாலே போதும்.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று

மனித சமுதாய விலங்கு. அவன் தன் விருப்பப் படியே 100 விழுக்காடு வாழ்ந்து விட முடியாது. பிறர் விருப்பப் படியே 100 விழுக்காடு வாழ்ந்து விட முடியாது. 'உனக்காகவே நான் வாழ்கிறேன்' என்று திரைப்படப் பாடல் பாடலாம். ஆனால் நடப்பு உலகில் அது விதிவிலக்கே.

எனவே மனிதன் சில உரிமைகளைப் பெறுவதற்காகச் சில கடமைகளை மேற்கொள்வதே சமுதாயத்திற்கும் அவனுக்கும் உள்ள ஒப்பந்தம். அதைச் சிறிய அளவில் மேற்கொண்டு கற்று, பின்பற்றிப் பழகி வளருவதற்கான வாய்ப்பே இல்வாழ்க்கை.

குடும்பம் என்பது சிறிய சமுதாயம். சமுதாயம் என்பது பெரிய குடும்பம். இரண்டிலும் பிறருடன் ஒத்து வாழ்வது தான் சவால்; சாதிக்க வேண்டிய சாதனை. இதையும் வலியுறுத்தித் திருவள்ளுவர் 'ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சுருக்கமாகச் சொன்னால், எப்படி விட்டுக் கொடுத்தும் கேட்டுப் பெற்றும் ஒத்து வாழ்வது என்பதே மணமக்கள் முன் உள்ள, நம் அனைவர் முன் உள்ள வாழ்க்கைப் பெரும்பணி ஆகும். ஆனால், எந்த அடிப்படையில் ஒத்துப் போவது?

அவரவருக்கு அவரவர் எண்ணமே, தேவையே, இன்பமே பெரிது. தனி உயிர்த் துடிப்பே சுய நலம் தான். ஆனால் அந்த உயிர் உருவாகுவதும் பின் வளர்வதும் இருவர் என்ற ஆண், பெண் இணைப்பாலும் அதைச் சுற்றி உறவு, சுற்றம், நட்பு, இனம், சமுதாயம் என்ற பிணைப்பாலுமே ஆகும்.

அதைத் தான், அந்தக் குடும்பம், உறவு, சுற்றம், நட்பு, இனம், சமுதாயம் என்ற பிணைப்பு எனும் அன்பைக் கொண்டு தான் இங்கு உயிர் நிலைக்கிறது என்பதைத் திருவள்ளுவர், 'அன்பின் வழியது உயிர்நிலை' என்றார். ஆக, அந்த அன்பு என்பது தான் ஒத்துப் போவதற்கும், விட்டுக் கொடுத்தும் கேட்டுப் பெற்றும் வாழ்வதற்கு அடிப்படை.

இதைத் தமிழறிஞர் டாக்டர் முவ வலியுறுத்திச் சொன்னார்:
"வாழ்க்கையில் பிணக்கு(சிக்கல்) ஏற்படுவது இயற்கை. அப்போது அறிவு மட்டும் இருந்தால் பயனில்லை, அன்பு இருந்தால் பயனுண்டு"

கணவன் மனைவி உறவில் கணக்குப் பார்த்தால் பிணக்கு தான் வரும் என்பார்கள். ஆனால் கணவன் மனைவி உறவில் மட்டுமன்று, பெற்றோர் பிள்ளை, அண்ணன் தம்பி, அக்கா தங்கை, மாமா மச்சான்.... என்று எல்லா உறவுகளிலும் கணக்குப் பார்க்க வேண்டும். ஆனால் கணக்கை ஒழுங்காக முழுமையாகப் பார்க்க வேண்டும். உடனடிக் கணக்கையும் பார்க்க வேண்டும். தொலை நோக்குக் கணக்கையும் பார்க்க வேண்டும். நடப்புக் கணக்கையும் பார்க்க வேண்டும். நிலைப்புக் கணக்கையும் பார்க்க வேண்டும்.

அறிவு கணக்குப் பார்க்கும். ஆனால் பொதுவாகச் சரியாகப் பார்க்காது. பெரும்பாலும் அறிவு, கணக்குப் பார்க்கும் போது அன்பைக் கழித்து விட்டுத் தான் கணக்குப் பார்க்கும். ஆகவே அது தப்புக் கணக்காகவே வந்து முடியும். அதனால் தான் அறிவு மட்டும் இருந்தால் பயனில்லை என்றார். அறிவின் கணக்கு அரைகுறைக் கணக்கு. ஆகையால் அது பிணக்கைப் பிளவாக்கி விடும்.

நினைத்துப் பாருங்கள். நாம் இந்த உலகில் பிறக்க என்ன தவம் செய்தோம்? எந்த வகையில் நாம் அதற்குத் தகுதியானோம்? காற்று, நீர், வெப்பம், மரம் செடி கொடிகள், ஆறு மலை கடல்கள், புழு, பூச்சி, பறவை, விலங்குகள், அவற்றை அனுபவிக்க ஆறு புலன்கள் இவை நமக்கு இலவசமாக வழங்கப் பட்டுள்ளன. இதுவே இறைவனின் அன்பு அல்லது இயற்கையின் அன்பு.

ஆனால் நாம் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தப் பல கட்டளைகள், விதிகள், எதிர்பார்ப்புகள், முன் நிபந்தனைகளை வைக்கிறோம். அவை கூடாது என்பதன்று. ஏனெனில் அன்பு ஒரு குருட்டு விசை. இயற்கை / இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாது எல்லோருக்கும் மேற்கண்ட இலவசங்களை வழங்கியுள்ளது. ஆனால் மனித வாழ்க்கை என்பது விருப்பு வெறுப்புகளுக்குள் விளையாடுவது. எனவே விருப்பு வெறுப்புகள் மனதில் படியும் கறைகள், மாசுகள். அதைப் போக்குவது அன்பு.

இதையே டாக்டர் முவ 'அன்பு மனமாசைக் கழுவும் கருவியாகிறது' என்றார்.

ஆக, அறனாகிய‌ இல்வாழ்க்கை என்பது அன்பின் வழி நின்று ஒத்து வாழ்வது என்று அறிந்தோம். அதை நாமாக, ஒருவராக, மணமக்கள் இருவராகச் சாதிக்க‌ இயலாது. அங்கு பெரியோர் துணை வேண்டும். பண்பில் மூத்தோர், முன்னோரைப் பேணி அவர் தம் வழிகாட்டுதல்களை அருகில் வைத்துக் கொண்டால் செய்த தவறுகளை மீண்டும் செய்து துன்புறாது தப்பிக்கலாம்.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை
அன்பின் வழியது உயிர்நிலை
பெரியாரைப் பேணித் தமராக் கொளல்

என்ற இந்த மூன்றும் ஒரு தொடக்கமாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. அவையே போதும் என்று நினைத்து விடக் கூடாது.

அறமாக இருந்தாலும் அன்பாக இருந்தாலும் பெரியோர் சொல் கேட்பதாக இருந்தாலும் எல்லாவற்றிலும் அளவு உள்ளது. எதையும் முழுமையாகக் கண்களை மூடிக் கொண்டுப் பின்பற்றக் கூடாது. 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்றார் திருவள்ளுவர்.

மெய்ப்பொருள் என்றால் என்ன? அதை எப்படிக் காண்பது?

மெய்ப்பொருள் காண்பது என்பது உணவை உண்டு செரித்து உடலுக்குத் தேவையான ஊட்டமாக உயிர்த்துக் கொள்வது. கண்களை மூடிக் கொண்டு சொன்னதை அப்படியே பின்பற்றுவது என்பது உயிர் ஆபத்தில் இருக்கும் போது பிறர் குருதியை உடலில் நேரடியாக ஏற்றிக் கொள்வது போன்றது.

அது போல் வாழ்வில் நாம் சிந்திக்க இயலாத தடுமாற்றம், துன்பத்தில் இருக்கும் போது அவசரத்திற்கும் அவசியத்திற்கும் பெரியோர், மூத்தோர் சொல்வதை அப்படியே கேட்டு மீளலாம். ஆனால் அன்றாட நடைமுறையில் அவற்றை நாம் சிந்தித்து, உரசிப் பார்த்து நம்முடைய அனுபவமாக உயிர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே மெய்ப்பொருள் காண்பதாகும்.

எனவே இந்த மூன்று திருக்குறள் வரிகளையும் இவை போன்ற பல நல் வாழ்விற்கான சூத்திரங்களையும் தழுவி உள்ளடக்கிக் கடந்து சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் வாழ்க்கை என்பது 'அளவறிதல்' என்று சொல்லி விடலாம்.

'மிகினும் குறையினும் நோய் செய்யும்' என்று திருவள்ளுவர் சொன்னது உணவில் மட்டுமன்று உணர்விலும் தான், உழைப்பிலும் தான், உறக்கத்திலும் தான், துய்ப்பிலும் தான், துயரத்திலும் தான். வரவு செலவிலும் தான். உறவு உரசலிலும் தான்.

வாழ்வில் தேவையற்ற பண்புகள் என்று எதுவும் இல்லை. கோபம் இல்லாது, பொய் சொல்லாது, போட்டி மனப்பான்மை இல்லாது, மான அவமானங்கள் இல்லாது வாழ முடியாது. ஆனால் எல்லாம் இடமறிந்து, காலமறிந்து, பயன் கருதி, அளவோடு இருக்கும் போது, பின்பற்றும் போது வாழ்க்கை வளமாகும்.

எனவே உடலைப் பேணுங்கள். உள்ளத்தைப் பேணுங்கள். உறவைப் பேணுங்கள். அதற்கு அன்புச் செல்வத்தை, அறிவுச் செல்வத்தை, பொருள் செல்வத்தை, அருள் செல்வத்தைப் பயன்படுத்துங்கள்; வாழ்வாங்கு வாழுங்கள் என்று மணமக்களை உங்கள் எல்லோர் சார்பிலும் வாழ்த்தி இந்த வாய்ப்பிற்கும் உங்கள் நேரத்திற்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி வணக்கம்.

வாழ்த்துரை வழங்குபவர்கள்
வ.வேம்பையன் (கல்பாக்கம்) - வே.தொல்காப்பியன் (இலண்டன்)
தமிழர் திருநாள் அறக்கட்டளை, மறைமலை நகர் – 603209

Thursday 15 September 2011

தமிழ் ஓர் இன்பம்

2011-09-15


தமிழ் ஓர் இன்பம் - அதைத்
தட்டில்லாது  உண்போம்
'தட்டு' என்பது தமிழைத் துய்க்க நமக்கு எதுவும் (இடைப்பொருள் ‍- தட்டு) தேவையில்லை. 'தட்டு' என்பது தட்டுபாட்டைக் குறிக்கும். தமிழ் தட்டுப்பாடு ('தமிழுக்கு இல்லைத் தட்டுப்பாடு' திரைப்படப்பாடல்) இன்றி கிடைக்கிறது. தட்டு என்பது எல்லை, வரையறை என்றும் கொள்ளலாம். எனவே தமிழை அளவின்றி (தட்டின்றி) அனுபவிக்கலாம் என்றும் பொருள் கொள்ளலாம்.

சோறும் கறியும் உண்டிடத் திகட்டும்
சொல்லும் பொருளும் சுவையே கூட்டும்
சாறும் சதையும் சலித்தே போகும்
சீரும் அசையும் செந்தமிழ் ஆகும்                        (தமிழ் ஓர் இன்பம்)

எதுவும் பழகப் புளிக்கும் வாட்டும்
எதுகை மோனை இதயம் மீட்டும்
அதுவும் இதுவும் அடைந்திட அலுக்கும்
அணியும் தொடையும் ஆவலை வளர்க்கும்    (தமிழ் ஓர் இன்பம்)

வீடும் வாசலும் இடிந்தே வீழும்
வினையும் பெயரும் விரிந்தே வாழும்
காடும் கடையும் காலத்தில் குலையும்
கற்றதும் கேட்டதும் ஞாலத்தில் விளையும்
    (தமிழ் ஓர் இன்பம்)

உடலும் உயிரும் மடிந்து மறையும்
உரையும் பாவும் படிந்து நிறையும்
கடலும் காசும் வற்றி வறளும்
காலம் வெல்லும் வெற்றிக் குறளும்
                    (தமிழ் ஓர் இன்பம்)



Tuesday 30 August 2011

Ghosts of Father and Son

2008-03-06




Son:
appA, Are ghosts real?
Father:
Yes, they are real.
S:
Where are they?
F:
Right here, we are all ghosts really. But we pretend as if we are not.
S:
How do I find out that I am a ghost?
F:
What do you mean by ghost?
S:
Something that doesn’t exist really but exists only in imagination.
F:
So, if you are a ghost, you don’t exist. That means you can’t find out that you don’t exist.
S:
That doesn’t sound right. Sure I exist.
F:
Yes, yes.. you exist as a ghost.
S:
Still I have a question, if ghosts are not real, exist only in imagination and I am a ghost, so I don’t exist then who is imagining that I am a ghost or pretending that I am not a ghost?
F:
YOU are (the imagination/pretension) imagining/pretending that you are/are not a ghost.
S:
You are kidding, aren’t you?
F:
Sure I am, that’s what ghosts do.

ஒற்றுமையாக இருப்பது என்பது ஒரு தனித்துவமான திறன்

2011-08-30


எல்லோரும் வாயால் தமிழர்கள் ஒற்றுமைப் பட வேண்டும் என்று பேசிக் கொண்டு அவரவர் தனித் தனி மேடை, கட்சி, தலைவர் பதவி என்று பிரிந்து நின்று கொண்டு இருந்தால் மக்கள் எப்படி ஒன்று படுவார்கள்? ஒவ்வொரு பொது விஷயத்திற்காகவாவது (மரண தண்டனை, ஈழத்தமிழர் உரிமை, காவிரி நீர்ச் சிக்கல்...) ஒரு பொது வேலைத்திட்டத்தில் ஒன்றுபடா விட்டால் எப்படி? எல்லாவற்றிற்கும் 'கருணாநிதி கெடுத்து விட்டார்', 'கருணாநிதி கெடுத்து விட்டார்' என்று பல்லவி, அனுபல்லவி, சரணம் வரை அதையே பாடிக் கொண்டு இருந்தால் எப்படி? இன்னும் எத்தனை காலத்திற்கு? கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழப் போவதில்லையே. இன்னும் சில ஆண்டுகளில் வரப் போகும் நிலைமை மாற்றங்களை எண்ணி நம்மைப் போன்றோர் மாற்று அரசியலுக்குக் குரல் எழுப்பி வலிமை சேர்க்க வேண்டாவா?

நாம் சொல்கின்ற ஒற்றுமை தீவிரக் கோடிகளில் இருப்போரிடம் எதிர்பார்க்கவில்லை. எடுத்துக்காட்டாக‌, இந்தியா இந்து நாடாக இருக்க வேண்டும் என்போருக்கும் தமிழ்நாடு தனிநாடாக இருக்க வேண்டும் என்போருக்கும் இடையில் நாம் ஒற்றுமையை, ஒத்துப் போவதை எதிர்பார்க்கவில்லை.

அதே போல் அவரவர் தங்கள் தங்கள் பற்றுகளை விடவோ, தளர்த்தவோ செய்யாமல் எப்படி ஒற்றுமை வரும்? ஒற்றுமை இலவயமாக வராது. ஒற்றுமை என்பது பெயர்ச் சொல் அன்று. அது ஒரு வினைச் சொல். ஒற்றுமையாக இருக்கத் தொடர்ந்து உழைக்காமல் ஒற்றுமை வராது; நிலைக்காது.

என்னுடைய தலைவர் இவர் தான். என்னுடைய கொள்கை, வழி இது தான் என்று ஒவ்வொருவரும் பிடித்துக் கொண்டு ஆனால் ஒவ்வொருவரின் நோக்கமும் இந்திய நாட்டிற்குள் தமிழ் மொழி, தமிழ் இன, நாட்டு முன்னேற்றம், உரிமை பெறுவது என்று சொல்வதில் என்ன பொருள்?

மக்கள் நலன் தான் முதல். அதற்காகவே கொள்கை. கொள்கைக்காகவே இயக்கம். இந்த வரிசையில் பற்றைப் பற்றவும் துறக்கவும் வேண்டும்.

பற்ற:        மக்கள் நலன்-->கொள்கை-->இயக்கம்.
துறக்க‌:    மக்கள் நலன்<--கொள்கை<--இயக்கம்.

இன்றைய நிலையில் தலைவர்கள் இதைச் செய்ய முன்வர மாட்டார்கள். அதற்குப் பல காரணங்கள் (நேர்மையின்மை, அவர்களுக்கு நிதி உதவி செய்வோருக்குப் பொம்மையாக இருத்தல்...) இருக்கலாம். எனவே ஒவ்வொரு இயக்கத்திலும் உள்ளோர் இவ்விதம் கேள்வி கேட்பதன் மூலம் தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். நம்மைப் போன்று இயக்கத்தை நம் வாழ்வுக்குச் சார்ந்து இல்லாதவர்கள் இப்படியான சிந்தனைகளைப் பரப்ப வேண்டும்.அதற்குப் பதிலாகப் புகழ்ந்து, இகழ்ந்து முன்பு செய்த தவறையே செய்யலாமா? அது சரியான வழிகாட்டுதலா?

இன்று ஒவ்வொரு கட்சியின் முன்னணி செல்வாக்குடையோர், நம்மைப் போன்றோர் (professionals) எங்கு அதிக சம்பளம், பதவி உயர்வு கிடைக்கிறதோ அங்கு தாவுவதைப் போன்று 'கட்சியைப்' பணம், பதவி கறக்கும் எந்திரமாக்கிவிட்டனர். அதற்கு கொள்கை என்பதும் நோக்கம் என்பதும் விளம்பர உத்திகளாகி விட்டன. அதனால் அத்தகைய கட்சியால் பலன் பெறுவோர் (சிலர் தவிர) என்றும் இன்றைய நிலைமை மாற (பேசுவதைத் தவிர) உதவமாட்டார்கள். 

சில தீயணைக்கும் வேலைகளின் தீவிரம், அவசரம் கருதி நாம் இவர்கள் பின்னால் நின்றால் நாம் பெரிய தவறு செய்கிறோம். இவர்கள் ஒரு தீயை அணைத்த பின் அடுத்த தீ வரும் படி வேலை செய்து கொண்டு இருப்பார்கள். தீ பிடிக்காத பொருள்களைக் கொண்டு வீடு கட்டுவதிலும் அதற்கான ஒழுங்கு முறை, கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதிலும் ஆர்வம் உள்ளவர்களாகக் காட்டிக் கொள்வார்களே தவிர அதில் தீவிரமாக இறங்க மாட்டார்கள்.

மக்கள், 'இந்தத் தீயணைக்கும் அரசியல் வேண்டாம்' என்று நிராகரிக்க நாம் உழைக்க வேண்டும். அது தான் நம்மைப் போன்றோர் இளைஞர்களுக்குக் காட்ட வேண்டிய வழி. அப்படி உழைத்திருந்தால் 'ஜெயலலிதா' இப்படிப் பெரும்பான்மை பெற்றிருக்க வாய்ப்பில்லை. நாம் உடனே கூட்டணி அரசால் ஏற்படக் கூடிய குழப்பம், பின்னேற்றம் இவற்றைக் கண்டு தயங்குகிறோம். போரில் உயிரை விட அல்லது விடுவதைப் போற்றுகிறோம். ஆனால் போர் அல்லாத சிவில் வாழ்க்கையில் முள்பாதையில் மலையேறுவதைத் தவிர்க்க நினைக்கிறோம்.

'கேளுங்கள் கொடுக்கப்படும்' என்றார் ஏசப்பா. எதைக் கேட்ட (demand) வேண்டும் என்ற சிந்தனையை, தெளிவை உருவாக்க வேண்டும்.

இன்றுள்ள 'ஒற்றுமையின்மை' என்ற நிலையிலிருந்து 'ஆரோக்கியமான ஒற்றுமை' என்ற நிலையை அடையப் பலவிதமான சிக்கலான கடினமான துயரமான இடைநிலைகளின் (கூட்டணி அரசு, குழப்பம், மக்கள் நிராகரிப்பு, சில முறை ஆட்சிக் கவிழ்ப்பு....) வழி நடந்தே ஆக வேண்டும். அப்படி அல்லாது எதிர்பார்ப்பது உழைக்காமல் விளையும் அற்புதத்திற்குக் காத்திருப்பதாகவே ஆகும். ஒற்றுமையாக இருப்பது என்பது ஒரு தனித்துவமான திறன் (skill). அது பயிற்சி இல்லாது நமக்கு வந்து விடாது.

பெரியார் தன்னுடைய பணியைக் குறித்து, "இதைச் செய்ய எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ ஆனால் இதைச் செய்தாக வேண்டும், இதைச் செய்ய யாரும் முன்வரவில்லை; எனவே நான் என் மேற்போட்டுக் கொண்டு செய்கிறேன்" என்றார்.

ஆனால் நாம் மாற்று அரசியலுக்குக் குரல் எழுப்பி வலிமை சேர்க்கும் பணியைச் செய்யத் தேவையான வாய்ப்பு, தகுதியுடன் (அரசியலால் வாழ்வு, இலாபம் இன்மை, இவற்றைப் பரப்ப‌ சுதந்திரம்) உள்ளோம். நம்மால் (நம்மைப் போன்றவர்களால்) மட்டுமே செய்யக் கூடிய பணியை அறிந்து (அடையாளம் கண்டு) அதைச் செய்வதுதான் சரியானதாகவும் (right) திறன்மிக்கதாகவும் (effective and productive) இருக்கும். அதற்குத் தேவையான திறன்களை (skills) வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். நம்முடைய ஆற்றலைப் பிறர் செய்யக் கூடிய தீயணைக்கும் வேலைகளில் ஓரளவுக்கு மேல் ஈடுபட்டு விரயமாக்கி விடக் கூடாது.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க‌
செய்யாமை யானும் கெடும் (திருக்குறள்: 466)

Monday 29 August 2011

புதிய ஆரோக்கியமான அரசியல் --> புதிய பெயர்

2011-08-29


வைகோ தேர்தல் சீட்டுகளுக்காக வேடம் தரிக்காமல் தனி நபர் தாக்குதலை மையப்படுத்தாமல் தான் கடந்த காலத்தில் செய்த தவறுகளையும், தவறான செயல் திட்டங்களையும் பொது மன்றத்தில் ஒப்புக் கொண்டு ஒரு தீர்க்கமான நடைமுறைச் சாத்தியமான மாற்று அரசியல் அணியை, அரசியல் பண்பாட்டை வளர்த்தெடுக்க நாம் ஆதரவு அளிப்போம்; துணை நிற்போம்.

முதலில் வைகோ, மதிமுக என்ற பெயரை மாற்றிக் கொள்ளலாம். 'தமிழ்நாட்டு வளம்' / 'தமிழ்நாட்டோர் அணி' / ''தரமிக்கத் தமிழ்நாடு'' / 'தன்னிகர் தமிழ்நாடு' / 'மறுமலர்ச்சித் தமிழ்நாடு' போன்ற பெயரை வைத்துக் கொள்ளலாம். அதில் தமிழ் மொழி, தமிழர் (தமிழ் நாட்டில் வாழ்வோர் அனைவரும்), தமிழ் நாடு மூன்றும் அடங்கும்.

பெரிய வணிக நிறுவனங்களும் பன்னாட்டுக் குழுமங்களும் தங்கள் அடையாளப் பெயரை மாற்றுவதற்கு முக்கியத்துவம் தருவதையும் செலவழிக்கும் தொகையையும் கருத்தில் கொண்டால் வைகோ பழைய பாழாய்ப் போன அரசியலிருந்து வேறுபடுத்திக் காட்ட, செயல்பட‌ (உண்மையிலேயே விரும்பினால்) பெயர் மாற்றம் முக்கியமாகும். இது 'திராவிட' அடையாளத்தை நீக்க விரும்புவோருக்கும் உகந்ததாக இருக்கும்.  இதையும் அவரின் முடிவாகச் செய்யாமல் கட்சியில் கலந்து, விவாதித்து அதே சமயம் இவர் அதை வலியுறுத்திப் பேசி, மக்களாட்சி முறையில் முடிவு செய்யலாம்.

அரசியல் அணியும் சமுதாய சீர்திருத்த அணியும் இந்த புதிய அமைப்பின் இரண்டு சம அளவிலான முக்கியப் பிரிவுகளாக இருக்க வேண்டும். யாரும் அரசியல் அணியில் நேரடியாக நுழைய இடம் (விதி முறை) இருக்கக் கூடாது. சமுதாய சீர்திருத்த அணியில் வேலை செய்து பக்குவப்பட்ட பிறகே ஒருவர் அரசியல் அணிக்கு (விரும்பினால்) தேர்தெடுக்கப் பட வேண்டும்.

இத்தகைய அமைப்பைக் கட்டி எழுப்பப் பத்தாண்டுகள், அதற்கு மேலும் கூட ஆகலாம். ஆனால் வைகோ போடும் பாதையில் மற்ற கட்சியினரும் வர வேண்டிய கட்டாயத்திற்குள்ளாவார்கள். அது தான் நம் நோக்கமும் கூட. மக்களும் இயக்கங்களும் ஒன்றோடு ஒன்று உறவாடித் துணை புரிந்து மாறி வளர வேண்டும். இன்றுள்ள தகவல் தொழில் நுட்ப வசதிகளைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் இதை விரைவு படுத்தவும் இயலும்.

பெயர் மாற்றம் பெருமளவு இளைஞர்களைப் பங்கு கொள்ள வைக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம். ஆனால் அது அவர்களுக்கு எப்படிப் பங்களிக்கவும் பொறுப்பேற்கவும் வாய்ப்பு தரப்படும் என்பதைப் பொறுத்து உள்ளது.

காலாவதி ஆகி விட்ட, கறை படிந்து விட்ட‌ 'திராவிடம்', 'முன்னேற்றம்', 'கழகம்' போன்ற அடையாளங்கள் இன்றைய சூழ்நிலையில் (வெறுக்காமல்) புறக்கணிக்கப்பட வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.

தமிழ் மொழி, தமிழ் நாட்டில் வாழ்வோர், தமிழ் நாடு (பூகோள எல்லைகள், வளங்கள்...) என்ற ஒருங்கிணைக்கும் அடிப்படையிலான அரசியல் அடையாளம் எடுத்துக் கொள்ளப்படக் காத்திருக்கின்றது.

'பெயரில் என்ன இருக்கிறது' என்பதும் தவறு. 'பெயரில் எல்லாம் இருக்கிறது' என்பதும் தவறு. பெயரைச் சரியாகப் பயன்படுத்தினால் பெரிய சாதனைகளைச் செய்ய, பெரிய திருப்பங்களைக் கொண்டு வர‌ப் பெரிய‌ உதவியாகும்.

இது இன்றைய நிலையில் எல்லாக் கட்சி, தலைவர்களையும் இணைத்து நடைபெற வாய்ப்பில்லை. வைகோ தன்னளவில் தன் கட்சி அளவில் நடைமுறைப் படுத்த முயன்றாலே அதில் சிறு வெற்றி பெற்றாலே பெரிய சாதனை, நல்ல தொடக்கம்.

வைகோ, மதிமுக (எடுத்துக் காட்டுகளே) என்பதற்குப் பதிலாக வேறு பெயர்களைப் போட்டுக் கொள்ளலாம்.

சனாதனக் குரங்குகளும் சமத்துவக் குரங்குகளும்

2011-07-16

திண்டாடும் குரங்குகள் - சனாதனக் குரங்குகளும் சமத்துவக் குரங்குகளும் - குத்தர் சொன்ன கதை

அன்றொரு நாள் சரியார் மனிதர்களின் அவலமான அற்புத நிலையைப் பற்றி ஆழ்ந்து யோசித்துக் கொண்டு இருந்த போது ஒரு குத்தர் (குரங்குச் சித்தர்) தன் அருகில் வந்து அமர்ந்து அதே போல் யோசித்துக் கொண்டு இருந்ததைக் கவனிக்கவில்லை.

குத்தர் விட்ட பெருமூச்சால் யோசனை கலைந்து திரும்பிப் பார்த்தார் சரியார்.

"ஆனந்தமாக மரத்தின் கிளைகளில் தாவிக் கொண்டு இராமல் இங்கு என்ன குந்திக் கொண்டு..." கேட்டார் சரியார்.

"எங்கள் குரங்கு உலகத்தின் அற்புதமான அவல நிலையைத் தான் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன்" என்றார் குத்தர்.

"அப்படியா, அந்தக் கதையைக் கொஞ்சம் சொல்லுங்களேன்" தன் கவலையை மறக்கக் கதை கேட்கும் ஆர்வமுடன் சரியார்.

"கேளுங்கள், உங்களுக்கு நல்ல தீர்வு தோன்றினால் சொல்லி உதவுங்கள்" என்ற வேண்டுகோளுடன் குத்தர் சொன்ன கதை:

"எங்கள் குரங்கு உலகத்தை என்னவென்று சொல்வது? சொல்லிப் பெருமைப் படச் சில‌ ஆயிரம் சாதனைகள் உண்டென்றால் சொல்லாமல் மறைக்கப் பல ஆயிரம் வேதனைகளும் உள்ளன. சூரிய குடும்பத்தைப் பாருங்கள். அந்தந்தக் கிரகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காவிட்டால் நம் பூமி இப்படி இருக்க முடியுமா, சூரியக் குடும்பம் தான் உருப்படுமா? எல்லாக் கிரகங்களும் பூமி போல் ஆக முடியுமா, சூரியனாக ஆசைப் பட்டால் நடக்குமா? நாங்களும் அப்படித்தான் அவரவர் வேலை, இடத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தோம். ஆண் குரங்கும் பெண் குரங்கும் அரசக் குரங்கும் அமைச்சர் குரங்கும் வேலைக்காரக் குரங்கும் வேட்டையாடும் குரங்கும் சண்டை போடும் குரங்கும் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பெரியவர், சிறுவர் குரங்குகளும் அவரவர் வேறுபாடான இடம், நிலை, தகுதி, வெகுமதி, பொறுப்புகளை ஒத்துக் கொண்டு போனதால் எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டு இருந்தன. ஒழுங்கு என்றால் எல்லாம் சனாதனமாக‌ அதனதன் இடத்தில் இருப்பது தானே?



ஆனால்,  விதி யாரை விட்டது" என்று குத்தர் சொன்னதைக் கேட்ட சரியார் புருவத்தை உயர்த்த, "சரி, ஆசை யாரை விட்டது" என்று குத்தர் தொடர்ந்தார்.

"நாங்கள் குரங்குகள் குசியா, குஸ்திரேலியா, குரோப்பா, குமெரிக்கா எனப் பல கண்டங்களிலும் இவ்வாறு தான் சனாதனமாக‌ வாழ்ந்து வந்தோம். எங்களில் சிலர் புது உலகம் காணப் புறப்பட்டுக் கண்ட வட குமெரிக்கா நாட்டில் இருந்து தான் இந்த சமத்துவ நோய் பரவியது என்று சொல்கிறார்கள்.

ஒரு சிலர் அது சோசலிச நோயின் உடன்பிறப்பு என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ எங்களை இப்போது சமத்துவ நோய் பிடித்துக் கொண்டது. யார் வேண்டுமென்றாலும் முயற்சி செய்தால் எதுவாகவும் ஆகலாமாம். அது அவர்கள் பிறப்பு உரிமையாம். ஒருவர் பிறப்பதே அவர் உரிமையாக இல்லாத போது, 'பிறப்பு உரிமை' எங்கிருந்து வரும்?

ஆக, உழைப்புப் பிரிவையும் அதனால் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வையும் கடவுள், மதத்தின் பெயரால் சனாதனம் என்ற முன்வாசல் பொய்யைச் சொல்லி வந்தது போய் இப்போது அவற்றை, 'எல்லோரும் சமத்துவம்' என்ற பின்வாசல் பொய்யால் நியாயப்படுத்தி வருகிறோம்.

தேனீக்கள், எறும்புகள் போன்ற சமூக உயிரினங்களிடையே உள்ள உழைப்புப் பிரிவுகளுக்கும் எங்கள் சமுதாயத்தில் உள்ள உழைப்புப் பிரிவுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. அவை நடைமுறைப் படுத்தப் படும் விதத்தில் தான் வேறுபாடு. தேனீக்கள், எறும்புகள் வேதியியல் சமிக்கைகள் அடிப்படையில் இயங்கினால் குரங்குகளாகிய நாங்கள் சனாதனம், சமத்துவம் போன்ற பொய்களின் அடிப்படையில் இயங்குகிறோம்.

இப்படியான எங்கள் குரங்குச் சமுதாயம் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே உழன்று வரும் அற்புதமான அவல நிலையை ஆழ்ந்து யோசித்துக் கொண்டு இருப்பது மரத்தில் தாவித் திரிவதை விட ஆனந்தமாக இருக்கிறது" என்று முடித்தார் குத்தர்.

அதைக் கேட்ட சரியாருக்குத் தன் கவலை புரிந்து கரைந்து விட்டது. எழுதியவருக்கும் படித்தவருக்கும் புரிந்ததா? கரைந்ததா?

மரண தண்டனை

2011-08-24
ஒரு புறம் மனிதரை மனிதர் போர் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கில் கொலை செய்து கொண்டு, மறு புறம் கொடிய குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பது பற்றித் தேவையா, மனிதாபிமானமா, நாகரிகமா என்றெல்லாம் விவாதிக்கிறோம்.

பல ஆயிரம் அடி உயரத்திலிருந்து குண்டுகளைப் பொழிந்து மக்களைக் கொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் ஒரு தற்கொலைக் குண்டுதாரி சில பேர்களைத் தன்னையும் அழித்துக் கொண்டு கொல்வது தீவிரவாதம் என்று வெறுக்கக் கூடியதாகவும் உள்ளது.

ஒரு புறம் தினமும் மில்லியன் கணக்கான விலங்குகளைக் கொன்று புசித்துக் கொண்டு மறு புறம் விலங்குகள் வதை தடுப்பு பற்றி சட்டம் செய்கிறோம்.

மனித குல வரலாற்றில் எது அனுமதிக்கக் கூடிய வன்முறை என்பதும் எது நியாயம் நீதி என்பதும் மாறிக் கொண்டே வந்துள்ளன. இனியும் மாறிக் கொண்டே இருக்கும்.

அதனால் மரண தண்டனை சரியா தவறா என்பதை விட மரண தண்டனை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தேவையா என்பதே சரியான கேள்வி, அணுகுமுறை. ஏனெனில் மரண தண்டனை இனி கிடையவே கிடையாது என்றால் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வோர் அதிகரித்து சமுதாயத்திற்குச் சுமையாக (ஆயுள் தண்டனைக் கைதிகளாக, மீண்டும் அதே போல் குற்றம் செய்வோர்களாக‌) மாறக் கூடும். அதனால் தான் மரண தண்டனை எல்லா நாடுகளிலும் சமுதாயத்திலும் ஒரே மாதிரியாகப் பார்க்கப் படவில்லை; நடைமுறைப் படுத்தப் படவும் இல்லை; ஒழிக்கப் படவும் இல்லை.

அதனால் மரண தண்டனை ஒரு சமுதாயத்தில் (தற்காலிகமாக) ஒழிக்கப் படச் அச்சமுதாயம் அதற்குத் தகுதியாக வேண்டும்.

அப்படித் தகுதி ஆகுமுன் அதை வலியுறுத்துவது சரியாகாது.

பிரிட்டனில் வாழ்வுக் காப்புரிமையில் (Life Insurance) தற்கொலை செய்து கொண்டாலும் காப்பீட்டுத் தொகை தருவார்கள். ஆனால் இந்தியாவில் தர மாட்டார்கள். ஏன்?

வாழ்வும் (பிறப்பும்) இறப்பும் பிரிக்க முடியாதவை. யார் எப்போது பிள்ளை பெறலாம் என்று சட்டம் போட்டுக் கட்டுப்படுத்த நினைக்காத நாம் ஒருவரின் தீவிர திட்டமிட்ட‌க் குற்றத்திற்காக மரண தண்டனை கொடுப்பதை ஏன் வேறுபாடாகப் பார்க்க வேண்டும்? இறப்பை ஒருவருக்கு வழங்குவதைத் தவிர்க்க வேண்டுமென்றால் பிறப்பையும் அவ்வாறே கட்டுப்படுத்த வேண்டாவா?

எல்லாப் பார்வைகளும் சார்பானவையே. அதை விடுத்துச் சார்பற்ற முறையில் (absolute sense) இவை போன்ற அறத் தடுமாற்றங்களை (moral dilemma) அணுகினால் சிந்தனைக் குழப்பமே விளையும் அல்லது நடைமுறைச் சாத்தியமற்ற கனவாகவே முடியும்.

மரண தண்டனை பற்றி மனிதாபிமானமா என்று பேசி, முழக்கிப் பரப்புரை செய்து மக்களை உணர்வெழுச்சிக்குள்ளாக்கலாம். ஆனால் அவர்களைச் சிந்திக்க வைப்பது தான் முக்கியம்; கடினமானதும் கூட.

"பலர் சிந்திப்பதை விடச் சீக்கிரம் செத்துப் போக‌த் தயாராக உள்ளார்கள்; உண்மையில் அப்படிச் செத்துப் போகவும் செய்கிறார்கள்"
    - பெட்ராண்ட் ரஸ்ஸல்
"Many people would sooner die than think. In fact they do"
    - Bertrand Russell

பகைவனும் பகைமையும்

2011-08-29

ஒரு சட்டம் தவறாக இருந்தால் அதைச் சரி செய்வது தவறில்லை. ஆனால் அதற்கான மக்களாட்சி முறை பின்பற்றப் பட வேண்டும்.

கருணாநிதி, ஜெயலலிதா என்ற நபர்களை விட நாம் மக்களாட்சி முறைக்கும் அதன் நடைமுறைப் படுத்துவதில் உள்ள பொறுப்புணர்ச்சிக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனிநபர்கள் வந்து போவார்கள். ஆனால் நாட்டின் சட்டம் ஒழுங்கு முறைகள் காப்பாற்றப் படவும் செம்மைப் படுத்தப் படவும் வேண்டும். ஆனால் நம் நாட்டில் 'தை' விரும்பிகள் எப்படியாவது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டமாக்கி விட வேண்டும் என்றும் அதை எதிர்ப்பவர்கள் எப்படியாவது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை நீக்கி விட வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்; அப்படி நடப்பதை ஆதரிக்கிறார்கள். அதனால் மக்களாட்சி முறை கொல்லப்படுவதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. நாம் குழு ஆட்சி மனப்பான்மையில் (எங்கள் ஆட்சி, உங்கள் ஆட்சி...) தான் இன்னும் இருக்கிறோம். மக்களாட்சி மனப்பான்மைக்கு நாம் இன்னும் வரவே இல்லை.

எடுத்துக்காட்டாகத் 'தை'த் திங்கள் ஆண்டுத் தொடக்கம் பற்றி சார்பற்ற முறையில் ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்து அதன் முடிவின் அடிப்படையில் செயல்பட்டால் அது மக்களாட்சி முறை. அதையும் பொறுப்புணர்ச்சியுடன் செய்யாமல் ஒரு சார்பானவர்களைக் குழுவில் போட்டுத் தன் விருப்பத்திற்கேற்ப முடிவைப் பெற்றுக் கொள்ளும் போது மக்களாட்சி முறை தந்திரமாகக் கொல்லப் படுகிறது. Democracy is not perfect but it is the best we have.

சமச்சீர் கல்வி முறை என்பது கருணாநிதியின் கண்டு பிடிப்பு அன்று. அது கல்வியாளர்களின் முடிவு. அதை நீக்க மீண்டும் அதே கல்வியாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இப்படி அந்தந்தத் துறை நிபுணர்களிடம் பொறுப்பை விட்டு அவர்கள் பரந்த சமுதாய நலனுக்காக முடிவு எடுக்கிறார்களா என்று பொதுமக்கள் பிரதிநிதியாக இருந்து மேற்பார்வை செய்வது, வழி நடத்துவது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசின் (அரசியல் வாதிகளின்) கடமை ஆகும். இது 100 விழுக்காடு சரியாக இயங்கும் மக்களாட்சி உலகில் எங்கும் இல்லை என்றாலும் இது தான் நோக்கம், இலக்கு. இதை நோக்கி மக்களாட்சி முறையைத் தொடர்ந்து செம்மைப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும்.

மேல்சாதியினரும் ஆதிக்கக் குழுவினரும் இது போல் ஒரு சார்பான நிபுணர்களாக இருந்து பெரும்பாலோர் நன்மையைப் புறக்கணித்ததாலேயே திராவிட ஆரிய, வர்க்கப் பிரிவினைகளும் இயக்கங்களும் எழுந்தன என்பதை மறந்து விட வேண்டாம். ஆனால் அப்படிப் போராடி ஆட்சிக்கு வந்த பின் அதே தவறைச் செய்ததால் வீழ்ச்சி விளைந்தது.

'பறவைக் காய்ச்சல்' குறித்து எப்படி கருணாநிதியோ ஜெயலலிதாவோ முடிவு எடுக்கும் தகுதியற்றவர்களோ அதே போல் தான் மற்ற பல விஷயங்கள் குறித்தும். அவர்கள் ஏதாவது ஒன்றிரண்டில் நிபுணர்களாக இருந்தாலும் அவற்றில் கூட அவர்கள் பங்கு கொள்ளலாமே தவிர தீர்மானிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஒரே துறையில் பல நிபுணர்களின் கருத்துகள் பலவாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.

கருணாநிதி மக்களாட்சி முறையைப் பின்பற்றவில்லை என்பதற்கு மாற்று ஜெயலலிதா மக்களாட்சி முறையைப் புறக்கணிப்பது ஆகாது. சரியான மாற்று மக்களாட்சி முறையைப் பொறுப்புணர்ச்சியுடன் நேர்மை நியாய உணர்வுடன் நடைமுறைப் படுத்துவதாகும். எடுத்துக்காட்டாக, நம்மைச் 'சூத்திரன்' என்று இழிவுபடுத்திய தன்மைக்கு மாற்று நாம் அத்தன்மையை நோக்கி இழிவாக நடந்து கொள்வதன்று. அத்தன்மை போகும் படி, மறையும் படி நாம் பொதுத் தன்மையுடன் நடந்து கொள்வதே ஆகும்.

"தீயவனை வெறுக்காதே; தீமையை வெறுக்கக் கற்றுக் கொள்" - காந்தி

எனவே பகைவனை வெல்வது (தடுத்து நிறுத்துவது) என்பது உடனடித் தேவையாக இருக்கலாம். ஆனால் அது பகைமையை வெல்வது என்ற பெரிய தொலை நோக்குத் திட்டத்தின் (பண்பின்) ஒரு சிறு கூறாகவே இருக்க வேண்டும்.

Saturday 27 August 2011

கீழிலிருந்து மேல் வரை பிச்சைக்கார மனிதர்கள்

2001-08-27


நான் வாழ்க்கைக்குத் தேவையான பொருளை ஈட்ட என்னை வைத்து (ஊதிய அடிமையாக என் உழைப்பு அல்லது என் தொழில் மூலம்) அடுத்தவன் பொருள் ஈட்ட நான் அனுமதித்தாலே முடியும்.

சமுதாயத்தில் நான் பெறும் உரிமைகளும் இதற்கு விதி விலக்கல்ல. என்னை வைத்து எனக்கு மேலுள்ளவர்கள் படிப் படியாக அதிக உரிமை பெறுவதை நான் அனுமதிக்கும் போதே எனக்கு எலும்புத் துண்டாகச் சில உரிமைகள் கிடைக்கின்றன.

இரண்டிலும் அதைத் தவிர வேறு வழியில்லை. எனவே 'அனுமதி' என்ற சொல் ஒரு தங்கக் கூண்டே.

மேற்கண்ட இரண்டையும் நான் விரும்பவில்லை; இப்படி இருப்பது நியாயம் நீதி அன்று என்று நினைக்கிறேன். ஆனால் உலக‌ நடப்பு இப்படித் தான் உள்ளது என்பதை மறுத்துப் பயனில்லை.

பலர் உயிர் பிழைக்க‌ச் சிலர் செழிக்க‌ வேண்டும். 
For many to just survive, a few have to flourish.
சிலர் செழிக்க‌ப் பலர் உயிர் பிழைக்க‌  வேண்டும். 
For a few to flourish, many have to just survive.

பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து அமெரிக்க விடுதலை, ருசிய, சீனப் புரட்சி, இந்திய விடுதலை என எல்லாத் தீவிர மாற்றங்களும் எல்லோருக்கும் பொதுவான சமமான உரிமைகளையும் கடமைகளையும் கொடுத்து விடவில்லை. இன்று நடக்கும் இனி நடக்கப் போகும் போராட்டங்களும் மாற்றங்களும் அவ்வாறே இருக்கும்; விதிவிலக்காக இருக்கத் தேவையான அகப் புறக் கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

அடுத்தவர் போராடி எனக்கு சம உரிமை கிடைக்காது. ஏன் சரியான உரிமை கூடக் கிடைக்காது. நடுத்தர மக்கள் போராட்டத்தால் ஏழை மக்களுக்குப் பயனில்லாது போகாது. ஆனால் சமமான பயன் கிட்டாது. வரலாற்றைப் பார்த்தால் சமமான உரிமைக்குப் போராட்டம் என்ற போர்வையில் தனக்குக் கீழ்ப் படியில் இருப்பவர்களை ஒப்பீட்டளவில் அதிகம் பலி கொடுத்துத் தன் சமுதாயத் தளத்தில் உள்ளவர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகப் பயன் பெற்றுக் கொள்வதே நடந்து வந்துள்ளது. Beggars cannot be choosers and everybody is a beggar to somebody above!

பிச்சை எடுத்துக் கொண்டு சமத்துவக் கனவில் வாழ்வதே மனிதனின் அற்புதம் / அவலம்!

தமிழ்ப் புத்தாண்டு - தகுதியும் மிகுதியும்

2011-08-27


எனக்குத் தெரிந்த அளவில் தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையை (அறுபது ஆண்டுத் தொடர் பற்சக்கர முறையாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது எந்தப் பல்/ஆண்டு என்ற குழப்பம் வருவதால்) தமிழ் அறிஞர்கள், புலவர்கள் (முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ உள்பட) 1920 களில் கூடித் திருவள்ளுவரின் பிறப்பைக் கொண்டுத் தமிழுக்குத் தொடர் ஆண்டாகத் திருவள்ளுவர் ஆண்டைப் (ஆங்கில் ஆண்டுடன் 31 ஐக் கூட்டி) பின்பற்ற முடிவு செய்த போது 'சித்திரை' ஆண்டுப் பிறப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டச் சில தெளிவற்ற, நிச்சயமற்ற இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் 'தை'த் திங்களைத் திருவள்ளுவர் ஆண்டிற்குத் தொடக்கமாகக் கொண்டார்கள்.

அவர்கள் அறுபது ஆண்டு பற்சக்கர முறையை எதிர்த்தார்களா அல்லது சித்திரைத் தொடக்கத்தை வெறுத்தார்களா என்று உறுதியாகத் தெரியவில்லை; அப்படி இல்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் அனைவரும் பகுத்தறிவாளர்களோ, கடவுள் மறுப்பாளர்களோ இல்லை.

தமிழுக்கு என்ற தொடர் ஆண்டை (திருவள்ளுவர் ஆண்டை) தனித்தமிழ், பிராமண, ஆரிய எதிர்ப்புப் பகுத்தறிவுடன் போட்டுக் குழப்பியதில் என் தந்தையாருக்கும் பங்கு உண்டு என்பதை (ஏனெனில் இந்த அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டைக் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பரப்பி வருபவர்) ஒப்புக் கொண்டாக வேண்டும்.

இதை நான் தொடக்கத்தில் உணராவிட்டாலும் உணர்ந்த உடன் (நாம் பிறந்து வளர்ந்து வந்த சூழலால் வந்தனவற்றிலிருந்து கொள்வன கொள்ளுதல் தள்வன தள்ளுதல்) என் தந்தையாருக்கு எடுத்துச் சொன்னேன். அவர் மறுத்துப் பேசவில்லை. உடனே ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்காததால் ஏமாற்றமும் இல்லை. இதனால் நான் சரி என்றோ என் தந்தையார் தவறு என்றோ அல்லது எதிராகவோ முடிவு செய்ய இயலாது.

தமிழர் என்ற அடிப்படையில் சாதி, மத, கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழர்களுக்கு என்று ஒரு தொடர் ஆண்டைக் கொள்வதன் மூலம் அதற்கு வழி செய்வது என்ற நோக்கில் பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டும், 'தை' முதல் தொடக்கத்தையும் 'இந்து' மத அடிப்படையிலான அறுபது ஆண்டுப் பற்சக்கர முறைக்கும் 'சித்திரை' பிறப்பிற்கும் எதிராகக் காட்டியிருக்கக் கூடாது என்பது என் கருத்து.


இன்று நாம் 'சித்திரை / தை' புத்தாண்டையும் ஆங்கிலப் புத்தாண்டையும் எல்லாத் தமிழர்களும் கொண்டாடுவது போல் இந்துத் தமிழர்கள் சித்திரைப் புத்தாண்டையும் கிறித்துவத் தமிழர்கள் கிறித்துவப் புத்தாண்டையும் முகமதியத் தமிழர்கள் முகமதியப் புத்தாண்டையும் பகுத்தறிவுத் தமிழர்கள் பெரியார் ஆண்டையும்.... கொண்டாடிக் கொண்டே அனைத்துத் தமிழர்களும் சேர்ந்து 'தை' தொடக்கமாகக் கொண்ட திருவள்ளுவர் ஆண்டைத் தமிழ் இன‌ மொழிப் புத்தாண்டாகக் கொண்டாடலாமே?


சமுதாயத்தைக் கறுப்பு/வெள்ளையாகப் பார்க்கும் நோயைப் போக்க இதை ஒரு நல்ல தொடக்கமாகக் கொள்ளலாமே. We have to work with each other, not against each other.

தமிழ்ச் சமுதாயம் இப்படித் தான் இருக்க வேண்டும், இப்படி இருக்கவே கூடாது போன்ற கறுப்பு/வெள்ளைப் பார்வை, பற்றுகளே நம் காலில் நமக்கு நாமே கட்டிக் கொண்டு இருக்கும் பாறாங்கற்கள்; நம்மை நீந்தி மேலே செல்லவிடாமல் இழுத்து அமிழ்த்தி அழுக வைத்துக் கொண்டு இருக்கும் கருத்து (கழுத்து) நுகத்தடிகள்.

மற்றபடி 'சித்திரை' தொடக்கத்திற்கும் 'தை' தொடக்கத்திற்கும் எந்தவிதமான (பழக்கம் என்பதைத் தவிர) கேள்வி, ஐயத்திற்கு இடமில்லாத ஆதாரங்களும் இருப்பதாகத் தெரியவில்லை.

இத்தகைய மாற்றங்கள் எப்போதும் மக்களிடம் கருத்துப் பதிவு செய்து நடைமுறைப்படுத்தப் படவில்லை (உலகில் எந்த நாட்டிலும்) என்பதையும் அரசு, ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்கள் மீது வலிந்து புகுத்தியதே (கிறித்துவ ஆண்டு உள்பட) என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


"உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" (புறநானூறு)

உயர்ந்தோர்கள் (சான்றோர்கள், அறிஞர்கள்) உயர்ந்தோர்களாக இருக்க வேண்டும். அவர்களை மதிக்கும் அவர்கள் சொல்வதை மதிக்கும் பண்பு சமுதாயத்தில் வேண்டும். எல்லாவற்றிலும் எல்லோரும் அறிவுடையவர்களாகவும் உடனடி, தொலை நோக்கில் ஆய்வு செய்து புரிந்து கொள்பவர்களாவும் இருக்க இயலாது.


நம் நாட்டில் மத அடிப்படையில் வேடந் தரித்தவர்கள் சொல்வதை மதிக்கும் பழக்கம் இருக்கும் அளவுக்கு மதச்சார்பற்ற சமுதாயத் தத்துவ அறிஞர்களைப் போற்றும் பண்பு இல்லை. 

எல்லாவற்றையும் நாமே தனி ஆளாக ஆய்வு செய்து, சோதனை செய்து ஏற்றுக் கொள்ள இயலாது. சமுதாய ஒழுங்கிற்கு ஆராயாது ஏற்றுக் கொண்டு இட்ட கட‌மைகளைச் செய்யும் மனப்பான்மையும் (அடிமைத்தனமும்) அவசியமாகும். அப்படி இல்லாமல் மனித சமுதாயமோ தேனீக்களின் கூடோ எறும்புகளின் புற்றோ.... இயங்க இயலாது. குடும்பத்தில் ஒற்றுமை கருதி நமக்குப் பிடிக்காதவற்றைப் பொறுத்து ஏற்றுக் கொண்டு ஒத்து வாழ்வது போல் சமுதாய அளவிலும் செய்ய வேண்டிய தேவையை உணராவிடில் ஒற்றுமை வராது; வாயளவில் தான் இருக்கும்.

வள்ளலாரை வெறும் அற்புதங்கள் செய்த துறவியாகப் பார்த்துப் பயனில்லை. அவரின் சமூகச் சீர்திருத்தப் பணிகளை அறிந்தோர் மிகக் குறைவே. அதே போல் பெரியாரை வெறும் பிராமண எதிர்ப்பாளராகப் பார்ப்பவர்கள் அவரின் பரவலான (அவரின் பெண்ணடிமைத் தன எதிர்ப்பு கருத்துகள் பிராமணப் பெண்களையும் உள்ளடக்கியதே) சிந்தனைத் தாக்கத்தைத் தவற விடுவார்கள்.

அதே போல் திராவிட இயக்கங்களின் இன்றைய சீரழிந்த நிலையை மட்டும் கணக்கில் கொண்டு அது எந்த விதமான மறுமலர்ச்சிக்குத் தொடக்கமாக இருந்தது என்பதைப் புறக்கணித்தால் கணக்கு தப்பாகவே முடியும். அதனால் தான் திராவிட, தமிழ், ஆரிய மயக்கங்கள் எழுகின்றன.

அது போல் வள்ளலார், பெரியார்... என்று தனிமைப் படுத்தி அவர்கள் பிறக்கவில்லை என்றால்...என்று பேசுவது சரியாகாது. அவர்களைப் போல் பலர் அவர்களுக்கு முன்பு இருந்ததன் வெளிப்பாடே அவர்கள். அதனால் அவர்களால் விளைந்த நன்மை, தீமைகளும் அவ்வாறே. அவற்றைத் தனித்துப் பார்த்து புகழ்வதும் இகழ்வதும் செய்யாமல் ஏற்பட்ட நல்ல, தீய விளைவுகளை ஆராய்ந்து செம்மைப்படுத்திக் கொண்டு செல்வதே நல்லது.

பிரித்து அறிவது சேர்த்துப் புரிந்து கொள்வதற்கே. ஆன்மீகத்தில் ஞானம் பெறுவதற்கும் லௌகீகத்தில் ஒத்திசைவு அடைவதற்கும் (ஒற்றுமையாக வாழ்வதற்கும்) வழி ஒன்றே. உள்ளதை உள்ளபடி பிரித்து அறிந்து கொண்டு அதற்குத் தக நடந்து கொண்டு எல்லாவற்றையும் ஒத்து, சேர்த்து இயங்க வைப்பதே ஆகும்.


இதற்கு இரண்டு திருக்குறள்கள் பொருத்தமாக வழி காட்டுகின்றன.

நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றக் கடை (திருக்குறள்: 469)

குடும்பத்தில் சமுதாயத்தில் அவரவரின் தகுதி, திறமை அறிந்து அதற்கேற்ப அவர்களை நடத்திச் செல்ல வேண்டும். எல்லோரையும் வறட்டுத் தனமான சமத்துவப் பார்வையில் நடத்தினால் குடும்பமும் உருப்படாது; குமுகாயமும் உருப்படாது.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல் (திருக்குறள்: 158)

குடும்பத்திலும் குமுகாயத்திலும் தகுதியவற்றவர் தீமை, இடைஞ்சல் செய்யும் வாய்ப்பைக் கட்டுப் படுத்தி அதே சமயம் அவர்களை நாம் பெருந்தன்மையாக நடத்தி வென்று ஒன்றிணைக்க வேண்டும்.

சாதி, மத, வர்க்க... அடிப்படையிலான தீய கூறுகளைக் கட்டுப் படுத்த அவரவரின் பண்பறிந்து அதற்குத் தக அவர்களை நடத்த வேண்டும் என்பது வெறுப்பின் அடிப்படையில் இல்லாமல் அவர்களை விடப் பரந்த, பெருந்தன்மையான மனப்பான்மையால் அவர்களைப் பண்பால் வென்று ஒன்றிணைக்கும் தகுதியால் இயங்க வேண்டும்.

வகுப்பு வாதத்தை (சாதி ஏற்றத் தாழ்வுகள்) நீக்க உழைத்த பெரியார் தன்னை ஒரு வகுப்புவாதி என்று ஒப்புக் கொண்டார். வகுப்புவாதம் இருக்கும் வரை தான் ஒரு வகுப்புவாதியாகவே செயல்பட முடியும் என்று புரிந்து வைத்திருந்தார். ஆனால் அது பிரித்தறியும் (பண்பறிந்து) ஆய்வாக, நடைமுறைத் தேவையாகவே இருந்திருக்க வேண்டும். அவரும் அவருக்குப் பின்பு அது வளர்ந்திருக்க வேண்டிய வழி, பண்பு, அணுகுமுறை சரியாக இல்லை. வெறுப்பை வெல்ல வெறுப்பு உதவாது. வெறுப்பை அடையாளம் கண்டு கொண்டு அதற்கு மருந்து, சிகிச்சை (அறுவை உள்பட) செய்வது வேறு. ஆனால் நாம் அந்த வெறுப்பாக மாறி விடக் கூடாது.

சாதியின் படிக்கட்டுப் பிரிவினை முறையைச் சரியாகப் புரிந்து வைத்திருந்தால் பிராமணர்களை மட்டும் எதிர்ப்பதோ பழி சொல்வதோ கண்டிப்பதோ எப்படி முடியும்? அதற்காகப் பிராமணர்களைப் பொறுப்பிலிருந்து 'விடுவித்து' விட முடியாது. சமுதாயத்தின் மேல் தட்டில் இருப்பவர்கள் என்பதால் அவர்களுக்குப் பொறுப்பும் அதிகம். இந்தியாவின் இன்றைய சீரழிவில் அவர்களுக்கும் (மத்திய அரசு அதிகாரத்துறைகளில் நீதித் துறைகளில் ஊடகங்களில் அவர்களே நிறைந்துள்ளபோது) கணிசமான பங்கு உண்டு. அதனால் அவர்களையும் இணைத்து தான் நாம் தீர்வு கண்டாக வேண்டும்.

அவர்களும் இம்மண்ணின் மைந்தர்களே. அதே போல் தான் எல்லாச் சாதியினரையும் துறையினரையும் தொழில் செய்வோரையும் (அரசியல் வாதிகள் உள்பட) நாம் பார்த்தாக வேண்டும். அவர்கள் பண்பை அறிந்து நடக்க வேண்டும். ஆனால் அவர்களைத் தகுதியால் (நாம் உயர்வு-தாழ்வு மனப்பான்மைச் சிக்கலுக்குள்ளாது - superiority-inferiority complex) வெல்ல வேண்டும்.


இந்த அணுகுமுறையைப் பிராமணர்கள், பிரித்தானியர்கள்... போன்ற சமூகத்தின் மேல் தட்டில் உள்ள குழுவினர் பின்பற்றி வருவதாலேயே அவர்கள் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. அவர்கள் இந்த அணுகுமுறையை தங்கள் குழு நல நோக்கில் மட்டும் பயன்படுத்துவதை நாம் பரந்த சமுதாய அளவில் பயன்படுத்த வேண்டும். அதில் அவர்களையும் நாம் அப்படி ஈடுபடுத்தி இணைக்க வேண்டும்.

இதையே பெரியார் பிராமணரல்லாதரைப் பார்த்து, 'உங்களுக்குத் தெரியவில்லை என்றால் பிராமணர்களைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறினார்.

முவ இதனையே சுருக்கமாக வேறு வடிவில் 'தமிழர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்' என்று சொன்னார்.

வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது.
நல்ல தன்மை இல்லாத வல்லமை நிலைக்காது.
Right without might will not live. 
Might without right will not last.