Thursday 21 April 2011

இறைவன் அருள் - இயற்கை விளைவு

2011-04-21

இறைவன் அருள் - இயற்கை விளைவு

எல்லாம் இறைவன் செயல் (அருளால் நடக்கிறது) என்போரும் எல்லாம் இயற்கையின் விளைவு (விருப்பு வெறுப்பில்லாத கண்மூடித்தனமான தொலை நோக்கற்ற வினைகளால் விளைந்தவை) என்போரும் ஒரே உண்மையை இரு விதமாகப் பார்த்துக் கொண்டு அது மட்டுமே சரி என்று சாதிக்கிறார்கள்.

அவர்கள் ஏன் அடுத்த குழுவினரின பார்வைக்கும் தங்கள் பார்வைக்கும் உள்ள ஒற்றுமையைக் காண முடிவதில்லை?

ஏனெனில் அவர்கள் தம் தம் பார்வையில் முழுமையாகக் கடைசி வரை (அல்லது அடி வரை) சென்று ஆய்வு செய்வதில்லை என்று சொல்லலாம். அல்லது அவர்கள் தம் தம் பார்வையை ஒரே விதமாகச் சீராக‌ (consistent uniform application) எல்லாவற்றின் மீதும் செலுத்துவதில்லை என்றும் சொல்லலாம்.

ஆத்திகத்தை ஆராய்ச்சி செய்து கொண்டே போனால் நாத்திகம் வந்து விடும் என்றும் நாத்திகத்தை ஆராய்ச்சி செய்து கொண்டே போனால் ஆத்திகம் வந்து விடும் என்றும் சொல்வர்.

எப்படி என்று பார்ப்போம். இறைவன் அருளால் எல்லாம் நடக்கிறது என்றால் 'இறை மறுப்பும்' இறைவன் அருளால் தான் நடக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக 'இறை மறுப்பை' வெறுத்தால் எதிர்த்தால் அது இறைவனுக்கு மீறி மனிதன் செயல் பட முடியும் என்றும் இறைவனுக்கு உண்மையில் 'எல்லா வல்லமை' இல்லை என்றும் ஆகிறது. 'இறை மறுப்பு' இறைவனை மீறிய செயல் என்று சொன்னால் (அல்லது அப்படி பொருள் தரும்படி நடந்து கொண்டால்) அப்படிச் சொல்லும் ஆத்திகர்கள் தான் (இறைவனின் எல்லா வல்லமையை நம்பாத) 'நாத்திகர்கள்' ஆகிறார்கள்.

(அப்படி 'இறை மறுப்பை' வெறுப்பதும் எதிர்ப்பதும் இறைவன் செயலே என்று புரிந்தவர்கள் மேலே படிக்க வேண்டியதில்லை).

அதே போல் எல்லாம் இயற்கையின் விளைவு (பரிணாம வளர்ச்சி, மரபணு மாற்றம், சூழ்நிலைத் தாக்கம்...) என்று சொன்னால் 'இறை நம்பிக்கை' உண்டானதும் இயற்கையின் விளைவே என்று ஆகும். இல்லை, அது (இறை நம்பிககை) தனியாக வந்தது என்றால் (அல்லது தனியாக வந்தது போல் நடந்து கொண்டால்) அவர்கள் தான் 'இயற்கை மீறிய' ஆற்றலில் நம்பிக்கை வைத்துள்ள மூடநம்பிக்கையாளர் ஆகிறார்கள். இயற்கையின் விளைவே எல்லாம் என்று சொல்லும் நாத்திகர்கள் 'இறை நம்பிக்கையை' இயற்கை மீறிய (அப்பாற்பட்ட) செயலாகப் பார்ப்பதன் மூலம் அவர்கள் ஆறு புலன்களுக்குப் புலப்படாத ஓர் ஆற்றலை ('இறைவன்')  நம்பும் 'ஆத்திகர்கள்' ஆகிறார்கள்.

(அப்படி 'இறை நம்பிக்கையை' வெறுப்பதும் எதிர்ப்பதும் இயற்கையின் விளைவே என்று புரிந்தவர்கள் மேலே படிக்க வேண்டியதில்லை).

இறைவனை நம்புகிறவர்கள் பிரபஞ்சத்தின் அனைத்திற்கும் காரணமாக இறைவனைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இறைவன் இருக்க/தோன்ற எந்தக் காரணமும் தேவையில்லை என்று இறைவனை காரணமில்லாக் காரண‌-காரியமாகக் (causeless cause-effect) கொள்கிறார்கள்.

இறைவனை மறுத்து இயற்கையின் விளைவே எல்லாம் என்பவர்கள் பிரபஞ்சம் ஆதி வெடிப்பிலிருந்து (big bang) தோன்றியது என்ற அறிவியல் முடிபை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அறிவியல் ஆதி வெடிப்பைக் காரணமில்லாக் காரண‌-காரியமாகக் (causeless cause-effect) கொள்கிறது.

இரு குழுவினருமே காரணமில்லாக் காரியத்தைத் தொடக்கமாக 'அனுமானித்துக் கொள்ளாமல்' (assumption) தங்கள் தங்கள் பார்வைகளை நியாயப் படுத்த முடிவதில்லை. இந்த அனுமான‌ அடித்தள‌ ஒற்றுமையைப் பார்க்கலாம். அல்லது இறைவன் இயற்கை என்ற மேற்தள‌ வேற்றுமையைப் பார்க்கலாம். அவரவர் விருப்பம்; விருப்பமா?

ஆக, ஆத்திகர்களோ நாத்திகர்களோ தங்கள் தங்கள் ஆய்வை / நம்பிக்கையை ஒரே சீராகச் செலுத்தினால் அடுத்த பக்கத்தைப் பார்ப்பதிலிருந்து, ஒத்துக் கொள்வதிலிருந்து, ஏற்றுக் கொள்வதிலிருந்து தப்ப முடியாது.

இது 'இறை நம்பிக்கை', 'இறை மறுப்பு' இவற்றைப் பொறுப்புணர்ச்சியுடன் (sincere) கொண்டுள்ளவர்களுக்குச் சொல்லும் கருத்தாகும்; அவர்களிடம் தான் பயனளிக்கும். மாறாக இரண்டையும் பொறுப்பற்ற முறையில் கொண்டுள்ளவர்களுக்கும் ஏமாற்றும் தந்திரமாகப் பயன்படுத்துபவர்களுக்கும் சொல்வதில் பயனில்லை. தூங்குபவனைத் தான் தட்டி எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவனைத் தலையில் தண்ணீரைக் கொட்டித் தான் எழுப்ப முடியும்.

எல்லாம் இறைவனின் செயல் என்பதை அறிவால் உணர்ந்து தெளிந்து உறுதியுடன் இருப்பவர்கள் எது நடந்தாலும் கலங்காது தங்கள் வேடத்திற்கேற்ற கடமைகளைப் பொறுப்புடன் ஆற்றொழுக்காகச் செய்து கொண்டிருப்பார்கள்.

எல்லாம் இயற்கையின் விளைவு என்பதை அறிவால் உணர்ந்து தெளிந்து உறுதியுடன் இருப்பவர்கள் மனிதனின் உடல், மனம், செயல், சாதனை, வேதனை எல்லாம் எப்படி இயற்கையால் எழுந்தனவோ அதே போல் மறைந்தாலும் மீண்டும் எழுந்தாலும் எதுவும் பொருட்டில்லை என்ற புரிதலோடு தங்கள் வேடத்திற்கேற்ற கடமைகளைப் பொறுப்புடன் ஆற்றொழுக்காகச் செய்து கொண்டிருப்பார்கள்.

இருவரும், மிகப் பெரும் ஏற்பாட்டில் எதுவும் பொருட்டனறு அல்லது மிகப் பெரும் ஏற்பாட்டில் அப்படியான ஏற்பாடு எதுவும் கிடையாது என்று உறுதியாக அறிவார்கள். Both know firmly that in the grand scheme of things nothing matters or in the grand scheme of things there is no such grand scheme!

இந்த 'இறை நம்பிக்கை' 'இயற்கை விளைவு' என்ற மரத்தின் பல கிளைகளாக பல் வேறு திரிபுகள் (twists) இருக்கின்றன.

இறைவன் மனிதனைச் சுதந்திர சிந்தனை உள்ளவனாகப் படைத்து விட்டான். அவனுடைய ஒவ்வொரு செயலையும் இறைவன் கட்டுப் படுத்துவதில்லை. மனிதன் ஒழுங்காக‌ நடந்து கொள்கிறானா என்பது தான் அவனுக்கு வைக்கப்படும் உலகப் பிறப்புத் தேர்வு. அதனால் மனிதன் பொறுப்புள்ளவனாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன் ஒரு செயலே நாத்திகத்தை எதிர்ப்பது என்று 'இறை நம்பிக்கைக்' குழுவினர் சொல்லலாம்.

இதே போல் இயற்கை விளைவால் மனிதனுக்கு இச்சா சுதந்திரம் (free will) அமைந்து விட்டது. இனி அவனே அவன் செயலைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும். அவன் நன்மை, தீமைகளை எண்ணிப் பார்த்து செயல் படும் சுதந்திரம் உள்ளவன். அதனால் மனிதன் பொறுப்புள்ளவனாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன் ஒரு செயலே ஆத்திகத்தை எதிர்ப்பது என்று 'இயற்கை விளைவுக்' குழுவினர் சொல்லலாம்.

இப்படிச் சொல்வதன் மூலம் இரு குழுவினரும் (அதாவது ஆய்வைப் பாதியில் நிறுத்தி விட்டவர்கள், அல்லது சீராக அவர்கள் பார்வையைச் செலுத்தத் தவறியவர்கள்) மனிதனுக்கு இல்லாத ஒன்றை (இச்சா சுதந்திரம்) இருப்பதான மாயையை உருவாக்குகிறார்கள். மாயை என்று சொல்வதால் அது முட்டாள் தனமானது என்றோ தேவை அற்றது என்றோ பொருள் அன்று. அத்தகைய எடை மதிப்புகளைத் (value judgements) தாண்டினால் தான் உள்ளதை உள்ளபடி பார்க்க முடியும்.

இத்தகைய மாயை மனித சமூக இயக்கத்திற்கு அவசியமானதாக இல்லாவிடில் (இறைவனாலோ, இயற்கையாலோ) தோன்றியிருக்காது. அதே சமயம் இந்த மாயையையால் இரு வகை பாதிப்புகளும் உண்டு.

இன்ப துன்பங்களின் மேல் (தன்னுடையவை என்று) பற்று (possessiveness) வருவதால் மனிதனின் முயற்சி அவற்றை அடையவும் விலக்கவும் கூர்மைப் படுகின்றது. 'தான்' என்ற முனைப்பு மனிதனுடைய பிரச்னைகள், துயரஙகள் அனைத்திற்கும் (நிலநடுக்கம், கடல் கோள் போன்ற இயற்கை அழிவுகளைத் தவிர‌) அடிப்படைக் காரணமும் ஆகின்றது.

எது அற்புதமோ (தான் என்ற உணர்வு) அதுவே அவலமும் ஆகின்றது.

இத்தகைய ஆக்கம் / அழிவு, இன்பம் / துன்பம், நன்மை / தீமை, சரி / தவறு, உண்மை / பொய், நீதி / அநீதி, சுதந்திரம் / அடிமைத் தனம்... காட்சியை இறைவனின் திருவிளையாடலாகப் பார்த்தாலும் சரி இயற்கையின் பொருளற்ற ஆடலாக‌ப் பார்த்தாலும் சரி அப்படிப் பார்ப்பதும் இறைவனின் அருளே, இயற்கையின் விளைவே. இதைப் புரிந்து கொண்டால் எல்லாம் இன்ப மயம். எல்லாம் முன்பு இருந்தபடியே இருக்கும் என்றாலும் எல்லாம் இனிமேல் மாறியும் போயிருக்கும்.

இது தான் சரியார் உளறலின் உச்சக் கட்டம். அதனால் சரியாருக்கு இரு குழுவினரும் பூசை(!) செய்யலாம்.

இந்தா வாங்கிக் கோ, இறைவனின் அருளால் ஒரு குத்து, இயற்கையின் விளைவால் ஒரு குத்து!

குத்தால் நிலை குலைந்தாலும் கொள்கையிலிருந்து சரியாத‌ சரியார் உரைக்கின்றார்: இரண்டு குத்துகள் இல்லை, ஒரே குத்து தான். இந்தப் பக்கமாகப் பார்த்தால் இறைவன் குத்து, அந்தப் பக்கமாகப் பார்த்தால் இயற்கைக் குத்து!

No comments:

Post a Comment