Thursday 6 September 2018

வெண்பாவுக்கு வெண்பா - பாப்பா காப்பு - வாழ்வின் வாகைக்கு வரையறை

தம்பி திருவள்ளுவன் ‍அவன் துணைவி அறிவுமதியின் மகள் அடவி - மருமகன் கார்த்திகேயனுக்கு பிறந்த முதல் பெண் குழந்தைக்கு 'வெண்பா' என்று பெயரிட்டதை வாழ்த்தி ஆகஸ்டு 16, 2014 இல் எழுதியது.

கார்த்தி அடவி கடைந்திட்ட பெண்பாவை
கீர்த்தி மிகுந்திடும் பண்பாவை - நேர்த்தியான
வார்த்தை வடிவை வளமான வாழ்வழியைப்
பூர்த்தியான வெண்பாவைப் போற்று.

வெண்பாவோடு கழித்த 2016 ஆகஸ்டில் எழுதியது.

பாப்பா காப்பு
பாப்பா பாப்பா
வெண்பா பாப்பா
காப்பா(ள்) காப்பா(ள்) – நம்மைக்
கட்டிக் காப்பா(ள்)
நேராய் நிறையாய்
நேரிசைப் பாவாய்
சீராய்ச் செழிப்பாய்
செப்புவாய்ச் சிரிப்பாய் (பாப்பா…)
1
கோவைப் பழமாய்
குவிந்த அறிவாய்
நாவற் கனியாய்
ஞானக் கதவாய் (பாப்பா…)
2
ஊராய் உறவாய்
உண்மையின் உருவாய்
தீர்வாய்த் திசையாய்
தெளிந்த திருவாய் (பாப்பா…)
3
இறையாய் மறையாய்
என்றும் உறைவாய்
பிறவா ஒளியாய்
பிறந்தாய் சிறந்தாய் (பாப்பா…)
4
நிலமாய் நெருப்பாய்
நெடுநீர்க் கடலாய்
வானாய் காற்றாய்
வளமிகு வாழ்வாய் (பாப்பா…)
5
கருத்தாய் உணர்வாய்
காலம் கடந்தாய்
மருந்தாய் தவமாய்
மகிழ்ந்து அருள்வாய் (பாப்பா…)
6
கனவாய் நனவாய்க்
காட்சிப் பொருளாய்
சினமாய்ச் செயலாய்
செறிந்த பண்பாய் (பாப்பா…)
7
அன்பாய்ப் பிடிப்பாய்
ஆசையாய்க் கடிப்பாய்
என்பாய் நரம்பாய்
இயக்கி வைப்பாய் (பாப்பா…)
8
எழுத்தாய்ச் சொல்லாய்
எட்டா நிலையாய்
வழியாய் வரமாய்
வருவாய் தருவாய் (பாப்பா…)
9
படிப்பாய் நடிப்பாய்
பாடம் புகல்வாய்
அடிப்பாய் அணைப்பாய்
அம்மா நீ, எங்கள் தாய்! (பாப்பா…)
10
பாப்பா காப்பு பத்து முற்றிற்று.
இடம் / நாள் / நேரம்        :         அணுப்புரம் / 08-08-2016 /     முற்பகல்
தூண்டல்                   :         ஊஞ்சலில் அடவி, பாப்பி, திருவள்ளுவனுடன் வெண்பா பாப்பாவின் கொஞ்சல்.
வந்ததைப் பிடித்தவர்        :         பெரிய தாத்தா (சளி, இருமல், காய்ச்சலுடன்)


இரண்டாம் பெண் குழந்தைக்குப் பெயர் வாகை (வெற்றி). எது வாழ்வின் வெற்றி (வாகை) என்பதைக் குறித்த சிந்தனைகளை வாகையை வாழ்த்தி ஆகஸ்டு 28, 2018 இல் எழுதியது.

வாகை

அடவி சூடிய வாகை
ஆற்றல் கார்த்திக் வாகை
விடையென வந்த வாகை
வெண்பா தங்கை வாகை

வெற்றி பெற்றாலும் வாகை
தோல்வி உற்றாலும் வாகை
ஒற்றி (ஒத்து) வாழ்வதே வாகை
உயர்ந்த உள்ளமே வாகை

கற்று அடங்கலே வாகை
கனவு கலைவதே வாகை
உற்று உணர்வதே வாகை
ஒளிரும் உண்மையே வாகை

பற்று கரைவதே வாகை
பல்லுயிர்ப் பேணலே வாகை
வெற்று விளங்கினால் வாகை
வேட்கை தணிதலே வாகை

சுற்றம் சூழ்வதே வாகை
சூழ்ந்து மீள்வதே வாகை
குற்றம் குறைவதே வாகை
கூடி மகிழ்வதே வாகை