Thursday 7 April 2011

எல்லாம் பிரம்மம் 1/5

2009-01-30

அன்புள்ள சண்முகசுந்தரம்,

வணக்கம்.

ஜெயமோகனின் 'விலாங்கு' படித்தேன், ரசித்தேன். பிரம்மம் என்பதற்குப் பதிலாக 'இயற்கை' (சிவம், ஆன்மா, இயற்கைத் தேர்வு - Natural Selection, Cosmic consciousness, nothing...) என்றும் போட்டுக் கொள்ளலாம்.

கல்கியின் பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் (வைணவன்) அத்வைதிகளுடன் வாதிடும் போது அவர்களுக்குச் செயல்முறையாக அத்வைதத்தின் ஓட்டையைப் புரிய வைக்க, 'பிரம்மத்தைப் பிரம்மம் திருச்சாத்து சாத்தப் போகிறது. என்னை நானே தடி கொண்டு தாக்கப் போகிறேன்' என்று கூச்சலிட்ட வண்ணம் கழியைச் சுழற்ற, அத்வைதிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைவர்.

பிரபஞ்சத்திற்கு வெளியே நின்று பார்த்தால் எதிர்காலம் இறந்த காலத்தைப் பாதிப்பதைக் காணலாம் என்று விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லியுள்ளார். ஆனால் அப்படி எங்கு நிற்பது? அதற்கும் முன்னால் பிரபஞ்சத்திலிருந்து என்னைப் பிரித்து எடுக்க வேண்டுமே! பிரம்மத்திற்கு (இயற்கைக்கு) வெளியே நிற்க என்ன உள்ளது?

'பெரியவா' சொல்லியுள்ள வேதங்கள், உபநிஷத்துகள் தேவையில்லாமல் குழப்பியுள்ளன என்றும் உள்ளது உள்ளபடி இருக்கும் மெய்ம்மை ஆன்மா (இயற்கைக்கு வேறு சொல்) ஒன்றே; அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றும் ரமண மகரிஷி பிரம்மம் கூறியுள்ளதே.

குழுப்புவதும் குழம்புவதும் தெளிவாக்குவதும் தெளிவடைவதும் பிரம்மமே என்று சொல்வதும் எழுதுவதும் கேட்பதும் படிப்பதும் பிரம்மமே என்பதை மறுப்பதும் கேலி செய்வதும் பிரம்மமே! இதை விட விலாங்கு வேண்டுமா?

Each man's death diminishes me,
for I am involved in mankind.
Therefore, send not to know
for whom the bell tolls,
it tolls for thee.
          - John Donne (1572 - 1631)

ஒன்றாம் உயிர் (இயற்கை), பல கோடி 'நான்' என எழுந்து, 'நாம்' என்ற நாடகமாகத் தோற்றமளிக்கிறது. நான் (தன்னலம்), நாம் (தந்நலம் - தம்மைச் சார்ந்தவர் நலம்) என விரியும். மேலும், 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும்'. அதனினும், 'எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை உடையதாய்' உயர்ந்து, பின் 'வானாகி, மண்ணாகி...' என்றும், 'கண்ணில் காண்பதுன் காட்சி... ... மண்ணொடு ஐந்தும் வழங்குயிர் யாவுமே அண்ணலே நின் அருள் வடிவாகுமே' என்று மலரும்.

'நான் எழுந்தால் சகலமும் எழும். நான் அடங்கினால் சகலமும் அடங்கும்'
            - ரமணர்

No comments:

Post a Comment