Sunday 21 January 2024

எண்ணப்புலம் - அறிவுணர்வு

21-Jan-2024

எண்ணப்புலம் - அறிவுணர்வு


எண்ணங்கள் தாமாக எழுந்து மறைகின்றன‌


என்னுடைய அடுத்த எண்ணம் (எந்த சிந்தனை வரும்) என்ன என்று என்னால் கூற முடியுமா? முடியாது.

எண்ணங்கள் எழுகின்றன (வருகின்றன / தோன்றுகின்றன). அவை என்னுடையவை என்று அடையாளப் படுத்திக் கொள்கிறேன். உண்மையில் அவற்றை நான் உருவாக்கியதற்கான சான்று (எப்படி உருவாக்கினேன். என்னென்ன படிநிலைகளில் அவை உருவாக்கம் பெற்றன) எதுவும் எனக்குத் தெரியாது.

நான் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் மூச்சு இயங்கிக் கொண்டுள்ளது. அதே போல்தான் எண்ணம், சொல், செயல்களும். அவற்றை என்னுடையவை என்று அடையாளப் படுத்திக் கொள்வதும் தன்னிச்சையாக எழும் மற்றோர் எண்ணமே.

நம் மனதைச் சற்று நேரம் வேடிக்கை பார்த்தாலே, நம்முடைய முயற்சி எதுவும் இல்லாமல் மூச்சு இயங்குவது போல் எண்ணங்களும் தோன்றி மறைவதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளலாம்.

எண்ணங்களின் எங்கிருந்து தோன்றுகின்றன?


இதை நாம் நன்கு கூர்ந்து கவனித்து உறுதிப்படுத்திக் கொண்டோமென்றால் எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்ற கேள்வி எழும். காற்று மண்டலம், கதிர்ப் புலம் (field) போல் எண்ணங்களின் மண்டலம் (எண்ணப் புலம்) இருப்பதாகக் கொள்ளலாம். இன்னும் கவனமாகப் பார்த்தால் காற்று மண்டலம், கதிர்ப் புலம் (ex. electromagnetic field) போன்றவை எண்ணங்கள் இல்லாமல் (எண்ணங்களாகத் தோன்றாமல்) இருக்கும் என்றோ இருக்காது என்றோ சொல்ல வழியில்லை.

எண்ணப் புலம் என்பது மின்காந்தப் புலம் போல் அலைகளாக, அதிர்வுகளாக இருக்கலாம். அவை நம் மூளையின் வழியாக எண்ணங்களாக அறியப்படலாம். மின்காந்த (ஒளி) அலைகள் நம் கண்கள் வழியே மூளையால் நிறமாக அறியப்படுவது போல். ஒலி அலைகள் நம் காதுகளின் வழியே மூளையால் ஓசையாக அறியப்படுவது போல்.

பிரபஞ்சத்தில் எந்த ஒன்றும் (நம் உடல்கள் உள்பட) ஓர் உயிரியின் (மனிதனின்) அறிவுணர்வில் (awareness / consciousness / mind-field) தான் தோன்றுகிறது. மனிதர்கள் இல்லாத காலம், அப்போது நடந்தவை என்பன எல்லாம் இன்று இப்போது நம் எண்ணங்களாகவே உள்ளன. 

அதனால் எண்ணப் புலம் என்பது ஒரு கருதுகோள் (hypothesis) என்பதிலிருந்து மறுக்க முடியாத இருப்பாகத் (reality) தெளிவாகிறது. 

இன்னுஞ் சொல்லப் போனால் எண்ணப் புலத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. எவை தோன்றினாலும் அவை எண்ணப் புலத்தில் தான் தோன்றுகின்றன. இங்கு எண்ணப் புலம் என்பது அறிவுணர்வைக் குறிக்கிறது. ஐம்புலன்களால் உணர்பவை கூட எண்ணப் புலத்தில் தான் தோன்றுகின்றன. 

எடுத்துக் காட்டாக, நம் கண்முன் உள்ள சாவியைப் பலமுறை தேடி விட்டு எங்கே வைத்தோம் என்று கவலைப் பட்டு, திடீரென்று அது இருப்பதைப் பார்க்கிறோம். முன்பும் சாவியின் மீது பட்ட ஒளி நம் கண்களின் வழி விழித்திரையில் விழுந்து மூளைக்குச் சென்றிருக்கும். ஆனால் உண்மையில் பார்ப்பது கண்கள் இல்லை; மூளையும் இல்லை; அறிவுணர்வே (கவனமே / attention which is directed awareness).

இதே போல் மற்ற புலன்களுக்கும் நாம் யோசித்துப் புரிந்து கொள்ளலாம்.

நான் பார்க்கிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத பார்த்தல் இல்லை.
நான் கேட்கிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத கேட்ட‌ல் இல்லை.
நான் தொடுகிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத தொடுதல் இல்லை.
நான் சுவைக்கிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத சுவைத்தல் இல்லை.
நான் முகர்கிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத முகர்தல் இல்லை.
நான் நினைக்கிறேன் என்ற அறிவுணர்வு இல்லாத நினைத்தல் இல்லை.

நான் இல்லாத அறிவுணர்வு இல்லை.
அறிவுணர்வு இல்லாத நான் இல்லை.

எனவே நான் = அறிவுணர்வு.

அறிவுணர்வே நான். நானே அறிவுணர்வு.


மேற்கண்ட தர்க்கத்தை உற்றுச் சிந்தித்தால், இந்த உடலையும் நான் அறிவுணர்வால் தான் அறிகிறேன். அதனால் அறிவுணர்வே என் முதன்மையான இருப்பு / அடையாளம். மற்றவை, இந்த உடல், பெயர், மொழி, இனம், பால், படிப்பு, பதவி, சொத்து, உறவு எல்லாம் இரண்டாம் பட்சமே, அறிவுணர்வுக்கு அடுத்தே.

இப்போது இருக்கும் இந்த உடல் சம்பந்தப்பட்ட அடையாளங்களில் கூட நாம் எது முதல் (ஆண் / பெண்), எது அடுத்து (தமிழன்) எது அதற்கு அடுத்து (இந்தியன்)... என வரிசை வைத்துள்ளோம். அதன்படி நடந்து கொள்கிறோம்.

இப்போது இவை எல்லாவற்றிற்கும் மூலமான, இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய, இவை எல்லாவற்றையும் கடந்த, எது இல்லாவிடில் இவை எதுவும் இருக்க இயலாதோ, அத்தகைய அடையாளத்தை, அறிவுணர்வை (எப்போதும் இருந்து வருவதை) கண்டு கொண்டோம். இதுவே ஆன்மீகம். இதுவே ஞானம். இதுவே மோட்சம். இதுவே விடுதலை. இதுவே வீடுபேறு. இதுவே பிறப்பு இறப்பு அறுத்தல். இதுவே நிர்வாணம். இதுவே பகுத்தறிவின் (ஞானம்) உச்சம். இதுவே ஆன்ம விசாரணையின் (ஆன்ம நம்பிக்கை இல்லை) முடிவு. இதுவே வள்ளலாரின் மரணமிலாப் பெருவாழ்வு. இதுவே தூங்காமல் தூங்குவது.

இந்தத் தெளிவு என்பது நம் அன்றாட வாழ்க்கை ஒத்திசைவாக, ஒழுங்கமைதியாக நடக்க மிக அவசியம்.

எப்படி?

ஓர் எடுத்துக்காட்டு. ஒரு பணக்காரனின் தூக்கத்திற்கும் (கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கம்) ஒரு பரம ஏழையின் தூக்கத்திற்கும் என்ன வேறுபாடு? எந்த வேறுபாடும் உண்டா? அந்த கனவுகளற்ற ஆழ்ந்த தூக்கத்தில் பணக்காரன் என்னவாக இருந்தான்? அதே போல் ஏழை என்னவாக இருந்தான்? 

ஆழ்ந்த தூக்கத்தில் இருவரும் இல்லாது போய் விடவில்லை. தூக்கத்திலிருந்து எழுந்ததும் இருவரும் நன்றாக நிம்மதியாக ஆழ்ந்து தூங்கினேன் என்று ஒப்புக் கொள்கிறார்கள். ஆக அவர்கள் அந்த ஆழ்ந்த தூக்கத்திலும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் உடல் மனங்களாக (பணக்கார, ஏழை) இல்லை. வெறும் அறிவுணர்வாக இருந்தார்கள். தங்களுக்கு அத்தூக்கத்தில் உடல் மன உணர்வு இல்லை என்பதை விழித்ததும் சொன்னார்கள் (மரக்கட்டை போலத் தூங்கினேன்). எது அதை அறிந்தது? அதுவே அறிவுணர்வு.

அடுத்து. இருவரின் ஆழ்ந்த அத்தகையத் தூக்கத்திற்கு இடையே எந்த வகையிலும் வித்தியாசம் இல்லை. அவை ஒன்றே. அறிவாளியின் ஆழ்ந்த தூக்கமும் அடிமுட்டாளின் ஆழ்ந்த தூக்கமும் ஒன்றே. ஆழ்ந்த தூக்கத்தில் அனைவரின் இருப்பு, அடையாளம் ஒன்றே.

அதே போல் என்னுடைய அறிவுணர்வுக்கும் பிறருடைய அறிவுணர்வுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டிற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்றால் இரண்டும் ஒன்றே. என்னுடைய உடலில் உள்ள ஹைட்ரஜன், கார்பன் அணுகளுக்கும் பிறர் உடல்களில் உள்ளதற்கும் உயிரற்றவற்றில் உள்ளதற்கும் எந்த வேறுபாடு இல்லை என்பதைப் போல்.

அறிவுணர்வு ஆணா பெண்ணா? அறிவுணர்வு மரமா, பூச்சியா, விலங்கா? அறிவுணர்வு தூய அறிவுணர்வே. வேறு எல்லாம் (ஆண் / பெண், மரம், செடி, கொடி, மலை, பூமி, சூரியன், கோள்கள் ...) அவ்வறிவுணர்வில் தோன்றுவனவே.

அதாவது ஒரே அறிவுணர்வில் (எண்ணப் புலத்தில்) உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாமே தோன்றுகின்றன. அதே புலத்தில் ஒவ்வொரு உடல் மனதோடு அவ்வறிவுணர்வு அடையாளப் படுத்திக் கொள்வதும் தோன்றுகிறது. ஒரே நீர் ஓட்டத்தில் பல அலைகள் (அவையும் நீரே) தோன்றுவதைப் போல. ஒரே நீர் ஓட்டத்தில் பல நீர்ச்சுழல்கள் (whirlpools - அவையும் நீரே) தோன்றுவதைப் போல.

எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் தோற்றுவாயாக ஒரே அறிவுணர்வு உள்ளது. அறிவுணர்வு என்பதை இறைவன், கடவுள், சிவம் என்று எந்த பெயரிட்டு அழைத்தாலும் முடிவான உண்மை இதுதான். மற்றபடி முருகன், சிவன் போன்ற கடவுளர்கள் வெறும் எண்ண அளவிலான தோற்றங்களே (கற்பனைகளே). அதே சமயம் நம் உடல் போன்றவையும் எண்ண அளவிலான தோற்றங்களே. முருகன், நீதி, நேர்மை, உரிமை போன்ற எண்ணங்களுக்கு வடிவம், நிறம், எடை, மணம், குணம் போன்ற பிற கூறுகள் (அவையும் முடிவில் அறிவுணர்வின் தோற்றங்களே) இல்லை. நம் உடல் போன்றவற்றிற்கு உண்டு.

இத்தகைய ஆய்வு எண்ணங்களும் அதே அறிவுணர்வின் தோற்றங்களே.

ஓடும் நீர் சுழலும் போது அதற்கு ஒரு வடிவம் அமைந்து விடுகிறது. சுழல்வதையும் வடிவத்தையும் பிரிக்க முடியாது. அவை ஒன்றே. அதே போல் எண்ணங்கள் எழும் போது அது உடல் மன வடிவத்தில் அமைந்து விடுகிறது. எண்ணங்களையும் (கருத்து) உடலையும் (பொருள்) பிரிக்க முடியாது. அவை ஒன்றே.

கருத்து முதல் வாதம் / பொருள் முதல் வாதம் என்ற வழக்கு (விளையாட்டு) கருத்தும் பொருளும் (அவையும் முடிவில் அறிவுணர்வின் தோற்றங்களே) இல்லாமல் இருக்க (நடக்க‌) முடியாது.

எல்லாப் பொருள்களும் வெளியில் (space) உள்ளன. வெளி எங்கே உள்ளது? எங்கும் உள்ளது. அந்த வெளியுமே அறிவுணர்வில் தான் தோன்றுகிறது. அதே போல் அறிவுணர்வு எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது (கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார்). Space is non-local. Similarly awareness is non-local.

இந்த வகை விளக்கத்தில் அறிவுணர்வு என்பதும் ஒரு கருத்தே (concept). ஆனால் அது அறிவுணர்வு என்ற இருப்பைச் (existence) சுட்டும் (pointer) கருத்து. நீர் என்ற கருத்து மெய்யான‌ (நிஜமான) நீரைச் சுட்டுவது போல. அதனால் அறிவுணர்வு என்ற கருத்து எதைச் சுட்டுகிறதோ அது கருத்து, பொருள் இரண்டிற்கும் அப்பாற்பட்ட அடிப்படை, மூலம் ஆகும்.

ஆக, நாம் அடைந்த முக்கிய முடிவுகள்


  • ஒரே அறிவுணர்வு உள்ளது.
  • அது மட்டுமே உள்ளது. மற்றவை எல்லாம் அதில் தோன்றுபவையே. அதன் தோற்றமே.
  • அதுவே எல்லாவுமாகத் தோன்றுகிறது.
  • அதுவே தோற்றத்தின் ஒவ்வொரு பகுதிகளுடன் (உடல் மனங்கள்) தனித்தனியாக அடையாளப் படுத்திக் கொள்கிறது. ஒரே சூரியன் பல நீர் நிலைகளில் பல பாத்திரங்களில் உள்ள நீரில் பிரதிபலிப்பதைப் போல.
  • இந்த உடல் மனம் நம்முடைய தற்காலிக அடையாளம்.
  • அறிவுணர்வே நம் பிறப்பு இறப்பற்ற நிரந்தர அடையாளம்.
  • நம் எண்ணம், பேச்சு, செயல் என்று சொந்தம் கொள்பவை இவ்வுடல் மனத்தின் உருவாக்கங்கள் அல்ல. ஏனெனில் நம் உடல் மனம் என்பதே மற்றவை போல் ஒரு தோற்றம்.
  • நம்முடைய தனித்த (பிறவற்றிலிருந்து பிரிந்த - sense of separation) உணர்வு என்பது தோற்றம், கருத்தளவில் உண்மை. ஆனால் மெய்யான‌ (நிஜத்தில்) உண்மையில்லை.

நீர்ச்சுழல் என்பது நீர் ஓட்டத்திலிருந்து தனித்துத் தோன்றுகிறது. அந்த அளவில் அது உண்மை. ஆனால் அது நீரிலிருந்து வேறுபட்டது, பிரிந்து தனித்து நிற்பது என்றால் அது உண்மையில்லை. நீர்ச்சுழலாக (தோன்றி / பிறந்து, சுழன்று, மறைந்து / இறந்து) இருக்கும் போதும் அது நீரே அன்றி வேறில்லை. அது போல் நாம் இந்த உடல் மனமாக இருக்கும் போதும் இல்லாத போதும் அறிவுணர்வே அன்றி வேறில்லை.

அறிவுணர்வைக் கடவுள் என்று அழைத்தால் நாம் ஒவ்வொருவரும் கடவுளே. ஆனால் அது நம்மை அறிவுணர்வோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் போதே சரி. அதிலிருந்து பிரிந்து தனித்து துண்டித்து நிற்பதாகத் தோன்றும் இவ்வுடல் மனம் அடையாளத்தின் படி சரியில்லை.

அறிவுணர்வு = நான் = இயற்கை = இறைவன் = இருப்பு.


சில கேள்விகள்


நான் அறிவுணர்வு என்ற அடையாளத்தில் எல்லாம் வல்ல கடவுள் என்றால் நான் ஏன் நினைத்தபடி செய்ய முடியவில்லை?

இது பாதி கிணறு தாண்டிய புரிதல் ஆகும்.

அறிவுணர்வு என்ற நிலையில் இச்சா சுதந்திரம் (free will) உண்டு. ஆனால் அதற்கு அங்கு பொருள் (meaning) இல்லை; தேவை (need) இல்லை. ஏனெனில் அது இச்சைகளைக் (விருப்பு வெறுப்புகளைக்) கடந்த நிலை. அதே சமயம் எல்லா விருப்பு வெறுப்புகளுக்கும் ஆதாரமான நிலை.

திரைப்படத் திரைச்சீலை தோன்றும் எல்லாக் காட்சிகளுக்கும் (வெள்ளம், புயல், தீ, காதல், சண்டை, சோகம்...) ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அந்தக் காட்சிகளைக் கடந்து நிற்கிறது. எந்த வகைக் காட்சியாலும் பாதிக்கப்படுவதில்லை. திரைச்சீலை இல்லாமல் எந்தக் காட்சியும் (பொருளும்) தோன்ற முடியாது.


நான் பிறர் என்ற பிரிவினை வெறும் தோற்றமே என்றால், எல்லாம் நானே (ஒன்றே) என்றால் நான் யாருக்கு என்ன (தீங்கு) செய்தால் என்ன, எப்படி நடந்து (அவமரியாதை, கடுமை, கொடுமை) கொண்டால் என்ன? எல்லாம் எனக்கு நானே செய்து கொள்வது தானே?

கறாராகப் பார்த்தால் ஆம், நான் பிறருக்கு என்ன செய்தாலும், மெய்யுணர்வின் படி, எனக்கு நானே செய்து கொள்வதுதான். ஆனால் அது எல்லோருக்கும் பொருந்தும். பிறர் எனக்கு என்ன செய்தாலும் அது எனக்கு நானே செய்து கொண்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலும் பாதி கிணறு தாண்டினால் மீண்டும் மாயைக் (பற்று / இன்ப துன்பம்) கிணற்றிலேயே விழுந்து விடுவோம்.

"நாம் பிறருக்கு உதவும் போது நமக்கு நாமே உதவிக் கொள்கிறோம்"
                - ரமண மகரிஷி

“It is one of the most beautiful compensations of life that no man can sincerely try to help another without helping himself.” – Ralph Waldo Emerson
"வாழ்க்கையின் அற்புதமான சமச்சீர் என்னவென்றால் நாம் பிறருக்கு உதவுவதன் மூலம் நாமும் பயனடைவது தான்."
                - ரால்ப் வால்டோ எமர்சன்

இதன் மறுதலையும் உண்மை. அதாவது பிறருக்குத் தீங்கு (எண்ணத்தால், சொல்லால், செயலால்) இழைக்கும் போது நமக்கு நாமே அதைச் செய்து கொள்கிறோம்.

அதே போல் இதன் எதிர்த்தலையும் உண்மை. பிறர் நமக்கு நன்மை செய்யும் போதும் தீங்கு செய்யும் போதும் அவர் அவருக்கே செய்து கொள்கிறார்.

இதை எழுதும் போது எனக்கு நானே உதவிக் கொள்கிறேன்.

உண்மையின் இரு கோணங்கள்


அறிவுணர்வு என்ற அடையாளத்தில் நாம் நின்றால் எல்லாம் (நாம் விரும்புகின்றவை, வெறுக்கின்றவை) நம் செயல்களே, நம் வெளிப்பாடுகளே. யாரையும் எதையும் புகழவோ, இகழவோ, விரும்பவோ, வெறுக்கவோ வழியில்லை.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (திருக்குறள்: 4 1. கடவுள் வாழ்த்து)

கடவுளுக்கு இலக்கணமே விருப்பு வெறுப்பற்றவர் என்பதுதானே.

இந்த உடல் மனம் என்ற அடையாளத்தில் நாம் நின்றால் நமக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை (பிறப்பு முதல் இறப்பு வரை பல விருப்பு வெறுப்புகளுடன்) இருப்பது போல் தோன்றுகிறது.

எது உண்மை? இரண்டும் உண்மை.

இரண்டையும் நாம் எந்த விகிதத்தில் (ratio) வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் பொருத்திப் பார்த்துச் சமப்படுத்திச் (balancing) செயல் படுகிறோம் என்பதே நாம் நம்முடன் விளையாடும் வாழ்க்கை விளையாட்டு!

ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு மலர்ச்சி!
ஒவ்வொரு நாளும்
ஒருபடி உயர்ச்சி!

உடல் மன அடையாளத்தை மட்டும் உண்மை என்று நினைத்துக் கொண்டு இருக்கும் கட்டத்தில் அதிலிருந்து விடுபட நீ இந்த உடல் மனம் இல்லை, இவ்வுலகம் வெறும் தோற்றமே / மாயை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த முதல் பாடத்தை மட்டும் வைத்துக் கொண்டு எடை போடுவது சரியில்லை. முழுமையான பாடப் படிநிலைகளைப் புரிந்து கொண்டால் தான் உண்மை விளங்கும்.

வானவில்லைப் பார்த்து ரசிக்கிறோம். ஆனால் அப்படி உண்மையில் வானத்தில் பல வண்ண வில் ஒன்றும் இல்லை. அது ஒரு தோற்றமே என்பதை மறந்து விடுவதில்லை.

அதே போல் வாழ்க்கையை (இன்ப துன்பங்கள் மாறி மாறி வருவதை) ரசிக்கலாம். ஆனால் அப்படி உண்மையில் இன்பமோ துன்பமோ இல்லை. அவை வெறும் தோற்றங்களே என்பதை மறந்து விடக் கூடாது.

விவேகானந்தர், வேதாந்தம் இந்த உலகை வெறுக்கச் சொல்லவில்லை, இந்த உலகைச் சரியாகப் புரிந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றே சொல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்ட எதையும் நம்பக் கூடாது. அவரவர்கள் திறந்த மனதுடன், எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் யோசித்து, சுய ஆய்வு (ஆன்ம விசாரணை) செய்து உண்மைதானா என்று உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

============

மேற்கண்ட பத்திகளில் பகிர்ந்து கொண்டபடி, நம்மை வெறுத்து, குற்றஞ்சாட்டிப் பிறர் பேசியவை எல்லாமே 'அறிவுணர்வு' என்ற அடையாளத்தில் நமக்கு நாமே சொல்லிக் கொண்டவை தான்!

இது அவர்கள் ஒவ்வொருவர் பார்வையிலும் அவர்கள் அவர்கள் மீதே வைத்த குற்றச்சாட்டுகள் தான் என்றாலும் அவர்களுக்கு அப்புரிதல் வருவது அவர்கள் விருப்பமில்லை.

அதே போல் நமக்கு இப்புரிதல் வருவதும் நம் விருப்பமோ முயற்சியோ இல்லை.

எல்லாம் தானாக நடக்கின்றன. மற்ற இயற்கை நிகழ்வுகளும் நம் உடல் இயங்கங்களும் தானாக (on their own accord) நிகழ்வது போல் எல்லோருடைய எண்ணம், சொல், செயல்களும் தானாக நிகழ்கின்றன. அவை தங்கள் தங்களுடைய எண்ணம், சொல், செயல் என்ற எண்ணங்களும் (attachment thoughts) தானாக எழுகின்றன.

இது தெளிவாக, தெளிவாக 'மனத்திருள் குறையும்', 'மனத்தொளி பெருகும்'. This is what is enlightenment! ஞானப்பிரகாசம் (அறிவு ஒளி)!

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு (திருக்குறள்: 352 / 36. மெய்யுணர்தல்)

இந்த ஒளியில் பார்க்கும் போது நமக்குப் பெருமை / மானம் இல்லை; சிறுமை / அவமானம் இல்லை. வெறுப்புகள் நீர்த்துப் போகும். அதனால் விருப்புகளும் நீர்த்துப் போகும். இன்பமும் நீடிக்காது, துன்பமும் நீடிக்காது என்பது உறுதியாகும். பற்றற்ற பொறுப்புணர்ச்சியில் மகிழ்ச்சியுடன் கடமைகளைச் செய்வோம்.

நம்முடைய கருத்துகள், கொள்கைகள், விழுமியங்கள், மதிப்பீடுகள், உறவுகள், உடல், உலக நலம் பற்றிய கவலைகள்... என எல்லாமே இவ்வொளியில் மாறிவிடும், செம்மையுறும்.

மன அலைவு குறைவதால் பசி குறையும். குறைந்த தூக்கத்திலேயே முழுப்புத்துணர்ச்சி வரும். வெகுநாள் இருந்து வரும் சில உடல் உபாதைகள் கூடச் சரியாகலாம்.

அதே சமயம் இந்த ஒளியோடு நம்முடைய உடல்-மனம் அடையாளத்தில் நின்று பார்ப்பதையும் சமப்படுத்த வேண்டும்.

'எல்லாம் நானே' என்பதால் பிறர் உண்டு நான் பசியாற முடியது. அதே சமயம் நான் - பிறர் (sense of separation) என்ற கருத்து, தோற்ற அளவிலான, வாழ்க்கை நாடகத்திற்கான, பிரிவினையைத் தீவிரமாக எடுத்துக் கொண்டால் 'மனத்திருள் கவ்வும், மனத்துயர் பெருகும்'.

மனம் போல் வாழ்வு

"அதே சமயம் இந்த ஒளியோடு நம்முடைய உடல்-மனம் அடையாளத்தில் நின்று பார்ப்பதையும் சமப்படுத்த வேண்டும்." என்பதின் நடைமுறை என்ன?

குறிப்பாக, நம்முடைய, பிறரின் குறைகளை, பலகீனங்களை மறக்காமல் (அப்போதுதான் மீண்டும் அதே தவறைச் செய்யாமல் இருப்போம்) ஆனால் அதற்காக வெறுப்பு, கோபம், ஆற்றாமை போன்ற சிந்தனைகள் நம் மனதை ஆக்கிரமித்து விடாமல் அவற்றைப் புறக்கணித்து நம்முடைய, பிறரின் நற்குணங்கள், பலங்களைப் பற்றிய சிந்தனைகளுக்கு ஊக்கம் கொடுத்து அவற்றை நம் மனதில் நிரப்ப வேண்டும்.

இதை நான் பின்பற்றிப் பலன் கண்டு வருவதால் தான் பகிர்ந்து கொள்கிறேன். அதே சமயம் இவை எப்பொழுதும் என் இயல்பாக இருக்கும் அளவுக்கு மாறிவிடவில்லை. வழக்குதலும் மீண்டு எழுந்து நினைவுபடுத்திக் கொண்டு பின்பற்றலும் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

எண்ணப் புலம் என்பது எங்கும் பரவியுள்ளது (non-local = universal) என்று மேற்கண்ட கட்டுரையில் பார்த்தோம். அப்படி என்றால் நம் சிந்தனை யாரை நோக்கி, யாரைப் பற்றி, எந்தவிதமாக உள்ளதோ அதற்கு ஒரு விளைவு இருக்கும்.

அதனால் தான் நம்முடைய எண்ணங்கள் பிறரின் குறைகளைப் பற்றி, அவர்களின் சுடுசொற்களைப் பற்றி அதிகம் இருக்கக் கூடாது.

வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு (திருக்குறள்: 595 - 60. ஊக்கமுடைமை)

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் (திருக்குறள்: 706 - 71. குறிப்பறிதல்)

பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின் (திருக்குறள்: 709 - 71. குறிப்பறிதல்)

பிறரைப் பற்றிய நம் எண்ணம் உடன்பாடாக இருந்தால் அது நம் முகம், உடல் அசைவு எல்லாவற்றிலும் (பணிவான பேச்சுக்கு அப்பாற்பட்டு) வெளிப்படும்.

தகவல் பரிமாற்றத்தில் முகம், உடலசைவுகள் (body language) பேச்சை (குரல் மென்மை/வலிமை, உச்சரிப்பு...) விடப் பெரும்பங்கு வகிப்பதை அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டவை குறித்து கருத்துகள், கேள்விகள், ஐயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

வாழ்நாள் சிறியது; வாழ்க்கையோ பெரிது! 

(கனிச்சாறு 2 ஆம் பகுதி பக்கம் 87,88 - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1973)

என்றும் நினைத்திரு;
இந்நிலம் பெரிது!
குன்றமும் வானும்
கோடி ஆண்டுகள்
நின்று நிலைப்பன!
நீயோ அழிபவன்!
என்றும் இருப்பதாய் 
இறுமாந்து விடாதே!

ஒருநாள் நம்முடல்
உலகினில் அழியும்!
திருநாள் போலத்
திரிந்த வாழ்வெலாம்
இருளுள் மூழ்கும்
இல்லாமற் போவோம்!
அருமை உறவினர்
அழ அழ அழிவோம்!

பிறப்பன எல்லாம்
பின்னொரு நாளில்
இறப்பதும் உறுதி!
இதுவே இயற்கை!
மறப்பிலா இந்நிலை
மனத்தினுள் இருத்திச்
சிறப்புற எண்ணவும்
செய்யவும் முனைக!

உன்புது வாழ்வை
உவப்புடன் நடத்து!
அன்பும் அறமுமே
அனைத்தினும் உயர்வாம்!
இன்பம் வருகையில்
எக்களிப் புறாதே!
துன்புற நேரினும்
துவண்டு விடாதே!

ஒருநலம் பெறுகையில்
உலக நலம் நினை!
வருநலம் யாவும்
வகுத்துண்டு வாழ்வாய்!
பெருநிலம், விளைவுகள்
பிறவெலாம் பொதுவே!
மருவிலா உள்ளமும்
வாழ்வுமே மகிழ்ச்சி!

வாழ்நாள் சிறியது!
வாழ்க்கையோ பெரிது!
வீழ்நாள் வரினும்
வீழாது நற்செயல்!
தாழ்வும் உயர்வும்
தம்தம் செயல்களே!
சூழ்வன மீறிச்
சுடர்வன செய்வாய்!

எவ்வழி நினைவோ, அவ்வழி நிகழ்ச்சி!

பெருஞ்சித்திரனார் பாடல்கள் - கனிச்சாறு தொகுதி 3 பாடல் 66

உனக்கு முன்னும், இவ்
வுலகம் இருந்தது!
உனக்குப் பின்னும், இவ்
வுலகம் இருக்கும்!
ஊழியிற் சுழலும், இவ்
வுலக வண்டியில்
நாழியே ஏறிடும்
நல்வழிப் போக்கன், நீ!

தொடங்கிய தெங்கே?
தொடர்வது மெங்கே?
அடங்கா முடிவினில்
அடைவது மென்ன?
என்பவை எல்லாம்
எண்ணினும் விளங்கா!
மன்பதைக் கடலுள்
மண்துகள் அசைவு, நீ!

எந்த இடத்தினில்
இறங்கிடு வாயோ?
அந்த நொடிவரை
ஆர்ப்பரிக் கின்றாய்!
சொந்தமும் சுற்றமும்
சுழன்றிடும் அணுக்கள்!
சிந்துகண் ணீரும்
சிரிப்பும் கனவுகள்!

வந்தது நினையாய்!
வழிதடு மாறுவாய்!
வெந்தது தின்றிட‌
வீணிற் பேசுவாய்;
மந்தையில் ஆடுபோல்
மனத்தைச் சுழற்றுவாய்!
முந்தையர் விட்ட‌
முழுமை தொடருவாய்!

நினைத்தவை எல்லாம்
நிலைத்தவை ஆகா!
அனைத்து முயற்சியும்
அரைகுறை முயற்சியே!
மனத்திருள் குறைந்தால்
மனத்துயர் குறையும்!
மனத்தொளி பெறுதலே
வாழ்க்கையின் மலர்ச்சி!

ஒளிபெற எண்ணுவாய்;
ஒளித்துவை யாதே!
வெளிவான் விரிவுபோல்
விரியட்டும் நினைவுகள்!
துளியே யாயினும்
தூய்மையே வாழ்க்கை!
களிசேர்ப் பதுவும்
கசடிலா எண்ணமே!

ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு மலர்ச்சி!
ஒவ்வொரு நாளும்
ஒருபடி உயர்ச்சி!
எவ்வழி நினைவோ
அவ்வழி நிகழ்ச்சி!
செவ்விய மனமே
செவ்விய வாழ்க்கையாம்!

நற்செயல் நற்சொல் நல்லெண்ணம்

முதலில் நற்செயலைச் செய்வதில் நம் கவனம் இருக்கும். ஆனால் இனிய சொற்களைப் பயன்படுத்துவதில் அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. நற்செயல் மட்டும் போதாது, எதையும் நல்லவிதமாகச் சொல்லாவிடில் பயன் அதிகம் இருக்காது என்று வாழ்க்கை அனுபவம் கற்றுக் கொடுக்கும். ஆனால் பிறர் இல்லாத போது அவர்களைப் பற்றிக் குறை சொல்வது நீடிக்கும். 

அடுத்த கட்டம் எண்ணங்களையே தூய்மையாக, உடன்பாடாக ஆக்குவது. அதாவது எதிர்மறை எண்ணங்களைப் புறக்கணிப்பது. அந்த‌ பழக்கத்தால் எதிர்மறை எண்ணங்கள் வலிவிழக்கும்; வருவது குறையும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற (திருக்குறள்: 34 / 4. அறன்வலியுறுத்தல்)

பயனில எண்ணாமை

எண்ணங்களை நாம் உருவாக்காததால் அவை எழுவதை நிறுத்த முடியாது. கனவுளற்ற ஆழ்ந்த தூக்கம் போல் ஒருவர் ஆழ்ந்த தியானத்தில் நினைவுகள் எழுவதை நிறுத்த முடியலாம். ஆனால் அந்த‌ நிலையில் நீடிக்க முடியாது. தூக்கத்திலிருந்து எப்படியும் ஒருவர் எழுந்து விடுவார். எழாமல் (விழிக்காமல்) இருக்க முடியாது.

அதே போல் ஆழ்ந்த தியானத்திலிருந்து ஒருவர் எப்படியும் வெளியே வந்து விடுவார். மேலும் சிந்தனைகள் அற்ற ஆழ்ந்த தியானத்தில் வேறு எதையும் (சொல், செயல்...) செய்ய வாய்ப்பே இல்லை. அது ஒரு பெரும் தளர்ச்சியான ஓய்வு. வெளியே வந்த பின் அதற்குப் பயன் இருக்கும்.

ஆழ்ந்த தியானத்திலிருந்து வெளியே வராமல் இருந்தால் அது சமாதி ஆகி உயிர் துறக்க (வடக்கிருந்து உயிர் துறத்தல், சாகும் வரை உண்ணா விரதம்) நேரிடும். சமாதியிலேயே இருந்து உயிர் விடுதலைக் கௌரவத் தற்கொலை என்று சொல்லலாம்.

எண்ணங்கள் எழுவதை நிறுத்த முடியாது. ஆனால் அவற்றைப் புறக்கணிக்கலாம் அல்லது முக்கியத்துவம் கொடுக்கலாம்.

மூச்சு விடுவதை நிறுத்த முடியாது (சில நிமிடங்களுக்கு மேல்). ஆனால் மூச்சு வேகத்தைத் தற்காலிகமாகக் குறிப்பிட்ட மணித்துளிகள் கூட்டவோ குறைக்கவோ முடியும்.

அதே போல் இதயத்துடிப்பை நிறுத்த முடியாது. ஆனால் இதயத் துடிப்பு வேகத்தைத் தற்காலிகமாகக் குறிப்பிட்ட மணித்துளிகள் கூட்டவோ குறைக்கவோ முடியும்.

இவை இரண்டும் நம் நேரடி அனுபவ உண்மைகள்.

அதே போல் நம் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவோ புறக்கணிக்கவோ முடியும் என்பதும் நம் நேரடி அனுபவ உண்மை.

நம் வாழ்க்கையின் படிப்படியான உலகியலான சாதனைகள் (படிப்பு, வேலை, குடும்பப் பொறுப்பு...) நம்மால் எந்த சமயத்தில் எவ்வித எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்ற திறமை இல்லாமல் நடந்திருக்காது.

ஏற்கனவே நம்மிடம் உள்ள இந்தத் திறனை இப்போது மேலும் கூர்மைப்படுத்த முனைகிறோம்..

"The highest possible stage in moral culture is when we recognize that we ought to control our thoughts".  - Charles Darwin
நம்முடைய சிந்தனைகளை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று புரிந்து கொள்ளும் நிலை தான் நம் பண்பின் உச்சக் கட்ட வளர்ச்சிப் படியாகும்.

டார்வினின் மேற்கோளில் 'சிந்தனைகளைக் கட்டுப்படுத்துதல்' என்பதை விரும்பாத‌ சிந்தனைகளை வராமல் தடுத்து நிறுத்துதல் என்று எடுத்துக் கொள்ளாமல் அவை வருவதைத் தவிர்க்க முடியாது ஆனால் புறக்கணிக்க முடியும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இவை எதுவும் என்னுடைய கண்டுபிடிப்புகள் அல்ல. ஆனால் படித்துச் சிந்தித்து உணர்ந்து தெளிந்த உண்மைகள். ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல் இவை என் முழுமையான இயல்பாகி விடவில்லை. அப்படியான முழுமைச் செம்மை (perfect) நிலை இவ்விருமைக்குள் (duality) இருக்க முடியாது. ஆனால் அதை நோக்கி படிப்படியான முன்னேற்றம் பெற வாய்ப்புள்ளது. எப்போதும் எங்கும் உள்ளதைக் காணவில்லை என்று தேடித் திரிந்து, தேடுவதே அதுதான் என்று தெளிவதே வாழ்க்கை!
=============