Wednesday 27 April 2011

அம்மா அப்பா அன்பால் (அத்துவிதக் குழந்தைப் பாடல்)


2007-01-31


அம்மா அப்பா அன்பால்
ஆசை பிறக்க வந்தேன்
இதுவோ எந்தன் இயல்பு
ஈர்த்த திந்த வாழ்வு
உள்ள உண்மை ஒன்றே
ஊடித் தோன்றின பலவே
எதுவும் எனது இல்லை
ஏதும் என்வினை அன்று
ஐயம் தெளிய அறிவேன்
ஒத்த தறிந்து யர்வேன்
ஓடி ஆடி நடிப்பேன்
ஔடதம் என்றால் மருந்து
அஃதே அருந்தும் தண்ணீர்.

அம்மா இங்கே வா வா (அத்வைத வாசனையுடன்)


2006-10-01


அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈக்கும் தந்து ஊட்டு
உள்ள உண்மை ஒன்றே
ஊன்றி வந்தன பலவே
எதுவும் எனது இல்லை
ஏமாற் றென்பது 'நானே'
ஐயம் தெளிய அறிவேன்
ஒத்த தறிந்து வாழ்வேன்
ஓடி ஆடி நடிப்பேன்
ஔடதம் என்றால் மருந்து
அஃதே அருந்தும் தண்ணீர்

Thursday 21 April 2011

இறைவன் அருள் - இயற்கை விளைவு

2011-04-21

இறைவன் அருள் - இயற்கை விளைவு

எல்லாம் இறைவன் செயல் (அருளால் நடக்கிறது) என்போரும் எல்லாம் இயற்கையின் விளைவு (விருப்பு வெறுப்பில்லாத கண்மூடித்தனமான தொலை நோக்கற்ற வினைகளால் விளைந்தவை) என்போரும் ஒரே உண்மையை இரு விதமாகப் பார்த்துக் கொண்டு அது மட்டுமே சரி என்று சாதிக்கிறார்கள்.

அவர்கள் ஏன் அடுத்த குழுவினரின பார்வைக்கும் தங்கள் பார்வைக்கும் உள்ள ஒற்றுமையைக் காண முடிவதில்லை?

ஏனெனில் அவர்கள் தம் தம் பார்வையில் முழுமையாகக் கடைசி வரை (அல்லது அடி வரை) சென்று ஆய்வு செய்வதில்லை என்று சொல்லலாம். அல்லது அவர்கள் தம் தம் பார்வையை ஒரே விதமாகச் சீராக‌ (consistent uniform application) எல்லாவற்றின் மீதும் செலுத்துவதில்லை என்றும் சொல்லலாம்.

ஆத்திகத்தை ஆராய்ச்சி செய்து கொண்டே போனால் நாத்திகம் வந்து விடும் என்றும் நாத்திகத்தை ஆராய்ச்சி செய்து கொண்டே போனால் ஆத்திகம் வந்து விடும் என்றும் சொல்வர்.

எப்படி என்று பார்ப்போம். இறைவன் அருளால் எல்லாம் நடக்கிறது என்றால் 'இறை மறுப்பும்' இறைவன் அருளால் தான் நடக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக 'இறை மறுப்பை' வெறுத்தால் எதிர்த்தால் அது இறைவனுக்கு மீறி மனிதன் செயல் பட முடியும் என்றும் இறைவனுக்கு உண்மையில் 'எல்லா வல்லமை' இல்லை என்றும் ஆகிறது. 'இறை மறுப்பு' இறைவனை மீறிய செயல் என்று சொன்னால் (அல்லது அப்படி பொருள் தரும்படி நடந்து கொண்டால்) அப்படிச் சொல்லும் ஆத்திகர்கள் தான் (இறைவனின் எல்லா வல்லமையை நம்பாத) 'நாத்திகர்கள்' ஆகிறார்கள்.

(அப்படி 'இறை மறுப்பை' வெறுப்பதும் எதிர்ப்பதும் இறைவன் செயலே என்று புரிந்தவர்கள் மேலே படிக்க வேண்டியதில்லை).

அதே போல் எல்லாம் இயற்கையின் விளைவு (பரிணாம வளர்ச்சி, மரபணு மாற்றம், சூழ்நிலைத் தாக்கம்...) என்று சொன்னால் 'இறை நம்பிக்கை' உண்டானதும் இயற்கையின் விளைவே என்று ஆகும். இல்லை, அது (இறை நம்பிககை) தனியாக வந்தது என்றால் (அல்லது தனியாக வந்தது போல் நடந்து கொண்டால்) அவர்கள் தான் 'இயற்கை மீறிய' ஆற்றலில் நம்பிக்கை வைத்துள்ள மூடநம்பிக்கையாளர் ஆகிறார்கள். இயற்கையின் விளைவே எல்லாம் என்று சொல்லும் நாத்திகர்கள் 'இறை நம்பிக்கையை' இயற்கை மீறிய (அப்பாற்பட்ட) செயலாகப் பார்ப்பதன் மூலம் அவர்கள் ஆறு புலன்களுக்குப் புலப்படாத ஓர் ஆற்றலை ('இறைவன்')  நம்பும் 'ஆத்திகர்கள்' ஆகிறார்கள்.

(அப்படி 'இறை நம்பிக்கையை' வெறுப்பதும் எதிர்ப்பதும் இயற்கையின் விளைவே என்று புரிந்தவர்கள் மேலே படிக்க வேண்டியதில்லை).

இறைவனை நம்புகிறவர்கள் பிரபஞ்சத்தின் அனைத்திற்கும் காரணமாக இறைவனைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இறைவன் இருக்க/தோன்ற எந்தக் காரணமும் தேவையில்லை என்று இறைவனை காரணமில்லாக் காரண‌-காரியமாகக் (causeless cause-effect) கொள்கிறார்கள்.

இறைவனை மறுத்து இயற்கையின் விளைவே எல்லாம் என்பவர்கள் பிரபஞ்சம் ஆதி வெடிப்பிலிருந்து (big bang) தோன்றியது என்ற அறிவியல் முடிபை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அறிவியல் ஆதி வெடிப்பைக் காரணமில்லாக் காரண‌-காரியமாகக் (causeless cause-effect) கொள்கிறது.

இரு குழுவினருமே காரணமில்லாக் காரியத்தைத் தொடக்கமாக 'அனுமானித்துக் கொள்ளாமல்' (assumption) தங்கள் தங்கள் பார்வைகளை நியாயப் படுத்த முடிவதில்லை. இந்த அனுமான‌ அடித்தள‌ ஒற்றுமையைப் பார்க்கலாம். அல்லது இறைவன் இயற்கை என்ற மேற்தள‌ வேற்றுமையைப் பார்க்கலாம். அவரவர் விருப்பம்; விருப்பமா?

ஆக, ஆத்திகர்களோ நாத்திகர்களோ தங்கள் தங்கள் ஆய்வை / நம்பிக்கையை ஒரே சீராகச் செலுத்தினால் அடுத்த பக்கத்தைப் பார்ப்பதிலிருந்து, ஒத்துக் கொள்வதிலிருந்து, ஏற்றுக் கொள்வதிலிருந்து தப்ப முடியாது.

இது 'இறை நம்பிக்கை', 'இறை மறுப்பு' இவற்றைப் பொறுப்புணர்ச்சியுடன் (sincere) கொண்டுள்ளவர்களுக்குச் சொல்லும் கருத்தாகும்; அவர்களிடம் தான் பயனளிக்கும். மாறாக இரண்டையும் பொறுப்பற்ற முறையில் கொண்டுள்ளவர்களுக்கும் ஏமாற்றும் தந்திரமாகப் பயன்படுத்துபவர்களுக்கும் சொல்வதில் பயனில்லை. தூங்குபவனைத் தான் தட்டி எழுப்ப முடியும். தூங்குவது போல் நடிப்பவனைத் தலையில் தண்ணீரைக் கொட்டித் தான் எழுப்ப முடியும்.

எல்லாம் இறைவனின் செயல் என்பதை அறிவால் உணர்ந்து தெளிந்து உறுதியுடன் இருப்பவர்கள் எது நடந்தாலும் கலங்காது தங்கள் வேடத்திற்கேற்ற கடமைகளைப் பொறுப்புடன் ஆற்றொழுக்காகச் செய்து கொண்டிருப்பார்கள்.

எல்லாம் இயற்கையின் விளைவு என்பதை அறிவால் உணர்ந்து தெளிந்து உறுதியுடன் இருப்பவர்கள் மனிதனின் உடல், மனம், செயல், சாதனை, வேதனை எல்லாம் எப்படி இயற்கையால் எழுந்தனவோ அதே போல் மறைந்தாலும் மீண்டும் எழுந்தாலும் எதுவும் பொருட்டில்லை என்ற புரிதலோடு தங்கள் வேடத்திற்கேற்ற கடமைகளைப் பொறுப்புடன் ஆற்றொழுக்காகச் செய்து கொண்டிருப்பார்கள்.

இருவரும், மிகப் பெரும் ஏற்பாட்டில் எதுவும் பொருட்டனறு அல்லது மிகப் பெரும் ஏற்பாட்டில் அப்படியான ஏற்பாடு எதுவும் கிடையாது என்று உறுதியாக அறிவார்கள். Both know firmly that in the grand scheme of things nothing matters or in the grand scheme of things there is no such grand scheme!

இந்த 'இறை நம்பிக்கை' 'இயற்கை விளைவு' என்ற மரத்தின் பல கிளைகளாக பல் வேறு திரிபுகள் (twists) இருக்கின்றன.

இறைவன் மனிதனைச் சுதந்திர சிந்தனை உள்ளவனாகப் படைத்து விட்டான். அவனுடைய ஒவ்வொரு செயலையும் இறைவன் கட்டுப் படுத்துவதில்லை. மனிதன் ஒழுங்காக‌ நடந்து கொள்கிறானா என்பது தான் அவனுக்கு வைக்கப்படும் உலகப் பிறப்புத் தேர்வு. அதனால் மனிதன் பொறுப்புள்ளவனாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன் ஒரு செயலே நாத்திகத்தை எதிர்ப்பது என்று 'இறை நம்பிக்கைக்' குழுவினர் சொல்லலாம்.

இதே போல் இயற்கை விளைவால் மனிதனுக்கு இச்சா சுதந்திரம் (free will) அமைந்து விட்டது. இனி அவனே அவன் செயலைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும். அவன் நன்மை, தீமைகளை எண்ணிப் பார்த்து செயல் படும் சுதந்திரம் உள்ளவன். அதனால் மனிதன் பொறுப்புள்ளவனாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன் ஒரு செயலே ஆத்திகத்தை எதிர்ப்பது என்று 'இயற்கை விளைவுக்' குழுவினர் சொல்லலாம்.

இப்படிச் சொல்வதன் மூலம் இரு குழுவினரும் (அதாவது ஆய்வைப் பாதியில் நிறுத்தி விட்டவர்கள், அல்லது சீராக அவர்கள் பார்வையைச் செலுத்தத் தவறியவர்கள்) மனிதனுக்கு இல்லாத ஒன்றை (இச்சா சுதந்திரம்) இருப்பதான மாயையை உருவாக்குகிறார்கள். மாயை என்று சொல்வதால் அது முட்டாள் தனமானது என்றோ தேவை அற்றது என்றோ பொருள் அன்று. அத்தகைய எடை மதிப்புகளைத் (value judgements) தாண்டினால் தான் உள்ளதை உள்ளபடி பார்க்க முடியும்.

இத்தகைய மாயை மனித சமூக இயக்கத்திற்கு அவசியமானதாக இல்லாவிடில் (இறைவனாலோ, இயற்கையாலோ) தோன்றியிருக்காது. அதே சமயம் இந்த மாயையையால் இரு வகை பாதிப்புகளும் உண்டு.

இன்ப துன்பங்களின் மேல் (தன்னுடையவை என்று) பற்று (possessiveness) வருவதால் மனிதனின் முயற்சி அவற்றை அடையவும் விலக்கவும் கூர்மைப் படுகின்றது. 'தான்' என்ற முனைப்பு மனிதனுடைய பிரச்னைகள், துயரஙகள் அனைத்திற்கும் (நிலநடுக்கம், கடல் கோள் போன்ற இயற்கை அழிவுகளைத் தவிர‌) அடிப்படைக் காரணமும் ஆகின்றது.

எது அற்புதமோ (தான் என்ற உணர்வு) அதுவே அவலமும் ஆகின்றது.

இத்தகைய ஆக்கம் / அழிவு, இன்பம் / துன்பம், நன்மை / தீமை, சரி / தவறு, உண்மை / பொய், நீதி / அநீதி, சுதந்திரம் / அடிமைத் தனம்... காட்சியை இறைவனின் திருவிளையாடலாகப் பார்த்தாலும் சரி இயற்கையின் பொருளற்ற ஆடலாக‌ப் பார்த்தாலும் சரி அப்படிப் பார்ப்பதும் இறைவனின் அருளே, இயற்கையின் விளைவே. இதைப் புரிந்து கொண்டால் எல்லாம் இன்ப மயம். எல்லாம் முன்பு இருந்தபடியே இருக்கும் என்றாலும் எல்லாம் இனிமேல் மாறியும் போயிருக்கும்.

இது தான் சரியார் உளறலின் உச்சக் கட்டம். அதனால் சரியாருக்கு இரு குழுவினரும் பூசை(!) செய்யலாம்.

இந்தா வாங்கிக் கோ, இறைவனின் அருளால் ஒரு குத்து, இயற்கையின் விளைவால் ஒரு குத்து!

குத்தால் நிலை குலைந்தாலும் கொள்கையிலிருந்து சரியாத‌ சரியார் உரைக்கின்றார்: இரண்டு குத்துகள் இல்லை, ஒரே குத்து தான். இந்தப் பக்கமாகப் பார்த்தால் இறைவன் குத்து, அந்தப் பக்கமாகப் பார்த்தால் இயற்கைக் குத்து!

Tuesday 19 April 2011

பிள்ளைகள் பெரியவர்களுக்கு உணர்த்தும் உண்மை

2011-04-19

பிள்ளைகள் பெரியவர்களுக்கு உணர்த்தும் உண்மை

என் தங்கையின் ஐந்து வயது மகன் தொலைக்காட்சியில் வரும் 'ஜெய் ஹனுமான்' தொடர் விசிறி, பக்தன். அவனுக்கு அனுமானைப் போலப் பறக்க ஆசை. அம்மாச்சியிடம் (பாட்டி) சொல்ல, 'அவர் நீ அனுமான் போலச் சாமி ஆனால் தான் பறக்க முடியும்' என்று சமாளித்தார் (என்று நினைத்துக் கொண்டு மாட்டிக் கொண்டார்). பிள்ளைகளுக்கே உரித்தான போக்கில் தான் எப்படி சாமி ஆவது என்று கேட்க, மேலும் சமாளிக்க, 'நீ செத்தால் தான் சாமி ஆகலாம்' என்றார் அம்மாச்சி. அடுத்து 'எப்போது சாவேன்' என்றான். 'வயதாகித் தான் சாவாய்' என்றார். அதிலிருந்து அவ்வப்போது 'நான் எப்பதான் சாவனோ, சாமி ஆகிப் பறக்க வேண்டும்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு இருப்பான்.

ஒரு நாள் தாத்தா, பையனுக்கு வழி காட்டுவதாக, உணர்வுட்டுவதாக நினைத்துக் கொண்டு, 'தம்பி, நீ பெரியவன் ஆகி என்ன படிக்கிறப் போறே' என்றார். அவனோ, 'உனக்கு ஏன் தாத்தா அந்தக் கவலை. அதுக்குள்ள நீ செத்து சாமி ஆகி விடுவே' என்றானே பார்க்கலாம்.

பல நேரங்களில் நாம் அப்படித் தான் எதிர்காலத்தைப் பற்றி அளவுக்கு மீறிக் கவலைப் படுகிறோம். சில நேரங்கள் தான் நாம் அப்போது இருக்கப் போவதில்லை என்பது உரைக்கிறது.

மகன் முருகன் அப்பா சிவனுக்கு ஓம் என்ற மந்திரத்தின் பொருளை விளக்கியது இதிகாசக் கதையோ (mythology), உருவகக் கற்பனையோ (parable), குறியீட்டுப் புனைவோ (symbolic story) ஆனால் அன்றாட வாழ்வில் அது நடந்து கொண்டு தான் உள்ளது. ஆங்கிலத்தில் கூட 'பிள்ளை மனிதனுக்குத் தந்தை' (child is the father of man) என்ற பழமொழி உணடு.

இது போன்ற சுவையான நிகழ்ச்சிகள் அன்றாடம் வீட்டுக்கு வீடு குடும்பத்துக்குக் குடும்பம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. மற்றவர்களும் பகிர்ந்து கொள்ளலாமே.

Sunday 17 April 2011

அறிவே செயலே அதுவே

2005-07-26

அறிவே செயலே அதுவே

அவன்:


அப்பனே, முருகா, ஷண்முகா, எம்பெருமானே! என்னை மட்டும் காப்பாத்துடா!
இவன்:


சுயநலக் கிருமி, மத்தவங்க எல்லாம் வாழ வேண்டாமா?
அவன்:


டேய், அடுத்தவங்களக் கெடுத்து என்னை வாழ வைக்கவா கேட்டேன்
இவன்:


'என்னை மட்டும்'ன்னும் கேட்டியே, அதுக்கு என்ன அர்த்தமாக்கும்?
அவன்:


அடேய்! எழுந்து பல்லு விளக்கு முன்னே இவ்வளவு ஆராய்ச்சி தேவையா? வெளியே வாடா!
இவன்:


அழிவறையில் உள்ளதடா உலகம் - அதன்
கழிவறைகள் காட்டுமடா கலகம், வயிற்றுக் கலகம்
அவன்:


போதுமடா புலவா! 'எச்சத்தாற் காணப்படும்'ன்னார்1 வள்ளுவர். மனிதரின் முடிவும் எச்சமும்2 மண்ணுக்கு நல்லது.

[1 தக்கார் தகவிலார் என்பத வரவர்
எச்சத்தாற் காணப் படும் (திருக்குறள்: 114 அதிகாரம்: 12 நடுவுநிலைமை)
இவன்:


கழிப்பறையில் பொறக்குமடா ஞானம் - அதை நீ
விழிப்புடனே குறித்திடவும் வேணும்
அவன்:


சரி சரி, புத்தகத்தோடு போனாலே வெளியே வர நேரமாகுது. இன்னும் பேப்பர், பேனா எடுத்திட்டு போனா கிழிஞ்சுடும். அப்பாடா, ஒரு வழியா வெளியே வந்தியா. என்ன சித்தர் பாடலா? காலையிலேயே ஞானம் வழியுது.
இவன்:


ஏன், நாங்க பாடக் கூடாதா? ஆத்திரத்தில் வந்த சாத்திரமா? போ, போ.
அவன்:


உள்ளே போக வேண்டியது உள்ள போகனும்; வெளியே வர வேண்டியது வெளிய வரனும். இல்லேன்னா தகராறு தான். ஏன்னு கேளு, நேத்து ஒரு சித்தர் பாடல் படிச்சேன். அதான் நீ பாடுனது அதே மாதிரி உளறலா தெரிஞ்சுது.
இவன்:


எங்கே எடுத்து விடு, அந்த சித்தர் செப்பியதை.
அவன்:


மாட்டிக் கிட்டே, யாம் பெற்ற குழப்பம் நீயும் பெறுக. கேளு இதை...




அறிவே செயலே அதுவே
(காப்பிய சித்தர் காப்பு)
1


அறிவே செயலே அதுவே
அறமே மறமே அருளே
2


உருவே உணர்வே ஒளியே
கருவே பொருளே கலையே
3


விரிவே வெளியே வினையே
கரியே நெருப்பே சினையே
4


அணுவே அலையே அன்பே
திணிவே திரிவே தெளிவே
5


விண்ணே மீனே விசையே
எண்ணே எழுத்தே இயலே
6


மலையே மடுவே மாண்பே
இலையே கிளையே இசையே
7


கண்ணே செவியே கதையே
பண்ணே பாட்டே பகிர்வே
8


மரமே விதையே மகிழ்வே
உரமே உளரே அரணே
9


நீரே நிலமே நினைப்பே
ஏரே ஊரே இணைப்பே
10


சீரே செறிவே சிறப்பே
பாரே பரிவே பரப்பே
11


தேரே தெரிவே திறப்பே
கூரே குறியே குவிப்பே
12


கல்லே மண்ணே கனிவே
புல்லே புழுவே புகழே
13


அகமே புறமே அலைவே
பகலே இருளே பண்பே
14


வயலே வளியே வாழ்வே
புயலே பொழிவே வளமே
15


உயிரே உழைப்பே உயர்வே
வெயிலே தணிவே விளைவே
16


விருப்பே வெறுப்பே விடையே
பிறப்பே இறப்பே விழிப்பே
17


சொல்லே மொழியே சுவையே
இல்லே இருப்பே இனிதே
18


அமிழ்தே ஆறே அழகே
தமிழே குறளே வழியே
19


காடே நாடே கரையே
வீடே உறவே விதியே
20


கதிரே மழையே களிப்பே
அதிர்வே திரளே அளிப்பே
21


அருகே தொலைவே துணையே
திருவே திறமே திணையே
22


செடியே கொடியே இனமே
முடிவே முதலே ம‌னமே
இவன்:


பொறு பொறு, கொஞ்சம் மூச்சு விடு. ஒரேடியா அடங்கிடப் போவுது.
அவன்:


இன்னும் கேளு
23


தருவே தணலே நிழலே
எருவே பயிரே பழமே
24


வடிவே உள்ளே வளர்ப்பே
விடிவே விந்தே வியப்பே
25


கடலே முகிலே ஈர்ப்பே
அடலே ஒலியே ஆர்ப்பே
26


வெடிப்பே துடிப்பே விசும்பே
இடிப்பே மடிப்பே உலகே
27


புவியே பொன்னே பொறையே
கவியே அணியே உரையே
28


வாளே கோலே ஏறே
தோளே நட்பே வீறே
29


முள்ளே மலரே புள்ளே
கள்ளே கரும்பே தெள்ளே
30


எள்ளே எறும்பே தேனே
வள்ளே வரையே வானே
31


அங்கே இங்கே எங்கே
அன்றே இன்றே என்றே
32


அய்யே அம்மே அண்ணே
மெய்யே பொய்யே உய்யே
33


கையே காலே சிறகே
பையே காற்றே விறகே
34


ஆணே பெண்ணே அளவே
ஊணே ஓடே உளமே
35


அருவே அடவே அதியே
மருவே மடமே மதியே
36


ஒன்றே பலவே சுழியே
நன்றே நலமே பழியே
37


தாயே தனியே நதியே
காயே கனியே கதியே
38


எலியே புலியே பிழைப்பே
வலிதே மெலிதே இழப்பே
39


சடையே இடையே கடையே
படையே தலையே பகையே
40


ஈடே இடரே போரே
பாடே தீர்வே நேரே
41


புலனே பொறியே நடப்பே
கலனே பாயே கடப்பே
42


புனையே துடுப்பே போக்கே
மனையே துறப்பே வழக்கே
43


முறையே முடியே அடியே
பிறையே பீடே பிடியே
44


குறையே குணமே கூற்றே
மறையே நிறையே இறையே!
இவன்:


முடிஞ்சுதா, இது என்ன குலுக்கல் கவிதையா?
அவன்:


அப்படின்னா?
இவன்:


காகிதத் துண்டுகளில் சொற்களை எழுதி உருளையில் போட்டுக் குலுக்கி மூன்று மூன்று சொற்களாக எடுத்துக் கோர்த்துக் கவிதை வரிகளை உருவாக்குவது.
அவன்:


ஒரு வகையில் அப்படித் தான். உருளையில் குலுக்குவதற்குப் பதிலாக உள்ளத்தில் குலுக்கி எடுத்தது.
இவன்:


அது எப்படியோ போகட்டும். பாடலுக்குப் பொருள் என்ன?
அவன்:


இந்தா அடிக் குறிப்பை நீயே படி.
இவன்:


அருளியவர்: காப்பியச் சித்தர் ('கடிச் சித்தர்' என்றும் அழைப்பர்)
தொடக்கம்: பிண்டம்
அடக்கம்: அண்டம்
காலம்: இடைக்காலம் (இறந்த காலத்திற்கும் எதிர் காலத்திற்கும்)
பொருள்: அவரவர் மனம் போல.பொருளை விளக்கினால் 'காப்பின்' ஆற்றல் போய் விடும். பொருள் விளங்கா விட்டால் 'வாழ்வின்' ஆற்றல் போய் விடும். மேலும் உரையாசிரியர்கள் இல்லாத சொல்லாத பொருளை ஏற்றிக் கூற‌ வழி வேண்டாமா?
பயன்: இதைத் தவறாமல் நாள் தோறும் 108 முறை சொல்லி நேரத்தை வீணடித்து வருபவர்களுக்குப் படிப்படியாக எல்லாத் துன்பங்களும் வந்து சேர்ந்து முடிவில் வீடு பேற்றிலிருந்து தப்புவர்!

அடிக் குறிப்பு, தலைக் குழப்பம்! உரையாசிரியர்கள் வேறு இன்னும் குழப்புவார்கள்.
அவன்:


எனக்கு வேறு எதுவும் புரியல. அந்தத் தலைப்பு மட்டும் ஒரு மாதிரி புரியுது. அறிவே செயலே அதுவே.
இவன்:


அறிவு, செயல் சரி. அது என்ன 'அதுவே'?
அவன்:


எதையும் அறிந்து இருப்பது முதல் நிலை. அறிந்ததைச் செயல் படுத்துவது இரண்டாம் நிலை. பிறகு செயல் வேறு செய்பவர் வேறு என்று இல்லாமல் அதுவாகவே மாறி விடுவது மூன்றாம் இறுதி நிலை.
இவன்:


எடுத்துக் காட்டாக உளறல் எது தெரிந்து இருப்பது, உளறுவது, உளறலாகவே மாறி விடுவது - ஏன்'டா விடியும் போதே இப்படி! யாருடா இந்த சித்தன் - பித்தன்?
அவன்:


பா'த்தியா, சித்தர் என்றாலே சித்தனாகத் தான் இருக்கணுமா? இவர் சித்தள்! சரியான பால்பேதியா இருக்கியே!
இவன்:


பால்பேதியா? அடப்பாவி, செக்ஸிஸ்ட்(sexist) என்று புரியும் படிச் சொல்லக் கூடாதா?
அவன்:


தமிழின் ஆற்றலைப் பாரு. எப்படிப் புதுப் புதுப் சொற்களை உருவாக்கிக் கொள்ளும் படி வேர்ச் சொற்களின் வளம்!
இவன்:


தமிழ் கிடக்கட்டும், இப்ப கொஞ்சம் அமிழ்துக்கு வழியப் பாரு. காலையிலேயே குலுக்கலும் கலக்கலுமா இருக்கு. நீ வேற 'பால்பேதி'ன்னு கிட்டு. சித்தள் உளறலே உள்ளத்துக்குப் பேதி மாறி இருக்கு.
அவன்:


ஆமா, உடலுக்குப் பேதி குடலைச் சுத்தம் செய்யும். உள்ளதுக்குப் பேதி மனதைச் சுத்தம் செய்யும்.
இவன்:


உண்மை தான், ஆனா இப்ப செவிக்கு உணவு அதிகமாகியும் காதை அடைக்குது. வயித்துல பசி அதிகமாகியும் காதை அடைக்குது. அதை கவனி முதல்ல.





அய்யோ மோசம் என்றே வெம்புவார்

2011-03-19


ஒரு புத்தகக் கடையில் நுனிப் புல் மேய்ந்து கொண்டு இருந்த போது சுவைத்தது:

"ஒரு பெண், ஆண் எப்படியும் திருமணத்திற்குப் பிறகு (தான் விரும்பும் படி) மாறி விடுவான் என்று நம்பிக் கொண்டு திருமணம் செய்து கொள்கிறாள். ஓர் ஆண், பெண் திருமணத்திற்குப் பின் (இப்போது தான் விரும்பும் படி இருப்பதிலிருந்து) மாறி விட மாட்டாள் என்று நம்பிக் கொண்டு திருமணம் செய்து கொள்கிறான். ஆனால் இருவர் நம்பிக்கைகளும் பொய்த்துப் போகின்றன."

ஆணும் பெண்ணும் நம்புவார் - அய்யோ
மோசம் என்றே வெம்புவார்

வெம்புதல் = உள்ளுக்குள்ளேயே புழுங்கிப் புலம்பிச் சாதல்

Saturday 16 April 2011

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

2008-06-19

ஆனி 5, திருவள்ளுவர் ஆண்டு 2039

இன்று மதிய இடைவேளையில் காலாற‌க் கால்நடையாகச் (அதாவது கால் போன போக்கில்) சென்ற போது மனம் (தான் போன போக்காக) 'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே' (திரைப்படம்: திருவருட் செல்வர்) என்ற பாடலை முணுமுணுத்துக் கொண்டு வந்தது. அதன் வரிகள் மனநிலைக்குப் பொருத்தமாக இல்லாததால் அடுத்து 'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான், அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்' என்ற பாடலுக்குத் தாவியது. அதுவும் நிறைவைத் தராததால் அதன் தொடக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு தானே ஒரு பாட்டை இட்டுக் கட்டியது. அதுவே இதுவே!


ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அனைத்து மாகவே தெரிகின்றான்

இருக்கிற தென்பதும் அவனே - இறை
இல்லை என்பது
ம் அவளே
கருத்தும் காட்சியும் அதுவே - அதைக்
கண்டதும் விண்டதும் ஒன்றே                                   (ஆண்டவன்...)

வெறுப்பிலும் விருப்பிலும் விளங்கும் - பெரும்
வெற்றியும் தோல்வியும் புரியும்
வறுமையும் செழுமையும் வாழ்வே - அதன்
வலிமையும் மெலிமையும் சார்பே                           (ஆண்டவன்...)


பிறப்பும் இறப்பும் கனவே - அறிவுப்
பேதைமை கூர்மைக்கு உறவே
சிறப்பும் செல்வமும் மனமே - காணும்
சிறுமையும் பெருமையும் தனதே                             (ஆண்டவன்...)

சிரிப்பதும் அழுவதும் சிவமே - எல்லாச்
செயல்பொருள் சக்தியின் வடிவே
தரிப்பதும் மரிப்பதும் தாயே - தானே
தன்னிடம் திரும்பிடும் சேயே                                    
(ஆண்டவன்...)

கொடுப்பதும் கெடுப்பதும் குணமே - குறைக்
கூறிச் சினமுறும் விசைப்புலமே
நடுமையும் கொடுமையும் நட்பே - நம்பி
நடிப்பதும் பார்ப்பதும் நாமே                                         (ஆண்டவன்...)

அணைப்பதும் உதைப்பதும் அறமே - தொடர்
ஆக்கமும் அழிவும் அழகே
பிணைப்பதும் பிரிவதும் மருளே - என்றும்
பிரியாதன சேருவதும் அருளே                                    (ஆண்டவன்...)

தருவதும் பறிப்பதும் இறையே - தன்னைத்
தொலைத்தே தேடிடும் நிறையே
கருவே காயே கனியே - விரிந்த‌
காலமிடம் வினைபொருள் வெளியே                         (ஆண்டவன்...)

வருவதும் போவதும் இயல்பே - மாற்றி
வைத்திட நினைப்பது துயரே
உருவிலும் அருவிலும் உளதே - ஒன்றி
உணர்வதும் ம(றை)றப்பதும் ஒளியே                       (ஆண்டவன்...)

Friday 15 April 2011

அத்வைதி காணாத கனவு

2011-04-15

"ஓர் இரகசியம்"

"என்ன அது?"

"என்னைத் தவிர எதுவுமே இல்லை"

"அப்படியா?"

"ஆமாம்"

"அப்படின்னா இதை யார்க் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கே"

"என் கிட்டதான்"

"என் கிட்டதானா?"

"ஆமா, என் கிட்டதான்"

"சரி அப்படியே இருக்கட்டும். ஒருத்தர் மட்டுமே இருக்கும் போது என்ன இரகசியம் இருக்கு. வேறு யாருக்கும் தெரியாம இருக்க வேறு யாரும் இல்லாத போது அது எப்படி இரகசியமாகும்?"

"அது என் கிட்டேயே நான் மறைச்சுக் கிட்ட இரகசியம்"

"சரி தான், பாம்பு தன் வாலைத் தின்னுட்டு ஏப்பமும் விட்டு தாம்!"

"என்ன உளர்றே?"

"நானா, நீயா? உன் கிட்டே இருந்து நீ மறைச்சுக் கிட்ட இரகசியம், கஞ்சிக்குக் கட்டை விரலைக் கடிச்சுக்கிட்டுக் குடித்தது போல இல்ல இருக்கு"

"இப்ப ரொம்ப உளர்றே. கஞ்சிக்கு வெங்காயத்தக் கடிச்சுக்கலாம், பச்சை மிளகாயக் கடிச்சுக்கலாம். கட்டை விரலை எப்படிக் கடிச்சுக்க முடியும்?"

"நீயே உன் கிட்டே இருந்து இரகசியம் வச்சுக்க முடியும் போது கஞ்சிக்குக் கட்டை விரலைக் கடிச்சிக்கலாம்."

"நீ அப்படி வர்றியா?"

"ஆமா, நான் அப்படித் தான் வர்றேன்"

"மறைச்சுக்கறதும் மறக்கறதும் ஒரே மாதிரி தானே"

"எந்த மாதிரி?"

"இரண்டாலயும் அது தெரியமா போயிடுதுன்ன‌ மாதிரி"

"சரி, அப்படியே வைச்சுக்குவோம். இப்ப அந்த மறைச்சுக்கிட்டதோ அல்லது மறந்ததோ என்ன ஆயிடுச்சு?"

"மறைச்சுக்கிட்டேன்னு தெரிஞ்சு போச்சு. மறந்துட்டேன்னு ஞாபகம் வந்திடுச்சு"

"அப்படின்னா இனிமே அது இரகசியம் இல்லையே"

"திரும்பவும் மறைச்சுக்கிட்டேன்னா, மறந்துட்டேன்னா அப்ப அது இரகசியம் ஆயிடுமில்ல"

"அது எப்படி முடியும். இப்ப தான் உனக்கு நினைவுக்கு வந்துடுச்சில்ல. எப்படி மறைக்க முடியும் அல்லது மறக்க முடியும்?"

"அதுக்கு ஒரு வழி இருக்கு"

"என்னது?"

"என்னை நானே கொன்னுடுவேன்."

"ஐயோ தலை சுத்துது. உன்னை நீயே கொல்லும் போது நீ எங்க இருப்ப?"

"இரகசியத்தை மறைச்சிட்டு, மறந்திட்டு நான் புதுசா பிறந்து கிட்டு இருப்பேன்"

"எனக்கு வர்ற குழப்பத்துக்கு உன்னை நானே கொன்னாதான் தீரும்."

"அதுக்கு நான் உதவி பண்றேன். உன்னை நானே கொல்றேன். என்னா நீ இரகசியத்த தெரிஞ்சுக்கிட்டே. உன்னை உயிரோடு விடக் கூடாது."
                    - சரியார்
================================================================
Things are not what they seem; nor are they otherwise.
    - Lankavatara Sutra
பொருள்கள் தோன்றுவதும் போலும் இல்லை; மாறாக வேறு எதுவாகவும் இல்லை.

Thursday 14 April 2011

தைக்காத 'தை' - குத்தாத சித்திரை

2011-04-14

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி.

கோளத்தில் (sphere) தொட்ட இடமெல்லாம் மையம் என்பது போல் காலச் சுழற்சியில் ஒவ்வொரு கணமும் (புத்தாணடுப்) பிறப்பே.

Everyday is a new life for a wise man என்பது பழமொழி.

'தை' என்றாலும் 'சித்திரை' என்றாலும் புத்தாண்டு (புது வாழ்வு / நல்லாட்சி / மாற்றம்...) புது சிந்தனை / மனப்போக்கு இல்லாமல் வரப் போவதில்லை.

புது மனப்போக்கு (பரவலாக மக்களிடம் அத்தகை மாற்றம்) வருவதில் பொறுப்பு 'தை'யைப் போற்றுவோருக்கும் 'சித்திரை'யைப் போற்றுவோருக்கும் உள்ளது.

'தை' என்பதைத் தமிழ் ஆண்டுப் (திருவள்ளுவர் ஆண்டு) பிறப்பு என்றும் 'சித்திரை' என்பதைத் தமிழ் இந்து மத ஆண்டுப் பிறப்பு எனவும் கொண்டாடலாம். வணிகர்களுக்கும் இரு மடங்கு இலாபம் கிட்டும், பணம் முடங்காது புழங்கும். ஓரிடம் விட்டு ஓரிடம் சென்று கொண்டே இருப்பதால் (இருக்க வேண்டும் என்பதால்) தான் பழந்தமிழர் 'செல்வம்' (செல்வோம் - சென்று கொண்டே இருப்போம்) என்று பெயரிட்டனர்.

கிறித்துவத் தமிழர் ஆங்கில ஆண்டுப் பிறப்பை தான் கொண்டாடுகிறார்கள். அது போன்றே பிற மதத் தமிழரும். தமிழருக்கு என்று மதம் கடந்த ஒரு விழாவாகத் 'தை' தமிழ் ஆண்டாக, திருவள்ளுவர் ஆண்டாகப் பின்பற்றப் படலாம். ஒன்றை மறுத்தும் அழித்தும் தான் மற்றது வர வேண்டும், வளர வேண்டும் என்பதில்லை.

அது காலாவதியான சிந்தனை என்பதை எல்லோரும் உணர்வோமாக. உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்தும் ஒன்றுக்கு ஒன்று வழங்கியும் வாழ வைத்தும் பல்கிப் பெருகுகின்றன என்பதும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டும் விழுங்கியும் வாழ்கின்றன என்பதும் உண்மை. முந்தையதே பெரு அளவில் இயற்கையில் இருக்கிறது/இயங்குகிறது என்பது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவு.

வேற்றுமை இருப்பதால் தான் ஒற்றுமை தேவைப்படுகிறது. கருத்து வேறுபாடுகள் இருப்பதால் தான் ஒத்துப் போவது அவசியம் ஆகிறது. இந்த வேறுபாடு ஒழிந்தால் எல்லாம் ஒரே மாதிரி ஆகி விடாது. சைவமும் வைணமும் போரிட்டு ஓய்ந்தன. 'வடகலை'யும் 'தென்கலை'யும் வாதிட்டு அடைந்தன. வேறுபாடுகள் இயற்கை. அவற்றைப் புரக்கவும் போற்றவும் வேண்டும். அவற்றை ஒத்து இயங்க வைக்கவும் வேண்டும். அது தான் நம் முன் உள்ள சவால்.

ஒற்றுமை என்ற பெயரில் எல்லோரும் மழிக்கவும் வேண்டாம், நீட்டவும் வேண்டாம். அதே போல் வேறுபாடுகளைப் புரப்பது என்ற பெயரில் பொது 'அடையாளம்' அற்றுப் போரிட்டு அழியவும் வேண்டாம்.

- சரியார்
================================================================
2011-04-14

ஆண்டுகள் புதிதாய் வருவதும் போவதும்
                 காலச் சுழற்சியை கட்டும் முயற்சி!
கூண்டுகள் போட்டு எண்ணத்தை முடக்கும்
                 பாழாய்ப் போன பழக்கம் விட்டால்
வண்டுகள் சூழும் சோலையைப் போல
                 வாழும் கலையே வண்ண மயமாகும்!
     - தமிழ்மணி
================================================================
2011-04-14

தாண்டுவோம் வாருங்கள் தடைகளை மீறுவோம்
            தமிழ்மணிச் சாலையில் தரையில் பறப்போம்!
  - சரியார்
கவிதை என்ற பெயரில் நாங்கள் எப்படியும் உளறலாம்; தரையிலும் பறப்போம், தண்ணிரிலும் நடப்போம், விண்ணிலும் குந்துவோம், மண்ணிலும் நீந்துவோம்!

தென்னை மரத்தில் ஒரு பிள்ளை

2011-04-14

தென்னை மரம் ஏற ஆள் கிடைக்காததால், கோயம்புத்தூரிலிருந்து  வாங்கிய கருவியில் நான் மரம் ஏற பயிலுவதை காண்க.- பிள்ளை
வள்ளலாரின் பெற்றோர் வள்ளலாரின் இரு அண்ணன்மார்களுக்கு சபாபதி (சைவம்) என்றும் பரசுராமன் (வைணவம்) என்றும் பெயரிட்டனர். அதே போல் வள்ளலாரின் இரு அக்காமார்களுக்கும் சுந்தரம்மாள் (வைணவம்) என்றும் உண்ணாமுலை (சைவம்) என்றும் பெயரிட்டனர். ஐந்தாவதாகப் பிறந்த குழந்தைக்கு (வள்ளலார்) இரு சமயத்தையும் சமப்படுத்தி இராமலிங்கம் (இராமர் - வைணவம். லிங்கம் - சைவம்) என்று பெயரிட்டனர். (ஆதாரம்: 'வள்ளலார் வாழ்கிறார்' பக்கம் 4 மு.பாலசுப்ரமணியன் http://www.vallalar.org/)

நம் குழுவில் உள்ள, என் பல்லாண்டு காலக் கெழுதகை நண்பன், பிள்ளையின் பெற்றோர்கள் அப்படிச் சிந்தித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவனுக்கு ஆறுமுகப் (சைவம்) பெருமாள் (வைணவம்) பிள்ளை என்று பெயரிட்டுள்ளனர். பிள்ளை எங்கள் குழுவில் எனக்கு இணையான மற்றொரு கிறுக்கு. இப்போது (50 வயதில்) மரமேறும் விடலைப் பிள்ளை!

அந்த ஒளிப்படத்தைப் பார்த்ததும் என் கிறுக்கை நான் காட்ட வேண்டாமா? ஒரு கிறுக்கு மேலே. மறு கிறுக்கு கீழே.

=====================================================
ஆறுமுகத்துக்கு ஆறு பத்திகள் (paragraphs)

ஆறுமுகப் பத்தி (பக்தி) 
சாறுமிகு உத்தி
வாழ்ந்திடுக பற்றி
சூழ்ந்திடுமே வெற்றி
=====================================================
தென்னை மரத்தில் ஒரு பிள்ளை
தரும் தீந்தமிழ் நற் கள்ளை

தன்னை அறிந்த மரமேறி
மண்ணைப் புரிந்த உழவாளி
உன்னை ஊக்கும் குணமேறி
உலகை உயர்த்து உளவாளி (தென்னை மரத்தில்...)

[உழவாளி - உழவுத் தொழிலை ஆளுக்கின்ற விவசாயி
உளவாளி - உ(ள்)ளத்தை ஆளுகின்றவன்]

புண்ணைச் சொறிந்தது போதும்
புதிய சிகிச்சைகள் கூறும்
கண்ணைத் திறந்து பாரும்
கனவுகள் நம் கைக் கூடும் (தென்னை மரத்தில்...)

திண்ணைப் பேச்சுகள் வேணும்
தேர்ந்த செயல்கள் தோணும்
பண்ணைப் புறத்தில் இடணும்
பட்டணப் புரத்தில் சுடணும் (தென்னை மரத்தில்...)

[கிராமப் புறத்தில் (பண்ணைப் புறத்தில்) மாற்றங்கள் வந்தால் அது நகரச் சுரண்டிகளைச் (பட்டண புரத்தில்) சுட்டு உலுக்க வேண்டும்.]

மண்ணை உழுதால் போதுமா
மரத்தின் நிழலில் வளருமா
விண்ணைத் தொழுதால் விளையுமா
வினைகள் பலவும் இணையுமா (தென்னை மரத்தில்...)

அன்னைத் தமிழ் சாகுமா
அயல் மொழியென் றாகுமா
தன்னைப் பேணும் தமிழரை
தாழ்ந்து போக வைக்குமா (தென்னை மரத்தில்...)

புன்னைக் குளிர்ச்சியை மடுப்போம்
பொட்டை வெயிலில் நடப்போம்
முன்னைக் குறைகள் விடுப்போம்
முதிர்ந்த‌ சாதனை முடிப்போம் (தென்னை மரத்தில்...)

[புன்னை மரத்தினடியில் குளிர்ச்சியாக இருக்கும்]

                    - சரியார்

Thursday 7 April 2011

எல்லாம் பிரம்மம் 5/5

2009-01-30

கால்பந்து, கிரிக்கெட் என்று விளையாட்டுகளுக்கு விதி முறைகள் இருப்பது போல் வாழ்க்கை விளையாட்டுக்கும் பிறப்பு, இறப்பு, வளர்ப்பு, இனப்பெருக்கம், பாதுகாப்பு, புகழ், இகழ், சொந்தக் காலில் நிற்பது, அறிவு, செல்வம், சாதனை, நீதி, நேர்மை, நாணயம், சமத்துவம், ஞானம், மெய், பொய், உழைப்பு, திருட்டு என்று எண்ணிறந்த விதி முறைகளை நமக்கு நாமே வழங்கிக் கொண்டு விளையாடுகிறோம்.

இந்த விளையாட்டை / வேதனையை நிறுத்த முடியவில்லையே என்ற ஏக்கம் / தேடல் நின்று விட்டால் (அதன் தன்மை புரிந்து விட்டால்) பிறகு ஒன்றும் இல்லை, எல்லாம் இருந்த படி இருக்கும் என்றாலும் மாறியிருக்கும். சிரிப்பதும் அழுவதும் சிவமே!

அனுபவம்: மேற்கண்ட மூன்றுமே அனுபவங்கள் தான். என்றாலும் இவற்றை மீறிய ஓர் அனுபவம் 'நான் பிற' என்ற பிரிவினை உணர்வு, அதுவாக வந்தது (எல்லாமே அதுவாக வந்தவையே), அதுவாகப் போய் விடுவது. இது நீடித்து அமிழ்ந்து / அடங்கி இருப்பின் அனுபவத்தைச் சொல்லவோ கேட்கவோ வழியேயில்லை. இது நாக்கில் உணவின் சுவை போல் சில நேரம் நின்று குறைந்து மறையும். பின் உண்டால் மீளும்.

பெரும்பாலான, மின்னல் கீற்று போன்ற கால அளவிலான அனுபவங்கள் கோளாறுகளாக (aberrations) புறக்கணிக்கப் படுகின்றன என்று தோன்றுகிறது. சற்று நீடித்தவை, அதன் விளைவைப் பொறுத்து, மன நோய்களாக கருதப் படுகின்றன. சிலர் 'நானே கடவுள்' என்று கதை விட ஆரம்பித்து விடுகிறார்கள் (அப்படியென்றால் எல்லோரும் கடவுளர்கள் தான் என்பது புரிகிற அளவுக்கு வராமல்).

சிலர் எல்லாம் தனக்குத் தெரிந்து விட்டதாய் நினைக்கிறார்கள். சிலர் தனக்கு எதுவும் தெரியவில்லை என்கிறார்கள். சிலருக்கு அனுபவத்தின் தன்மை (மற்ற எல்லா அனுபவங்களைப் போன்றதே) புரிகிறது. சிலர் பயிற்சியால் யார் வேண்டுமென்றாலும் இவ்வனுபவத்தைப் பெறலாம் என்கிறார்கள். சிலர் பயிற்சி செய்ய யாரும் இல்லை என்று கேலி செய்கிறார்கள். இதில் எதுவும் உண்மையில்லை. எல்லாமே உண்மை தான். எல்லாம் பிரம்மம்!

சுருக்கமாகச் சொன்னால் பேசப்படும் கருத்து உண்மையா பொய்யா என்பது தான் விளையாட்டு (game, play). விளையாடுவது தான் (player, actor) பேச்சு (சிந்தனை, சொல், எழுத்து, செயல்...). ஆக, 'பேச்சு' தான் உண்மை என்கிறாயா... சரி தான், விளையாட்டு ஆரம்பித்து விட்டது! ['பேச்சு தான் (அ) நான் தான் (அ) அறிவுணர்வு தான் 'உண்மை' என்பதும் ஒரு கருத்தே. அதை நிரூபிக்கப் போனால் அதுவும் விளையாட்டு ஆகி விடுகிறது].

கருப்பைச் சிறையில் பத்து மாதம் - பெரும்
கருத்துச் சிறையில் பல நூறு மாதம்
கருத்து 'நான்', காணாச் சிறையாகும் - அதைக்
காணும் ஒளியே நானாகும்!

('நான்' என்ற கருத்து கண்ணுக்கு, அறிவுக்குப் புலப்படாச் சிறையாகும். அப்படி அதை அறியும் ஒளியே 'கருத்தாக' மாறாத நானாகும். அதைக் அந்த ஒளியைக் கருத்தாக மாற்றிச் சிந்திக்கவோ, பேசவோ முயன்றால் அதுவும் 'கருத்து'ச் சிறையாகி விடும்)

அன்புள்ள,
வே.தொல்

பின் குறிப்பு: பெரியார் தொண்டன் (பகுத்தறிவு) ரமணர் அடியான் (மெய்யறிவு) ஆகி விட்டதாகத் தோன்றும். உண்மைக்கு வழி கிடையாது (Truth is a pathless land - JK). அல்லது எவ்வழியும் உண்மைக்கு வழியாகலாம். பெரியார் வழி வராவிடில் ரமணரைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம். 'அறிவுக்கு விடுதலை தா' என்ற பெரியார் வழி ரமணரின் 'அறிவுக்கு உன்னிடமிருந்து விடுதலை கொடு அல்லது நீ அறிவு மாயையிலிருந்து (பொருளல்லவற்றை பொருளாக உணரும் மருள்) விடுதலை பெறு' என்று விளங்கியது.

விடுதலை என்பது தலை / தளை (துன்பம், அடிமைத் தனம், இக்கட்டு, விலங்கு) விடுபடுதல்.

கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளை கொடுத்து உன் அருளைப்
பார்த்தவன் நான் என்னை முகம் பாராய் பராபரமே
            - தாயுமானவர் : பராபரக்கண்ணி

கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்
பற்று மதப்பேயின் பால் உய்ந்தார் - சுற்றுபல‌
சிந்தைவாய் நோய் உய்ந்தார் சீர்தேடி ஓடல் உய்ந்தார்
உய்ந்தது ஒன்று அன்று என்று உணர்.
            - ரமணர் : உள்ளது நாற்பது

[நூல்கள் கற்றும் (ஆன்ம விசாரணையினால்) அகந்தை அடங்கப் பெறாதவர்களை விடக் கல்லாதாரே பிழைத்தவர்கள், பிடித்துக் கொள்ளும் மதமென்னும் பேயினின்றும் தப்பினார்கள். சுழல்கிற பல சிந்தை, வாக்கு இவ்விரண்டின் நோயினின்றும் தப்பினார்கள். சீரைத் (செல்வத்தை) தேடி நாடு எங்கும் அலைதலைனின்றும் தப்பினார்கள். இப்படியாகக் கல்லாதவர்கள் தப்பின கேடுகள் ஒன்று அல்ல, எத்தனையோ என்று உணர்.]

எல்லாம் பிரம்மம் 4/5

2009-01-30

ஒன்னாயிருக்கக் கத்துக்கனும் - அந்த‌
உண்மையச் சொன்ன ஒத்துக்கனும் (திரைப்படப் பாடல்)

Being ONE (ஒன்னாயிருக்க‌) is remembering ONENESS.

சினிமா பார்க்கும் போது அதில் ஈர்க்கப்பட்டு நம் உடல் மனம் அதனால் பாதிக்கப் படுகிறது. சட்டென்று இது நடிப்பு, போலி என்ற நினைவு வருகிறது. மீண்டும் காட்சிகள் (நடிப்பு, வசனம், பாடல், இசை...) நம்மை மறக்கடிக்கின்றன. இரண்டும் மாறி மாறி வந்து போகின்றன.

நனவு வாழ்க்கையிலும் அன்றாடம் அப்பா, மகன் (அம்மா, மகள்), நண்பர், ஊழியர் எனப் பல வேடங்களில் மாறி மாறி அவ்வவ்வேடத்திற்கு ஏற்ப இயங்குகிறோம். எந்த ஒரு வேடத்தையும் மறுத்து / மறந்து அடுத்த வேடம் பூணுவதில்லை.

இயற்கையே எல்லாம் என்றால் நான் இயற்கையே. வேடங்கள் மாறுகின்றன. கல், மண், மரம், செடி, கொடி, புல், பூண்டு, விலங்கு, மனிதன்... ஒன்றை மறுத்து மற்றொன்று இல்லை. அப்பா, மகன், நண்பன், ஊழியன் என வேடங்கள் விரைவாக மாறுகின்றன. கல், மண், புல், பூண்டு, விலங்கு, மனிதன் என வேடங்கள் மெதுவாக மாறுகின்றன.


அத்வைதத்தால் அடங்கலாம். அறிவியலால் ஆய்வு செய்யலாம். பொது அறிவால் புரிந்து கொள்ளலாம். அனுபவத்தால் எய்தலாம். எப்படி வந்தாலும் உண்மை ஒன்று தான்.

அத்வைதம்: நான் யார் என்று விசாரணை செய்து அப்படிக் கேட்கும் / பார்க்கும் ஒன்று தான் நிலைத்த உண்மை, மற்றவையெல்லாம் அதன் / அதில் தோற்றங்களே. அது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட, பெயர், வடிவம், குணம், நிறத்திற்கு அப்பாற்பட்டத் தன்னைத் தானே அறியும் 'அறிவுணர்வு' ஆகும். அது இல்லாத போது மற்றெதுவும் இருக்கிறது, இல்லை என்று வரையறை செய்ய முடியாது, வெறும் நம்பிக்கையாகவே இருக்க முடியும். அந்நம்பிக்கையும் ஒரு தோற்றமே.

அறிவியல்: தற்செயல் மரபணு மூட்டேஷன் (random genetic mutation) + இயற்கைத் தேர்வால் (natural selection) எல்லா உயிர்களும் அதன் பண்புகளும் வந்தன என்றால் இன்றைய உலக, உயிரின நிலைக்கும் நினைப்புக்கும் அதுவே காரணம். 'நான்', 'எனது' என்று சொல்லிக் கொள்வதும் அதன் இயக்கமே. இதை எழுதுவதும் அதுவே. இந்த 'நான்' என்பதே அதன் விளைவு என்று 'நான்' முடிவு செய்ய முடியுமா? அப்படி முடிவு செய்ய முடியும் / முடியாது என்பதும் அதன் விளைவாகவே இருக்க முடியும். பரிணாம வளர்ச்சி என்பதை நம்புவதும் மறுப்பதும் கடவுளை நம்புவதும் மறுப்பதும் அதன் விளைவாகவே இருக்க முடியும். இதில் எந்த இடத்தில் / கட்டத்தில் மூட்டேஷன் + இயற்கைத் தேர்வு அல்லாத, மீறிய ஒரு கூறு எப்படி வர முடியும்?

இதற்கு மூட்+இதே (அறிவியல் வழி) தரும் பதில் emergence phenomena. என்றாலும் வேதியல் விதிகள் இயல்பியல் விதிகளுக்குக் கட்டுப்பட்டதே (மீறியவை அல்ல). உயிரியல் விதிகள் (கோட்பாடுகள்) வேதியல் விதிகளுக்குக் கட்டுப்பட்டதே (மகிழ்ச்சி, சோகம் என்பவை அடிப்படையில் வேதியியல் வினைகளே). சமூகவியல் உயிரியலுக்குக் கட்டுப்பட்டதே. Physics --> Chemistry --> Biology --> Psychology --> Sociology என்று நாம் (மூட்+இதே) கட்டிய கோட்டையிலிருந்து 'நான்' தப்ப வழியே இல்லை. அல்லது 'நான்' என்பதே இல்லை. அல்லது அந்தக் கோட்டையே 'நான்' தான். மூட்டேஷன்+இயற்கைத் தேர்வே நான். நானே மூட்+இதே.

பொது அறிவு: எல்லாம் இயற்கையே என்றால் நான் என்ற உணர்வும் செயலும் இயற்கையே. இன்ப துன்பங்கள் நம் கருத்தே. உடல் வலி / வேதனை (உயிர்த் துறப்பு) என்பது கூட எதற்காக என்பதைப் (நாம் கொண்டிருக்கும் கருத்தைப்) பொறுத்து இன்ப துன்பமாக உணரப்படுகிறது. தன்னுடைய நிலையாமையைத் தெரிந்து இருந்தும் மயக்கத்தில் ஆட்டம் போடும் 'நான்' என்று பழிப்பதும் இயற்கையே. அப்படித் தன்னைத் தானே உணர்ந்து தன் அழியா இருப்பைக் காண்பதும் அதுவே.

எல்லாம் பிரம்மம் 2/5

2009-01-30

நான் எழுந்து ஆடும் போது (சிந்தனை, பேச்சு, எழுத்து, செயல், சித்தி...) ஆடுவதெல்லாம் தனக்காகவே.

இல்லாத மேடை ஒன்றில்
எழுதாத நாடகத்தை நாம்
எல்லோரும் நடிக்கின்றோம்
எல்லோரும் பார்க்கின்றோம் (திரைப்படப் பாடல்)

இந்த உடல்‍ மனமே நான் என்று நம்பியிருந்தாலும் அதைச் சுட்டிப் பேசும் போது என் உடல், என் மனம் என்று தன்மை படர்க்கை வந்து விடுகிறது. இந்த self-reference சிந்தனையைக் கிளப்பித் தேடினால் தன்னிடமே வந்து முடியும். All words are pointers. But the word 'word' is a pointer to all words. Now, what is the first occurrence of word 'word' in the previous sentence pointing to?

ஒவ்வொரு அணுவிலும் 99.999999% வெட்ட வெளி என்று கணக்கிட்டுப் புரிந்து கொள்ளும் விஞ்ஞானி அறைக்குள் கதவு வழியாகத் தான் நுழைய முடியுமே தவிர சுவரில் புகுந்து உள்ளே போக முடியாது.

அத்வைத்தை நடைமுறையில் கடைபிடிக்க இயலாது (கடைபிடிக்க எதுவும் இல்லை) என்றும் ரமணர் கூறியுள்ளார்.

பிரம்மத்தின் (தன்) விளையாட்டில் பெரும்பாலும் ஒன்றை மறுக்க மற்றது நுழையும் / நிரப்பும். தீபாவளியை மறுக்கப் பொங்கல் கொண்டாட வேண்டும். மதத்தை எதிர்க்க அறிவியல் நுழையும். 60 பற்சக்கர ஆண்டு முறை போகத் திருவள்ளுவர் ஆண்டு தேவை. கடவுள் சிலைக்கு மாலையிடுவது தலைவர் சிலைக்கு மாலையிடுவதாக மாறும். முதலாளித்துவத்திற்கு சோசலிசம் மாற்று. அல்லவை தேய அறம் பெருகும்!

அவ்விளையாட்டுகளில் ஒரு விளையாட்டு இந்த விளையாட்டுகளை உணர்ந்ததாக அத்வைதம் பேசும் (மாயை என்பதே ஒரு மாயை). எல்லாம் ஒன்றை ஒன்று நிரப்புகின்றன (complementary / figure - background) என்று உளறும். தன்னில் தானே நிறைவதாய்க் கதை விடும். அவ்வளவுதான்.

அத்வைதத்தைப் பேசப் போனால் துவைதம் (pun intended) ஆகிவிடும். நீதி: அடிக்கக் கூடியவர்கள் பக்கத்தில் இருக்கும் போது அத்வைதம் பேசாதே. என்றாலும் புத்தர், ஏசுவிலிருந்து இன்றைய ஞானிகள் வரை ஏன் பேசினார்கள், பேசுகிறார்கள்? இது (துவைதக்) கேள்வி. இதைக் கேட்கும் ஒன்றே அத்வைதம்.

தமிழில் கேட்டல் (வேர்ச் சொல்: கேள்) என்ற ஒரே சொல் வாயால் கேட்பது (asking) என்றும் காதால் கேட்பது (listening) என்றும் பொருள் தரும். ஒருவனே வாயால் கேள்வியைக் கேட்கிறான், பிறகு காதால் பதிலைக் கேட்கிறான் என்பது தமிழில் பொதிந்துள்ளது. அப்படியானால் பதில் சொல்பவன் யார்? சொல்பவன் என்பதும் சொல் என்ற வேர்ச் சொல்லில் இருந்து வந்துள்ளது, சொல்பவனும் சொல்லும் (Thinker is the thought - J Krishnamoorthy) ஒன்று என்பதைக் குறிக்கிறது. நடைமுறையில் சொல்பவன் (கேள்வியோ, பதிலோ) சொல்லும் போது தான் சொல்பவனும் கேட்கிறான், கேட்பவனும் கேட்கிறான்.

"கேட்டவனே கேட்டான்
கேள்வியைக் கேட்டவனே
கேட்டான் பதிலை"

என்று ஹைக்கூ (அத்வைதக்கூ) எழுதலாம். பழந்தமிழ், முத்தமிழ், செந்தமிழ், இன்தமிழ், வன்தமிழ், தொல்(!)தமிழ்... வரிசையில் அத்வைதத் தமிழ் (அத்துவிதத் தமிழ்)! இந்த உளறல் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

எல்லாம் பிரம்மம் 3/5

2009-01-30

தமிழில் matter-க்கும் meaning-க்கும் பொருள் என்ற ஒரே சொல் இருப்பது அதன் ஒன்றிய நிலையைக் குறிக்கிறதோ? இந்தப் பார்வையில் 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (25. அருளுடைமை: 247)' என்ற வரி பல கருத்துகளைப் பொதிந்து உள்ளதாகப் படும்.

  1. செல்வம் இல்லாதவருக்கு இவ்வுலகத்தில் வாழ்க்கை கிடையாது.
  2. பொருளாக (வெறுமையை / பிரம்மத்தை) பார்க்கும் மாயை இல்லாதவருக்கு இவ்வுலகம் என்பதே கிடையாது.
  3. பொருள் பொதிந்த (meaningful) பார்வை இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை (ஏனெனில் பொருள் இல்லாமல் - without meaning - இவ்வுலகம் இல்லை)
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளாணாம் மாணாப் பிறப்பு (36. மெய்யுணர்தல்: 351)

"பொருளாக இல்லாததைப் பொருளாக உணருவதால் மாயை (மருள்) பிறக்கிறது" என்று நாம் புரிந்து கொள்ளலாம். திருவள்ளுவர் சரியாக இதே கருத்தை எண்ணி எழுதியிருப்பாரா என்று யாரும் உறுதி கூற முடியாது.

எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு பிரச்னை யாருக்கு என்று விசாரித்து அறிவது தான்.
            - ரமணர்

தேடல் தான் (எல்லா விதமான தேடல்களும்) விளையாட்டும் விலங்கும். மனச் சிறையில் எந்த அறையில் இருந்தாலும் அது சிறை தான். அதைத் தாண்டி எதுவும் இல்லை. உண்மையில் சிறையே இல்லை. சிறையான தோற்றமே உள்ளது. எனவே அதை உடைத்து வெளியே செல்ல 'வெளியே' என்று எதுவும் இல்லை. தேடல் தான் சிறையின் தோற்றம். அதன் உண்மை புரிந்து விட்டால் தேடல் நின்றாலும் நிற்கா விட்டாலும் மகிழ்ச்சியோ கவலையோ இருக்காது. அப்படியே மகிழ்ச்சியோ கவலையோ எழுந்தாலும் அதன் போக்கில் எழும், பிறகு விழும். விலங்கு(விலாங்கு) விளையாட்டாக விளங்கி விடும்.

எத்தனைச் சுற்று சுற்றினாலும் எங்கெல்லாம் சுற்றினாலும் எவ்வளவு காலம் சுற்றினாலும் புதிதாகச் சென்று (வந்து) சேர வேண்டிய இடம் இப்போது இருக்கும் இடமே.

We shall not cease from exploration
And the end of all our exploring
Will be to arrive where we started
And know the place for the first time.
            - T.S.Eliot (English poet)

"...great poetry reaches into a well of understanding that logic cannot trap"
            - Darryl Reanney (Author of 'The Music of Mind')

ஜெயமோகன் பிரம்மம் அத்வைதப் போலியைக் கிண்டல் செய்தாலும் அத்வதைத நகலை (சட்டை, பேண்ட், கர்சிப் எல்லாம் துணி; யானை, யானைப் பாகன் எல்லாம் பிரம்மம்) சுட்டிக் காட்டாமல் இல்லை. என்ன செய்வது? போலிகள் எங்கு தான் இல்லை? கோபால் பல்பொடியிலிருந்து அத்வைதம் வரை போலிகளின் கும்மாளத்திற்குக் குறைவில்லை. எல்லாம் பிரம்மம்!

உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு
எதுவும் நடக்குமா?
அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை
நிறுத்த முடியுமா?

எல்லாம் பிரம்மம் 1/5

2009-01-30

அன்புள்ள சண்முகசுந்தரம்,

வணக்கம்.

ஜெயமோகனின் 'விலாங்கு' படித்தேன், ரசித்தேன். பிரம்மம் என்பதற்குப் பதிலாக 'இயற்கை' (சிவம், ஆன்மா, இயற்கைத் தேர்வு - Natural Selection, Cosmic consciousness, nothing...) என்றும் போட்டுக் கொள்ளலாம்.

கல்கியின் பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் (வைணவன்) அத்வைதிகளுடன் வாதிடும் போது அவர்களுக்குச் செயல்முறையாக அத்வைதத்தின் ஓட்டையைப் புரிய வைக்க, 'பிரம்மத்தைப் பிரம்மம் திருச்சாத்து சாத்தப் போகிறது. என்னை நானே தடி கொண்டு தாக்கப் போகிறேன்' என்று கூச்சலிட்ட வண்ணம் கழியைச் சுழற்ற, அத்வைதிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைவர்.

பிரபஞ்சத்திற்கு வெளியே நின்று பார்த்தால் எதிர்காலம் இறந்த காலத்தைப் பாதிப்பதைக் காணலாம் என்று விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லியுள்ளார். ஆனால் அப்படி எங்கு நிற்பது? அதற்கும் முன்னால் பிரபஞ்சத்திலிருந்து என்னைப் பிரித்து எடுக்க வேண்டுமே! பிரம்மத்திற்கு (இயற்கைக்கு) வெளியே நிற்க என்ன உள்ளது?

'பெரியவா' சொல்லியுள்ள வேதங்கள், உபநிஷத்துகள் தேவையில்லாமல் குழப்பியுள்ளன என்றும் உள்ளது உள்ளபடி இருக்கும் மெய்ம்மை ஆன்மா (இயற்கைக்கு வேறு சொல்) ஒன்றே; அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றும் ரமண மகரிஷி பிரம்மம் கூறியுள்ளதே.

குழுப்புவதும் குழம்புவதும் தெளிவாக்குவதும் தெளிவடைவதும் பிரம்மமே என்று சொல்வதும் எழுதுவதும் கேட்பதும் படிப்பதும் பிரம்மமே என்பதை மறுப்பதும் கேலி செய்வதும் பிரம்மமே! இதை விட விலாங்கு வேண்டுமா?

Each man's death diminishes me,
for I am involved in mankind.
Therefore, send not to know
for whom the bell tolls,
it tolls for thee.
          - John Donne (1572 - 1631)

ஒன்றாம் உயிர் (இயற்கை), பல கோடி 'நான்' என எழுந்து, 'நாம்' என்ற நாடகமாகத் தோற்றமளிக்கிறது. நான் (தன்னலம்), நாம் (தந்நலம் - தம்மைச் சார்ந்தவர் நலம்) என விரியும். மேலும், 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும்'. அதனினும், 'எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை உடையதாய்' உயர்ந்து, பின் 'வானாகி, மண்ணாகி...' என்றும், 'கண்ணில் காண்பதுன் காட்சி... ... மண்ணொடு ஐந்தும் வழங்குயிர் யாவுமே அண்ணலே நின் அருள் வடிவாகுமே' என்று மலரும்.

'நான் எழுந்தால் சகலமும் எழும். நான் அடங்கினால் சகலமும் அடங்கும்'
            - ரமணர்

Tuesday 5 April 2011

விலங்குப் பண்ணை

விலங்குப் பண்ணை
ஜார்ஜ் ஆர்வெல்

கதைச் சுருக்கம்
2005-12-29

பண்ணை விலங்குகள் பண்ணையாரால் சுரண்டப்படுவதையும் இறைச்சிக்காகக் கொல்லப்படுவதையும் பொறுக்காது, பன்றிகளின் தலைமையில் பொங்கித் திரண்டு, பண்ணையாரை விரட்டி விட்டுப் புது உலகம் கண்டன.

ஆனால் இயற்கையாகத் தாங்களே தங்கள் தேவைகளைத் தேடிக் கொள்வதை மறந்து போன பண்ணை விலங்குகள், வேறு வழியின்றிப் பன்றிகளின் மேலாண்மையை ஏற்று, முன்போல் உழைத்தன. ஆனால் ஒருவரின் இலாபத்திற்காக அன்று. தங்கள் அனைவரின் ஒட்டு மொத்த நல வாழ்விற்காக. அதாவது, அவை அப்படி நினைத்தன. முதலில் கொண்டாட்டமாக இருந்த வேலைகள் பின்னால் தண்டனை போல் ஆயின.

பன்றிகள் அதிகாரத்தைச் சுவைத்த பின், தங்கள் மேல் நிலையைத் தக்க வைத்துக் கொள்ளவும் நியாயப் படுத்திக் கொள்ளவும் தேவையான சட்ட திட்டங்களை நடைமுறைப் படுத்தின. பண்ணையார் எந்த நேரமும் பண்ணையை மீட்கத் தாக்கக் கூடும் என்று விலங்குகளைப் பயத்தில் வைத்து வேலை வாங்கின. பண்ணையைக் காப்பாற்றத் தங்களைப் போன்றோர், மற்ற விலங்குகளை விடச் சிறப்பு நிலையில், வேலை செய்யாமல் இருந்து வழி நடத்த வேண்டியது அவசியம் என்றன.

மாறிய பன்றிகளின் மன்பான்மைக்கேற்ப, புரட்சியின் தொடக்கத்தில் கொண்ட கொள்கைகளும் முழக்கங்களும் இரவோடு இரவாக மாற்றப்பட்டன; மறைக்கப்பட்டன; திரிக்கப்பட்டன. எதிர்த்தவர்கள் பன்றியேயாயினும், துரோகப்பட்டம் (பண்ணையாருக்கு உதவியதாக) சூட்டப்பட்டு, வளர்ப்பு நாய்ப் பாதுகாப்புப் படையால், இருந்த சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டன.

உழைத்துக் களைத்த அடிமை விலங்குகள் முன்பு இருந்த நிலை தேவலாமா, இன்றைய நிலை நல்லதா என்று யோசிப்பதற்குக் கூடத் திறன் இன்றிக் கண்டதையும் சொன்னதையும் நம்பிக் கெட்டன.

பன்றிகள், முடிவில், பண்ணைப் பொருள்களை விற்க மனிதர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, பண்ணையார் வீட்டில் குடி புகுந்து தனித்து வாழ்ந்தன. ஓர் இரவு பண்ணையார் வீட்டில் விருந்தும் கேளிக்கையுமாக இருந்த சத்தம் கேட்டு அடிமை விலங்குகள் சன்னல் வழியாகப் பார்த்த போது, அங்கு கை குலுக்கிக் குடித்துச் சிரித்துக் கொண்டிருந்த பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் மயங்கின.

விளையாட்டுப் போர்

Anthropologically game is a substitute for war and hunting instincts of human animal. All animals are territorial and we are no different. We CANNOT be different. When the first cell formed its cell wall billions of years ago, private property and territoriality started along with that. The constant war/competition/conflict between pathogens and antigens in our bodies is propagating up the level (physics-->chemistry-->biology-->psychology-->sociology). This is same as the competition between various thought-streams to grab our attention. Cosmologically gravity and sub-atomic forces are trying to win over the other and enacting the universal drama.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உள்ளது.

கோயில் வாசல் பிச்சைக்காரனின் இடத்திற்குக் கூட அடிதடி உண்டு. எந்த வாசலில் எந்த‌ப் படியில் இருந்தால் எவ்வளவு வருமானம் இருக்கும் என்பதற்கும் கணக்கு உண்டு. அதனால் போட்டியும் உண்டு.

எனவே விளையாட்டுப் போட்டிகள் நிழல் யுத்தமாகப் பார்க்கப் படுவதைத் தவிர்க்க முடியாது. இங்கிலாந்திற்கும் ஜெர்மனிக்கும் கால்பந்து போட்டி நடந்தால் இரண்டாம் உலகப் போர் நினைவுகள், உணர்ச்சி அலைகள் மக்களையும் ஊடகங்களையும் தாக்குவதை இங்கு (இங்கிலாந்தில்) பார்க்கிறோம்.

ஐக்கிய இராச்சியத்திலிருந்து (United Kingdom) இன்றும் தனிநாடு கோரிக் கொண்டு இருக்கும் ஸ்காட்லாண்ட் தனியாகக் கால்பந்து அணி வைத்துள்ளது. உலகக் கால் பந்து போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான அணிக்கு ஆதரவளிக்கும் ஸ்காட்டிஷ் மக்களும் உண்டு. அரசியலும் விளையாட்டும் ஒட்டு உறவில்லாமல் தனித் தனியாக இல்லை.

போரில் விளையாட (வெற்றி பெற) முடியாதவர்கள் விளையாட்டில் போரிடப் பார்க்கிறார்கள்.போரிலேயே வெற்றி பெற்று விட்ட‌வர்கள் விளையாட்டில் வீழ்ந்து விட விரும்பவில்லை.

விளையாடத் தணியும் வேட்டை வேகம்
விளையாட்டுப் போரோ வெற்றி மோகம்
        - 'நம்மை அறிந்தால்'  - சரியார்
***

இது இப்படி இருக்க, விளையாட்டு என்பது போலி யுத்தம் மட்டுமன்று அது நீடித்த‌ சம்போகம் (extended orgasm) என்ற பார்வையும் உண்டு. அதாவது படுக்கையில் விளையாட இயலாதவர்கள் விளையாட்டில் (கிறங்கிப்) படுத்துக் கிடக்கிறார்கள். Sex is a strong force in terms of attraction but really a very weak force in terms of retention of attention. That is why human society has to invent so many ways of re-kindling ourselves of 'sex'. Even then sex is a fast-(e)motion. All said and done, it is done very quickly (except in porn movies). But we want more and more and games are there and there. Testosterone levels of football fans have been measured and confirmed to be comparable to the time of copulatory flooding. In England there is a joke that given the choice of having sex and watching a football match, men will always go for the football match. When he can have 90 minutes of orgasmic match, a puny few minutes with a women is no match!

All arts too, to some extend provide extended orgasm. There is nothing right or wrong about this. It is helpful to understand that the underlying neurological / chemical basis is same. In a way writing blogs like this is no different - a kind of trance (getting high) like state for me.
***

அதுவும் அப்படி இருக்க (சரியார் உளறக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடவதாய் இல்லை!) விளையாட்டு பெரும் வணிகம் என்று சொல்லத் தேவையே இல்லை. இங்கிலாந்தில் முக்கியமான கால்பந்து போட்டியின் போது விற்பனை ஆகும் மதுபான வகைகளின் வணிக இலாபம் விளையாட்டு விஷயமன்று. கொள்ளையென்றால் கொள்ளையோ கொள்ளை!

தொலைக்காட்சிகளுக்குக் கிடைக்கும் விளம்பரம், கடைகளில் ஆகும் விற்பனை, மக்கள் மறந்தும் போகும் பல பிரச்னைகள் என்று மந்தைகளின் மேயப்பர்களுக்குக் கொண்டாட்டம் தான். நமக்கோ நல்ல தேசிய போதை, மது போதை, வெற்றி/தோல்வி போதை, நீடித்த சம்போகம், நெடுங்கால அடிமைத் தனம்!
***

இதையெல்லாம் சீர்திருத்திச் செம்மையாக்கி புது உலகம் காணப் புறப்பட்டு நம்மைப் போன்றோர் ஆடும் 'சமுதாய முன்னேற்ற‌' விளையாட்டு இதற்கு எந்த விதத்திலும் வேறுபாடு இல்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா? 'கிரிக்கெட் போதை தேவையா' என்று கூடத்து சோபா கிரிக்கெட் வீரனைக் கேட்டால் அவன் ஏற்றுக் கொள்வானா? நம் போதை நமக்கு. அவன் போதை அவனுக்கு.

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 'விலங்குப் பண்ணை' கதையில் கடைசியில் என்ன ஆகும்? அவ‌ரே எழுதிய‌ '1984' புதின‌த்தின் மைய‌க் க‌ருத்து என்ன? ஆதிக்கவாதிகள் தேசிய எல்லைகளைக் கடந்து ஒன்று சேர்ந்து கொள்வார்கள். மனிதனும் பன்றியும் சமரசம் செய்து கொண்டு மற்ற மாக்களை (விலங்குகளை) மேய்ப்பார்கள். ஆனால் மாக்களைப் பிரித்து மேய்க்க வேண்டுமென்றால் அவை ஒன்று சேர்ந்து விடாமல் இருக்க பல‌ (தேசியம் உட்பட) போதைகளை ஊட்டிக் கொண்டே இருப்பார்கள்.

இதை ஏதோ ஒரு பிரிவினரின் திட்டமிட்ட சதி என்று பார்ப்பது புரியாதத் தனம். யார் மேயப்பர் ஆனாலும் அதைத் தான் செய்வார்கள் என்பது இப்போது புரிந்து கொள்ள வேண்டிய விதம்.

கிரிக்கெட் போதைக்குப் பதிலாகக் கபடி போதை இதே போல் இருந்தால் மகிழ்வோமா?

இங்கிலாந்தில் கால்பந்து கிட்டத்தட்ட ஒரு மதம் போல் ஆகி விட்டது. அதிலும் தனித்தனிக் கிளப் (Club) பற்று எல்லோருடைய ஓர் அடையாளம் போல் கருதப் படுகிறது. 'அவனா, அவன் இந்த கிளப் ஆதரவாளன், பிறகு எப்படி இருப்பான்?' என்ற கேலி, கிண்டல் இங்கு வழக்கமானது. அதற்கு கிறித்துவ மதப் பற்று வீழ்ச்சியும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

அதை விட முக்கியக் காரணம் என்னவென்றால் மனிதனால் 'மனிதனாக' மட்டும் இருக்க முடியாது. அவன் எந்த நிலையிலும் எங்கு இருந்தாலும் எப்படியாவது உட்குழு, வெளிக்குழு (in group, out group) பிரிவை உண்டாக்கி விடுவான். அது அவன் இயல்பு. அது அவன் இயக்கம். இதுவும் ஒரு மாந்த இயல் (anthropology) பார்வை ஆகும்.

ஒரு கடவுள் வணக்கத்தைக் கொண்ட மதங்கள் முதற்கொண்டு ஒரு வகுப்பறை, குடும்பம் வரை மனிதன் என் கட்சி, உன் கட்சி பிரிவினை 'நோயால்' பீடிக்கப்பட்டவன். அம்மாவும் அப்பாவும் குழந்தையைக் கொஞ்சம் போது கூட 'நீ யார் செல்லம், அம்மா செல்லமா, அப்பா செல்லமா?;', 'உனக்கு அம்மாவைப் பிடிக்குமா, அப்பாவைப் பிடிக்குமா?' என்று பிரித்தே பார்க்கிறோம், பழகுகிறோம்; பழக்குகிறோம். உள்ளே போடும் போது கற்களாய்ப் போட்டு விட்டு வெளியே எடுக்கும் போது கற்கண்டாய் வரும் என்று எதிர் பார்த்தால் எப்படி?

உலகின் பல நாடுகளிலிருந்து மக்கள் சென்று சேர்ந்து ஆரம்பித்த அமெரிக்க நாடு சில பத்தாண்டுகளுக்குள் மீண்டும் அதே 'தேசிய' நோயால் பீடிக்கப் பட்டு விட்டதே. ஏனெனில் மனித விலங்கின் இயல்பு அது. அதிலிருந்து தப்ப வழியில்லை. ஆனால் அதைச் சிலர் புரிந்து கொள்ள வழியுண்டு. அச்சிலர் புரிந்து கொண்டு சொல்லிக் கொண்டும் செய்து கொண்டும் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள்.

நாம் அப்படிப்பட்டவர்களே. தேசியத்தில் வீழ்ந்து விடாமல், தேசியத்தில் மயங்கி விடாமல், தேசியத்தை மறுத்து விடாமல், தேசியத்தின் தேவை, இயல்பைப் புரிந்து கொண்டு அதற்குப் பலியாகாமல் பயன்படுத்திக் கொண்டு செல்லும் பாதையை அமைத்துக் கொண்டு இருப்பவர்கள்.

எது நம்மை பிணைக்கிறதோ அதுவே நம்மைப் பிரிக்கவும் செய்கிறது என்று தெரிந்து கொண்டு, புரிந்துக் கொண்டு, உணர்ந்து கொண்டு, பின்பற்றி நடைமுறைப் படுத்திக் கொண்டு செல்வோமாக‌!

“What is necessary to change a person is to change his awareness of himself.”
        - Abraham Maslow (American Philosopher and Psychologist, 1908−1970)
***