Sunday 27 March 2011

அபசகுனன்

 2010-07-20

அபசகுனன்
(உண்மைக்  கற்பனை   உரையாடல்)

சரியார், 'சகுனம் பார்ப்பது சரியா' என்று யோசித்துக் கொண்டு இருந்த வேளையில் அபசகுனமாக அங்கு ஒரு பெரியார் வந்து சேர்ந்தார். சரியார் மேல் அவருக்கு எப்போதும் ஒரு கண். இன்று எப்படியும் மடக்கி விடுவது என்று நினைத்துக் கொண்டு, 'சகுனத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்றார்.

சரியார் அதிர்ச்சியால் சரிந்து விழப் போய் சமாளித்துக் கொண்டார். இது தான் பெரியாருக்கு அடையாளமோ? நான் நினைப்பது இவருக்கு எப்படித் தெரிந்தது என்ற வியப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொன்னார்.

"ஐயா, சகுனம் பார்ப்பது சரியா என்று நினைக்கிறேன்."

"நனைக்கிறது இருக்கட்டும். காயப் போட்டு என்ன முடிவுன்னு சொல்லுங்க.”

"ஐயா, நீங்க 'வெட்டு ஒன்று - துண்டு இரண்டு'  ஆள். நான் 'போட்டு உடை - சிதறல் நூறு'  ஆள்.”

"இந்த வழுக்கல் வெங்காயம் எல்லாம் எங்கிட்ட‌ வேண்டாம்.”

"ஐயா, உங்களுக்கு மூடநம்பிக்கை கிடையாது. எனக்கு 'எனக்கு மூடநம்பிக்கை கிடையாதுங்கற' மூடநம்பிக்கை கிடையாது"

"உங்க வழக்கம் போல் தவளைக்கள மாதிரி தரையிலும் தண்ணியிலும் மாறி மாறி ஓடி ஒளியாதீங்க. கேட்ட கேள்வியில நின்னு பதில் சொல்லுங்க.”

"சரி கேளுங்க. எனக்கு தெரிந்த ஒருத்தர் ரொம்ப சகுனம் பார்ப்பார். அவர் பெயர் சற்குணம். நாங்க அவரைச் 'சகுனம் சற்குணம்'ன்னு கிண்டல் பண்ணுவோம்....”

"சற்குணமோ பொற்குணமோ அவரை ஏன் இப்ப இழுக்கிறீங்க. உங்க கருத்தைச் சொல்லுங்கன்னா, கதை எல்லாம் எதுக்கு?"

"சுப்பிரமணியன் என்ற‌ பெரிய பெயரைச் சுருக்கிச் 'சுப்பு' என்றோ 'மணி' என்றோ வசதிக்குக் கூப்பிடுவது போல் பெரிய ஆராய்ச்சி சுருங்கிச் சகுனம் என்று ஆகி விட்டது. அதற்கு ஒரு பயனும் இல்லாமல் இயற்கையில் தோன்றியிருக்காதே. ஆனால் சுருக்கப் பெயர், செல்லப் பெயர் சட்டப் படி செல்லுபடி ஆகுமா? அது போல் சகுனம் செல்லக் கூடிய இடமும் செல்லாத இடமும் இருக்கலாமே."

"இந்த மலத்துல அரிசி பொறுக்குற வேலை தான் வேண்டாங்கிறது. சகுனத்திற்கு விஞ்ஞானப் பூச்சு, மெஞ்ஞானப் பூச்சு பூசி மொழுவாதீங்க."

"விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் நமக்கு அப்பாற்பட்டதில்லையே. மனிதனிடம் போட்டி, பொறாமை இருக்கு. அதே போல் விட்டுக் கொடுப்பது, ஒத்துழைப்பது, பொறுத்துப் போவது என்பதும் இருக்கு. ஆராய்ச்சி செய்து ஆர அமற முடிவும் எடுக்கிறோம். அவசரமாக உணர்ச்சிப் போக்குல முடிவும் எடுக்கிறோம். வாழ்க்கைக்கு இரண்டும் தேவைப்படுது. அது போல் எது எதை பாதிக்குது என்று யோசிப்பதில் மனிதன் பரிசோதனை செய்யிறான். “

"அதுக்குன்னு மொட்டைத் தலைக்கும் முழங்காலும் முடிச்சுப் போட்டா எப்படி?"

"ஏறத்தாழ மூனு, நாலு பௌர்ணமிக்கு முன்னாடி நடந்த ஒரு செயல் தான் இப்படி வயிறு பெரிசாப் போகக் காரணம்ன்னு எப்படிக் கண்டு பிடிச்சான்? அப்படிப் பத்து பௌர்ணமிக்கு முன் நடந்ததே இன்று குழந்தையா பிறக்கக் காரணம் என்று எப்படி முடிச்சு போட்டான்? முதல் முதல்ல அப்படிச் சொன்னவனுக்கு முட்டாள் பட்டம் தான் கிடைச்சு இருக்கும்.”

"முடிச்சுப் போட்டா மட்டும் போதுமா? உண்மையில் அப்படித் தொடர்பு இருக்கான்னு பார்க்கனுமில்ல.”

"பார்க்கனும். பார்ப்பாங்க. யாரும் வேணுமின்னா தவறான கருத்தைப் புடிச்சுக் கிட்டு இருப்பாங்க?"

"எவ்வளவு காலம்? முன்னேற்றம் தடைப்படுதில்ல?"

"என்ன காரணமின்னு சரியாப் புரிஞ்சுக்காம வேகமா முன்னேறி என்ன பயன்? ஒரு நம்பிக்கைக்குப் பதில் இன்னொரு நம்பிக்கையா இருந்தா அதே தவறு வேறு வடிவத்தில் திரும்பவும் வந்து விடவே வாய்ப்பு அதிகம்."

"சரி இப்ப என்னதான் சொல்றீங்க?"

"சகுனம் என்பது ஒரு நம்பிக்கை. நம்முடைய நம்பிக்கைகள் பெரும்பாலும் அடுத்த மனிதர் சொன்னது மேல் உள்ள நம்பிக்கைகளே. பிற மனிதருடைய அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் இவற்றின் மேல் உள்ள நம்பிக்கைகளே. பிறர் மேல் சாராத நம்முடைய நேரடி அனுபவங்கள் மேல் வரும் நம்பிக்கைகள் தவிர மற்ற எல்லாவற்றையும் நம்பிக்கைகளாக நாம் எடுத்துக்காமல் ஏதோ நாமே நேரடியாக அறிந்த அனுபவித்த‌ உண்மைகள் போல் எடுத்துக் கொள்வதால் தேவையற்ற பற்று, மனமூட்டம் வந்து விடுகிறது. நம்முடைய நேரடி அனுபவத்தில் கூட, நாம் சில சமயம் அதன் காரணங்களைத் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடுகிறது என்கிற‌ போது அடுத்தவர் சொன்னதை நம்புவது என்பதில் விழிப்பாக இருக்க வேண்டாமா?"

சரியார் நிறுத்துவதாக இல்லை. மேலும் தொடர்ந்தார்.

"அதே சமயம் எல்லாத்தையும் நாமே ஆராய்ச்சி செய்து நேரடியாக அறிந்து கொள்ள வாழ்நாள் பத்தாது. அதனால் அடுத்தவர் அறிந்து சொன்னதை நம்பி ஏற்றுக் கொண்டு போகவே வேண்டும். அவங்க அவங்க யாரை நம்புறது என்பதிலும் அதே பிரச்னை தான். மனிதன் ஒரு சமுதாய விலங்கு. அவனுக்குச் சகுனம் நம்பிக்கை வந்ததும் நமக்கு அதன் மேல் சந்தேகம் வந்ததும் சமுதாயத்தில் நடப்பனவற்றின் விளைவே தவிர யாருடைய சிந்தனையும் செயலும் தனியாக வானத்திலிருந்து வந்து குதித்து விடவில்லை.”

சரியாரின் சுவையான(!) பேச்சைக் கேட்டுப் பெரியார் சொக்கினார்(!). "ஆ...வ்" என்ற பெரிய‌ ஒரு கொட்டாவி (கெட்ட ஆவி) விட்டார்.

அது சரியாரைத் தொற்றிக் கொள்ள‌ அவரும் கொட்டாவி விட்டார்.

"ஐயா, நீங்க ஆவி இருக்குன்னு நம்புறீங்களா?"

"நான் நம்புற ஆவி நீராவி தான்" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் அந்தப் பெரியார்.

"இப்ப கொட்டாவி விட்டீங்களே. அதுக்கு எப்படி அடுத்தவங்களப் பாதிக்கிற சக்தி இருக்கு பாத்தீங்களா?"

"ஆமாம். அதுக்கென்ன‌. நீங்க பேய், பிசாசு ஆவி ப‌த்திக் கேட்கிறீங்க‌ளோன்னு நினைச்சேன்."

"தூக்க ஆவி (கொட்டாவி) இருந்தா தூங்காத ஆவியும் இருக்காதா?”

"சரி சரி. அது இருந்தா தான் இது இருக்கும், இது இருந்தா தான் அது இருக்கும்ற தத்துவ விளக்கெண்ணெய்யில‌ வழுக்கி விழுந்து அலுத்துப் போச்சு. அதனால அதை விடுங்க. ஏதோ நற்குணமோ கற்குணமோன்னு சொன்னீங்களே, அவன் கதையையாவது சொல்லுங்க கேட்போம்."
***
சகுனம் சற்குணத்தின் அபசகுனம் எப்படிப் பட்டதென்றால் 'இந்த மனுஷன் குறுக்கே போனால் நமக்கு ஆகாது' என்று குறுக்கே வந்த‌ பூனை நின்று இவன் போன பிறகு தான் போகும் என்றால் பாருங்களேன். அவன் ஸ்டாம்ப் வாங்கப் போனால் போஸ்ட் ஆபீஸிலேயே ஸ்டாம்ப் தீர்ந்து விடும். அவன் சீட்டு கட்டிய கம்பெனியின் லைசென்ஸ் சீட்டே கிழிந்து விட்டது. சைக்கிளில் ஏறினால் பங்சர். பஸ்ஸில் ஏறினால் பிரேக் டவுன். உப்பை ஸ்பூனில் எடுத்துத் தட்டினால் அத்தனையும் உணவில் கொட்டி விடும். வாழைப் பழத் தோலை உரித்தவுடன் பழம் நழுவிப் பாதையில் விழுந்து விடும். அபசகுனமே அஞ்சி நடுங்கும் அவன் சகுனத்தை என்னவென்று சொல்வது?

என்றாலும் இன்று எப்படியும் தன் அபசகுன கீர்த்தியைத் துறந்து விடுவது என்று முடிவு செய்து விட்டான். அவனா அபசகுனமா ஒரு கை பார்த்து விடுவது என்றே புறப்பட்டு விட்டான். உடனே சகுனம் சற்குணத்தைக் குறைத்து எடை போட்டு விடாதீர்கள். அபசகுனத்தை அறிவு பூர்வமாக வெல்ல‌ வேண்டுமே ஒழிய சகுனம் பார்க்கக் கூடாது என்று தவறாகப் புரிந்து கொண்டு விடலாமா?

வீட்டைச் சாத்திப் பூட்டிய பின் தான் உள்ளே விளக்கை அணைத்து விட்டது நினைவுக்கு வந்தது. மின்சாரம் மிச்சம். அபசகுனத்திற்கு அச்சம். தடவினான். மறக்கவில்லை. பேண்ட பாக்கெட்டில் பர்ஸ், பஸ் பாஸ். அபசகுனம் பெயில். பரவாயில்லை அபசகுனத்திற்கு அடுத்த வாய்ப்பு கிடைக்காமலா போய் விடும். படியிலிருந்து இறங்கும் போது எதிர்வீட்டுக்காரன், 'இன்னைக்குச் சீக்கிரமாக் கிளம்பிட்டீங்க?' என்றான். வழக்கமாக வேண்டுமென்றே 'எங்கே போறீங்க' என்று கேட்பவன் இன்று தவறி விட்டான். அவனுக்கு நேரம் சரியில்லை போலும்.

சாலையைக் கடக்கும் இடத்தில் இவன் கால் வைத்ததும் கடப்பதற்குப் பச்சை விளக்கு பளிச்சிட்டது. அபசகுனம் அடங்கி விட்டது. சாலைக் கடந்ததும் சொல்லி வைத்தாற் போல் கைத் தொலை பேசி ஒலித்தது. எடுத்துப் பேசினால் விண்ணப்பித்திருந்த வேலை சம்பந்தமாக ஏஜெண்ட். கேள்வி மேல் கேள்வி. கடைசியில் நல்ல செய்தி. வேலை கிடைத்து விட்டது. ஆச்சரியம். கைத் தொலை பேசி சார்ஜ் பாதியில் முடிந்து விடவில்லை. அபசகுனத்திற்கு இன்று வாய்ப்பு இல்லை போலும்.

இன்று காலை நரி முகத்தில் விழிக்காமலேயே எல்லாம் சாதகமாக நடக்கிறது என்பதும் ஆச்சரியம் தான். என்றாலும் காலை படுக்கையை விட்டு எழுந்த போது எந்தப் பக்கமாக எழுந்தான் என்று யோசித்துப் பார்த்து தினமும் அதே பக்கமாக எழ வேண்டும்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று புதன் கிழமையில் வேலை கிடைத்து அது உண்மையாகி விட்டது. நாளை தான் வேலையில் சேரப் போகிறான் என்றாலும் முதல் சம்பளம் வர இன்னும் மூன்று வாரங்களாகவது ஆகும் என்றாலும் வேலை கிடைத்த சேதியே பொன் கிடைத்தாற் போலத் தானே.

அபசகுன ஆமையை வீட்டுக்குக் கூடத்திற்கு இழுத்து வந்தாயிற்று. அப்படியே தம் பிடித்து ஆமையை வீட்டை விட்டு வெளியே தள்ளி விட வேண்டும் என்று நினைத்த படி மிடுக்காக நடந்தான். நாளை வேலையில் சேர வரச் சொல்லியுள்ளார்கள். அதனால் அலையாமல் அபசகுனத்திற்கு அதிக வாய்ப்பு கொடுக்காமல் வீடு திரும்பினான்.

அடுத்த நாள் வேலைக்குப் புறப்பட்ட போது வாசற் கதவு நிலையில் தலை இடித்துப் பல்லி தலை மேல் விழுந்தது. நிலை இடித்தால் புறப்பட்ட காரியம் சித்திக்காது. பல்லி தலையில் விழுந்தால் போகிற வேலை பழுக்கும். எந்த சகுனம் பலிக்கும் என்று பார்க்க இன்னொரு சகுனம் உதவி செய்யும். இல்லாவிடில் காரியம் எப்படி முடிகிறது என்று பார்த்துக் கொண்டால் பிறகு சகுனத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பல்லியா கதவு நிலையா? இரண்டும் ஒரு சேர நடந்தால் எதற்குப் பலம் / பலன் அதிகம் என்று தெரிந்து விடும். அதிலும் தேக்கு மர நிலையா பாக்கு மர நிலையா புள்ளி வைச்ச பல்லியா புள்ளி வைக்காத பல்லியா என்றும் கவனிக்க வேண்டும்.

சகுனம் பார்ப்பது சாதரண விஷயமல்ல. எல்லோரும் பார்த்து விட முடியுமா? மக்குப் பிளாஸ்திரிகள் எதைக் கண்டாலும் கேட்டாலும் நம்புவார்கள். புத்திசாலிகளால் தான் யோசித்து சகுனம் பார்க்க முடியும். சாமிக்குக் கோழி, ஆடு வெட்டிப் படைப்பது அநாகரிகம். பொங்கல், வடை, பாயசம், லட்டு படைப்பது நாகரிகம். இரண்டும் ஒன்றாகுமா? இரண்டிலும் கடவுள் வந்து சாப்பிடுவதில்லை, படைத்தவனே (இரு பொருள் உள்நோக்கமே) வயிற்றில் அடைத்துக் கொள்கிறான் என்பது வேறு விஷயம்.  அதற்காகக் கைரேகை நிபுணர் சொல்வதும் கண்மூடித் தனமாய்க் கிளி சீட்டு எடுப்பதும் ஒன்றாகி விடுமா?

நிலையில் தலை இடித்தாலும் நிலை குலையாது வெளியே வந்து சாலையில் இறங்கியதுமே பக்கத்துப் பெட்டிக் கடை விளம்பரத்தில் பெரிய யானையைப் பார்த்ததற்குப் பலன் இல்லாமலா போய் விடும்? நற்சகுனம்.வேலைக்குப் போகும் பஸ்ஸில் நெரிசல் இல்லை. அது பிரேக் டவுன் ஆகவும் இல்லை.

ஆனால் உட்கார்ந்திருத்த சீட்டில் இருந்த நகரத்து அழுக்கு ஆடையில் அட்டையாய் ஒட்டிக் கொண்டது. அலுவலகத்தில் முதல் சந்திப்பே இப்படி ஆக வேண்டுமா? என்றாலும் அவன் வலது கண் துடித்ததால் நிச்சயம் நல்லதே நடக்கும் என்று தெரிந்து கொண்டான். அதே போல் பஸ்ஸை விட்டு இறங்கியதும் அடித்த புழுதிக் காற்றில் ஆடை முழுவதுமே தூசி படிந்து ஒரே நிறமாக மாறி விட்டது. அழுக்கு என்று சொல்ல சுத்தம் என்று ஒன்று இருந்தால் தானே முடியும். என்னே சகுனத்தின் சக்தி.

வேலைக்குச் சேரும் கம்பெனியை நெருங்கியதும் தெருவில் கூட்டமாக இருந்தது. போலீஸ் வாகனங்களும் தலைகளும் தெரிந்தன. என்னடா இது சோதனை என்று நினைத்த வண்ணம் கதவு எண்ணைப் பார்த்துக் கொண்டு நடந்தான். சரியாக அவன் சேர இருந்த கம்பெனியின் கதவை இழுத்துப் பூட்டிச் சீல் வைத்துப் போலீஸ் காவல் இருந்தார்கள்.

பக்கத்தில் இருந்தவர்கள் பேசியதிலிருந்து மோசடி கேஸ்ஸில் கம்பெனி மூடல் என்று தெரிந்தது. அப்போது தான் காலையில் வேலைக்குக் கிளம்பும் போது தலை சீவும் அவசரத்தில் கண்ணாடி விழுந்து உடைந்தது நினைவுக்கு வந்தது. கண்ணாடி உடைந்த நாளில் செல்லும் காரியம் உருப்படுமா? அபசகுன ஆமையை வீட்டை விட்டு வெளியே தள்ளப் போனால் அது நமக்கு முன்னாடி நாம் சேர இருந்த கம்பெனியில் சென்று சேர்ந்து விட்டது. இனி ஒழிந்தது அபசகுனம். நமக்கு நல்ல காலம் தான் என்ற நிம்மதியுடன் நட‌ந்தான் சகுனம் சற்குணம்.
***
"உண்மைக் கற்பனை உளறல், மன்னிக்கனும், உரையாடல்ன்னு மேல போட்டிருக்கு. அது என்ன உண்மைக் கற்பனை?"

"பேச்சு கற்பனை. பேச்சின் பொருள் உண்மைன்னு ஒரு நினைப்பு தான்."

"பேச்சு கற்பனை. பேச்சின் பொருள் உளறல்ன்னா பொருத்தமா இருக்கும். புராணம், இலக்கியத்திலிருந்து சினிமா வரை கதை விட்டே நம்மள அடிமைப்படுத்திட்டாங்க. நீங்களுமா?” என்றார் பெரியார்.

"விஷத்தைக் கொடுத்தாலும் விஷயத்தைக் கொடுத்தாலும் கதைக்குள்ள வைச்சா தான் கவனிப்பாங்க. 'கஞ்சி ஊட்டினாலும் நஞ்சு ஊற்றினாலும் கொஞ்சம் கதை சொல்லி ஊட்டு' என்பது புது மொழி.”

"அது கிடக்கட்டும். இப்ப சொல்லுங்க. உங்களுக்கு சகுனத்தில் நம்பிக்கை உண்டா இல்லையா?”

"இவ்வளவு நேரம் விளக்கம், கதை எல்லாம் கேட்டு விட்டு என்ன இப்படி அபசகுனமா கேட்கிறீங்க?”

"அப்ப சகுனத்தை நம்புறீங்க.”

"நான் அப்படி சொல்லலையே.”

"அப்படின்னா சகுனத்தை நம்பலையா, குழப்புறீங்களே?”

"குழப்புறது மட்டும் நம்ம தொழில் இல்லை. உளறுவதும் நம்ம வழக்கம்.”

"சரி உங்க உளறல் தான் என்ன?”

"இந்த பாருங்க. சகுனத்தில் நம்பிக்கை இருக்குன்னு நான் சொன்னா, 'சகுனம்' நம் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ள இவரைக் கை விடலாமா என்று வந்து நம்மிடம் ஒட்டிக் கொள்ளும். வந்தா நற்சகுனம் மட்டும் வருமா? கூடவே தன் துணை அபசகுனத்தையும் சேர்த்தே கொண்டு வரும். சரி, 'சகுனத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை' என்று சொன்னால் அதுக்கு கோபம் வந்து, 'உன்னை என்ன செய்றேன் பாரு'ன்னு நம்மள ஒரு கைக்குப் பல கை பார்த்துரும். எதுக்கு வம்பு? சகுனத்தைக் குழப்பத்துலயே வைச்சிருந்தா அது தான் நமக்கு நற்சகுனம்!”

"வெறும் வெங்காயம்ன்னு நினைச்சேன். வெள்ளை வெங்காயமாத்தான் இருக்கு."

"வெங்காயம் தான் முதல் என்பதை மறந்து விடலாமா? அதை வைச்சுத்தானே பூண்டை வெள்ளை வெங்காயம்ன்னு சொல்றோம்"
(சரியாரின் திருஷ்டிப் பரிகாரப் பூனை)

சரியார்  பற்றிச்  சிரி  குறிப்பு  (அவரே எழுதிய கிறுக்கல்)

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், சரியார் என்று யாருக்கும் தெரியார். அதாவது யார் சரி (சரி யார்?) என்று யாருக்குமே தெரியாது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதென்றால், இவர் தான் முதன் முதலில் சக்கரத்தைக் கண்டு பிடித்தவர். அதாவது வாழ்க்கைச் சுழற்சிக்கும் மன உழற்சிக்கும் இவர் தான் காரணம். அது மட்டுமல்லாது இவர் இல்லாத இடம் இல்லை. பேசாத பேச்சில்லை. எழுதாத எழுத்தில்லை. செய்யாத செயல் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் இவரே இல்லை.

 

No comments:

Post a Comment