Thursday 24 March 2011

போகிற போக்கிலே பூனைக் குட்டி

2009-05-22

இது என்னங்க 'போகிற போக்கிலே பூனைக் குட்டி'?

அதுவா, பூனைக் குட்டிக்குச் சில அறிவுரைகள் சொல்லத் தான்.

பூனைக் குட்டி நல்லா தானே இருக்குது. அதுக்கு ஒன்னும் அறிவுரை தேவைப் படலயே.

அது தான் பொறுக்கல‌. அது எந்த அறிவுரையும் தேவைப் படாம நிம்மதியா இருக்கு. அப்படி வாழ்வது வாழ்க்கையா என்று சில அறிவுரைகள் சொல்லி அதன் அடிமைத் தூக்கத்தைக் கலைக்கனும்.

நல்ல தொண்டு தான்!

பூனைக் குட்டிப் பத்து

போகிற போக்கிலே பூனைக் குட்டி – நீ
புரிந்து கொள்வாய்ப் பூனைக் குட்டி
சாகிற சாக்கிலே பூனைக் குட்டி - நம்
சட்டை மாறுமே பூனைக் குட்டி    (1)
வாழ்க்கையை வாழ்வதும் புரிந்து கொள்வதும் ஒரே நேரத்தில் நடப்பவை. சாவு என்ற பெயரில் நம் வேடம் மாறும்.

பொல்லா உலகம் பூனைக் குட்டி – கூடிப்
போட்டி போடும் பூனைக் குட்டி
நில்லாப் பொருளைப் பூனைக் குட்டி - நாடி
நிற்கா தலைவோம் பூனைக் குட்டி    (2)
நிலைக்காதவற்றைக் கணக்கின்றிச் சேர்க்கப் போட்டி போட்டுக் கொண்டு உழல்கிறோம்.

விருப்பும் வெறுப்பும் பூனைக் குட்டி – திரை
விளையாட் டல்லவோ பூனைக் குட்டி
கருத்துக் கப்பல் பூனைக் குட்டி - கரை
கடக்க வல்லதோ பூனைக் குட்டி    (3)
விருப்பும் வெறுப்பும் ஒன்றை ஒன்று சார்ந்து விளையாடுகின்றன. கருத்துகளே எல்லாம். அதன் பிடியிலிருந்து விடுபட அஃது உதவாது. அதன் எல்லையை மட்டுமே புரிந்து கொள்ள உதவும்.

அடிமை மிடிமை பூனைக் குட்டி – ஆடும்
ஆட்டம் மாறும் பூனைக் குட்டி
விடிவை வேண்டிப் பூனைக் குட்டி - தேடும்
வேட்கை வீணே பூனைக் குட்டி    (4)
விடுதலை அடிமைத்தனம் என்பன வடிவில் மாறி மாறி வருகின்றன. எனவே விடிவு என்று தேடுவதும் ஒரு வகை அடிமைத் தனமே.

எலியும் புலியும் பூனைக் குட்டி – ஊரில்
என்று முள்ளதே பூனைக் குட்டி
வலிமை மெலிமை பூனைக் குட்டி - பேரில்
வகுத்த‌ வரைவே பூனைக் குட்டி    (5)
வலியோரும் மெலியோரும் எப்போதும் இருப்பர். அஃது இயல்பு. அவை நம் வரையறைகளே.

வாலைப் பிடிக்கப் பூனைக் குட்டி - சுற்றி
வலம் வருவாய்ப் பூனைக் குட்டி
காலைப் பிடிக்கப் பூனைக் குட்டி - நெற்றிக்
கண்முன் திறக்கும் பூனைக் குட்டி    (6)
நம்மைப் புரிந்து கொள்ள முற்படுவது பூனை தன் வாலைப் பிடிக்க முயல்வது போலாகும். நம் அடிப்படையைப் (காலை) புரிந்து கொண்டால் அதுவே (ஞானக்) கண் திறந்ததாகும்.

அறிவும் உணர்வும் பூனைக் குட்டி – வரும்
அடங்கி அடங்கிப் பூனைக் குட்டி
செறிவும் விரிவும் பூனைக் குட்டி - தரும்
சிறப்பு என்றுமே பூனைக் குட்டி    (7)
அறிவும் உணர்வும் மாறி மாறி ஒன்றுக்கு ஒன்று அடங்கி வரும், வர வேண்டும். பகுப்பும் (விரிவு) தொகுப்பும் (செறிவு) ஆய்வில் சிறப்பைத் தருவன.

குதிக்கும் உள்ளம் பூனைக் குட்டி – முடி
கொட்டிட ஒடுங்கும் பூனைக் குட்டி
உதிக்கும் உண்மை பூனைக் குட்டி - அடி
உயர்ந் தொளிரும் பூனைக் குட்டி    (8)
இளம் உள்ள எழுச்சி காலப் போக்கில் அமைதியுறும். அப்போது அடிப்படையான உண்மை உள்ளத்தில் உயர்ந்து ஒளிரும்.

வேகிற வரைக்கும் பூனைக் குட்டி – மனம்
வீழ்ந்து எழுமே பூனைக் குட்டி
ஆகிற தாகிடும் பூனைக் குட்டி - தினம்‌
ஆளுமே அமைதி பூனைக் குட்டி     (9)
உடல் வெந்து போகும் காலம் வரை மனம் ஓயாது அலைந்து திரியும். என்றாலும் ஆவது ஆகும் (நடக்கும்) என்ற அமைதி மனதை ஆளும்.

கலங்கும் மனதைப் பூனைக் குட்டி - உற்றுக்
கண்டிட மறையும் பூனைக் குட்டி
விலங்கும் விடையும் பூனைக் குட்டி - பற்று
விளங்க வெளிதான் பூனைக் குட்டி    (10)
இன்பத்தையும் துன்பத்தையும் உறும் மனதை உற்று ஆய்ந்தால் அஃது இல்லாதொழியும். பந்தம் அதற்கு விடிவு என்பன, 'பற்றினால் எல்லாம்' என்பது விளங்கிடும் போது, வெட்ட வெளிதான் எனத் துலங்கும்.



பூனைக் குட்டிப் பத்து முற்றிற்று.

No comments:

Post a Comment