Thursday 24 March 2011

வாழும் இயக்கம் வழுக்கா இயக்கம்

2010-01-30


10
உலகெங்கும் இது வரை எழுந்த சமுதாய சீர்திருத்த இயக்கங்கள் பின்னடைவே அடைந்துள்ளன. அவை குறுகிய கால அளவில் வேறுபட்ட விழுக்காடுகளில் வெற்றி அடைந்திருந்தாலும் நீண்ட காலத்தில் நீர்த்துப் போய் விட்டன; திரிந்து போய் விட்டன.
20
மக்கள் உரிமைக்கு, விடுதலைக்கு குரல் கொடுத்தவை மக்களை நசுக்குபவையாக மாறி விட்டன. அன்பையும் அமைதியையும் போதிக்கும் மதங்களும் அதன் நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
30
எனவே அவை தந்த பாடங்களைக் கொண்டு, நீண்ட கால அளவில் தொடர்ந்து மக்கள் பெருங் கூட்டம் ஒன்று பட்ட ஆற்றலாக விளங்க இயலாத நடைமுறையைக் கணக்கில் கொண்டு, ஒரு சாத்தியமான, வழுக்கலுக்கு இடம் கொடுக்காத எதிர்ப்பாற்றலைக் கொண்ட ஒரு தமிழ் நாட்டு இயக்கத்திற்கு எவ்வகையான கூறுகள் இருக்க வேண்டும் என்று கீழ்க்கண்டவை, சிந்தனைக்கும் கலந்து பேசுவதற்கும் பரிசோதனை செய்து வளர்த்தெடுப்பதற்கும் முன் வைக்கப்படுகின்றன.
40
இவைபெரியார் மையம் நண்பர்கள் பின்பற்றியவை, பின்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டவை. வாசகர்கள் தங்கள் கருத்துகளைச் சேர்க்க வேண்டுகிறோம்.
50
இச்சமுதாயப் பணி தலைமுறை தலைமுறைக்கும் தொடர வேண்டியது. நம் வாழ்நாளில் முன்னேறி எதிர்பார்க்கும் முடிவுகளைக் கண்டு விட வேண்டும் என்று அவசரப் படக் கூடாது. இதில் தெளிவும் உறுதியும் இருப்பது அவசியம்.
60
நம்முடைய நோக்கம்: தமிழ் மொழி, இன, நாட்டு நலன் குறித்த கோரிக்கைகள், திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் ஓர் ஆரோக்கியமான மதிப்பை (market value) ஏற்படுத்த வேண்டும்.
70
இதை எப்படிச் செய்வது என்று இன்று நமக்குத் தெரியாது (சில யோசனைகளுக்கு மேல்) என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே அனுபவம் உள்ளவர்களையும் ஆராய்ச்சி செய்தோரையும் கலந்து கொள்வதுடன் செயலாளிகள் கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் வளர்த்தெடுத்து தொடர்ந்து பரிசோதனை, ஆய்வுக்கு உட்படுத்திச் செல்ல வேண்டும்.
80
தமிழ்நாட்டு இயக்கங்களும் கட்சிகளும் இம்மதிப்பை வாக்குகள் ஆக்க‌ப் போட்டி போடும் நிலை வர வேண்டுமானால் இம்மதிப்பை உருவாக்கும் அமைப்பு தேர்தல் அரசியலில் பதவிக்கு நிற்கக் கூடாது. எந்தக் கட்சி சார்பும் இருக்கக் கூடாது.
90
குறிப்பிட்ட தலைவர் வழி காட்டுதல், குறிப்பிட்ட இசம் போன்ற பற்று, அடையாளங்களைத் தவிர்க்க வேண்டும். திறந்த மனதுடன் எதிரானவை என்று எண்ணும் கருத்துகளையும் காழ்ப்பின்றி சிந்தித்து, கலந்து பேச வேண்டும்.
100
தமிழர் என்ற ஒரு அடையாளத்தைத் தவிர வேறு அடையாளங்கள், சார்பு தேவையில்லை. எல்லார்க்கும் பொதுவான திருவள்ளுவர், திருக்குறள் போன்ற அடையாளங்கள் கூடத் தேவையில்லை. திருக்குறளாயினும் தேவராம் ஆயினும் பைபிள், குரான், பகவத் கீதை என்றாலும் பயன்படும் கருத்துகளை எங்கிருந்தும் எடுத்துக் கொள்ள வேண்டும். யார் தமிழர் என்பதில் தமிழ் மொழி, இன, நாட்டு நலன் மீது (மற்ற மொழி, இன, நாட்டு வெறுப்பின்றி) அக்கறை கொண்டவர் என்பதும் அந்தந்தக் கிளை நிறுவனம் இயங்கும் பகுதியில் வாழ்ந்து வருபவர் என்பதும் போதுமானதாகும். தமிழில் பேச எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. தமிழ் தாய்மொழியாக வீட்டு மொழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இப்படிச் சொல்வதால் தமிழ் தெரியாத மற்ற மொழி, இனத்தினர் ஆலோசனைகளைப் பெறக் கூடாது என்று பொருள் அன்று. அப்படிப்பட்டவர்களையும் அணுகிப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கக் கூடாது.
110
இது சமுதாயப் (பொதுநலப்) பணி என்பதை விட முதன்மையாக முன்னணிச் செயலாளிகள் தங்களைச் சீர்திருத்திக் கொள்ளும் (சுயநலப்) பணி என்ற பார்வை அவசியம். இது தீங்கு பயக்கும் 'தொண்டு', 'தியாக', 'தலைமை' மனப்பான்மைகளை வளர்க்காது.
120
இயக்கத்தின் அசையும் சொத்துகளும் (முன்னணி செயலாளிகள்) அசையா சொத்துகளும் பரவலாகத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தனித்து இயங்கும் வண்ணம் வைத்து நடத்த வேண்டும். மைய அதிகாரமும் கிளைகளின் அதிகாரங்களும் ஒன்றை ஒன்று வளப்படுத்தும் விதத்தில் அமைக்கப் பட வேண்டும். மையம் வீழ்ந்தாலும் விலை போய் விட்டாலும் கிளைகள் புதிய மையத்தை அமைத்துக் கொள்ளும் தன்மையில் அவை கருத்து, பொருள் வலிமையில் தனித்தியங்கும் வண்ணம் விளங்க வேண்டும்.
130
இயக்கத்தின் செயலாளிகள் முதலில் தங்கள் தனி வாழ்க்கையை ஒழுங்கு படுத்திக் கொண்டு தங்கள் சொந்தப் பொறுப்பில் இயக்க வேலைகளில் ஈடுபட வேண்டும். யாரும் யாரையும் உயர்வாகவோ தாழ்வாகவோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும். ஒப்புக் கொண்ட வேலையைச் செய்யத் தவறும் போது கேள்வி கேட்பது சரி. 'கோழை', 'வீரர்' போன்ற பேச்சுகள் தவறு. யாரையும் வற்புறுத்துவதும் கூடாது. வேலையில் பங்கேற்காமல் வெறும் பேச்சு பேசுபவரைப் பகைத்துக் கொள்ளாமல் அவரருக்குரிய இடத்தில் அவரை வைத்து நடத்த வேண்டும். வேலைத் திட்டத்தின் வெற்றி தோல்வியைப் பற்றி அதில் ஈடுபடாதவர் பார்க்கும் பார்வை பல சமயங்களில் உதவும்.
140
இயக்கம் தேர்தலில் நின்று பங்கெடுக்காமல் புறக்கணிக்க வேண்டும். தேர்தலை வெறுத்துப் புறக்கணிக்காமல் யாருக்கு ஆதரவு என்று முடிவு எடுத்துப் பங்கெடுக்க வேண்டும். இதில் ஒவ்வொரு தொகுதியிலும் வெவ்வேறு கட்சி, தனி நபர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அளவுக்குக் கிளை நிறுவனங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும்.
150
தமிழர் என்ற அடையாளத்தை நடைமுறைச் சாத்தியமாக எல்லாத் துறைகளிலும் வளர்த்தெடுக்க வேண்டும். இதில் கருத்து ஒத்தும் வரும் மற்ற அமைப்புகளுடன் உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். வராத தமிழர்களை, அமைப்புகளைப் பகைத்துக் கொள்ளக் கூடாது.
160
இயக்கத்தின் பொறுப்பில் உள்ள‌ செயலாளிகள் பிற கட்சிகளில் உறுப்பினராக இருக்கலாம். ஆனால் பொறுப்பு வகிப்பதோ, தேர்தலில் போட்டியிடுவதோ கூடாது. அப்படி விரும்பினால் இயக்கத்தின் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். அப்படிச் செல்வோரைப் பழிப்பதோ தூற்றுவதோ கூடாது. அவர்களை (இப்போதோ, வரும் காலத்திலோ) எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றே சிந்திக்க வேண்டும்.
170
இயக்கத்தை மேம்பட்ட தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்க வேண்டும். இணைய தளம், மின்னஞ்சல், கைத்தொலைப் பேசி, காணொளிக் கருத்தரங்கு போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் காலம், பொருள், ஆற்றல் திறனாகப் பயன்படுத்தப் பட வேண்டும். இயக்கத்தின் செயலாளிகள் இத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாளுவதில் நன்கு பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டும்.
180
தீக்குளித்தல், உண்ணா நோன்பு இருத்தல் போன்றவற்றைப் பாராட்டவோ, புகழவோ, ஊக்கமளிக்கவோ செய்யக் கூடாது. இவை காலாவதியாகி விட்டன என்பதை இன்னும் நாம் உணர்ந்து கொள்ளவில்லையா? அப்படி இறந்தவர்களுக்கு நினைவு நாள் கொண்டாடுதல் கூடாது. மக்களிடையே இந்தக் கருத்துக்குப் பெரிய அளவில் ஆதரவு வரும் வரை இதைப் பொது மன்றத்தில் பேசாமல் இருப்பது நல்லது.
190
சிலவற்றை வெளிப்படையாக எதிர்க்க வேண்டும். சிலவற்றை வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும். சிலவற்றை சிலகாலம் வரை வெளிப்படையாக எதிர்க்கவோ ஆதரிக்கவோ கூடாது.
200
மக்கள் ஒரே சீரான தேவையுடையவராக இல்லை. மக்களுடைய தேவைகள் அரசியல், வணிகப் பயன்குழுக்களால் உருவாக்கவும் ஊதவும் திரிக்கவும் உடைக்கவும் படுகின்றன. அதைக் கணக்கில் கொண்டு முதலில் இயக்கச் செயலாளிகள் இத்தகைய பொய்த் தேவைகளுக்கு அடிமையாகாமல் இருப்பது முக்கியம். சமுதாயத்தில் வாழும் போது, குடும்பம், பிள்ளைகள் படிப்பு, பொழுது போக்கு, திருமணம் என்பவனவற்றிற்காக  வளைந்து நெளிந்து கொடுக்காமல் இத்தகைய தேவைகளைப் பிடிவாதமாகத் துறக்க முற்படுவதும் குடும்பம் சுற்றத்தினர் நண்பர்களிடையே வற்புறுத்துவதும் கூடாது. எடுத்துக்காட்டாக உடை என்பது அதற்குள்ள அடிப்படைப் பயனுக்கு அப்பால் எப்படி எல்லாம் பொய்த் தேவைகளாக வளர்ந்துள்ளது என்பதைக் காணலாம். என்றாலும்ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிக்கேற்ப அப்பொய்க்குச் சமுதாயத்தில் இருக்கும் செல்வாக்கைக் கணக்கில் கொண்டு நாமும் அப்படி வேடம் போட்டு நடிக்க வேண்டியுள்ளது. இது தான் உண்மை. இதற்கு அப்பால் எங்கோ என்றோ எட்டப் போவது என்பது இன்றைய அளவில் கொள்கையாக‌ உள்ள உண்மையே. பொய்த் தேவைகளுக்கு அடிமையாகாமலும் பொய்த் தேவைகளைப் புறக்கணித்து 'உலகத்தோடு ஒட்டி ஒழுகத் தெரியாத‌வரா'காமலும் ஓடிக் கொண்டே ஒய்வு கொள்வதும் வாழ்ந்து கொண்டே வழியைத் திருத்துவதும் தான் இன்றைய தேவை.
210
கருத்து வேறுபாட்டால் பகைத்துக் கொள்ளாமல் விலகிக் கொள்வற்கு நல்ல ஆரோக்கியமான வழிமுறை வைத்திருக்க வேண்டும்.
220
இயக்கச் செயலாளிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எழுத்து வடிவில் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்ள வேண்டும். அது போல் பொறுப்புகள் வரையறுக்கப் பட வேண்டும். எழுத்துகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருப்பதும் தீது. எழுதாமல் எதையும் வரையறுக்க முயல்வதும் உதவாது.
230
புகழ் ஆசை, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, கோபம், சலுகை செய்தல் போன்ற குணங்களை நாம் துறந்து விட முடியாது. அவற்றைக் கண்காணிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் பழக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு மாறாக நான் அப்படி இல்லை; அவை என்னைப் பாதிக்காது என்று மனப்பால் குடிக்கக் கூடாது. சளி, காய்ச்சல் போல் இவை நமக்கு வருவது இயல்பானது. சளி, காய்ச்சலுக்குப் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தாலும் தொற்றிக் கொள்கிறது. தொற்றிக் கொண்ட பின் மருத்துவம் செய்து கட்டுப்படுத்தி, குணப்படுத்திக் கொள்கிறோம். எல்லா (கருணை, அன்பு... உள்பட‌) குணங்களுக்கும் எதிர்மறைப் பக்கங்கள் உள்ளன என்பதைப் புரிந்து கொண்டு தற்காப்பும் வந்த பின் மருத்துவமும் மேற்கொள்ள வேண்டும். சமுதாய சீர்திருத்தம் என்பது அகம் புறம் இரண்டு தளங்களிலும் ஒன்றோடு ஒன்று உறவாடி, ஊக்கமளித்து நடக்க வேண்டியதாகும். இரண்டும் முக்கியம்.
240
செயற்குழு ஆலோசனைக் குழு என்று இரண்டு குழுக்கள் வைத்துக் கொள்ளலாம். பெரிய கட்டமைப்புகளும் பொறுப்பு, பதவிகளையும் வளர்த்துக் கொள்ளக் கூடாது. தேவையைப் பொறுத்து ஒவ்வொரு துறைக்கும் (அரசியல், சமயம், உடல்‍‍-மன வளம்...) செயற்குழு ஆலோசனைக் குழு என்று பிரித்துக் கொள்ளலாம்.
250
கலை, பொழுது போக்கு நிகழ்ச்சிகளைத் தவிர்த்து கருத்தரங்கு, மேடைபேச்சுகள் போன்றவற்றில் விசில் அடித்தல், பேச்சின் இடையிடையே கை தட்டுதல் போன்றவற்றை நிறுத்த வேண்டும். பேசுபவர் கருத்து கேட்பவர் கருத்தைக் கவர்ந்தால் அதைக் குறிப்பு எடுத்துக் கொண்டு சிந்தித்துப் பார்க்கும் பழக்கம் வேண்டும். அதைப் பற்றிக் கேள்வி கேட்கும் முனைப்பு வேண்டும். கூச்சல் போட்டு ஆரவாரம் செய்து ஆர்ப்பரிப்பது சிந்திப்பதைக் காட்டவில்லை. நமக்கு பிடித்தால், சரி என்று பட்டால் அது ஏன் என்று கேள்வி எழுப்பும் தன்மை, பண்பு வேண்டும்.
260
சில‌ சொற்கள் பாராட்டு போதும். சில‌ சொற்கள் கண்டிப்பு போதும். அன்றாட வாழ்வில் இயக்கச் செயலாளிகள் அதைக் கடை பிடிக்காத வரை பிறருக்குச் சொல்லும் தகுதி தனக்கு இல்லை என்று தன்னைத் தானே அளந்து கொள்ள வேண்டும்.
270
இயக்கச் செயலாளிகள் தங்களைத் தொடர்ந்து செம்மைப் படுத்திக் கொள்ளவும் வளர்த்துக் கொள்ளவும் வேண்டும். இயக்கச் செயலாளிகள் நடைமுறைச் சாத்தியமான மகிழ்வான நிறைவான வாழ்க்கை வாழ்வதே இயக்கத்திற்குப் பெரிய விளம்பரம், ஆழமான வேர்.
280
உடலிலிருந்து கழிவுப் பொருள் நீங்குவது போல் இயக்கத்தின் தன்மைக்கு ஒத்து வாழ இயலாதவர்கள் தாங்களாகவே வெறுப்பின்று வெளியேறும் படி இயக்கம் இயங்க வேண்டும்.
290

300






No comments:

Post a Comment