Thursday 17 February 2022

மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன? - பின்னூட்டம்

2022-02-17 

மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன? - பின்னூட்டம்

மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?

பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

15 பிப்ரவரி 2022, 02:55 GMT

https://www.bbc.com/tamil/science-60381488 


கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போன்ற (அதே குழந்தையாகவும் இருக்கலாம்) சரி பார்த்து ஊர்ஜிதம் செய்யப்பட்ட முற்பிறவி நினைவுக‌ள் பற்றி 15+ ஆண்டுகளுக்கு முன் டிஸ்கவரி தொலைக்காட்சியில் அறிவியல் அறிஞர் (இலங்கையில் வாழ்ந்து வந்த பிரிட்டிஷ்) ஆர்தர் சி கிளார்க் விளக்கிய ஆவணப்படத்தில் பார்த்துள்ளேன்.


அமெரிக்க விண்வெளி அறிஞர் கார்ல் சாகன் அவருடைய ஒரு நூலில் முற்பிறவி நினைவுக‌ள் பற்றிக் கிடைத்துள்ள ஆதார பூர்வமான சில தகவல்கள் அது குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தைக் காட்டுவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.


ஒரு காலத்தில் இயற்கை மீறிய அதிசயங்கள் என்று கருதப்பட்டவை இன்று இயற்கை நிகழ்வுகளாக விளக்கப் பட்டுள்ளன. வானவில், மின்னல் போன்றவை அறிவியல் பூர்வமாக விளக்கப்பட்டாலும் இன்றும் நமக்குக் கண்கொள்ளா அற்புதங்களாகவே வியக்க வைக்கின்றன.


சோதிடம் குறித்தும் வியக்கத்தகு தகவல்கள் உள்ளன. என்றாலும் அவை சில என்றால் பொருந்தி வராதவை பல ஆயிரக்கணக்கில், இலட்சக் கணக்கில் இருக்கலாம். பொருந்தி வருவனவே பரப்பப்படுகின்றன. பொருந்தி வராதவைக்குப் பல சாக்குப் போக்குகள் சொல்லப்படுகின்றன.


டிசம்பர் 2004 கடற்கோளில் மடிந்தவர்கள் (230,000+) அனைவருக்கும் கைரேகைகள், ஜாதகங்கள், நட்சத்திர பலன்கள் எல்லாம் ஒரே மாதிரி இருந்தனவா என்று பொதுவாக யாரும் யோசிப்பதில்லை. தப்பித்த சிலரின் தற்செயல் நிகழ்வுகள் அதிசயங்களாகப் பரப்பப்படுகின்றன.


பிறர் எப்படியோ போகட்டும். நம்மைப் போன்றவர்கள் இவை (முற்பிறவி நினைவுக‌ள் / reasonably verified paranormal incidents) போன்றவற்றை எவ்வாறு புரிந்து கொள்வது?


நமக்குத் தெரிந்தவற்றை (கடுகளவு) விடத் தெரியாதவையே (பால்வெளி மண்டலம் / பிரபஞ்சம் அளவு) அதிகம். 


எனவே ஏற்கனவே விளக்கப்பட்ட அதிசயங்கள் அல்லது பொய்யாக்கப் பட்ட அற்புதங்களைப் போல் இவை ஒரு காலத்தில் விளக்கப்படலாம் அல்லது பொய்யாக்கப் படலாம் என்று கைகளை விரித்து விடலாம்.


With respect to what is unknown to us all, any difference between a genius and a fool is negligible (as I remember)

- Marvin Minsky (MIT Cognitive and Computer Scientist)


அப்படித் 'தெரியவில்லை' என்று சொல்வதோடு நின்று விடாமல் நம்மால் முடிந்தவரை இவை சாத்தியமாவதற்கு ஏதும் வழியுள்ளதா என்று தேடலாம். அப்படித் தேடும் போது நாம் தற்போது கொண்டுள்ள சில கருத்துகளைத் தற்காலிகமாக ஒதுக்கி வைக்க அணியமாக இருக்க வேண்டும். சில புதிய கருத்துகளைச் சோதனை அளவில் ஏற்றுக் கொண்டு தொடரவும் வேண்டும். Progress depends on daring to be wrong / stupid!


அந்த முயற்சியில் சில பகிர்வுகள் கீழே.


The whole of science is nothing more than a refinement of everyday thinking.

- Albert Einstein

https://www.brainyquote.com/quotes/albert_einstein_134062 


முதலில் ஆழமான (deep end கருத்திலிருந்து) இடத்திலிருந்து தொடங்கிப் படிப்படியாக ஆழமில்லாத கரைக்கு அருகிலான இடத்திற்கு வருவோம். கடைசியில் மீண்டும் ஆழத்தில் குதித்தே ஆக வேண்டும் என்பதையும் பார்ப்போம்.



1. காலமே இது பொய்யடா வெறும் கருத்தில் நெய்த பையடா


இறந்த காலம் எதிர்காலம் என்பன இக்கணத்தில் தோன்றும் நினைவுகளாக‌ அல்லாது வேறு எங்கும் இருக்கிறதா? சரியாரின் உளறல்களை இங்கு புரட்டிப் பார்க்கலாம்: 

http://tholthamiz.blogspot.com/2011/03/blog-post_3380.html (உணர உள்ளது ஒருகணமே)


http://tholthamiz.blogspot.com/2011/03/blog-post_2124.html ('நான்' பிம்பம் - சாட்சி ஆகவே உய் - அனைவருக்கும் எட்டும் அத்வைதம்)


http://tholthamiz.blogspot.com/2011/03/fast-truth.html (உடனடி உண்மை Instant Truth)


ரமணரிடம் முற்பிறவி, அடுத்த பிறவி, கடவுள் இருக்கிறாரா போன்ற கேள்விகள் கேட்கப்பட்ட போது அவர் இப்படி பதிலளித்தார்: 'முற்பிறவி, மறுபிறவி, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றியெல்லாம் ஏன் கவலைப்படுவானேன்? இப்போது உள்ள பிறவியை, அதன் உண்மையை முதலில் புரிந்து கொள்வோம்."


The distinction between the past, present and future is only a stubbornly persistent illusion.

- Albert Einstein

https://www.brainyquote.com/quotes/albert_einstein_148814  


எல்லாவற்றையும் (இவ்வுடல், உலகம், காலம், இடம்...) மனதால் தான் (எண்ணங்களால் / சிந்தனைகளால்) அறிகிறோம். அதில் முதல் சிந்தனை / எண்ணம் / கருத்து 'நான்' என்பதாகும். எனவே அக்கருவியை முதலில் நன்கு புரிந்து கொள்வோம். We first need to calibrate and confirm the quality of the instrument before we use that instrument to check the quality of any product.


நம்மில்  யாருக்கும் பிறந்த குழந்தையாக இருந்தது முதல் இரண்டு / மூன்று / நான்கு வயது வரை இருந்த நினைவுகள் நிகழ்ச்சிகள் ஏன் நினைவில்லை? அப்போது 'நான்' என்ற கருத்து (concept of self) இல்லை. அதையே வேறுவிதமாகச் சொல்வதானால் 'நான்' / 'பிற' என்ற பிரிவினை இல்லை. நான் (self-sense / sense of self) என்ற உணர்வு இருந்திருக்கும். ஒரு செல் பாக்டீரியத்திற்குக் கூட நான் என்ற உணர்வு இருக்கும். இல்லையென்றால் அஃது உணவை நோக்கி நகரவும் ஆபத்திலிருந்து விலகவும் இயலாது.


'நான்' என்ற முதல் கருத்துக் கொக்கியில் தான் மற்ற எல்லா நினைவுகளும் கருத்துகளும் மாட்டப்பட்டுள்ளன. 'நான்' என்ற கொக்கி இல்லாத போது அவை (கருத்துகள் / எண்ணங்கள் / நினைவுகள்) பொதுவானவை (யாருடைவையும் அல்ல impersonal. it is similar to the air breathed by the baby, That air is impersonal). எனவே அவை பற்றவில்லை. 


இப்போது உள்ள நிலைமையும் அதுவே என்பதைக் கொஞ்சம் யோசித்தாலும் புரிந்து விடும். அதாவது உண்மையில் 'நான்' என்பது 'நான் ஒரு மனிதன் / தமிழன்..., நான் இதைச் செய்தேன்..' இப்படியான வாக்கியங்களில் அல்லாமல் வேறு எங்கும் இல்லை. 'நான்' என்ற கருத்தும் எதையோ ஒன்றை (உடல் / அடையாளம்...) சார்ந்தே எழும். அவ்விதம் அன்றி அதற்குத் தனியாக ஓர் இருப்பு இல்லை. 


எதையும் பற்றாது இருக்கும் நான் என்ற உணர்வு (அறிவுணர்வு) வேறு. அது மட்டுமே உண்மை, அதாவது உள்ளது, மாறாதது, நிலையானது என்ற அர்த்தங்களில்.


மேற்கண்ட பத்திகள் 'பிறந்த குழந்தையாக இருந்த காலம்' என்பதை உண்மை போல் அனுமானித்துக் கொண்டு சொல்லப்பட்டது. அஃது இக்கணத்தில் தோன்றும் காட்சி / எண்ணம் என்பதற்கு மேல் அதற்கு எந்த இருப்பும் இல்லை என்பதை மறந்து விடக் கூடாது.


முழு உண்மை (நிலையில்லாக் காட்சியைக் காட்டும் / காணும் / காட்சியாகத் தோன்றும் நிலையானது எது? Freeians post on Monday 14-Feb-2022) அல்லது உண்மை முழுமையாக விளங்கும் வரை இது போல் அனுமானங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.


“I take it to be true that pure thought can grasp the real, as the ancients had dreamed.”

— Albert Einstein

https://quotefancy.com/quote/763563/Albert-Einstein-I-take-it-to-be-true-that-pure-thought-can-grasp-the-real-as-the-ancients 



அதனால் 'மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?' என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனெனில் காலம் என்பதே பொய் (கடந்த, நிகழ், எதிர் என்ற கருத்தளவிலான பிரிவினை கொண்ட இக்கணத்தில் தோன்றும் ஒரு தோற்றம்). This is the deepest end!


இது நீந்தத் (முறையாக சிந்திக்கத் தெரியாதவரை) தெரியாதவரை ஆழமான கிணற்றில் கூட இல்லை, ஆழமான வேகமாக ஓடும் ஆற்றில் (deep rapids) தள்ளி விடுவதைப் போல ஆகும்.


Most People Would Die Sooner Than Think—In Fact, They Do So

- Bertrand Russell

https://quoteinvestigator.com/2018/09/23/think/ 

[Quote Investigator: Bertrand Russell did include an instance in his 1925 book about physics titled “The ABC of Relativity”.]



2. போகாத காலம் ஆடாத ஆட்டம்


ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாட்டின் (general theory of relativity) படி, காலமும் இடமும் தனித்தனியானவை அல்ல; அவை காலமிடமாக (space-time) ஒன்றாய் உள்ளன. அதன்படி இடங்கள் (மண்டலங்கள், விண்மீண்கள், சூரியக் குடும்பங்கள், கோள்கள்...மலைகள், நதிகள், நாடுகள், நகரங்கள், ஊர்கள், வீடுகள்...) எல்லாம் எப்படி எப்போதும் இருக்கின்றனவோ அதே போல் இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்பன எப்போதும் இருக்கின்றன. இதை முடக்குப் பிரபஞ்சம் (block universe) என்று அழைப்பர். இஃது அறிவியல் ஏற்றுக் கொண்டுள்ள உண்மை.


இதன் படி, எல்லோர் பிறப்புகளும் நிகழ்வுகளும் (கதைப் புத்தகத்தில் முழு நிகழ்ச்சிகளும் ஒன்றாய் எப்போதும் இருப்பது போல்) பிரபஞ்சத்தில் உள்ளன. கதையைப் படிப்பவர் பார்வையில் தான் கதை நடக்கிறது. கதை மாந்தருக்குப் பார்வையே கிடையாது. அதே போல் தான் பிரபஞ்சத்தின் நிகழ்வுகளும். பார்ப்பது எதுவோ அதன் பார்வையில் தான் எல்லா நிகழ்ச்சிகளும் (விண்மீன் உருவாகுவதிலிருந்து கதை மாந்தர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறப்பது வரை) நடக்கின்றன.


ஜென் புத்திசத்தில் ஒரு கதை உண்டு. மூன்று ஜென் துறவிகள் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு கொடிக் கம்பத்தில் அசையும் கொடியைப் பார்த்து ஒருவர் சொன்னார், 'கொடி அசைகிறது'. உடனே அதை மறுத்து மற்றொருவர் சொன்னார், 'கொடி அசையவில்லை. காற்றுதான் அசைகிறது. அதுவே கொடி அசைவதாகத் தெரிகிறது'. மூன்றாமவர் இருவரையும் மறுத்து, 'கொடியும் அசையவில்லை, காற்றும் அசையவில்லை. மனம் தான் அசைகிறது' என்றாராம்.


ஜென் கதையை விட்டு விட்டு நம் முற்பிறவி நினைவுக் கதைக்கு வருவோம். ஆக, முடக்குப் பிரபஞ்சத்தின் படி, முற்பிறவி நிகழ்வுகள் உள்பட பிரபஞ்சத்தின் முழுவரலாறும் காலமிட ஒருங்கிணைப்பில் உள்ளது. பிரபஞ்சத்தில் ஓர் இடத்தில் நிகழ்வது மற்ற இடத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் (எடுத்துக்காட்டாக சூரியனில் சுவாலைப் புயல் solar flare storm வந்தால் பூமியைப் பாதிக்கும்) அதே போல் பிரபஞ்சத்தில் ஒரு காலத்தில் நிகழ்ந்தது மறு காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாமல்லவா?


அது போல் முற்பிறவி நிகழ்வு தற்பிறவி நினைவில் குறுக்கிடலாமே? அதே போல் வரும் பிறவி நிகழ்வுகள் தற்பிறவி நினைவில் நுழையலாமே? அவையே எதிர்காலத்தைச் சரியாகக் கணிக்கும் (சோதிடம் உள்பட) அரிதான சில நிகழ்வுகளாக இருக்கலாம்.


மேற்கண்ட பத்தியில் நாம் காலத்தையும் இடத்தையும் பிரித்துப் பார்த்திருப்பது சரியன்று. ஆனால் புரிவதற்காகச் சொல்லப்பட்டுள்ளது.


இதில் இடம் பற்றி எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் காலம் பற்றி புரிந்து கொள்ள அதன் தன்மை / பண்பு தடங்கலாக இருக்கலாம். காலமும் மாற்றமும் ஒன்றே. காலத்தை உணர, வரையறுக்க மாற்றத்தைச் சொல்லாமல் முடியாது. அதே போல் மாற்றத்தை உணர, வரையறுக்கக் காலத்தைப் பயன்படுத்தாமல் முடியாது. 


ஆனால் மாற்றத்தையோ காலத்தையோ எப்படி முடிவு செய்கிறோம்? அதற்கு முந்தைய நிலை, தற்போது நிலை என்ற இரண்டு நிலைகள் வேண்டும். ஆனால் முந்தைய நிலை என்பதும் தற்போது நிலை என்பதும் இக்கணத்தில் (நிகழ்) தான் தோன்றுகின்றன. வேறு எங்கும் இல்லை. எனவே தான் ஜென் துறவி மனம் தான் அசைகிறது என்று சொன்னார்.


முற்பிறப்பு, இப்பிறப்பு, மறுபிறப்பு என்பன எல்லாம் இக்கணத்தில் தோன்றும் பிம்பங்களே, அவற்றைக் கொண்டு உணரப்படும் அசைவுகளே. காலமும் ஓடவில்லை. எந்த ஆட்டமும் நிகழவில்லை. மனம்தான் அசைகிறது. அதுவும் உண்மையில் அசைகிறதா? விடை கடைசியில் விளங்கும்.


3. காலம் செய்த கோலமடா கடவுள் செய்த குற்றமடா


இந்த மறுமொழி எழுதப்படுகிறது; சற்று இடைவெளி விடப்படுகிறது. பிறகு தொடர்கிறது. இப்படிச் செய்து கொண்டே காலமே பொய் என்று முழுப்பூசணிக்காயைத் தட்டு நிறைந்த‌ சோற்றில் கூட இல்லை, துளியுண்டு பருக்கையில் மறைக்கப் பார்த்தால் எப்படி? என்ன அநியாயம்?


இதை எழுதுவதற்குச் சில மணி நேரங்கள் ஆகின்றன. படிப்பதற்குப் பல மணித் துளிகள் ஆகின்றன. என்ற போது காலமே, நேரமே பொய் என்றால் எப்படி? இது, 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பதை விடப் பல மடங்கு பேதைமையாக இருக்கிறதே?


"If we can stand outside the Universe we can see the future impacting the past" (not exact words but to this meaning) thus said the famous scientist Stephen Hawking (I have the magazine article filed somewhere).


காலத்தின் (பொய்க்) கோலத்தைக் காண முடியாதவர்கள் காலச்சிறைக்குள் தான் உழன்றாக வேண்டும். அப்படி என்றால் மறுபிறப்பு, முற்பிறப்பு நினைவுகள் சாத்தியமா? அவை சாத்தியமா என்பதைக் கண்டறியும் முன் நினைவுகள் / எண்ணங்கள் எங்கிருந்து எழுகின்றன என்று தெரிந்து கொண்டோமா?


இன்றைய அறிவியலின் படி எண்ணங்கள் நினைவுகள் நம் மூளையிலிருந்து தான் எழுகின்றன.


முன்னொரு காலத்தில் ஓர் அறிஞர் தன் வயிற்றைச் சுற்றி ஓர் உலோகத் தகட்டைக் கட்டியிருந்தாராம். ஏனென்றால் அவர் வயிற்றில் தான் அறிவு (சிந்தனைகள் / எண்ணங்கள்) உள்ளது என்றும் அவருக்கு அறிவு மிகுந்து வருவதால் (மற்றவர்களுடன் ஒப்பிடும் போது) வயிறு வெடித்து விடும் அபாயம் இருப்பதாகக் கருதினாராம். இதை நேரு தன்னுடைய Glimpses of World History என்ற நூலில் (letters to Indira Gandhi) எழுதியுள்ளதாக என் மாமா (அம்மாவின் அண்ணன்) எனக்குப் பள்ளிப் பருவத்தில் சொன்னார். என் மாமா முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரத்தின் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பில் சக மாணவர். சந்தடி சாக்கில் ஆங்காங்கு நம் சுயபுராணத்தையும் சொருக வேண்டியதுதான்! Even today we say 'gut feeling'. In spite of the brain having billions of neurons we feel all our feelings in our stomachs only.


அந்த 'அறிஞரின்' அறியாமையை நினைத்து இன்று நாம் வயிறு வெடிக்கச் சிரிக்கலாம். அதே போல் மூளைதான் எண்ணங்களை உருவாக்குகிறது என்ற நம் நம்பிக்கையை எண்ணி வருங்காலத்தில் அவர்கள் மூளை குலுங்க‌ச் சிரிக்கலாம்.


மூளைதான் எண்ணங்களை உருவாக்குகிறது என்ற கருதுகோளில் அஃது உடல் இறப்போடு சிதைந்தவுடன் அதில் சேமித்த எண்ணங்களும் சிதைந்து இல்லாமல் போய்விடுகின்றன என்பதால் முற்பிறவி நினைவுகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.


ஆனால் முற்பிறவி நினைவுகள் சில சரிபார்க்கப் பட்டு (எந்த வித ஏமாற்று, மோசடியும் இல்லை) உள்ளன என்றால் அவற்றை எப்படி நாம் புரிந்து கொள்வது? அதற்கு நம் கருதுகோளைத் தற்காலிகமாக மாற்றிப் பார்க்க வேண்டும். We have to revise our hypothesis based on verified new data.


மூளை எண்ணங்களை உருவாக்குவதற்குப் பதிலாக நினைவுகளைத் தன்னுள் சேமித்து வைத்து மீளக் கொண்டு வருவதற்குப் பதிலாக, நுரையீரல் போல் இயங்குவதாகக் கொண்டால், மூளை எண்ணங்கள் / நினைவுகள் வந்து போவதற்கான கருவியாக உறுப்பாக எடுத்துக் கொள்ளலாம்.


காற்றைச் செயற்படுத்துவது (process) நுரையீரல். கருத்தைச் (எண்ணங்களை) செயற்படுத்துவது மூளை.


அப்படி என்றால் கருத்துகள் / எண்ணங்கள், காற்று நுரையீரலுக்கு வெளியே இருப்பது போல், மூளைக்கு வெளியே எங்கு இருக்கின்றன? இருக்க முடியும்? எப்படி அதை ஊர்ஜிதம் செய்வது?


காற்றை நாம் பார்க்க இயலாது. அதன் பாதிப்பையே நம்மால் உணர முடியும். அதே போல் மின்காந்த அலையை நாம் பார்க்க, தொட்டு உணர முடியாது. ஆனால் அதன் விளைவுகளை நம்மால் பார்க்க முடியும்.


புவியீர்ப்பு விசை என்று ஒரு விசை உண்மையில் உள்ளதா? அது நம்முடைய ஒரு மாதிரியே (model). அம்மாதிரியைக் கொண்டு நாம் பார்க்கும் அனுபவிக்கும் விளைவுகளை விளக்க முடிவதால் அம்மாதிரியைக் கிட்டத்தட்ட உண்மை போல் நம்புகிறோம்.


புவியீர்ப்பு விசையை மாதிரியாக‌ முன்வைத்த (கண்டுபிடித்த என்று சொல்வது சரியன்று)  ஐசக் நியூட்டன் அந்த காலத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் இருந்த நம்பிக்கையின் படி (அதாவது பொருள்கள் ஒன்றை ஒன்று தொடாமல் ஒன்றை ஒன்று பாதிக்க இயலாது), தன்னைக் கேலி செய்வார்கள் என்று எழுதியுள்ளார். ஏனென்றால் புவியீர்ப்பு விசை என்பது பொருள்கள் ஒன்றை ஒன்று தொடாமல் வரும் பாதிப்பு ஆகும்.


இவை (காற்று, மின்காந்த அலை...) போல் எண்ணங்கள் கருத்துகளின் புலம் (field / wave) ஒன்று இருப்பதாகக் கொள்ளலாம். அதைக் கொண்டு நம் அனுபங்களை விளக்கும் திறன் (explanatory power), பயன் (predicting) கூடுமானால் அதைக் கிட்டத்தட்ட உண்மை போல் கொள்ளலாம்.


மனிதனுக்கு ஆக்கத்திறனான எண்ணங்கள் எப்படி வருகின்றன என்பது இதுவரை புரிந்து கொள்ள முடியாத புதிராக (மூளை எண்ணங்களை உருவாக்குகிறது என்ற கருதுகோளில்) இருந்து வருகின்றது.


எனவே இப்புதிய கருதுகோளுக்கு (எண்ணப்புலத்திலிருந்து மூளை எண்ணங்களை வெளிப்படுத்துகிறது) முற்பிறவி நினைவுகளை விளக்க வேண்டியது அல்லாமல் பிற‌ தேவைக‌ள் இருக்கின்றன‌.


இப்புதிய கருதுகோளின் படி, எண்ணப் புலத்திலிருந்து தற்செயலாக ஆங்காங்கே சிலருக்கு நினைவுகள் வரலாம். அவை ஏற்கனவே வாழ்ந்தவர்களைப் பற்றி இருக்கலாம். இது சாத்தியமா?


https://www.quora.com/Is-it-statistically-true-that-with-every-breath-I-inhale-I-take-in-at-least-one-particle-that-was-also-breathed-by-Jesus-and-furthermore-by-every-human-who-has-ever-lived


https://www.sciencefocus.com/planet-earth/are-we-really-breathing-caesars-last-breath/


https://www.irishtimes.com/news/science-asserts-we-are-all-part-of-christ-s-body-1.255358 


மேற்கண்ட வலைப்பதிவுகளின் படி நாம் ஒவ்வொருவரும் சுவாசிக்கும் காற்றில் ஏசு பிரான் (அல்லது புத்தர், திருவள்ளுவர்...) சுவாசித்த அதே ஆக்சிஜன் அணுக்கள் இருப்பதற்கான வாய்ப்புக் கூறு பற்றி புள்ளியியல், அறிவியல் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளது.


இதே வாய்ப்புக்கூறு எண்ணப் புலத்திலிருந்து எண்ணங்கள் நம்மூளையில் நுழைவதற்கும் இருக்கலாம் அல்லவா?


இது மறுபிறப்பிற்கோ, முற்பிறவிக்கோ (ஒரு குறிப்பிட்ட நபர் என்ற அளவில்) தேவையில்லாமல் (அந்நம்பிக்கைகள் அவசியமற்றவை) பிறர் வாழ்வு பற்றிய நினைவு ஒருவருக்கு வருவதை விளக்க வழிவகுக்கிறது. இதில் எந்த மத, மூட நம்பிக்கைக்கும் இடமில்லை. இது சாத்தியம் என்றால் அப்படியான நினைவுகள் தற்செயலாக ஆங்காங்கே சிலருக்கு (அவர்களின் எந்த சுய முயற்சி, கட்டுப்பாடும் இல்லாமல்) வருவது என்பது ஓர் இயற்கை நிகழ்வு ஆனால் அரிதானது என்றாகிறது.


இயற்கையில் பிறப்பிலேயே சிலருக்குக் கையில் ஆறாவது விரல் உள்ளது; சிலருக்கு ஒளிப்படம் போன்ற நினைவாற்றல் (photographic memory) உள்ளது. இவை அவர்கள் கட்டுப்பாட்டில், விருப்பத்தில் வருவதோ போவதோ கிடையாது.


If you understand something in only one way, then you don't really understand it at all. The secret of what anything means to us depends on how we've connected it to all other things we know. Well-connected representations let you turn ideas around in your mind, to envision things from many perspectives until you find one that works for you. And that's what we mean by thinking!

- Marvin Minsky

https://www.azquotes.com/author/10182-Marvin_Minsky 



ஓசூரில் வாழ்ந்த காலத்தில் 25 - 30 வயது மதிக்கத் தக்க ஓர் இளைஞர் ஒரு நாள் என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்தார். அவரால் எதையும் மறக்க முடியவில்லை என்றும் அதனால் தூக்கம் கெடுவதாகவும் மிகவும் துன்பப் படுவதாகவும் சொன்னார். எடுத்துக்காட்டாக, பத்து ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் போகும் போது பார்த்த ஒரு வண்டியின் எண் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருவதாகவும் தன்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் வருந்தினார். கனகசுப்புரத்தினத்தின் பதின்கவனக நிகழ்ச்சியைப் பார்த்தோ அல்லது அது பற்றிக் கேள்விப் பட்டோ என்னைப் பார்க்க வந்ததாக நினைவு. பெரியார் படிப்பகத்தில் முதலில் சந்தித்தும் இருக்கலாம். எனக்கு இது பற்றித் தெரியவில்லை என்றும் மனநல மருத்துவரைப் பார்ப்பது நல்லது என்றும் சொல்லி அனுப்பி வைத்தேன்.


ஞாபகம் (memory) என்பதே மறதியின் (மறக்க முடிவதன் forgetting) அடிப்படையில் தான் இருக்கிறது. According to Information Theory erasing (forgetting) information also requires effort (energy). The benefit is in retaining selected information. Otherwise, remembering everything, we will go mad very soon. 



உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா?

4. அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?


காலம் பொய் என்று கயிறு திரிப்பதும் ஆகாது. மூளையில் எண்ணங்கள் உருவாகவில்லை, எண்ணப்புலத்திலிருந்து மூளைக்குள் எண்ணங்கள் நுழைகின்றன என்பதை எப்படி நிரூபிப்பது? எனவே அதுவும் செல்லாது. 


இரண்டு பருப்புகளும் வேகவில்லை என்றால் வேகிற பருப்பைத் தேட‌ வேண்டியதுதான்! தனி ஒவ்வொருக்குமான ஆன்மா, மறுபிறப்பு போன்றவை இல்லாமல் வேறு என்ன வழி இருக்க முடியும் என்று பார்ப்போம்.


காலம் இருக்கிறது. நான் (உடல் + மூளையில் உருவாகும் நான் என்ற எண்ணம்) நான் என்ற தனிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். மூளை எண்ணங்களை உருவாக்குகிறது. நிகழ்வுகளை நினைவுகளாகப் பதிவு செய்து கொள்கிறது. இவற்றையெல்லாம் அனுமானங்களாகவோ உண்மையாகவோ ஏற்றுக் கொள்வோம். இந்த அடிப்படையில் முற்பிறப்பு நினைவுகள் வருவதை எப்படிப் பார்ப்பது?


மூளையின் நரம்பு அணுக்களின் வலைப் பின்னலாகவே நினைவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது இன்றைய அறிவியலின் கருதுகோள். அதற்கு சில அறிவியல் ஆய்வுகளை நாம் புரிந்து கொள்வதைப் பொறுத்துச் சான்றாகக் கொள்ளலாம்.


ஒருவர் ஒரு நாற்காலியைப் பார்க்கிறார். அப்போது அவர் மூளையின் நரம்பணுகளின் கூட்டமைப்பைப் படம் பிடித்துக் கொள்கிறோம். இது போல் பல பொருள்களை அவர் பார்க்கும் போது படங்கள் பிடித்துக் கொள்ளப்படுகின்றன. பிறகு அவரை அவர் பார்த்த ஒரு பொருளை (வெளியில் சொல்லாமல்) நினைத்துக் கொள்கிறார். இப்போது அவர் மூளை நரம்பணுக்களின் கூட்டமைப்பைப் படம் பிடித்து ஏற்கனவே பிடித்த படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர் இந்த பொருளைத்தான் நினைக்கிறார் என்று சொல்லி விட முடிகிறது. இஃது ஓர் எடுத்துக்காட்டான ஆய்வு. இதை மூளை எண்ணங்களை உருவாக்குவதற்கான, நினைவுகளைப் பதிவு செய்து கொள்வதற்கான சான்றாகக் கொள்ளலாம். ஆனால் அஃது அப்படியா அல்லது நினைப்பது என்பது மூளை வழியாக வெளிப்படுகிறதா? எது சரி?


இருந்தாலும் மூளையில் தான் நரம்பணுக்களின் கூட்டமைப்பாக நினைவுகள் பதிவாகி இருக்கின்றன என்றே வைத்துக் கொள்வோம்.


ஆக, இந்தக் கருதுகோளின் படி, முற்பிறவி நினைவு என்பது (கனவில் பலவிதமான‌ விசித்திரங்கள் வருவது போல்), தற்செயலாக அமைந்த நரம்பணுக்களின் கூட்டமைப்பால் எழுந்தது என்று கொள்ள இடமிருக்கிறது. அஃது ஏதோ சில சமயங்களில் பிறதோர் இடத்தில் ஒருவரின் வாழ்வில் நடந்தவற்றுடன் ஒத்துப் போய் விடுகிறது. ஒத்துப் போகாதவை எவ்வளவு என்று நாம் கணக்கெடுப்பதில்லை.


இது சாத்தியமா? ஒரே விதமான தீர்வுகள் ஒரே காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வந்துள்ளதற்குப் பல சான்றுகள் உள்ளன. நியூட்டனும் லெபினிசும் ஒரே சமயத்தில் கால்குலஸைக் கண்டு பிடித்தார்கள். அதே போல் டார்வினும் ரஸ்ஸலும் ஒரே சமயத்தில் பரிணாம வளர்ச்சியலைக் கண்டு பிடித்தார்கள். இப்படி நடந்தவற்றை நாம் இயற்கை மீறிய அற்புதங்களாகக் கொள்வதில்லை.


நமக்கு அடுத்த எண்ணம் என்ன வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. எனில் 'நான் சிந்திக்கிறேன்' என்பதே ஓர் அனுமானம், மற்றோர் (நம் கட்டுப்பாடு இல்லாமல் வரும்) எண்ணம் தான். இஃது இப்படி என்றால் நமக்கு (மூளையின் உதவியால் வரும்) நினைவுகளை முற்பிறவி நினைவுகள் என்று நினைத்துக் கொள்வதும் அப்படித் தானே.


இயற்கையில் (ஒருவன் நடத்தும் நாடகம்) பல விசித்திரங்கள் உள்ளன. அவற்றில் சில தொடர்ந்து நிகழும் போது அதை நாம் புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்கிறோம். அப்படி இல்லாமல் மிக மிக அரிதாக நடப்பவை புரிந்து கொள்ள மிக மிகக் கடினமானவை. அதனால் அவற்றை இயற்கையை மீறிய அற்புதங்களாக எண்ணிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. மிக அரிதாக நடப்பவற்றால் நமக்குப் பெரும்பாலும் ஒரு பயனும் இருக்காது என்றும் சொல்லி விடலாம்.


ஒரு கொலைக்குத் துப்பறியக் கொல்லப்பட்டவர் மறுபிறப்பு எடுத்து வந்து சொல்வார் என்று காத்திருக்க முடியுமா?


5. நம்புகிறவனுக்கு நாராயணன் நம்பாதவனுக்கு எமகண்டன்


இது போன்ற ஆய்வுகள் எவ்வளவுதான் செய்தாலும் முற்பிறவி நினைவு, சோதிடம் பொருந்தி வருவது... போன்ற அனுபவங்களைப் பெற்றவர்களின் உறுதியை அசைக்காது. ஏனெனில் நம்முடைய அனுபவம் என்பது ஒவ்வொருவரின் உரைக்கல். அதை எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் வேறுபாடு.


நான் உள்ளேன் என்ற அனுபவம் உண்மை (நான் இல்லை என்று சொல்வதற்கும் நான் இருந்தாக வேண்டும்). ஆனால் அதை எப்படி உள்ளேன், என்னவாக உள்ளேன் என்று புரிந்து கொள்வதில் தான் வேறுபாடு.


கானல் நீரை அது பொய்த் தோற்றம் என்று புரிந்து கொண்டாலும் நம் கண்களுக்குக் கானல் நீராகவே காட்சியளிக்கிறது. பூமிதான் தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது என்று புரிந்து கொண்டாலும் அனுபவத்தில் சூரியன் தான் எழுந்து, நகர்ந்து, மறைவதாக உள்ளது. நாமும் குடை ராட்டினத்தில் சுற்றுவது போல் பூமியின் சுழற்சியை உணருவதில்லை. பூமி கோளவடிவமானது என்று புரிந்து கொண்டாலும் கண் பார்வைக்குத் தட்டையாகத் தெரிகிறது.


பரிணாம வளர்ச்சி உயிரியலின் படி நமக்கு, நம்முடைய உயிர்பிழைப்புக்கு ஏற்றவாறே நம்மை, புற உலகைப் புரிந்து கொள்ளத் தேவை இருக்கிறது. நாம் உண்மையில் யார், உலகம் உண்மையில் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. உண்மையில் அப்படிப் புரிந்து கொள்வது நம் உயிர்பிழைப்புக்குப் பாதகமாக இருக்குமென்றால் இயற்கை அதைத் தடுக்கவே வழிவகுக்கும். 


இதை அறிவியல் ரீதியாக கணிதத்தின் துணை கொண்டு நிரூபித்துள்ளதாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இர்வைன் பல்கலைக்கழகப் பேராசிரியர் டோனால்ட் ஹாப்மேன் https://en.wikipedia.org/wiki/Donald_D._Hoffman  கூறியுள்ளார்.


இவற்றைக் கணக்கில் கொண்டால், மறுபிறப்பு, சோதிடம், கடவுள்... போன்ற நம்பிக்கைகள் எழுவதற்கான பரிணாம வளர்ச்சி உயிரியல் காரணங்கள் நமக்குப் புலப்படலாம். அவை உண்மையில் உண்மையா என்பதை விட அவற்றை உண்மை என்று நம்புவதில் உள்ள பயன் என்ன என்று தேடலாம். சமத்துவம், சமூகநீதி, அடிப்படை மனித உரிமைகள்... போன்ற பல நம்பிக்கைகளும் இந்த வகையைச் சார்ந்தனவே. வழக்கம் போல் ஒரு காலத்தில் சூழ்நிலையில் சாதகமாக இருந்தவை பிற்காலத்தில் வேறு சூழ்நிலையில் பாதகமாக மாறலாம்.


அறிவியலின் படி நமக்கு இச்சா உரிமை (deterministic universe) இல்லை என்று வாதிடுவோரும் சரி, மதம், கடவுள் நம்பிக்கையின் படி 'எல்லாம் இறைவன் செயல்' என்று நமக்கு எந்தவிதமான இச்சா சுதந்திரமும் இல்லை என்று வாதிடுவோரும் சரி, நமக்கு நாம் சிந்திப்பதைப் பற்றிச் சிந்திக்க முடியும் சுதந்திரம் இருப்பதை உணரவே, ஒப்புக் கொள்ளவே செய்வார்கள். 


ஒரு புறம் பார்த்தால் நமக்கு எந்த சுதந்திரமும் இல்லை. ஆனால் நடப்பில் நமக்குச் சிந்திப்பதைப் பற்றிச் சிந்திக்கச் சுதந்திரம் உள்ளது உண்மை. இதை எப்படிப் புரிந்து கொள்வது?


We are coming around in a circle to the deep end and we cannot avoid it.


6. காலத்தை வென்றவன் நீ... நீ...


இச்சா சுதந்திரத்தைப் பற்றிப் பலர் பலவிதமாக எழுதி குவித்துள்ளனர். ஆனால் ரமணரிடம் கேட்ட போது, யாருக்கு இந்த இச்சா சுதந்திரம் என்று அதை (நான்) முதலில் தேடச் சொன்னார்.


கதை படிக்கிறோம். கதையில் ஒரு கால ஓட்டம் உள்ளது. அதை உணர நாம் கதைக்கு வெளியே இருப்பதால்தான் முடிகிறது. அக்கால ஓட்டத்தை அக்கதையில் வரும் கதை மாந்தர்களின் வழியாக (அவர்களாக நம்மைப் பாவித்துக் கொண்டு) உணருகிறோம். திரைப்படத்தில் ஓடும் காலத்தை உணருவதும் திரைப்படத்திற்கு வெளியே நாம் இருப்பதால்தான் முடிகிறது.


அதே போல் நாம் வாழும் இக்கால ஓட்டத்தை உணருவது, இக்கால ஓட்டத்திற்கு வெளியே இருந்தால் தான் முடியும். அதையே மாற்றிச் சொன்னால் நம்முடைய உண்மையான இருப்பு (இவ்வாழ்க்கைக் கதை மாந்தராக உணரும் கால ஓட்டம்) இக்கால ஓட்டத்திற்கு வெளியே இருப்பதால் தான் நம்மால் இக்கால ஓட்டத்தை உணர முடிகிறது.


இது கால ஓட்டத்திற்கு மட்டுமன்று, இடம் (space) என்பதற்கும் பொருந்தும்.


கதை மாந்தருக்கு இச்சா சுதந்திரம் இருக்க முடியாது. ஆனால் கதையின் கால ஓட்டத்திற்கு வெளியே இருந்து கதை மாந்தராகக் கால ஓட்டத்தை உணரும் ஒன்றிற்கு (இயற்கை, இறை ஆற்றல், கடவுள், பிரம்மம், ஆதி, சிவம், ஆன்மா...) இச்சைப் பட வேண்டிய (வேண்டுதல் வேண்டாமை இலான்) அவசியமே இல்லாத சுதந்திரம் உள்ளது, முழுச் சுதந்திரமாகவே உள்ளது. அப்படி உள்ளது எதுவோ அதுவும் சுதந்திரமும் வேறன்று.


"உரிமை, சுதந்திரம், விடுதலை என்றால் அதை நான் போராடிப் பெற வேண்டியதாகவோ காப்பாற்ற வேண்டியதாகவோ இருக்கக் கூடாது. அது நான் இழக்க முடியாததாக இருக்க வேண்டும். ஓயாது அதை நான் காத்து, தக்க வைத்துக் கொள்ள கூடியதாகவும் அப்படிச் செய்யாவிடில் இழந்து விடும் தன்மையினதாகவும் இருந்தால் அது வேண்டத் தக்கதோ விரும்பத் தக்கதோ அன்று. நான் மூச்சு விடுவது போன்று எனக்கு சுயாதீனமாகவும் இயல்பானதாகவும் சுதந்திரம் இருக்க வேண்டும். சுருக்கமாக நானும் சுதந்திரமும் வேறு வேறாக இருக்கக் கூடாது. இப்படிச் சொல்வதனால் சுதந்திரம் சுலபமானது என்றோ இலவசமானது என்றோ பொருள் அன்று. சுதந்திரம் பெறுவதன்று, வாழ்வது."

- சரியார்.


Free will doesn't mean free to do as one wills (wishes). It means free from willing (wishing).


வேண்டுதல் வேண்டாமை அற்ற அங்கு, 

பிறப்பும் இறப்பும் உண்டு (கதை மாந்தராக மறுபிறப்பும், முற்பிறவி நினைவுகளும்)

பிறப்பும் இறப்பும் இல்லை (காலத்தை வென்றதாக,கதையைக் காண்பவராக‌).  


No comments:

Post a Comment