Tuesday 17 May 2011

யாதும் ஊரே யாவரும் கேளிர்

2011-05-17

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர் தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணை போல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
             - கணியன் பூங்குன்றனார் (புறநானூறு: 192)

ஒன்றாம் உயிர், பல கோடி 'நான்' என எழுந்து, 'நாம்' என்ற நாடகமாகத் தோற்றமளிக்கிறது. நான் தன்னலம், நாம் தந்நலம் (தம்மைச் சார்ந்தவர் நலம்) என விரியும். மேலும், 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும்'. அதனினும், 'எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை உடையதாய்' உயர்ந்து, பின் 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி...' என்றும் 'கண்ணில் காண்பதுன் காட்சி... ...மண்ணொடு ஐந்தும் வழங்குயிர் யாவுமே அண்ணலே நின் அருள் வடிவாகுமே' என்று விளங்கும்.

இதில் ஒரு காட்சியே (கட்டம்) இப்பாடல்.

எந்த ஊரும் நம்முடைய ஊரே. எவரும் நம் உறவே. நன்மை, தீமை நமக்குப் பிறரால் வருவது இல்லை. நோயும் தீர்வும் அவ்வண்ணமே. உறங்குவது போல் சாவு, தினமும் நடப்பதே. புதியது அன்று. வாழ்வை இனிமை என்பதும் இல்லை; இடர் வரின் கொடுமை என்று வருந்துவதும் இல்லை. 'மின்னும் வான் முகிலின் குளிர்ந்த நீர்த்துளி, அங்கேயே இருக்க இயலாது. பாறைகளை உருட்டும் பெரிய ஆறாக விழுந்து ஓடுவதில் ஒரு தெப்பம் எப்படி ஒழுங்கைமைதியாகச் செல்லுமோ அது போல உயிர் தன் வழிப் படும்' என்பதைக் கண்டு தெளிந்தவர் சொன்னதை அறிந்தால், பெருமைக்காகப் பெரியோரை வியக்க வேண்டியதோ, அதை விடச் சிறுமைக்காகச் சிறியோரை இகழ வேண்டியதோ இல்லை.

All our kin; any town our own;
Good and bad given by none;
By the same source, pain or relief;
Death nothing new, but wrong belief;
Rejoice not, living as bliss;
Suffer not, calling it stress;
Away with such muttering,
Sway not from clear uttering:
Like a raft on roaring river
Life flows drifting for ever;
Knowing thus, the wise eschew
To wonder at, less persecute
The great and the mean.

No comments:

Post a Comment