Tuesday 26 July 2022

“நான்” எங்கு எழுந்தது, எப்படி எழும்?

 “நான்” எங்கு எழுந்தது, எப்படி எழும்?

2022-07-13

தேவராஜ்:

 

இந்த “நான்” எங்கு எழுந்தது, எப்படி எழும்?
 
நான்’ என்று சொல்வதற்கோ நினைப்பதற்கோ ஒருவர் இல்லை
யென்றால் மற்றெதுவும் இல்லை.
 
இந்த “நான்” எங்கு எழுந்தது, எப்படி எழும்?
 
நிகழ்காலத்தைப் பற்றிக் கொண்டுதான் இறந்த காலமும்
எதிர்காலமும் நிற்கின்றன. இறந்த காலத்தில் நிகழ்ந்த போதும்,
எதிர் காலத்தில் நிகழப் போகும் சமயமும் நடப்பவை அந்தந்த
நிகழ்காலத்திலேயே நடக்கின்றன.

ஆகையால் நிகழ்காலம் என்ற ஒன்றே மூன்று காலங்கள்
ஆகின்றன. எனவே இன்றே, இப்போதே என்ற நிகழ்காலத்தின்
உண்மையைத் தெரிந்து கொள்ளாமல், இறந்த காலத்தைப்
பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் ஆராய்ந்து அறிவது ?
 
இன்றைய நடப்பை விட்டுவிட்டு, நேற்றையதும், நாளையதுமான
நிகழ்வுகளை எப்படி விவரிக்க முடியும்? ஏனென்றால், இன்று,
இப்போது என்பதே நாம் எப்போதும் காணும் உண்மை. நேற்று
நடந்தது என்பது நடக்கும் போது நேற்றைய தினத்தின்
“இன்றைய” நிகழ்ச்சி. அதுபோல நாளை நடக்கப் போவது என்பது
நாளைய தினத்தின் “இன்றைய” நிகழ்ச்சி.
 
உடலோ “நான் உடம்பு” என்று சொல்லிக் கொள்வதில்லை.
அப்படியென்றால் “நான் உடம்பு” என்று நினைப்பவனோ,
சொல்பவனோ யார் என்று பார்க்க வேண்டும். நல்ல தூக்கத்தில்
நாம் நாமாக இருந்தும், இந்த உடலின் நினைப்பு இல்லாமல்
தானே இருக்கிறோம். அப்பொழுது இந்த உடலும் இல்லை,
அதைச் சுற்றியுள்ள உலகமும் இல்லை அல்லவா? 
 
ஆக, உடலின் நினைவு வரும்போதுதான், ஒவ்வொருவருக்கும்
இடம், தேசம், உலகம், பிரபஞ்சம் என்ற எல்லா நினைவுகளும்
வருகின்றன.
 
இறுதியில் பார்த்தால், அவை எல்லாம் நமக்கு வரும் நினைவுகளே,
நாம் அல்ல. அதேபோல்தான் காலம் என்ற ஒரு பரிமாணமும் நமது
உடல் நினைவுகள் வரும் போதுதான் வருகிறது. ஆழ்நிலை
உறக்கத்தில், உடல் நினைவு இல்லாதபோது, எங்கே காலம் பற்றிய
அறிவு நமக்கு இருக்கிறது? நன்கு தூங்கினோம் என்ற அனுபவம்
மட்டும் இருக்கிறது; அதையும் அப்போதைக்கு நம்மால் சொல்ல
இயலவில்லை. அனுபவம் இருப்பதால்தான் நாம் இருக்கிறோம்
என்று நமக்குத் தெரிகிறது, ஆனாலும் நமக்கு உடல், காலம், இடம்
என்ற எந்த நினைவுகளும் அப்போது கிடையாது. நாம் நாமாக
மட்டும் இருக்கிறோம், ஆனாலும் அந்த அறிவு அப்போது
கிடையாது. நாம் எப்போதும் உள்ளோம் என்பதால் உடல், நாடு,
காலம் எதுவும் நாம் இல்லை.
 

===========

தொல்:

 

"'நான்’ என்று சொல்வதற்கோ நினைப்பதற்கோ ஒருவர் இல்லை
யென்றால் மற்றெதுவும் இல்லை." - இதைச் சொல்வது யார்?
கேட்பது யார்? எழுதுவது யார்? படிப்பது யார்?
 
நான் எழாத போது எதுவுமே இல்லை என்பதைச் சொல்ல நான்
எழுந்தாக வேண்டியுள்ளது. நான் என்பது உண்மையில் இல்லை
என்றால் அப்படிச் சொல்லப்படுவதும் இல்லை என்றே ஆக
வேண்டும். இஃது அக முரண்பாடாகவே முடியும். நான் ஆழ்ந்து
தூங்கிக் கொண்டு இருக்கிறேன் என்று நான் சொல்ல
முடியுமா? அது போல் தான் இதுவும்.
 
இறந்த காலம், எதிர்காலம் என்பன இக்கணத்தில் தோன்றுவதன்றி
வேறு எங்கும் இல்லை என்பதைப் படிக்கும் போது, சொல்லிக்
கேட்கும் போதே, இஃதை எழுதும் போதே கால ஓட்டமின்றி இயலாது.
இவ்வாக்கியத்தைப் படிக்கத் துவங்கி, படித்து வந்து, பின்பு படித்து
முடிப்பது என்பதே கால ஓட்டம் இன்றி இயலாது.
 
நான் என்பதும், காலம் என்பதும், பிறவும் தோற்றங்களே. அவை
தோற்றங்கள் என்ற அளவில் உண்மை. உண்மை(யாக
இருக்கின்றன) என்ற அளவில் தோற்றங்களே.
 
நாம் நாமாகவே எப்போதும் இருக்கிறோம் என்பது பன்மையைக்
காட்டுகிறது. எல்லாம் ஒன்றே என்பதில் பன்மை இல்லை. எனவே
அது நான் நானாகவே இருக்கிறேன் என்று சொல்லப்பட
வேண்டும். எல்லாம் ஒன்றே என்பது ஒரு பக்கம். எல்லாம்
தனித் தனியாக இருப்பது போல் காட்சியளிக்கிறது என்பது
மறு பக்கம்.
 
'நாம் (நான்) எப்போதும் உள்ளோம் (உள்ளேன்) என்பதால் உடல்,
நாடு, காலம் எதுவும் நாம் (நான்) இல்லை' என்பது ஒரு பக்கம்.
'நானே தனித் தனியாகக் காட்சியளிக்கும் எல்லாவுமாக
இருக்கிறேன்' என்பது மறு பக்கம். இரண்டும் ஒரே உண்மை.
 
முன்பு தனித் தனித் தோற்றங்களை மட்டுமே அறிந்திருந்து
அதையே உண்மை என்று நினைக்கப்பட்டதிலிருந்து இப்போது
'நான் எழாத போது எதுவும் இல்லை' என்பது மட்டுமே உண்மை
என்று அடுத்த எல்லையில் நிற்பது அரைக் கிணறு தாண்டுவதே.
தனித்த-நான், பிற‌ என்பன இல்லை. தனித்த-நான், பிற
என்பன எல்லாம் ஒன்றின் (அதை மெய்யான 'நான்' என்று
சொல்லிக் கொள்ளலாம்) தோற்றமே. இரண்டும் ஒரே உண்மை.
 
கீழ்க்கண்ட பதிவு / பகிர்வை மீண்டும் படித்துப் பார்க்கலாம்.
 
திருஷ்டிசிருஷ்டி - சிருஷ்டிதிருஷ்டி -

http://tholthamiz.blogspot.com/2022/02/blog-post_89.html

No comments:

Post a Comment