Monday 19 September 2011

பிச்சையோ பிச்சை

2011-09-19

பிச்சையோ பிச்சை

'பிச்சை' எடுப்பது கேவலமாகவும் போற்றுதல், வணங்குதலுக்குரிய துறவுப் பெருமையாகவும் நம் இந்து மதப் பண்பாட்டில் உள்ளது. இன்றைய இந்து மதம் என்பது பழந்தமிழர் மதங்களான சைவம் (சிவனியம்), வைணவம் (மாலியம்), புத்தம், சமணம், வேத மதம், சீக்கியம்... போன்றவற்றை நடைமுறையில் உள்ளடக்கி உள்ளது. இதற்கும் மேலும் மதம் கடந்து மக்கள் திருத்தலங்களுக்குப் புனித யாத்திரை (வேளாங்கண்ணி, நாகூர்...) சென்று வருகின்றனர். நாத்திகமும் இந்து மதத்தின் ஒரு பிரிவு என்பதில் ஐயமில்லை.

தன் உழைப்பால் பிழைக்க முடியாத சோம்பேறிகளாகப் பிச்சை எடுப்பது கேவலம் என்றும் தன் முயற்சி, தன் உழைப்பு, தன் சாதனை... என்ற ஆணவம் அற்றுப் போன நிலையில் 'யார் யாரிடம் பிச்சை எடுப்பது' என்று புரிந்த, உணர்ந்த நிலையில் 'பிச்சை' எடுப்பது போற்றுதலுக்குரிய துறவு உள்ளமாகவும் பார்க்கிறோம்.

தன் உழைப்பால் (அதற்குச் சன்மானமாகப்) பொருள் ஈட்டி உயிர் பிழைப்பதை 'தன்மானம்' என்று கருதுகிறோம். 'எல்லாம் இறைவன்/இயற்கையின் செயல்' என்று உணர்ந்து 'தன்மானம்' அழிந்த நிலையில் உடல், உயிர் முதற்கொண்டு எதையும் விரும்பவோ, வெறுக்கவோ இயலாத போக்கில் 'பிச்சை' எடுத்து உயிர் பிழைப்பதை 'உயர்மானம்' (துறவு) என்று கருதுகிறோம்.

அசல் இருந்தால் போலிகளும் வந்து விடுகின்றன. அதற்காக அசல் இல்லாமல் போய் விடாது. ஆகப் போலித் தன்மானங்களும் போலி உயர்மானங்களும் அசல்களுடன் உலகில் உலவுகின்றன.

என் தம்பி திருவள்ளுவன் செங்கற்பட்டு இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்தான். அப்பள்ளிக்கு ஒரு தலைமை ஆசிரியருடன் மிஷன் நியமித்த ஒரு சாமியாரும் பள்ளி நிர்வாகியாக இருப்பார். இப்போது அப்படி உள்ளதா என்று தெரியவில்லை. அதே அமைப்பு, ஏற்பாடு நீடித்தாலும் நீடிக்கலாம். ஆனால் 1970 களில் அப்படி இருந்தது. அச்சாமியாருக்கு நல்ல சீடனாக (மாணவனாக) நெற்றியில் விபூதி இட்டு என் தம்பி நடந்து கொண்டதால் அச்சாமியாருக்கு இவனை மிகவும் பிடித்து இருந்தது. அச்சாமியார் மூலம் தெரிந்து கொண்டது:

இராமகிருஷ்ணா மிஷனில் சாமியாராக வேண்டுமென்றால் அதற்குரிய கல்வி, பயிற்சித் தகுதிக்குப் பிறகு கடைசியாக ஓர் ஆண்டு நாடோடியாகப் பிச்சை எடுத்து வாழ வேண்டுமாம். இப்போதும் அத்தகைய விதிமுறை, நடைமுறை இருக்கிறதா என்று தெரியவில்லை. அச்சாமியார் ஆந்திராவில் ஓர் ஆண்டு ஊர் ஊராகத் திரிந்து பிச்சை எடுத்து வாழ்ந்தாராம். இரவில் வாய்ப்பு கிடைத்தால் காவல் நிலையத்தில் படுத்துக் கொள்வாராம்.

தான் படித்து விட்டோம், தான் சாம்பாதித்து விட்டோம், தான் சாதனை புரிந்து விட்டோம் என்பன மட்டுமல்ல ஆணவம். தான் துறந்து விட்டோம் என்பதும் ஆணவம் தான். அதுவும் அழிய வேண்டுமென்றால் கொஞ்ச காலம் பிச்சை எடுத்துப் பிழைக்க வேண்டும் என்று விதி வைத்துள்ளார்கள் போலும்.

தாயுமானவர் தான் அரசனுக்கு அமைச்சராக இருந்த அதிகாரம் செலுத்திய அதே திருச்சி மாநகரில் துறவு பூண்டு அதே வீதிகளில் பிச்சை எடுத்தார்.

அழிக்கும் கடவுள் சிவபெருமான் பிச்சை எடுத்த பெரிய புராணங்களும் நம் சமயமல்லவா?

பிச்சை சிறுமையா பெருமையா என்பது பிச்சையின் நோக்கம், தன்மை குறித்ததாகும். மற்றபடி எல்லோரும் பிச்சைக்காரர்களே. யாரிடமிருந்து எதற்காகப் பிச்சை எடுக்கிறோம் என்பது தான் வேறுபாடு. காண்க 'கீழிலிருந்து மேல்வரை பிச்சைக்கார மனிதர்கள்' வலைப்பதிவு.

http://tholthamiz.blogspot.com/2011/08/blog-post_5618.html

அவரவர்க்கு வாய்த்த இடம்
அவன் போட்ட பிச்சை
அறியாத மானிடருக்கு
அக்கரையில் இச்சை 

           - 'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' திரைப்படப் பாடல்

No comments:

Post a Comment