Sunday 11 November 2012

கடல் கடந்த மடல் 6

2012-11-11


தமிழ்நாட்டு நலம் நாடிகளே!

சட்டத்தின் முன் சிலர் அதிக சமம்

இந்தியாவின் நிதிஅமைச்சர் .சிதம்பரம் ரயிலில் இரண்டாம் வகுப்புப் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு முதல் வகுப்பில் பயணம் செய்தார். டிக்கெட் பரிசோதகர் வந்த போது மாட்டிக் கொண்டு தண்டனைப் பணம் செலுத்தினார். நடக்குமா? நம்ப முடிகிறதா? இந்தியா என்பதைப் பிரிட்டன் என்றும் .சிதம்பரம் என்பதை ஜார்ஜ் ஆஸ்போர்ன் என்றும் மாற்றிக் கொள்ளுங்கள்.

கடந்த அக்டோபர் மாதம் இப்படி நடந்தது என்றால், 2000-ஆம் ஆண்டில் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேரின் மனைவி செர்ரி பூத் டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணம் செய்ததற்காகக் கட்டணமும் அபராதமும் செலுத்தினார் என்பதும் இந்நாட்டின் நடப்பு ஆகும். நிதி அமைச்சரும் பிரதமரின் மனைவியும் ரயிலில் பயணம் செய்கிற அளவுக்கு இந்தியா இன்னும் 'தாழ்ந்து' விடவில்லை! வளர்ச்சி அடைந்து விடவில்லை!

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது மக்களாட்சியின் ஓர் அடிப்படை. ஆனால் நடைமுறையில் செல்வமும் செல்வாக்கும் படைத்தவர்கள் மற்றவர்களை விட 'அதிக சமம்' என்று தான் எங்கும் உள்ளது. பிரிட்டிஷ் பேரரசி எலிசபெத் அவர்களின் காருக்கு விதிவிலக்காக நம்பர் பிளேட் கிடையாது. அவர் எந்த கம்பெனிகளில் பங்கு (share) வைத்துள்ளார் என்பதை வெளிப்படுத்தக் கூடாது என்று சட்டச் சலுகை உள்ளது.

மக்களாட்சியை உலகிற்குத் தந்த பிரிட்டனில் இன்றும் பேரரசியும் அரச குடும்பத்தினரும் மக்கள் வரிப்பணத்தில் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் செலவுக் கணக்கு திறந்த புத்தகமாக உள்ளது. அரச குடும்பத்திற்காக ஒவ்வொரு குடிமகனும் ஓர் ஆண்டிற்கு ஒரு ஸ்டெரிலிங் பவுண்டுக்கும் குறைவாகவே வரி சுமக்க வேண்டியுள்ளது என்று துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்கிறார்கள். சென்ற ஆண்டு பிரிட்டனில் செலவுக் கணக்கில் மோசடி செய்ததற்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சிறைக்குச் சென்றார்.

முன் 'ஏமாற்று'வது

மன்னர்களை ஒழித்துக் கட்டிய இந்தியக் குடியரசில் அரசியல்வாதிகள ராஜா, ராணிகளைப் போல் உலா வருகிறார்கள்துதி பாடப் படுகிறார்கள்துதி பாடுபவர்கள் ஏதோ ராஜவிசுவாசத்தாலோ மதிப்பாலோ செய்யவில்லை. பதவி, செல்வம், செல்வாக்குப் பிரதிபலன்களுக்காகவே செய்கிறார்கள். இக்கதை படிப்படியாகக் கீழே தொண்டர், குண்டர் வரை தொடருகிறது. ஆனால் சட்டம் பெயரளவுக்கு உள்ளது. சட்டம் மீறுவதற்காகவே உள்ளதாகச் சொல்வார்கள். அது இல்லாவிடில் எதை மீறுவது? எப்படி முன்னேறுவது? அதாவது ஏமாற்றுவதில் முன் நிற்பது என்பது தான் 'முன்னேறுவது' ஆகும்! சட்டத்தின் படி நடக்கும் கணிசமானோர் ஏமாற்றுவதில் பின்னேற்றம் அடைவற்கே 'சட்டங்கள்' உள்ளன!

ஆனால் இதைத் தனிநபர் சார்ந்ததாகப் பார்ப்பது சரியன்று. இங்கு இருப்பவர் அங்கு சென்றால் அவரும் அப்படித் தான் (பெரும்பாலும்) இருப்பார். சுருக்கமாக, திருட 'வக்கில்லாத'வர்கள் நல்லவர்களாக உள்ளனர் என்றும் சொல்லலாம். 'ஒழுக்கம் என்பது வழுக்குவதற்கு வாய்ப்பின்மையே' என்று சொல்வது போல் தான். மு.. அவர்கள், 'காரில் போகிறவர்கள் நடந்து போகிறவர்களை வைவதும், நடந்து போகிறவர்கள் காரில் போகிறவர்களை வைவதும் வியப்பில்லை; ஒரே ஆள் தான் காரில் போகும் போது  நடந்து போகிறவர்களைக் கடிந்து கொள்வதும் பின் அவரே நடந்து போகும் போது காரில் போகிறவர்களைப் பழிப்பதும் தான் வியப்பாகும்' என்று சொல்லியுள்ளார். பரமசிவன் கழுத்தில் இருந்தால் பாம்பும் கருடனைக் குசலம் விசாரிக்கும். நிலையே நினைப்புக்கும் நினைப்பே நிலைக்கும் ஆதாரமாக உள்ளது.

ஏமாற்றம் இல்லாத மாற்றம்

இருக்கும் இடத்தைப் பொறுத்து தான் நடப்பு இருக்கும் என்றால் எப்படி மாற்றம் வரும்? அதிலும் ஏமாற்றம் இல்லாத மாற்றம் வர வழி என்ன? இந்த மலைப்பு ஒவ்வொரு காலத்திலும் இருந்து வந்துள்ளது. என்றாலும் அதைப் பொய்த்து மாற்றங்கள் நிகழ்ந்தே வந்துள்ளன. இதை எழுதவும் படிக்கவும் செய்கிறோம் என்பதே அதில் ஒரு பங்கு தான். அது தான் வரலாறு காட்டும் பாடம். இந்தியா விடுதலை பெற முடியமா என்று மலைத்து இருப்பார்கள். சுயமரியாதைத் திருமணம் சட்டமாகுமா என்றும் சந்தேகித்து இருப்பார்கள். நம் வாழ்நாளுக்குள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தால் பல மாற்றங்களுக்கான அடிப்படை வேலைகளைச் செய்தவர்கள் அவற்றைச் செய்து இருக்க மாட்டார்கள். நம் நிலையும் அதே தான். கண்மூடித்தனமான, இசங்களின்  மயக்கத்திலான 'நம்பிக்கை'யும் எதிர்ப்பின் வலிமை, அளவைக் கண்டு 'அவநம்பிக்கை'யும் அடையாமல் 'ஏமாற்றம் தந்த மாற்றங்களி'லிருந்து கற்றுக் கொண்டு நம்மால் இயன்றதை தொடர்ந்து, முழு முயற்சியுடன் செய்வதே 'வெற்றி' ஆகும்; அதுவே 'வெற்றி'யை ஆக்கும்.

தமிழ்நாடி,
ஐப்பசி 26, திருவள்ளுவர் ஆண்டு 2043 (நவம்பர் 11, 2012)

No comments:

Post a Comment