Sunday 9 September 2012

வினையும் விளைவும்

2012-06-30

வளர்ந்த மேற்கு நாடுகளிலேயே (பெருமளவு rule of law இருந்து வரும் நிலையிலும்) அரசியல் வாதிகளின் சுயநலப் போக்காலும் வங்கிகள், பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் அரசியலும் ஊடகங்களும் இருப்பதாலும் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், விலகி நிற்கின்றனர். வாக்களிப்பதிலும் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். ஏனெனில் அதன் மூலம் எந்த உருப்படியான மாற்றத்தையும் கொண்டு வர இயலவில்லை. மக்கள் கருத்தை அரசுகள் மதிப்பதும் இல்லை. 

இந்திய அரசியல் வாதிகளுக்கும் மேற்கத்திய அரசியல் வாதிகளுக்கும் வேறுபாடுகள் (அவர்களின் பண்பு, பழகும் முறை, அவர்கள் அதிகாரச் செல்வாக்கின் எல்லை, மனசாட்சி...) பல இருந்தாலும் ஒட்டு மொத்தமாகச்  சீரழிந்து வருகின்றது என்றே சொல்ல வேண்டும்.

ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு முன் (வெளிநாட்டு வேலை, வாழ்க்கை அனுபவங்களைப் பெறும் முன்) இலக்கிய வீதி இனியவன் ஐயாவிடம் சென்னையில் பேசிக் கொண்டு இருந்த போது, "இன்றைய சமுதாய சூழ்நிலை சீர்ப்படும் என்ற நம்பிக்கைக்கு இடம் தரவில்லை. ஆனால் நம்பி நம்மால் இயன்றதைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று குறிப்பிட்டேன். இன்று அந்தக் கருத்து உலகளவிலும் பொருந்துகிறதை, வலுப்பட்டுள்ளதைக் காண்கிறேன்.

அதே சமயம் மனம் ஒன்றை ஆராய்ந்து நம்புவதை விட, ஏற்கனவே நம்பியதற்கு ஆராய்ந்து நிரூபணம் தேடும் இயல்புடையது. This is one of the pitfalls of our cognitive machinery.

ஆட்சியர் சகாயம், தொண்டர் மதுரைக் கிருஷ்ணன்... போன்றோரைப் பற்றி நினைக்கும் போது மனம் நம்பிக்கை பெறும். அல்லது மனம் நம்பிக்கை உடன் இருக்கும் போது அப்படிப்பட்டவர்களை நினைத்துக் கொள்ளும். மாறானவற்றைப் பற்றி நினைக்கும் போது மனம் நம்பிக்கை இழக்கும். மனம் நம்பிக்கை இழந்து உள்ள போது அதற்கு ஒத்துப் போகின்றவற்றைத் தேடிப் பிடித்துச் சொல்லிக் கொள்ளும். 

இதைச் சுருக்கமாக, மு.வ., "மனம் தன் விருப்பு வெறுப்புக்குத் தக எடுத்துக்காட்டுகளைத் தேடிக் கொள்ளும்" என்று சொல்லியுள்ளார். இது இன்றைய அறிவியல் (உளவியல்) ஆய்வுகளில் உண்மை என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.

நம்பிக்கை, அவநம்பிக்கைகளைக் கடந்து (அதாவது அவை வந்து போவதைப் பெரிது படுத்தாது) 'அற'த்தின் (தர்மம், சத்தியம், இயல்பு, Tao...) வலிமையை எண்ணி அதில் நின்று செயல்படுவதே சிறந்தது. அறன் வலியுறுத்தல் (திருக்குறள் அதிகாரம் 4) என்பது அறத்தை வற்புறுத்திக் கூறுதல் அன்று. அது 'அறத்தின் வலிமை'யை உறுத்துதல் (உறுதியாகச் சொல்லுதல்) ஆகும்.

அறம் என்றோ சத்தியம் என்றோ (அசத்தியம், அதர்மம் என்றோ) நம்மைத் தவிர்த்துத் தனியாக எதுவும் இல்லை.

எந்த ஆற்றல் நம்மை இயக்குகிறதோ அதே தான் எதிர்ச் செயல்களுக்கும் (இயல்புகளுக்கும்) மூலமாக விளங்குகிறது என்று அறிவியல் அடிப்படையிலும் அறிந்து கொள்ளலாம்; ஆன்மிக அடிப்படையிலும் தெளிந்து கொள்ளலாம்; பொதுஅறிவு அடிப்படையிலும் புரிந்து கொள்ளலாம்; அனுபவத்தாலும் உணர்ந்து கொள்ளலாம். அந்த நிலையில் வேர் கொண்டு (rooted) இயங்கும் போது தான் சூழ்நிலைச் சமிக்ஞைகளில் ஆழ்ந்து மூழ்கி விடாது உறுதியாகச் செயல்பட இயலும். அப்படி நாம் செயல்படுவதும் சூழ்நிலைச் சமிக்ஞைகளாகப் பரவும்.

நம் மின்னஞ்சல் பரிமாற்றத்தில் பலமுறை பகிர்ந்து கொண்டது தான். "சிக்கல்களை உருவாக்கிய அதே மனப்பான்மையைக் கொண்டு அவற்றைத் தீர்க்க முடியாது" ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனால் மனநுட்பம் முதிர்ச்சி அடைந்துள்ளதா? குறிப்பிட்டுச் சொல்லும் படியாக உலகில் எங்குமே இல்லை. ஒப்பிட்டளவில் செல்வம் கொழிக்கும் நிலையில் கூட மேற்கு நாடுகளில் பரவலாக மக்கள் மனம் முதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரியவில்லை. மேம்போக்கான பழக்க வழக்கங்களே மாறியுள்ளன. பற்றாக்குறை வந்தால் பழக்க வழக்கங்கள் பாழாய்ப் போனாலும் போகும்.

அப்படி மன நுட்பம் முதிர்ச்சி அடையுமா? அதற்கு நம் உயிரியல் அமைப்பில் வழி உள்ளதா? மரபணு மாற்றங்களின் மூலம் மனிதன் தன் மன இயல்பை மாற்றிக் கொள்வானா? எதை எப்படி மாற்றுவது என்று யார் முடிவு செய்வது? எந்த இயல்பு சரி எந்த இயல்பு தவறு? என்ன அளவு கோல்? இவற்றிற்கு விடையளிக்க இயலாது.

ஆனால் பரவலாக மக்கள் மனப்பான்மை மாறாமல், முதிர்ச்சி அடையாமல் மனித இனம் இந்தச் சுழற்சியிலிருந்து தப்பிக்க முடியாது என்று நம்மைப் போன்றோருக்குப் புரிவதே 'மன நுட்பம் முதிர்ச்சி' அடைவதற்கு அடையாளம். அது சாத்தியம் என்பதற்குச் சான்று. நம்மைச் சமுதாயத்திலிருந்து தனியாகப் பிரித்து கொண்டு நினைக்கும் மாயையைக் கண்டு விட்டால், நாம் எப்படி/இப்படி இருக்கிறோம் என்பதே சமுதாயத்தின் நம்பிக்கை; அறம்; தர்மம்; சத்தியம்; இயல்பு....

கடமையைச் செய். பலனை எதிர்பாராதே (கீதை)

தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்றல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு (திருக்குறள்: 266)

இலர் பலர் ஆகியக் காரணம் நோற்பார் 
சிலர்; பலர் நோலா தவர் (திருக்குறள்: 270)

"தன் நோய்க்குத் தானே மருந்து" (திருக்குறள்: 1102)

மனிதன் சமுதாய விலங்கு. அவன் நினைத்தாலும் 'தான் உண்டு, தன் குடும்பம் உண்டு' என்று வாழ முடியாது. சமுதாய இயக்க அலை அவனை (அவளை) அடித்து இழுத்துச் செல்வதைத் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. அதைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் (அத்தகைய மன முதிர்ச்சியை அடைந்து) அது வினை (action / proactive). இல்லாவிடில் அது விளைவு (result / reactive). 

வீணர்களை விட்டு விலகி நிற்கலாம். ஆனால் ஆற்ற வேண்டிய, ஆற்றக் கூடிய‌ வினைகளை விட்டு விலகி இருக்கக் கூடாது. அதை நாமும் புரிந்து கொண்டு சுற்றியுள்ளவர்களுக்கும் புரிய வைத்து எப்படியான வினைகள் தற்போதுள்ள சூழ்நிலையில் நடைமுறைச் சாத்தியம் என்று குறிப்பாக இளைஞர்களை இணைக்க (engage) வேண்டும். இளைஞர்கள் விலகி இருப்பது அவர்கள் தவறான வழியில் (இயக்கம்) செல்வதை விட ஆபத்தானது. அலட்சியம் செய்வது (கோப தாப‌) அர்ச்சனை(!) செய்வதை விட (குடும்பத்திலும் குமுகாயத்திலும்) மோசமானது.

மனித இனம் உறுதியாக முதிர்ச்சி அடையும்; முன்னேறும்; தளிர்க்கும். ஆனால் அதில் 'தமிழர்/இந்தியர்...' இருப்பார்களா? மாறாதது (வினை புரியாதது) மறைந்து (விளைவு ஆகிப்) போகும்.

அறிவு (மன முதிர்ச்சி) அற்றம் (அழிவு) காக்கும் கருவி (திருக்குறள்: 421)

No comments:

Post a Comment