Sunday 9 September 2012

மூன்று (நான்கு) வகை உண்மைக‌ள்

2012-09-09

திருக்குறளோ, பைபிளோ, குரானோ, கீதையோ...ஏன் அறிவியல் ஆய்வுகளிலோ நாம் ஒவ்வொரும் நம் அனுபவத்திற்கு ஏற்பவே அதைப் புரிந்து கொள்கிறோம். அதனால் அதே வரிகள் ஒருவருக்கே அவரின் வயது, அனுபவத்திற்கு ஏற்ப வேறுபாடான, மாறுபாடான‌ பொருள் / புரிதல் தருவதைத் தவிர்க்க முடியாது.

மேற்கண்ட 'உண்மை' (அல்லது உளறல்) புரிவதும் அதே உண்மை/உளறல் செயல்முறைக்கு (process) உட்பட்டதே.

'உண்மை' மூன்று வகைப் படும்.
1. உள்ளதை உள்ள படி உணர்வது.

2. உள்ளதிற்கான (இருப்பு, நடப்பு object and process) காரணமாக (விதியாக / முறையாக...) உய்த்துணர்வது (அனுமானிப்பது) தொடர்ந்து ஆய்வு, பரிசோதனையில் ஒத்து (consistent results) வருவது.

3. எங்கும் எப்பொழுதும் மாறாத, நிலையானது.

மூன்றனுக்கும் எடுத்துக்காட்டுகள்:

1. மேலிருந்து பொருள் கீழே விழுவது. (டேய், என்ன நடந்ததுன்னு உண்மைய, உள்ளது உள்ள படி, நடந்தது நடந்த படி சொல்லு. எது ஏன் நடந்தது என்பதற்கு உன்னோட கருத்து, ஊகமெல்லாம் வேண்டாம்)

2. அப்படி விழுவதற்கு பொருள்களுக்கிடையே இருப்பதாக அனுமானிக்கப்படும் 'புவியீர்ப்பு' விசை என்பது தொடர்ந்து அந்த அனுமானித்தின் அடிப்படையில் செய்யப்படும் ஆய்வு, பரிசோதனை, செயல்களில் எதிர்பார்த்த, கணக்கிட்ட விளைவை தருவது. அதனால் 'புவியீர்ப்பு' விசை என்ற அனுமானம் ஒரு செயல் உண்மையாக (working truth) ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்பதற்கு அப்பால் முதல் வகை உண்மை அடிப்படையில் 'புவியீர்ப்பு' விசை என்ற ஒரு விசை 'உள்ளது' என்று சொல்ல முடியாது. பொருள்களுக்கிடையே எந்தவிதமான ஈர்ப்பும் இல்லை; அவற்றின் நிறையால் (mass) அவற்றை சுற்றியுள்ள வெளி (space) 'பொருள் விழும் படியாக' வளைக்கப் பட்டு (curved) விடுகிறது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வேறு அனுமானம் கூறி அதுவும் பல பரிசோதனைகளில் 'செயல் உண்மை'யாக மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. ஆக இரண்டுமே அனுமானங்கள். முதல் வகை உண்மையைச் சார்ந்தவை அல்ல.

3. தொடர்ந்து மாறும் எதுவும் உண்மையாக இருக்க முடியாது. பிரபஞ்சத்தில் மாறாது (நம் உடல்,மனம் உள்பட) எதுவுமே  இல்லை. எனவே அவை எல்லாம் தோற்றங்களே. [காலை மலம் கழித்த போது (அதுவரை என் குடலுக்குள் தொல்லாக இருந்த) கொஞ்சம் 'தொல்' சாக்கடையில் போய் விட்டது! ]. ஆனால் எல்லாவற்றையும் அறியும் அறிவுணர்வு மட்டுமே மாறாமல் நிலையாக (சாசுவதமாக) இருக்கிறது. 'அவ்வறிவுணர்வு இல்லாத போது' என்று நினைப்பதற்குக் கூட அவ்வறிவுணர்வு இல்லாது இயலாது. எனவே எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும் சாட்சியாகவும் அதே சமயம் எந்தத் தோற்றத்தாலும் எந்த விதத்திலும் பாதிக்கப் படாமலும் இருப்பது / இருக்கும் அதுவே உண்மை. அஃது இரண்டற்ற உண்மை (non-dual). அந்த விதத்தில் அஃது 'உண்மை' என்பதன் நான்காவது வகை, அதாவது 'உண்மை என்றால் ஒன்றுதான்' (Truth can be only ONE) என்பதற்கும் உண்மையாக விளங்குகின்றது.

இஃது உண்மையின் ஐந்தாவது வகைக்கும் [அதாவது உண்மை என்பது தனக்குத் தானே வெட்ட வெளிச்சமாக, சான்றாக இருக்க வேண்டும். அதன் உண்மைத் தன்மை வேறு ஒன்றைச் சார்ந்து இருக்குமானால் அஃது தன் ‍(சுய‍) உண்மை அன்று; சார்பு (relative) அல்லது பயன்பாட்டு (useful) உண்மையே ஆகும்] உண்மையாக விளங்குகின்றது.
  • எந்த வகை உண்மையைப் பற்றிப் பேசுகிறோம் என்று தெளிவு இல்லாவிடில் வெவ்வேறு அலை வரிசைகளில் (waves) நாம் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுக் கொண்டு (பழி சொல்லிக் கொண்டு) இருப்போம்.
  • 'இருவேறு உலகத்து இயற்கையை' / 'இருமை வகை தெரிந்து' உணராத நிலையிலும் உணர்ந்த நிலையிலும் 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்பது வெவ்வேறு புரிதல்களைத் தரும்.
  • உண்மை வகை ஒன்றிற்கும் இரண்டிற்கும் இடையே வேறுபாடு பொருளை (semantic) விடச் சொல்லில் (syntactic) தான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது 'உள்ளதை உள்ளபடி உணர்தல்' என்பதில் நூறு விழுக்காடு சார்பற்ற தன்மை (100% objectivity) என்பது இருக்க இயலாது.
இந்த உண்மை உளறலை (அல்லது உளறல் உண்மையை) 'கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்'. அதனால் தான் அஃது உண்மையாகவும் உளறலாகவும் ஒரே காலத்தில் ஒன்றி ஒளிருகின்றது! சித்தனும் பித்தனும் சிவமயமே!

பி.கு.:
அப்பா! உளறி சில மாதங்கள் ஆகி விட்டதால், இன்று நன்கு உளறிய நிறைவுடன் உணவு செரிக்கும்; உறக்கம் பிடிக்கும்! உளற வாய்ப்பளித்த உள்ளங்களுக்கு நன்றி!


No comments:

Post a Comment