Tuesday 17 May 2011

குடும்பமும் குமுகாயமும்

2011-05-17

வளர்ந்த மேற்கு நாடுகளில் வாழும் ஆசியர்களின் (Asians) வளரச்சிக்கு அவர்களின் குடும்ப விழுமியங்கள் (family values) பெரும் காரணங்களாகக் கருதப்படுகின்றன. அப்படியான குடும்பப் பற்றின் (family attachments) மறுபக்கமே ஆசிய நாடுகளில் குடும்ப ஆட்சிக்கும் வழி வகுக்கிறது.

இன்று குடும்பம் என்று கருதப்படுவது கருக்குடும்பம் (nuclear family - father, mother and their children). கடந்த நூறு ஆண்டுகளிலேயே குடும்பம் என்பது கூட்டுக் குடும்பமாக (joint family), கருக்குடும்பமாக (தனிக் குடும்பம்) மாறி இன்று ஒரு பெற்றோர் குடும்பம் (single parent family), உடனுறைக் குடும்பம் (co-habiting), தனிநபர் குடும்பம் (singles) என்று தேய்ந்தும் திரிந்தும் வருகிறது.

ஒரு வகையில் அந்தந்தக் காலக் கட்டக் குடும்ப வலையில் சிக்காதவர்களே (பெருந்தலைவர் காமராசர், அம்மையார் ஜெயலலிதா போல்) சமுதாயத்தின் ஆட்சி, அதிகாரப் பொறுப்பில் வர வேண்டும் என்று சட்டம் வைத்துக் கொண்டால் ஓரளவு நன்மை பயக்கலாம்; அல்லது குடும்பப் பற்றின் தீய பக்க விளைவுகளைத் தவிர்க்க முயலலாம்.

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மனிதன் அப்போது இருப்பதே (நாட்டின் எல்லை, அரசியல் அமைப்பு, குடும்ப உறவுகள்...) ஏதோ என்றும் இருந்து விடும் என்ற நினைப்பில் மிதக்கிறான். இதுவரை மாறி வந்துள்ள குடும்பத்தின் வடிவம் இனியும் மாறத்தான் போகிறது. எப்படி மாறும் என்பது உற்பத்தி உறவுகள் எப்படி மாறும் என்பதைப் பொறுத்து உள்ளது என்று மார்க்சியத்தின் அடிப்படையில் சொல்வார்கள்.

அது மக்கள் தொகைப் பெருக்க நெருக்கடியாலும் மாறலாம். இயற்கை வளங்களின் (தண்ணீர், மூலப் பொருள்கள்...) பற்றாக்குறையால் வரும் நெருக்கடியாலும் மாறலாம். இவற்றால் வரும் பெரும் போர்களால் அதன் அழிவுகளால் மாறலாம். அதே போல் இயற்கைப் பேரழிவுகளால் மாறலாம். இத்தகைய ஆபத்து, விபத்துகளுக்கு மறுபக்கமாக மனித உறவுகள் மாற வழி வகுக்கும் தொழில் நுட்ப வளர்ச்சியால் மாறலாம்.

பெண்-ஆண் உடலுறவு இல்லாமல் செயற்கை முறையில் கருத்தரிப்பது இன்று நடக்கிறது. இணைய வளர்ச்சிகள் (mobile phones, email, net-forums, net-groups, social sites...) முகம் பாரா உறவுகள், அருவப்புல (virtual) உறவுகள் வளர வழி வகுத்துள்ளன. இன்று கண், காதுகளுக்கு விருந்தளிக்கும் கணினி தொழில் நுட்ப வளர்ச்சிகள் விரைவில் மற்ற புலன்களுக்கும் (தொடுதல், முகர்தல், சுவைத்தல்) இன்பமளிக்கும் வண்ணம் வளர்ந்து வருகின்றன. இளமை குன்றா இயந்திர மனிதனின் துணை (பெண், ஆண் இருபாலோருக்கும்) எதிர்காலத்தில் அமையலாம். இயந்திர, உயிரியல் மாற்று உறுப்புகளால் நாமும் இளமை குன்றாது வினை புரியலாம்.

தேவைக்கேற்ப அடிமை மனிதர்கள் (slave humans) வடிவமைக்கப் பட்டு (genetically designed), செயற்கை முறையில் கருத்தரிக்கப் பட்டு, வாடகைப் பெண்களால் கரு சுமக்கப் பட்டு, மருத்துவத் தொழிற்சாலையில் பிரசவிக்கப் பட்டுப் பிறகு பண்ணையில் வளர்க்கப் பட்டு, பருவத்தில் பயன்படுத்தப் பட்டு, பயன் முடிவில் மறு சுழற்சிக்கு உள்ளாக்கப் படலாம். இன்று நடப்பதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. நேரடியாக நடக்காமல் மறைமுகமாக நடக்கிறது, அவ்வளவு தான்.

வளர்ந்த நாடுகளில் உணவு உற்பத்தி பெருந்தொழில் மயமாகி விட்டது போல் உணவு சமைத்தல் என்பதும் பெருந்தொழில் மயமாகி விட்டது. சமைத்த உணவை வாங்கி வந்து சூடு செய்வது தான் பெரும்பாலோருக்குத் தெரிந்த சமையல் கலை ஆகி வருகிறது. இன்று கட்டப்படும் பல அடுக்கு மாடி வீடுகளில் சமையலறைச் சுருங்கித் தேய்ந்து வருகிறது. அந்த இடத்தைப் பெரிய தொலைக்காட்சி அடைத்து வருகிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இவை வளரும் நாடுகளிலும் இன்னும் அரை நூற்றாண்டுக்குள் பொதுவாகி விடலாம்.

குடும்பம் இன்றைய வடிவில் ஒட்டு மொத்த சமுதாய நலனுக்கு உதவியாக இருப்பதாகத் தெரியவில்லை. நாள் தோறும் ஒரு பில்லியன் மக்கள் பட்டினியுடன் படுக்கிறார்கள் என்பதிலிருந்து வறுமை, பற்றாக்குறை, வேலையின்மை... புள்ளி விவரங்கள் வரை இன்றையக் குடும்ப வடிவம் மனித உயிரினத்தைச் சரியான வழியில் நடத்திச் செல்வதற்குச் சான்றுகளாக‌ இல்லை. அவரவர் சம்பாதித்த (திருடிய) பணம், சொத்துகளைப் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்ல முடியாது என்று ஒரு சட்டம் செய்தால் கூடப் போதும், இன்றைய குடும்பப் பற்றின் தீய பக்க விளைவுகளைக் கணிசமாகக் கட்டுப் படுத்தலாம்.

வருங்காலத்தை கணிப்பது சுலபமன்று என்றாலும் நிகழ்காலம் எந்தெந்த திசைகளில் இழுக்கப் பட்டுக் கொண்டுள்ளது என்று ஓர் அளவு சொல்லக் கூடும். அப்படியான‌ திசைகளில் ஒன்றிலேனும் குடும்பம் உருப்படுவதாகத் (உருக்குலையாமல் இருப்பதாகத் - surviving) தெரியவில்லை. எல்லோரும் குமுகாய மாற்றத்தை விரும்புகிறோம். ஆனால் குடும்ப மாற்றத்திற்குத் தயாராக இருக்கிறோமா?

No comments:

Post a Comment