Saturday 23 June 2012

கடல் கடந்த மடல் 1

ஆனி 9, திருவள்ளுவர் ஆண்டு 2043 (23 சூன் 2012)

தமிழ் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக வெளியாகி வரும் 'முகம்' என்ற சிற்றிதழுக்காக எழுதுவது இங்கு பகிர்ந்து கொள்ளப் படுகிறது.

***

கடல் கடந்த மடல் 1

தமிழ்நாட்டு நலம் நாடிகளே!

நாம் தமிழ்நாட்டின் நலம் நாடுவோர். அதனால் நாம் தமிழ்நாட்டு நலத்தின் 'நாடி'கள். நம் நாடித் துடிப்பில் தமிழ்நாட்டின் நலம் நாடுதல் உள்ளவரை வீடும் நாடும் நானிலமும் நனி சிறக்கும்!

போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகம் சுருங்கியிருக்கலாம். ஆனாலும் உள்ளம் விரிந்ததா? பல வகை ஊடகங்கள் வழித் தகவல்கள், இன்று நம் வீட்டிற்குள், அணுகுவதற்கு இலகுவாகக் குவிந்திருக்கலாம். ஆனால், இன்றைய வேலைச் சுமையும் வாழ்க்கை ஓட்ட வேகமும் கேளிக்கை வாய்ப்புகளும் அவற்றைப் படித்து, கலந்து, தேர்ந்து பயன்படுத்திக் கொள்ளும் ஓய்வு நேரத்தையும் உள ஆற்றலையும் குறைத்து விட்டனல்லவா? துரித உணவுப் (fast food culture) பண்பாடு, துரிதத் தகவல் (fast / ready / immediate information) தேவையையும் உருவாக்குகிறது.

இம்மடல் ஒரு துரிதத் தகவல் பலகணி. உலகச் செய்திகளை, எழுதுபவர் அறிந்து உணரும் வண்ணம், இதன் வழியாக வாசகர்கள் அறியலாம். ஒருவரின் பார்வை என்பதால், அவரின் மனநிலையைப் (அறிவு, அனுபவம், பக்குவம்...) பொறுத்து ஓரப் பார்வையாக, ஒரு பக்கப் பார்வையாகத் தான் இருக்கும். சிந்தித்துப் பார்த்து மெய்ப்பொருள் காண்க!

பிரான்ஸ் - பிரிட்டன்

பிரான்ஸ் நாட்டில், புதிய குடியரசுத் தலைவர் பிரான்சுவா ஒலண்ட் பதவி ஏற்கும் முன்பே, அவர் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டு விட்டன. பாரீஸ் நகரிலும் வேறு ஒரு சுற்றுலா நகரிலும் அவருக்குள்ள வீடுகள், அவற்றின் மதிப்புகள், அவரின் வங்கிக் கணக்குகளின் விவரங்கள், எல்லாம் பொதுமக்கள் பார்வைக்கு அரசிதழில் வெளியிட்டுள்ளார்கள். நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை முன்னிட்டு, தன் சம்பளத்தை 30% குறைத்துக் கொள்வதாகப் புதிய குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற சில இடைத் தேர்தல்கள், பல உள்ளூராட்சி தேர்தல்கள் இவற்றில் ஆளும் கன்சர்வேடிவ், லிபரல் டெமாகெரட் கட்சிகள் பல தோல்விகளைத் தழுவிக் கொண்டுள்ளன. இவ்விரண்டுக் கட்சிகளும் கூட்டணி அரசை நடத்தி வந்தாலும் தேர்தலில் தனித் தனியாகவே (கடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டது போல்) போட்டியிட்டன.

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் டேவிட் கேமறூன் (பிரிட்டிஷ் பிரதமர்), லிபரல் டெமாகெரட்க் கட்சித் தலைவர் நிக் கெளுக் (பிரிட்டிஷ் உதவிப் பிரதமர்) இருவரும் சேர்ந்து, நிலவும் பொருளாதார வீக்கத்தால் மக்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்று நாங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை; அதைச் சரி செய்து கற்றுக் கொண்டு செயலாற்றுவோம் என்று அறிவித்துள்ளார்கள்.

உலகில் இப்படியும் நாடுகள் இருக்கின்றன. இப்படியான தலைவர்களும் இருக்கின்றார்கள் என்பது, இந்தியாவும் இப்படி ஒரு நாள் ஆகும், இந்தியாவிலும் இப்படியான தலைவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. பிரான்சிலும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உள்ள தொழில் நுட்ப வளர்ச்சிகள் எல்லாம் இந்தியாவிற்கு வரும் போது, அவர்களின் மனப்போக்கில் உள்ள வளர்ச்சிகளும் இந்தியாவுக்கு வரக் கூடாதா; வர முடியாதா? தொழில் நுட்ப வளர்ச்சிகளைக் கொண்டும் வரும், கற்றுக் கொள்ளும் முயற்சிகள் போல் இவற்றைக் கொண்டு வரவும் நடைமுறைப் படுத்தவும் முயன்றால் முடியாமலா போய் விடும்?

ருசிய நாட்டு டால்ஸ்டாயால் இந்திய காந்தி ஊக்கம் பெற்றார். இந்திய காந்தியால் அமெரிக்க மார்டின் லூர்தர் கிங் ஊக்கம் பெற்றார். அது போல், இன்றைய மேற்குலக மக்களாட்சி நடைமுறைகளிலிருந்து நாம் கொள்வன கொண்டு தள்வன தள்ளுவோமாக.

தமிழ்நாடி.

வைகாசி 24  திருவள்ளுவர் ஆண்டு 2043 (6 சூன் 2012)

No comments:

Post a Comment