தூய விழிப்புணர்வே நாம்
2022-08-13 / 14
தூய விழிப்புணர்வே நாம்
2022-08-13 / 14
சூரியன் - ஆத்ம சொருபம்
2021-10-05
நான் வேறு, நான்- நான் வேறா?
2022-07-15
தேவராஜ்
கீழே உள்ள விளக்கம் புரியவில்லை. புரிந்தால் விளக்கவும்.
இப்படியான அம்சங்களை ஒவ்வொன்றாகத் தனித்தனியாகப் புரிந்து கொள்ள முயல்வது எல்லா ஐயங்களையும் (மறத்தல், மறைத்தல்) தீர்க்காது. ஆனால் முழுமையை நோக்கித் தள்ளும்.
மேலே எல்லாக் கோணங்களும் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொருவரின் வயது, இயல்பு, அனுபவம், படிப்பு, தொழில் போன்றவற்றிற்கு ஏற்பப் புதிய கோணங்கள் தேவைப்படலாம்.
அறிவியல், பகுத்தறிவுப் பார்வையுள்ளவர்களுக்குத் தகக் கொள்ள வேண்டிய கோணங்கள் பிறருக்குத் தேவைப்படமால் போகலாம் அல்லது அவர்களுக்கு அவை முக்கியமானவையாக இருக்கா.
ஆக, இப்படியான பல கோணங்களில் ஒன்றுதான், 'நான்' என்ற எண்ணம் வேறு, 'நான்-நான்' என்ற உணர்வு வேறு என்பதும்.
'நான்' என்ற பிரிவினை உணர்ச்சியை / எண்ணத்தை உண்மை என்று நம்பிக்கொண்டிருப்பவருக்கு, அதன் பொய்மையைச் சுட்டிக்காட்ட, விளக்க, 'நான்' என்ற எண்ணம் (கருத்து) வேறு, 'நான்-நான்' என்ற உணர்வு வேறு என்ற மற்றொரு பொய்யான பிரிவினை ஓர் உத்தியாகப் பயன்படுத்தப் படுகிறது.
'நான்' என்ற கருத்தையும் (concept / எண்ணத்தையும்) 'நான்' என்ற இருப்பையும் (existence / உணர்வையும்) பிரித்துக் காட்டுவதற்காக இரண்டாவதை 'நான்-நான்' என்று ரமணர் குறிப்பிடுவார். அஃது ஓர் உத்தியே தவிர உண்மையாக நான்-நான் என்று ஏதோ தனியாக இருப்பதாகப் பொருள் இல்லை.
குத்திய முள்ளைத் தோண்டி எடுக்க மற்றொரு முள்ளைப் பயன்படுத்துவது போல்தான் இதுவும். குத்திய முள்ளை எடுத்த பின் அதை எடுக்கப் பயன்பட்ட முள்ளையும் சேர்த்துத் தூக்கி எறிந்து விட வேண்டும்.
முந்தைய மின்னஞ்சலில் அனுப்பிய ரமணரின் வாக்கியத்தைக் கவனிப்போம்:
"மேலே மேலே போகப் போக, முந்திய படிகள் பூர்வ பக்ஷமாகிவிடும் (ஆரம்ப நிலைக்கு மட்டுமே உதவியாக அமைந்து பின்னர் அர்த்தமற்றதாகிவிடும்)."
முதலில் நமக்கு 'நான்-பிற' என்ற பிரிவினை என்பது ஒரு கருத்தேயன்றி உண்மையான இருப்பு அன்று என்பதில் ஐயமற்ற தெளிவு, உறுதி உள்ளதா?
மேலே வலைப்பதிவில் சொன்னவாறு 'இப்படியான அம்சங்களை ஒவ்வொன்றாகத் தனித்தனியாகப் புரிந்து கொள்ள முயல்வது எல்லா ஐயங்களையும் தீர்க்காது. ஆனால் முழுமையை நோக்கித் தள்ளும்'.
எனவே நாம் ஒவ்வொரு கோணமாக, அம்சமாகப் புரிந்து கொள்வதையும் (analysis) அதே சமயம் எல்லா அம்சங்களையும் சேர்த்துப் பார்த்துப் புரிந்து கொள்வதையும் (synthesis) இணையாகச் செய்து வர வேண்டும்.
நான்-பிற என்ற பிரிவினை ஒரு கருத்தே என்று தெளிவாகி விட்டால், மேற்கண்ட ரமணரின் கீதாசாரம் தேவையில்லை. படித்தாலும் இது நமக்குப் பொருந்தாது என்று விட்டு விட வேண்டும். இல்லாவிடில் அந்த முள் நம்மைக் குத்தும் குடையும்.
நான்-பிற என்ற பிரிவினை ஒரு கருத்தே என்பதில் ஐயம் இருக்குமானால் அந்த ஐயத்தைச் சொன்னால் அது குறித்து மேலும் கலந்து கொள்ளலாம்.
சில சமயங்களில் ஓர் அம்சத்தில் முழுத் தெளிவு வராவிடிலும் அதைத் தற்சமயத்திற்கு ஒரு கருதுகோளாக (hypothesis) அனுமானித்துக் (asume) கொண்டு பிற அம்சங்களை, கோணங்களை ஆய்வு செய்யலாம். ஒரு கோணத்தில் ஏற்படும் தெளிவு மறு கோணத்தில் உள்ள ஐயத்தைத் தெளிவாக்கலாம்.
கணிதம், அறிவியல், விளையாட்டு, இசை, சங்கீதம், தச்சு வேலை, ஓவியம் போன்ற மற்ற பாடங்களைக் கற்றுக் கொள்வதில் ஒரு கட்டமைப்பு (structure) இருப்பது போல் இதிலும் தேவை. அந்த வழிகாட்டுதல் இல்லாவிடில் வழித்தடம் இல்லாத அடர்ந்த காட்டில் எந்தப் பக்கம் போவது என்று தடுமாறிச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்போம்.
=============
16-Jul-2022
தேவராஜ்
" நான் " இல்லை என்றால், எல்லாம் இருக்கும் (உடல், மனம், எண்ணம், உலகம், இன்பம், துன்பம்.... ), ஆனால் அதன் மேல் நாட்டம் இல்லாமல் இருக்கும் ?
உள்ளதை உள்ளதாகப் பார்க்கும் பார்வை. இருவர் நன்கு உறங்கும்போது அவ்விருவருக்கும் எந்த வித வேற்றுமையும் இல்லை அல்லவா, அது போன்றதே இப்பார்வையும். ஆனால் உறக்கத்தில் அந்த நிலை அறியாமையில் மூழ்கியுள்ளது. அப்படியல்லாது அது அறிவுடன் விளங்குவதே அப்பார்வையின் இலக்கணம்.
தேகத்தின் மேல் அபிமானம் இல்லாதவராய், உலக இயக்கங்களில் மையல் கொண்டு மயக்கம் அற்றவராய், மனதில் உருவாகும் பலவிதமான ஆசைகளையும் அகற்றியவராய், எப்போதும் ஆன்மாவினிலேயே தானாக நிலை பெற்றவராய், சரீரம் சம்பந்தப்பட்ட சுகதுக்கம் எனும் இரட்டைகளை ஒழித்தவராய் உள்ள விவேகிகளாகிய அவர்கள் அந்த அழிவற்ற மோக்ஷ வீட்டினை ஆளும் ஞானியர் ஆவார்கள்.
தேகம் இருக்கும், ஆனால் அவர்களுக்கு அதன் மேல் அபிமானம் இருக்காது. உலகம் இருப்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள், ஆனால் அவர்கள் அதன் விதவிதமான தோற்றங்களில் மயக்கம் அடைந்து தன்னிலை தளர மாட்டார்கள்.
எண்ணமும் எழலாம், அதனைத் தொடர்ந்த ஆசைகளும் கிளைத்து எழலாம். ஆனாலும் எண்ணக் குவியல்களாம் மனதில் எளிதாகப் பற்றக் கூடிய பலவிதமான ஆசைகளைத் தவிர்த்தவர்களாக இருப்பார்கள்.
எண்ணங்களையும், ஆசாபாசங்கள் கிளர்ந்து எழுவதையும் ஒரு நீர்ப்பரப்பின் மேல் எழுந்து மறையும் நீர்க்குமிழிகளைப் போலப் பார்த்துக்கொண்டு அவைகளால் எந்த விதமான சலனங்களும் இல்லாது அமைதியாக இருப்பார்கள்.
எப்போதும் தனது இயல்பாக “உள்ள நிலையான” ஆன்மா ஒன்றிலேயே அவர்கள் லயித்து நிற்பார்கள், அல்லது அப்படி இருக்க முயற்சி செய்வார்கள்.
அவர்கள் தேகம் என்ற எண்ணம் இல்லாதவர்கள் ஆதலால் அதனினும் வேறான உலகம் என்பதைக் காணாததினால், அதனை ஒட்டிய இன்பம்-துன்பம் போன்ற பலவகையான இரட்டைகளை அவர்கள் ஒழித்தவர்களாய் காணப்படுவார்கள். அத்தகைய விவேகிகளாக இருக்கும் அவர்களே எனது இறுதி நிலையாகிய மோக்ஷ பதத்தை அடைந்த ஞானியர்கள் ஆவார்கள் என பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்.
அறிவுக்கு மட்டும் தோன்றுவது, வெறும் அறிவார்த்தமாக இருக்குமே அன்றி அனுபவமாக பரிணமிக்காது.
அண்டத்தில் உள்ளதுதான் பிண்டமாகிய நம்முள்ளும் இருக்கிறது என்பது இறுதி உண்மை.
==========
16-Jul-2022
தொல்:
மேலே உள்ள வாக்கியங்கள் ஒவ்வொன்றும் ஒரு கோணத்தில் பார்த்தால் சரி, மறு கோணத்தில் பார்த்தால் உளறல் என்பது புரிவது தான் இறுதி உண்மை!
=======
17-Jul-2022
தொல்:
ஓஷோ (ரஜினிஷ்) சொல்வார்: மனம் எதையாவது ஒன்றைப் பிடித்துக் கொண்டு நிச்சயத்தை, பாதுகாப்பைத் தேடும். என் வேலையே நீ அப்படி எதிலும் நிற்க (settle) முயல்வதைத் தட்டி விடுவதே, தள்ளி விடுவதே, காலை வாரி விடுவதே. (என்னுடைய வார்த்தைகளில், ஆனால் அவர் சொன்ன பொருள் இதுதான்).
[நம்முடைய காலை நாமே வாரிக் கொள்ள நமக்குத் தெரிந்து விட்டால் ஓஷோவோ, ரமணரோ யாரும் தேவையில்லை.]
இதுவரை மனம், 'படிப்பு, திறமை இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்', 'பணம், சொத்து சேர்த்து விட்டால் பாதுகாப்பு', 'உடற்பயிற்சி, நல்ல உணவு இருந்தால் நோய்களிலிருந்து தப்பிக்கலாம்'... இப்படி பலவற்றை மாறி மாறிப் பிடித்து எப்படியாவது வாழ்க்கையில் ஒரு ஸ்திரத்தன்மையை, மனதில் ஓர் அமைதியை அடையப் பார்த்தது.
இவை எதுவும் நிலைக்காது என்று ஒரு கட்டத்தில் உணர்ந்தவுடன், 'எல்லாம் ஒன்றே', 'நம்முடைய நிஜ நான் அழியாதது'... என்று இஃதுதான் இறுதி உண்மை, அதுதான் முடிவான புரிதல், இவ்வளவுதான், அவ்வளவுதான் என்று அதே முறையைப் பின்பற்றிப் பிடித்துக் கொள்ள ஆன்மீக உண்மைகளை நாடித் தேடி அலைகிறது, சுழல்கிறது.
படிப்பு, திறமை, செல்வம், உறவு, புகழ் என்பதற்கு ஏங்கியது போக, இறுதி உண்மை, மோட்சம், விடுதலை, வீடுபேறு, ஞானமடைதல், ஆத்மசொரூபத்தில் லயித்தல்... என்பதற்கு ஏங்குகிறது.
எதற்கு ஏங்குகிறது என்பது துயரம் (suffering), தளை (bondage), அடிமைத்தனம் (slavery) அன்று. ஏங்குகிறது என்பதே துயரம், தளை, அடிமைத்தனம். உண்மையைத் தேடுவதே அஃதை உணரத் தடையாக உள்ளது. அல்லது உண்மையைத் தேடுவதே உண்மை(யின் சொரூபம்) - an expression of the totality - என்றும் சொல்லலாம்.
உலகம், தனித்த நான், பிற, உடல், மனம், அறிவு, எண்ணங்கள் என்பனவற்றின் தோற்றத் தன்மையைப் புரிந்து கொள்வது தொடக்கத்தில் தேவை. அதற்கு அவற்றிற்கு அப்பாற்பட்ட ஒன்று இருப்பதான பொய் (பேரான்மா, விடுதலை, வீடுபேறு...) அந்தக் கட்டத்தில் அவசியம்.
ஆனால் புரிதல் விரிவும் ஆழமும் அடைய அடைய அப்படி இவற்றிற்கு அப்பாற்பட்ட ஒன்றை உருவகப்படுத்திக் (objectification) கொண்டு தேடுவது என்பதும் அதே தோற்றத்தன்மையே (appearance) என்று விளங்கும், விளங்க வேண்டும். இல்லாவிடில் வண்டி பாதி வழியில் சேற்றில் சிக்கி நகர முடியாமல் போய் விட்டதாகும். கரையைக் கடக்க வேண்டிய படகு ஆற்றின் நடுவில் மண்மேட்டில் தட்டி நின்று விட்டது என்று ஆகும்.
இதை மனதில் ஓர் அலைவரிசையில் அசை போட்டுக் கொண்டே, அடுத்த அலைவரிசையில் வேறு ஒரு கோணத்தில் அலசுவோம்.
***
" நான் " இல்லை என்றால், எல்லாம் இருக்கும் (உடல், மனம், எண்ணம், உலகம், இன்பம், துன்பம்.... )
இந்த இடத்தில் 'நான்' என்பது தனித்த-நான் என்பதாகக் கொண்டால் சரி. ஆனால் தனித்த-நான் என்பது ஒரு கருத்து (கட்டுமானம் - construction) என்ற அடிப்படையில் அஃது எழாத போது உடல், மனம், எண்ணம், உலகம், பிற இருக்கும் / இருக்காது என்று சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை; எனவே உளறல்.
"அண்டத்தில் உள்ளதுதான் பிண்டமாகிய நம்முள்ளும் இருக்கிறது என்பது இறுதி உண்மை."
எல்லாம் ஒன்றே என்றால் அண்டம், பிண்டம் என்று இரண்டு உள்ளதா? உள்ளது என்ற கருத்து, அனுமானத்தில் (concept, assumption) மேற்கண்ட வாக்கியம் சரி. ஆனால் அப்படியான பிளவு ஒரு கருத்தே தவிர மெய்யான இருப்பு அன்று என்ற கோணத்தில் உளறல்.
"அறிவுக்கு மட்டும் தோன்றுவது, வெறும் அறிவார்த்தமாக இருக்குமே அன்றி அனுபவமாக பரிணமிக்காது."
அதே போல் அறிவு (புரிதல்), அனுபவம் என்று இரண்டு உள்ளது என்ற கருத்து, அனுமானத்தில் மேற்கண்ட வாக்கியம் சரி. ஆனால் அப்படியான பிளவு மெய்மையில் இல்லை என்ற கோணத்தில் உளறல்.
அஃது எப்படி, ஒன்றை அறிவது, தெரிந்து வைத்திருப்பது என்பது வேறு, அஃதை அனுபவிப்பது வேறுதானே?
எடுத்துக்காட்டாக, தஞ்சைப் பெரியகோவிலைத் தெரிந்து வைத்திருப்பதும் அதை நேரில் பார்த்து அனுபவிப்பதும் ஒன்றாகுமா? மாம்பழத்தின் சுவையைப் பற்றிப் பிறர் சொல்ல அறிவதும் அதைச் சுவைத்து அனுபவிப்பதும் வெவ்வேறுதானே?
ஒரு கோணத்தில் அறிவும் அனுபவமும் வெவ்வேறே. ஆனால் அஃது ஓர் அனுமானத்தின் மேல் நிற்கிறது. அதாவது மாம்பழத்தின் சுவையைக் கேட்ட அறிவு-அனுபவத்தையும் (knowing-experience) மாம்பழத்தைச் சுவைத்த அறிவு-அனுபவத்தையும், அதாவது இரண்டு அறிவு-அனுபவங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். இரண்டுமே அதனதன் அளவில் பிளவுபடாத அறிவு-அனுபவங்களே.
தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றிப் படித்த போது, பிறர் சொல்லக் கேட்ட போது, அஃது ஓர் அனுபவமே, அஃது ஒரு புரிதலே.
நாம் அறியாத அனுபவம் (unknown experience) என்று ஒன்று இருக்க முடியுமா? அதே போல் அனுபவிக்காத அறிவு (unexperienced knowing) என்று ஒன்று உள்ளதா? When we say yes, we are actually comparing two knowing-experiences.
இது சொல் விளையாட்டு போல் தோன்றலாம். ஆனால் யோசித்துப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
சில எடுத்துக்காட்டுகள் உதவியாக இருக்கும்.
நான் சாவி எங்கே என்று தேடுகிறேன். மேசையில், அலமாரியில், பேண்ட் பையில்... கிடைக்கவில்லை. மீண்டும் மீண்டும் தேடுகிறேன். 'இங்கதானே வச்சேன். வச்சது வச்ச இடத்தில் இருக்கா' என்று சத்தம் போடுகிறேன். அது கேட்டு வந்த துணைவியார், மேசை மேல், கண் முன் இருக்கும் சாவியைச் சுட்டிக் காட்டி, 'கண் தெரியலயா, இங்கதானே இருக்கு' என்கிறார்.
என்ன ஆயிற்று? முன்பு நான் மேசையில் தேடிய போது அந்த சாவியை என் கண்கள் பார்த்திருக்கத்தானே வேண்டும்? ஒளி அதன் மீது பட்டு என் கண்களின் வழியாக விழித்திரையில் பிம்பம் விழுந்திருக்குமே. ஆனால் நான் ஏன் பார்க்க வில்லை? நான் பார்த்தேன், ஆனால் பார்க்க வில்லை. அதாவது நான் பார்த்தால் மட்டும் (அனுபவம்) போதாது, நான் பார்த்தேன் என்ற அறிவும் (புரிதல்) வேண்டும்.
உண்மையில் அனுபவம் அறிவு என்று இரண்டு இல்லை. நான் 'பார்க்கிறேன்' என்ற அறிவு இல்லாத 'பார்க்கிறேன்' என்ற அனுபவம் கிடையாது. அதே போல் 'பார்க்கிறேன்' என்ற அனுபவம் இல்லாத 'பார்க்கிறேன்' என்ற அறிவு கிடையாது.
இதே போல், நாம் படிப்பதிலோ, தொலைக்காட்சி பார்ப்பதிலோ, வேறு வேலையிலோ ஆழ்ந்து இருக்கும் போது துணைவியார் கூப்பிட்டது, சொன்னது காதில் விழுந்திருக்கும் (அனுபவம்), ஆனால் காதில் 'வாங்கி'யிருக்க (அறிவு) மாட்டோம். காதில் வாங்காதபோது (knowing) காதில் விழுந்திருக்கும் (experience) என்பது அனுமானமே தவிர, அது காதில் விழாதது போல் தான்.
இந்த இடத்தில் அறிவு (knowing, knowledge), புரிதல் (understanding), தெரிதல் (seeing - I see the point), உணர்தல் (sensing - it makes sense) என்பன எல்லாம் ஒரே பொருளில் பயன்படுத்தப் படுகின்றன.
அடுத்த அலைவரிசையில் இதனுடன் தொடர்புள்ள ஒரு கோணத்தைப் பார்ப்போம்.
***
தூங்கப் போனால் தொடர்ந்து விமானச் சத்தம் கேட்பது இடைஞ்சலாக இல்லை; ஆனால் துணைவியார் வானொலி, யூடூப் கேட்டால் இடைஞ்சலாக இருக்கிறது. ஏன்? ஏனெனில் விமானச் சத்தத்தை மனம் புரிந்து கொள்ள முற்படவில்லை. அது வெறும் சத்தமாக மட்டும் அறிவு-அனுபவமாக இருக்கின்றது.
ஆனால் வானொலியில் ஒலிக்கும் அரசியல், வாழ்வியல் உரையாடல்கள், தியான இசைகள், யூடூப் நேர்காணல், பட்டிமன்றம், திரைப்படப்பாடல், நகைச்சுவை போன்றவற்றை வெறும் சத்தமாக கேட்ட முடிவதில்லை. மனம் அதன் அர்த்தத்தை நம்மை அறியாமல் அலசுகிறது. எனவே தூங்க முடிவதில்லை.
முன்பு வால்யூமைக் குறைத்துக் கொள்ளச் சொல்வேன். இப்போது அதையும் ஒரு சவலாக எடுத்துக் கொள்வேன். அந்த உரையாடலை, பட்டிமன்றத்தை, பாடலை, இசையைப் புறக்கணிக்க முயலாமல் அறிவு-அனுபவமாக (knowing-experience only; don't try to make sense or take side or judge) மட்டும் ஆழ்ந்தால் விரைவில் தூங்கி விடுகிறேன். அவையும் விமானச் சத்தங்கள் போல் ஆகி விடுகின்றன. I am not claiming I have mastered this. Sometimes I succeed and sometimes I fail. As with everything else this is also a work-in-progress / subject to continuous improvement.
இவ்வறிவு அனுபவம் சுட்டுக் காட்டுவதென்ன? எப்போது அர்த்தம் (பொருள் meaning) இல்லையோ அப்போது அப்பொருளும் (object, thing) இல்லாதது போல் ஆகி விடுகிறது.
http://tholthamiz.blogspot.com/2011/04/35.html
தமிழில் matter-க்கும் meaning-க்கும் பொருள் என்ற ஒரே சொல் இருப்பது அதன் ஒன்றிய நிலையைக் குறிக்கிறதோ? இந்தப் பார்வையில் 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு (25. அருளுடைமை: 247)' என்ற வரி பல கருத்துகளைப் பொதிந்து உள்ளதாகப் படும்.
சிவம் யான்
2022-07-15
தேவராஜ்
========================
தொல்: